Thursday, November 20, 2008


தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக அரசு உத்தரவாதம் வழங்காத பட்சத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாத நிலையை தோற்றுவிக்கும்

அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. 1970களில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை போல பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது யதார்த்தமான உண்மையாகும். இது ஊடகங்களின் மூலமாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போது எமது கட்சி அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது எமக்கு மிகப்பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே வரவுசெலவுத் திட்டத்தின் மீதூன இறுதி வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக அரசாங்கம் எந்தவிதமான உத்தரவாதத்தையும் வழங்காத பட்சத்தில் எமது கட்சி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் அது தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக நாம் செய்யும் துரோகமாகவே விமர்சிக்கப்படும்.
எனவே, வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்புக்கு முன்னர் அரசாங்கத் தரப்பிலிருந்து தொழிலாளர்களின் வருமானம் தொடர்பாக அரசாங்கம் அக்கறையை வெளிப்படுத்தாவிட்டால் எமது கட்சி எடுக்கின்ற அரசியல் நிலைப்பாட்டுக்கு கட்டுப்பட்டு நாம் வாக்களிக்க வேண்டிய கட்டயாத்தை ஏற்படுத்தும் என்பதை ஜனாதிபதி உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் சந்திரசேகரன் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டஸ்கர் பொட்லிங் முகாமைத்துவ நிறுவனம் நமுனுகலை பெருந்தோட்ட கம்பனியிடம் ஒப்படைக்க தீர்மானம்

பதுளை மாவட்டம் பசளை பகுதி டஸ்கர் பொட்லிங் முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் கணவரல்ல, கோணகலை, கந்தஹேன, பிங்கராவ, ஹிந்தகல்ல, கிளனன் ஆகிய தோட்டங்கள் அக் கம்பனி நிர்வாகத்தின் வழங்கப்பட்டிருந்த குத்தகை ரத்து செய்யப்பட்டு மீண்டும் நமுனுகலை பெருந்தோட்டத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி இந்த ஆறு தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகளை வழங்கப்பட வேண்டும் என்ற கலந்துரையாடலில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம், யோகராஜன் ஆகியோரும் கம்பனி சார்பாக போல் ரத்நாயக்க, ரவிகுமார ரட்ண, பிரவீர் சமரதிலக ஆகியோரும் 183 தோட்டக் கமிட்டித் தலைவர்களும் கலந்து கொண்டனர். மேற்படி தொழிலாளர்களுக்கான அக்டோபர் மாதத்துக்கான சம்பளமும், ஏனைய சட்டபூர்வ கொடுப்பனவுகள் அனைத்தும் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் வழங்கப்படுவதாகவும் இங்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் சம்பள விவகாரம் குறித்து பேச அழைப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் பெ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் 2006ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் இ.தொ.கா வின் வற்புறுத்தலினால் 2007ம் ஆண்டு மாற்றியடைக்கப்பட்டது. 2006ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தம் 2008ம் ஆண்டுவரை செல்லுபடியாகும் நிலையில் இருந்தாலும் இது ஒரு வருடத்தில் மீண்டும் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் அனைத்து தரப்பிலும் வலியுறுததப்படுகின்றது. இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் அங்கம் வகிப்பதால் இதனை மாற்றியமைக்கக் கூடிய தகுதியும் பலமம் பொறுப்பும் இச் சங்கத்திற்கு இருக்கிறது. எனவே இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கு சரியான தீர்மானமொன்றை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் எனக் கோரியுள்ளார்.

ஆறு தோட்டத் தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகள் தாமதமின்றி வழங்க உத்தரவு


பதுளை மாவட்டத்தில் டஸ்கர் பொட்லிங் முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் கணவரல்ல, கோணகலை, கந்தஹேன, பிங்கராவ, ஹிந்தகல்ல, கிளனன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகளை தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என கொழும்பிலுள்ள தொழில் திணைக்கள தலைமையகத்தில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் தொழில் ஆணையாளர் நாயகத்தின் தலைமையின் கீழ் திறைசேரியின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பட்டகொட, பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர், நமுனுகுல பிளான்டேசன் முகாமைத்துவ அதிகாரிகளான போல் ரட்ணநாயக்க, பிரவீன் டி சமரசிங்க மற்றும் டஸ்கர் பொட்லிங் கம்பெனியின் சார்பில் முகாமைத்துவ அதிகாரி மனோஜ் பத்திராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொழிற்சங்கங்களின் சார்பில் வடிவேல் சுரேஷ், கே. வேலாயுதம், ஆர்.எம்.கிருஷ்ணசாமி, நாந் அமரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர். 2006 ஆம் ஆண்டு ஜுன் 14 ஆம் திகதி நமுனுகுல பிளான்டேசன் முகாமைத்துவ நிர்வாகத்திற்குட்பட்ட மேற்படி தோட்டங்கள் டஸ்கர் பொட்லிங் முகாமைத்துவ நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டன. எனினும் பல்வேறுபட்ட நிர்வாக பிரச்சினைகளும் கொடுப்பனவு தொடர்பான இழுபறிகளும் தொடர்ந்த நிலையில் மேற்படி தோட்டங்களை அரசு பொறுப்பேற்க வேண்டும். அன்றேல் நமுனுகுல தோட்ட நிர்வாகம் மீண்டும் பொறுப்பேற்க வேண்டுமென்ற அழுத்தங்கள் தொடர்ந்தன.
2008 அக்டோபர் மாத சம்பளம் வழங்கப்படாமையால் ஆறு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும் 450 சேவையாளர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளலாயினர். அத்துடன் தொழிலாளர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம், சேவைக்காலப்பணம் மற்றும் இதர கொடுப்பனவுகளும் வழங்கப்படாமையும் குறிப்பிடத்தக்கது.

மரங்கள் தறிக்கப்படுவதால் தேயிலை அழிவுக்கு வழிவகுக்கும்


மாத்தளை மாவட்டம் உக்குவளை, ரத்வத்தை, பன்சலதன்ன மற்றும் எல்கடுவ தோட்டங்களில் பெருமளவு மரங்கள் தறிக்கப்படுவதால் பாரியளவு தேயிலை பயிர் அழிவுக்குட்பட்டு வருவதாக இப் பகுதிவாழ் தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனைத் எதிர்த்து அப்பகுதி தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியதையடுத்து தொழிலாளர்கள் சார்ந்த தொழிற்சங்கங்கள் தலையிட்டு மரங்கள் தறிக்கப்படுவது நிறுத்தப்பட்டடிருந்தன. எனினும் மீண்டும் மரம் தறிக்கப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிற்சாலையை மூடிவிட திரைமறைவு சதி

உலக சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சியை காரணம் காட்டி மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் பொறுப்பிலுள்ள தேயிலை தொழிற்சாலைகளை மூடி விடுவதற்கு திரைமறைவில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதாக ம.ம.மு வலப்பனை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். மேற்படி பெருந்தோட்ட நிறுவனத்தின் பொறுப்பிலுள்ள கபரகலை, பிரேம்லீ, மத்துரட்ட, ஆல்கரனோயா, கிளன்டன், மெரி கோல்ட் ஆகிய தோட்டங்களின் தொழிற்சாலைகளின் பெறுமதிமிக்க உதிரிப் பாகங்கள் இரவோடு இரவாக தோட்ட நிர்வாகத்தினால் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் இத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனை தடுப்பதற்கு சமூக முரண்பாடுகளை ஒதுக்கி ஒன்று பட்டு தொழிலாளர் சமூகத்துக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டியது தொழிற்சங்களினதும் தோட்ட நிர்வாகங்களினதும் கடமையாகும்.