Tuesday, April 21, 2009

உலக கல்வி செயற்பாட்டு வாரத்தின் முக்கியத்துவத்தை மலையக மாணவர்களுக்கும் வலியுறுத்த வேண்டும் - பிரிடோ நிறுவனம்

உலக கல்வி செயற்பாட்டு வாரத்தின் முக்கியத்துவத்தை மலையக மாணவர்களுக்கும் பொறுப்பு வாய்ந்த தரப்புகள் அறியத்தர வேண்டுமென பிரிடோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிடுகையில்

உலகம் முழுவதும் இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் உலகக் கல்விச் செயற்பாட்டு வாரம் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும், அதற்காக உலகத் தலைவர்கள் கொள்கைகளை வகுக்க வேண்டும், நிதி ஒதுக்க வேண்டும், தத்தமது நாடுகளில் அனைவருக்கும் இலவசமானதும் தரமானதுமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக “உலகக்கல்வி பிரசார இயக்கம்” என்ற அமைப்பு வருடாவருடம் ஏப்ரல் மாதத்தில் உலகக்கல்வி செயற்பாட்டு வாரத்தை கொண்டாடுவதுடன் பல மில்லியன் மக்கள் இந்த இயக்கத்தில் இணைந்து கொண்டு கல்வி பெறமுடியாதிருக்கும் அனைவருக்கும் அதனை பெற்றுத்தர வேண்டும் என்ற பிரசாரத்தில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.

உலகில் 774 மில்லியன் வளர்ந்தவர்கள் எழுத வாசிக்க முடியாதவர்கள். 75 மில்லியன் பிள்ளைகளுக்கு ஒருபோதும் பாடசாலை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எழுத வாசிக்கத் தெரியாததால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் வறுமையில் சிக்குண்டு வாழ்க்கையைப் பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலையில் உள்ளதுடன் தங்கள் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இவ்வாறானவர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள்.

இலங்கையில் கல்வி அபிவிருத்திக்கான கூட்டமைப்பு இந்த செயற்பாட்டு வாரத்தை முன்னெடுப்பதுடன் பிரிடோ நிறுவனம் பெருந்தோட்டப் பகுதிகளில் வருடாவருடம் உலகக்கல்வி செயற்பாட்டு வாரத்தை முன்னெடுப்பதில் அக்கறை காட்டி வருகிறது. இம்முறை உலகக்கல்வி செயற்பாட்டு வாரத்திற்கான தொனிப்பொருள் “வளர்ந்தோர் இளைஞருக்கான எழுத்தறிவும் வாழ்நாள் கல்வியும்” என்பதாகும்.

பெருந்தோட்டப் பகுதிகளில் எழுத்தறிவு இல்லாதவர்கள் தொகை குறிப்பிட்ட அளவில் உள்ளது. மாணவரிடையே இடைவிலகல் அதிகரித்து செல்கிறது. இந்த பின்னணியில் இது விடயமாக கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை பிரிடோ நிறுவனம் வலியுறுத்துகிறது.

இதேவேளையில், பிரிடோ நிறுவனம் ஏப்ரல் 27 ஆம் திகதியை மலையக ஆசிரியர் அர்ப்பணிப்புத் தினமாக பிரகடனப்படுத்தி உள்ளது. இந்தத் தினத்தில் ஆசிரியர்கள் மலையக சிறுவர்களின் கல்விக்கான உரிமையை பேணுவதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வதுடன் உலகக்கல்வி செயற்பாட்டு வாரத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு அறியத்தர வேண்டும் எனவும் இந்நிறுவனம் கோருகிறது.
ஊவா மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம் தேர்தலுக்கு முன்பாக நிரப்பப்படுமா? - கல்விசார் சமூகம் கேள்வி

நடைபெறப் போகும் ஊவா மாகாண சபை தேர்தலுக்கு முன்பு இம் மாகாணத்தின் தமிழ்ப் பாடசாலைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படுமா என கல்விசார் சமூகம் கேள்வியெழுப்பியுள்ளது.

அத்துடன் தேசிய பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களினது நியமனமும் ஒருவருட காலமாக இழுபறி நிலையிலேயே உள்ளது. எனவே இவ்விடயத்தில் காலந்தாழ்த்தாத நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2008 ஆம் ஆண்டு பெப்ரவரியில் பரீட்சை முடிவுகளை கல்வித்திணைக்களம் வழங்கியதுடன், உடனடியாகவே தேசிய பாடசாலைகளுக்கும் மாகாண பாடசாலைகளுக்கும் நியமனம் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.
அதேவேளை, ஒரு வருடத்திற்கு முன்பதாகவே தேசிய பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்காக நேர்முகப் பரீட்சையும் நடைபெற்று முடிந்தது. மத்திய அரசு அறிவித்தது போல் மாகாண பாடசாலைகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்ட போதும் தேசிய பாடசாலைகளுக்கான நியமனம் வழங்கப்படவில்லை.


இது தொடர்பாக கடந்த மாதம் 27 ஆம் திகதி ஊவா மாகாண கல்விக் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் நியமனம் தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டது. அப்போது தேசிய பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடம் தொடர்பாக பலரும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இது விடயத்தில் கல்வியமைச்சு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஊவா மாகாணத்தில் 33 சிங்கள மொழி மூல தேசிய பாடசாலைகளும் 3 தமிழ்மொழி தேசிய பாடசாலைகளும் உள்ளன.

கடந்த 2007 ஆம் ஆண்டு 3179 ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு அவை வழங்கப்பட்டன. இதில் 3179 நியமனங்களும் முழுமையாக வழங்கப்படவில்லை.

மத்திய மாகாணம்,சப்ரகமுவ மாகாணம், ஊவா மாகாணம் என்பவற்றில் குறிப்பிட்ட சில நியமனங்கள் வழங்கப்படாமல் போனதுக்கு பல காரணிகள் உள்ளன. ஊவா மாகாணத்தில் தெரிவான 521 நியமனங்களில் 494 தான் வழங்கப்பட்டது. 27 வெற்றிடங்கள் இன்னும் உள்ளது. இது தொடர்பாக மீண்டும் நேர்முகப்பரீட்சை நடந்தாலும் சில காரணத்தால் நியமனங்கள் வழங்கப்படவில்லை.

ஊவா மாகாண சபை மூலம் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனையே நியமனங்களுக்கான தாமதமென தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பதாக தேசிய பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரிய நியமனமும் 27 ஆசிரியர்களது வெற்றிடங்களும் நிரப்பப்பட வேண்டுமெனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

நன்றி- தினக்குரல்
எதிராக அறிக்கை விடுக்கும் தொழிற்சங்கங்களால் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியாது

குறுகிய அரசியல் நோக்கங்களை வைத்துக்கொண்டு கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக அறிக்கை விடுக்கும் தொழிற்சங்க வாதிகளால் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியாது என தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் எஸ். இராமநாதன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் சிலர் கூட்டு ஒப்பந்தம் சம்பந்தமாக எதுவித ஆதாரமுமின்றி விமர்;சித்து வருகிறார்கள். இவர்கள் ஒப்பந்தத்தை விமர்சித்து பேசிவருவது விசித்திரமாக இருக்கிறது. தொழிலாளர் நலன்களைவிட தங்கள் மத்தியில் உள்ள தனிப்பட்ட விரோத குரோதங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
தனிப்பட்ட குரோதங்களையும் குறுகிய அரசியல் நோக்கங்களையும் தொழிலாளர்களது பிரச்சினையோடு கலந்து குழப்பியடிப்பது தொழிலாளர் நலன்களை எவ்விதத்திலும் பாதுகாக்காது.
தொழிலாளர்கள் சம்பந்தமாக பிரச்சினைகள் பேசப்பட்டு இறுதியாக ஏற்படும் முடிவினை எழுத்து வடிவில் உருவாக்கிக் கொள்ளும் ஆவணமே ஒப்பந்தம் எனப்படுவதாகும். இணக்கப்பாட்டுக்கு வரும் விடயத்தை எழுத்து வடிவில் ஒப்பந்தமாக செய்து கொள்வதானது தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கேயாகும்.
தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொள்ளத் தவறினால், பாதிப்படைபவர்கள் தொழிலாளர்களே. இன்று தொழிலாளர்களின் நன்மை கருதி பல தொழிற் சட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் ஊழியர் சேமலாப நிதி சட்டம், சேவைக்கால பணம் வழங்கும் சட்டங்கள் முக்கியமானவைகளாகும். ஆனால் இந்த சட்டங்களையும் தொழில் கொள்வோர் முறையாகக் கடைப்பிடிப்பதில்லை.
நாட்டில் நிலவிவரும் பொருளாதார பிரச்சினைகளைக் காரணம் காட்டி தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய மில்லியன் கணக்கான ரூபாய்களை தொழில் கொள்வோர் வழங்காமல் மோசடி செய்துவருகிறார்கள். தொழிற் சங்கங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் பயனாகவே இதனைத் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியுமாயுள்ளது. இவ்வாரான காலகட்டத்தில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கூட்டு ஒப்பந்தம் ஒன்று இல்லாதிருந்தால் பொருளாதார பிரச்சினைகளைக் காரணம் காட்டி முதலாளிகள் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தையும்கூட குறைத்துக் கொடுக்க ஆரம்பித்திருப்பார்கள்.
குறுகிய அரசியல் நோக்கங்களையும் ஒருவருக்கொருவர் மத்தியில் உள்ள தனிப்பட்ட குரோதங்களையும் நோக்காக வைத்துக் கொண்டு கூட்டு ஒப்பந்த முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றார்கள். இவ்வாறானவர்கள்தான் கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர் துரோக ஒப்பந்தம் என்றும் இது ஒரு அடிமை சாசனம் என்றும் வசைபாடிவருகின்றனர். ஆனால் இதில் தொழிலாளர்கள் ஒன்றை நன்கு புரிந்துவைத்துள்ளனர்.யார் எதனைச் சொன்னாலும் இதுவரை காலமும் தொழிலாளர்கள் அதிகரித்த சம்பள உயர்வினைப் பெற்று வருவது தொழிலாளர் துரோக ஒப்பந்தம். இன்னொரு விடயத்தையும் தொழிலாளர்கள் மறந்து விடவில்லை. அதாவது கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக அறிக்கைகளைவிட்டு எதிர்ப்புத் தெரிவித்து வரும் இவர்களால் இதுவரை காலமும் தொழிலாளர்களுக்கு ஒரு சதத்தையேனும் சம்பள உயர்வாகப்பெற்றுக் கொடுக்கமுடியவில்லை என்பதாகும்.