Tuesday, October 13, 2009

மலையக மக்களின் உயர்வு பற்றி தந்தையிடம் பேசுவேன் -கனிமொழி

மலையகப் பெருந்தோட்ட வாழ் மக்களின் வாழ்வாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் மேம்படுத்த மத்திய மாநில அரசுகளின் உதவிகளைப் பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொள்வதாக இந்திய நாடாளுமன்ற குழுத்தலைவர் தி.மு.க முன்னாள் அமைச்சர் ரி. ஆர். பாலு உறுதியளித்துள்ளார்.
மலையகப் பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே இவ்வாறு தெரிவித்தார். மேற்படி மலையகம் வாழ் தமிழ் மக்களின் நிலைமைகளைத் தமது தந்தையார் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும், அம் மக்களின் நிலைமைகளை எடுத்துக்கூறி அவர்களின் உயர்வுக்கு வழிவகுப்பதாகவும் முதல்வரின் புதல்வியும் எம்.பி யுமான கவிஞர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் ‘லயன்’ வரிசைக்குடியிருப்பு வாழ்க்கை முறையை நேரில் சென்று பார்வையிட்ட இந்திய நாடாளுமன்ற குழுவினர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டுமென்றும், அதற்கு ஒத்துழைப்பதாகவும் கூறினர்.
அதேநேரம் மலையகத்தில் உயர் கல்விக் கலாசாலைகளை உருவாக்குவதற்கு உதவுவதாகவும் கல்வித்துறையை மேம்படுத்த தேவையான உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
அட்டனில் முக்கிய இடங்களுக்கு இந்திய எம்.பிக்கள் விஜயம்

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய எம்.பிக்கள் குழுவினர் நேற்று திங்கட்கிழமை நோர்வூட் நகரில் அமைந்துள்ள தொண்டமான் விளையாட்டரங்கைப் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இ. தொ. கா. பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் செய்திருந்தார்.
முன்னாள் அமைச்சரும், இந்திய நாடாளுமன்ற குழுவுக்குத் தலைமை தாங்கியவருமான டி. ஆர். பாலு தலைமையில், கனிமொழி எம்.பி, தொல். திருமாவளவன் எம்.பி. ஆகியோரும் ஹெலிகொப்டர் மூலம் நோர்வூட் தொண்டமான் விளையாட்டு அரங்குக்கு வந்து சேர்ந்தனர்.
அங்கிருந்து வாகனப் பேரணியில் அட்டன் மாநகர் மணிக்கூண்டுச் சந்தி வழியாக சௌமியமூர்த்தி தொண்டமான் தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் செய்தனர்.
கைத்தொழில் பயிற்சி அரங்குகளை அவர்கள் பார்வையிட்டனர். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், பிரதி அமைச்சர் எஸ். ஜெகதீஸ்வரன், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் மற்றும் இ. தொ. கா. பிரதித் தலைவர்களும், கலந்துகொண்டனர்.
10 பேர் கொண்ட இந்திய நாடாளுமன்ற குழுவினர் கொட்டகாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் தொழிலாளர் பேட்டையைப் பார்வையிட்டு பின்னர் நுவரெலியா நகர் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இக் குழுவினரைச் சந்திப்பதற்கு நகர வர்த்தகர்கள் உட்பட பொதுமக்கள் பெருந்திரளாக அட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி கல்லூரிக்கு வந்திருந்தனர். நுவரெலியா, அட்டன், பொலிசார் பாதுகாப்பு வழங்கினர். பலத்த பாதுகாப்புடன் இந்திய நாடாளுமன்ற குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தீபாவளி முற்பணமாக 7500 ரூபா- சங்கங்கள் முன் வருமா?

தோட்டத் தொழிலாளர்கள் 290 ரூபா நாட் சம்பளம் பெறும்போது தீபாவளி முற்பணமாக 4500 ரூபாவை தோட்ட நிருவாகம் வழங்கி வந்தது. புதிய கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டதை பின் நாட்சம்பளம் 405 ரூபா உயர்த்தப்பட்டதையிட்டு தொழிற்சங்கங்களை பாராட்டுவதோடு இம்முறை தீபாவளி முற்பணத்தை குறைந்தது 7500 ரூபா பெற்றுத் தர தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் தீபாவளிப் பண்டிகையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வேளையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு தமது தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய போதியளவு வருமானமில்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். பெருந்தோட்டங்களை பொறுத்தவரை தீபாவளி பண்டிகை மிக விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும். பெரும்பாலான தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகை முற்பணத்தை நம்பித்தான் திட்டம் வகுக்கின்றனர். இவை ஒன்று மட்டும்தான் தொழிலாளர்களுக்கு வட்டி இல்லாமல் 10 மாத தவணை முறையில் கழித்துக் கொள்ளும் விதத்தில் வழங்கப்படுகிறது. எனவே கடந்த காலங்களில் வழங்கப்பட்ட 4500 ரூபா முற்பணத்தை அதிகரித்து 7500 ரூபா வழங்கதோட்ட நிருவாகம் முன்வர வேண்டும்.
தோட்டங்களில் மழை, வெயில் என்று பாராமல் தொழிலாளர்கள் தோட்டங்களுக்கு அதிக லாபத்தைப்பெற்றுக் கொடுக்கின்றனர். இதனை உணர்ந்து தோட்ட நிருவாகம் அவர்களின் முற்பணத்தை அதிகரிக்க முன்வர வேண்டும். புதிய கூட்டு ஒப்பந்தத்தின்படி தொழிலாளர்களுக்கு 405 ரூபா நாட் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நாளைக்கு 115 ரூபா சம்பளம் உயர்ந்துள்ளது. இதற்கு அமைய நிலுவை சம்பளம் ஏப்ரல் மாதத்திலிருந்து வழங்கப்பட வேண்டும். இந்த நிலுவையில் 50 வீதத்தை எதிர்வரும் தீபாவளி பணிடிக்கைக்கு முன் கொடுக்க வேண்டும். 25 வீதத்தை நத்தார் பண்டிக்கைக்கு முன்னமும், எஞ்சியுள்ள 25 வீதத்தை அடுத்தாண்டு ஜனவரியில் அதாவது பொங்கல் தினத்துக்கு முன்னர் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
தொழிலாளி ஒருவர் 25 நாட்கள் ஒழுங்காக வேலை செய்திருந்தால் ஒரு நாளைக்கு 115 ரூபா அடிப்படையில் 25x115 =2875 ரூபா ஆகும். (ஒரு மாதம்) (நாட்கள்) - சம்பளம். ஐந்த மாதம் 5X2875= ரூபா 14375 ரூபா நிலுவை சம்பளம் கிடைக்கும், இதில் உதாரணமாக மொத்தம் ஐம்பது வீதம் 7187.50 ஆகும். தீபாவளி பண்டிகைக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும். மேற்கூறிய தீபாவளி முற்பணமும், அதிகரித்த புதிய சம்பளத்தின் நிலுவை சம்பளமும் இரண்டும் ஒழுங்காகக் கிடைத்தால், (2009) இம்முறை தோட்டங்களில் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்தை காண முடியும். இல்லாது போனால் தீபாவளி களை காட்டாமல் அமைதியாகிவிடும் என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டி. வசந்தகுமார்