Saturday, February 13, 2016

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தேசிய பிரச்சினையே

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தேசிய பிரச்சினையே

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தேசியத்துடன் தொடர்புடைய பிரச்சினையாகும். இதை உடன் தீர்க்காவிட்டால் இது தேசிய பிரச்சினையாக உருவெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில்  சம்பள கட்டளைகள் சட்டத்திருத்தத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்                                   

மேலும் தெரிவிக்கையில், தனியார்துறை ஊழியர்களுக்கு 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாக அரசு கூறுகின்றது. இந்தச் சம்பள அதிகரிப்பு கட்டாயமாக செய்யப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, இந்தச் சம்பள அதிகரிப்பானது 5,000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்.

இதேவேளை, தனியார்துறையினருக்கான சம்பள அதிகரிப்பில் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கும் 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு செய்யவுள்ளதாக அரசு கூறுகிறது.
இந்தச் சம்பள அதிகரிப்பு பற்றி அரசு தெளிவாகக் குறிப்பிடவேண்டும். ஏனெனில், இந்த விடயத்தில் அரசு மூடிமறைத்து செயற்படுகின்றது. மலையக மக்கள் விடயத்தில் ஏன் இவ்வாறு அநீதியாக செயற்படுகின்றீர்கள்?

மலையக மக்களின் சம்பளப் பிரச்சினை தேசியத்துடன் தொடர்புடைய பிரச்சினையாகும். இதை உடன் தீர்க்காவிட்டால் இது தேசிய பிரச்சினையாக உருவெடுக்கும் எனத் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களிற்கு உழைப்பிற்குரிய சம்பளத்தை வழங்கவேண்டும்

தோட்ட தொழிலாளர்களுக்கு இதுவரை நாளொன்றுக்கு 500 ரூபா சம்பளமே வழங்கப்பட்டு வருவதாகவும், சம்பள அதிகரிப்பை செய்ய வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.
வீட்டு வசதி, சரியான வாழ்வாதார முறையின்றி மலையக தோட்ட தொழிலாளர்கள் லயன் அறைகளில் துன்பமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கேற்ப சம்பளம் வழங்கவேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பலரின் சம்பளம், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியன சரியான முறையில் வங்கியில் இடப்படுவதில்லை எனவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

வேலையை விட்டு விலகிச் செல்லும் போது ஊழியர் சேமலாப நிதியை அவர்களால் சரியான முறையில் பெற முடிவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதற்கான கண்காணிப்புக்கள் சரியான முறையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கமொன்றின் விலையே ஊழியர்களின் அடிப்படைச் சம்பளமாக அமைய வேண்டும். புதிய ஆட்சி ஏற்பட்டிருக்கின்ற போதும் தனியார் மற்றும் மலையக தேசிய தோட்டத் தொழிலாளர்களின் சம்பளங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. அத்தகை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது. தற்போது அத்தரப்பினருக்கு உட்பட்ட வகையில் உரிய கொடுப்பனவு கிடைக்காதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை. 500 ரூபா கொடுப்பனவில் அவர்களிகன் வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்ல வேண்டிய நெருக்கடியான நிலைமைக்குள் தினமும் முகம் கொடுத்து வருகின்றனர். நாட்டின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் அவர்கள் வாழ்வதற்கான வீடுகள் காணிகள் கூட இல்லாது பல்வேறு வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.

அவர்களின் பிரச்சினைகள் உடனடியாக தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இச்சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார். இந்நாட்டில் பட்டதாரிகள் மிக முக்கியமானவர்கள். அவர்கள் நான்கு ஆண்டுகள் கற்கைகளை நிறைவு செய்த பின்னர் தொழில் வாய்புக்களுக்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதுடன் மேலும் மூன்று நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.

தற்போது 20 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றார்கள். போராட்டங்களை நடத்துகின்றார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வு வழங்க வேண்டும் என்றார்.

அரவிந்த குமார் பாராளுமன்றத்தில் இது பற்றி உரையாற்றுகையில் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் இந்த வாழ்க்கைச் செலவு உயர்வடைந்து செல்கின்றது.

1992ம் ஆண்டில் பெருந்தோட்டங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட போது வாழ்க்கைச் செலவு படி அதிகரிக்கப்படவில்லை. கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை சிறு சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது.

அவ்வாறு இல்லாமல் சம்பள நிர்ணய சபையின் ஊடாக சம்பளம் அதிகரிக்கப்பட்டிருந்தால் பெருந்தோட்டத்தொழிலாளர்கள் இன்று கூடுதல் சம்பளத்தை பெற்றுக்கொண்டிருப்பார்கள்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளங்களையும் உயர்த்த தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். அந்த உறுதிமொழி வரவேற்கப்பட வேண்டியதாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை வழங்குமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கோருகின்றேன். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்

மகிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில் வடக்கை பிரதிநிதிதுவ படுத்தக்கூடிய நாடுளுமன்ற உறுப்பினர்கள் மலையக மக்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்றார். மலையக மக்களும் வடக்கு பகுதிகளில் வாழ்ந்து வருவதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு மாத்திரம் குரல் கொடுக்காமல் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இன்று நாடாளுமன்றத்திற்கு தலைமை தாங்கிய குழுக்களின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு தமிழ் மொழியில் தமது கோரிக்கைகளை மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.