Sunday, July 11, 2010

பிரதேச செயலகம், கிராம சேவகர் எல்லைகளை மீள் நிர்ணயிக்க முன்மொழிவுகள்

உள்ளுராட்சி அமைப்பின் எல்லைகளில் மாற்றங்களைக் கொண்டு வருதல் என்பது வெறுமனே புவியியலை மாத்திரம் மையப்படுத்தியதாக கொள்ள முடியாது. சிவில், அரசியல், பொருளாதார, கலாச்சார உரிமைகளைச் சார்ந்த சகல விடயங்களையும் தீர்மானிப்பதாக அமைந்திருக்கின்றது. எனவே குறிப்பாக சிறுபான்மை மக்கள் இவ்விடயம் தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதென மனித அபிவிருத்தி ஸ்தாபனம் தெரிவிக்கிறது. கடந்த வாரங்களில் மலைய மக்களை மையமாகக் கொண்டு பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவகர் எல்லைகளை மீளமைத்தல், மீள் நிர்ணயம செய்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினர் மத்தியில் கலந்துரையாடல்களையும், கள ஆய்வுகளையும் மத்திய, ஊவா, சப்ரகமுவ போன்ற மாகாணங்களில் மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து உயர்மட்ட கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்றது. கலாநிதி ஏ.எஸ். சுந்திரபோஸ், பேராசிரியர் எம். எஸ். மூக்கையா, திரு எஸ் விஜயசந்திரன் ஆகியோர்களின் ஆய்வறிக்கையினை அடிப்படையாகக் கொண்டும் பல்வேறு மட்டங்களில் இருந்து முன் வைக்கப்பட்ட ஆலோசனைகள் மூலம் தயாரிக்கப்பட்ட முன் மொழிவுகளை கொண்டும் நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களுக்கான முன்மொழிவுகள் மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் மலையக மக்கள் வாழும் பகுதிகளில் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் அங்கு வாழும் மக்கள் தொகைக்கேற்ப அதிகரிக்கப்படல் வேண்டும் எனவும் இதற்கு சகலரினதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் மனித அபிவிருத்தி ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்

மலையக மாவட்டங்களை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கிற்கு அப்பால் மிக அதிகமான தமிழ் பேசும் மக்களைக் கொண்டதாக காணப்படுவது நுவரெலியா மாவட்டமாகும். ஓப்பீட்டு ரீதியில் நுவரெலியா மாவட்டம் ஏறக்குறைய 7,55,500 பேர்கள் சனத்தொகையை கொண்டிருந்த போதும் அங்கு ஐந்து(5) பிரதேச செயலகங்களே காணப்படுகின்றன. அதேவேளை அம்பேகமுவ பிரதேச செயலகம் சராசரியாக 130,000 தோட்ட மக்களுக்கு சேவையாற்ற வேண்டியுள்ளதோடு, ஒரு கிராம சேவை அலுவலர் சராசரியாக தோட்டப்பகுதியில் ஏறத்தாழ 3500 மக்களுக்கு சேவை செய்ய வேண்டியுள்ளது. இது தேசிய மட்டத்தை விட ஐந்து (5) மடங்கு பெரிதானது.

அதேபோல் கண்டி மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் பெருந்தோட்ட மக்கள் சார் அல்லது தமிழ் பேசுகின்ற மக்கள் அதிகமாக பன்வில , புசல்லாவ, நாவலபிட்டிய, தெல்தோட்ட, இரங்கலை, பிரதேசங்களில் வாழ்கின்றனர். இவ்வடிப்படையில் பெருந்தோட்ட மக்களை மையமாகக் கொண்டு புதிதாக ரங்கலை பிரதேசத்தில் 30 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு புதிய பிரதேச செயலகம், ரஜவெல பிரதேசத்தில் 30 கிராம சேவகர்களை உள்ளடக்கிய ஒரு புதிய பிரதேச செயலகம் புதிதாக அமைக்கப்பட வேண்டுமென பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் மலைய பெருந்தோட்ட மக்கள் பசறை, ஹாலி-எல, அப்புத்தளை, போன்ற பிரதேசங்களிலேயே செறிவாகக் காணப்படுகின்றனர். அதேபோல இப் பிரதேசங்களில் தமிழ் பேசுகின்ற மக்கள் குவியப்படுத்தப்பட்டுள்ளமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அந்த அடிப்படையில் நமுனுகல பிரதேசத்தில் 50 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு புதிய பிரதேச செயலகம் அமைக்கப்பட வேண்டியுள்ளது. அத்துடன் ஹல்துமுல்ல பிரதேச செயலகம் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு புதிதாக வெலன்விட்ட என்ற பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டியுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொட, இம்புல்பே, இறக்குவான, காவத்தை, நிவித்திகலை போன்ற பிரதேசங்களிலேயே பெருந்தோட்டங்கள் மையப்படுத்தப்பட்டுள்ளன. இப் பிரதேசங்களில் வாழும் தமிழ் பேசும் மற்றும் கிராமிய பெருந்தோட்ட மக்களின் நலன் கருதி பலாங்கொட, இப்புல்பே ஆகிய பிரதேச செயலகங்களுடன் புதிதாக மாரத்தன்ன என்ற பிரதேச செயலகம் 40 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட வேண்டுமென பிரேரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 38,000 சனத்தொகையையும் 38 கிராம சேவகர் பிரிவுகளையும் மையமாக கொண்டு புதிதாக இறக்குவானை என்ற பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டுமென பிரேரிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில்
தொழிலை இழக்கும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்கள்

இறப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மழைக் காலங்களில் இறப்பர் பால் வெட்ட முடியாததால் நாளாந்தம் வேலைகளை இழப்பதுடன் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

ஏனைய தொழில்துறைகளைப் போலவே இயற்கை அனர்த்தங்களால் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கும் நிவாரண மற்றும் நிதியுதவிகளை வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடும் மழை காரணமாக வேலை செய்ய முடியாமலே போனால் அன்றைய நாட் சம்பளத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் நாட் சம்பளத்தையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் இந்த நிலையானது 150 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்வது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

பெருந்தோட்டத் துறையில் தேயிலை உற்பத்தி துறையில் ஈடுபடுபவர்களின் நிலையும் அது போன்றே தொடர்கிறது. ஆனால் தொழிலாளர்களை மேற்பார்வை செய்யும் தோட்ட உத்தியோகத்தர்களைப் பொறுத்த வரையில் மாதச் சம்பளம் பெறுவதால் தமது குடும்ப பொருளாதாரத்தை சமாளித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

பெருந்தோட்டத் துறையில் கடும் மழை பெய்தால் இறப்பர் உற்பத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மழைக் காலங்களில் இறப்பர் பால் வெட்ட முடியாது. தனியே இறப்பர் உற்பத்தியை மட்டும் கொண்டிருக்கும் தோட்டங்கள் முடங்கிப் போய்விடுகின்றன.

களுத்துறை மாவட்டத்தில் இறப்பர் தோட்டங்களே அதிகளவில் காணப்படுகின்றன. இறப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் மழைக் காலங்களில் வேலை எதுவுமின்றி இருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் அவர்கள் வேறு தொழில்களைச் செய்யக் கூடிய சூழல் இறப்பர் தோட்டங்களில் இல்லாததால் அவர்களுக்கு நிவாரண உதவிகளோ அல்லது விசேட கொடுப்பனவுகளோ கிடைப்பதில்லை. இதனால் தொழிலாளர்கள் எதுவித வருவாயும் இன்றி சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். குடும்ப வறுமை காரணமாக தொழிலாளர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாதுள்ளது.

களுத்துறை மாவட்டத்திலுள்ள வெளிப்பென்னை, யட்டதொல, மேல்காவ, நேபொட, பதுறலியா போன்ற பகுதி மக்கள் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் வெளி மாவட்டங்களுக்கு செல்ல முடியாத நிலையேற்படுகிறது. அப்பகுதி தோட்ட மக்களுக்கு தோட்ட நிர்வாகமோ, அரசியல், தொழிற்சங்கத் தலைமை களோ, தொண்டு நிறுவனங்கள் எதுவும் உதவியளிக்க முன்வருவ தில்லை. அதேவேளை தோட்டப் பகுதிகளை அண்மித்த கிராமப் பகுதிகளில் அந்தந்த கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஊடாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு பிரதேச செயலகங்கள் ஊடாக அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன. அது மட்டுமல் லாது அரசியல்வாதிகளும் போட்டிப் போட்டிக் கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்குவார்கள். ஒருசில அரசியல்வாதிகள் மட்டும் பாகுபாடின்றி தமது சேவைகளைச் செய்கின்றனர். அரசாங்கத்தின் உதவிகள் எதுவும் தோட்ட மக்களைச் சென்றடைவது மிகவும் குறைவு.

எனவே, இவ்வாறான விடயங்கள் தொடர்பாக தொழிற்சங்கங்கள், தோட்டக் கம்பனி உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டியது அவசியமாகும். இயற்கை அனர்த்தங்கள், தொடர் மழை போன்ற காரணங்களால் பெருந்தோட்டத் தொழில்துறை பாதிக்கப்படும் போது தொழிலாளர்களின் நலன்கள் குறித்து கூடிய அக்கறை செலுத்த வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகள் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் நாட்டின் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் செயற்பட வேண்டும். குறிப்பாக இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்படும் போது நிவாரணம் வழங்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்த வரை தோட்டம்தான் அவர்களின் வாழ்க்கை. தோட்டத்தின் வளர்ச்சியின் நலன் கருதி கஷ்டப்படும் தொழிலாளர்களை தோட்ட நிருவாகம் கவனிக்க வேண்டும்.

வெளியில் வேலை செய்பவர்கள் எட்டு மணித்தியாலத்திற்கு குறைவாக வேலை செய்து நாட்சம்பளம் பெறுகின்றனர். ஆனால் தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்த வரை காலையில் பிரட்டு களத்திற்கு சென்றால் மாலை வரை வேலை செய்து தோட்ட நிருவாகம் எதிர்பார்க்கும் அளவு இறப்பர் பாலோ, கொழுந்தோ கொண்டு வராவிட்டால் அன்றைக்கு அரை நாட் சம்பளம்தான் கிடைக்கும். இவ்வாறான சூழ்நிலையிலும் தோட்டத்தை நம்பி வாழும் மக்களுக்கு யாரும் கேட்காமலே உதவி செய்ய வேண்டும். இதுவே மழைக் காலங்களில் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் தோட்ட நிருவாகத்திடம் இருந்து எதிர்பார்ப்பதாகும்.


டி. வசந்தகுமார்
தினகரன்