Saturday, November 28, 2009

மலையகத்தை அச்சுறுத்தும் பன்றிக் காய்ச்சல்!

மேலைநாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த பன்றிக் காய்ச்சல் இப்போது இலங்கையில் மலையகப் பகுதிகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

பன்றிக் காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக மத்திய மாகாண பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.

இதேவேளை சில பிரதேசங்களில் முன் பள்ளிகளும் கூட மூடப்பட்டுள்ளன. நுவரெலியா, கண்டி, பேராதனை, நாவலப்பிட்டி வைத்தியசாலைகளில் பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் 200 இற்கும் அதிகமானோர் அனுமதிக்ப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் பன்றிக்காய்ச்சல் மேலும் பரவாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்தோடு பொது மக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் எனவும் சுகாதாரத் தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.

பன்றிக் காய்ச்சல் வைரஸ் உடலில் பரவியதும் சளி பிடிக்கும். உடனே காய்ச்சல் வரும், தொண்டைவலி, சோர்வு உடல்வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும். இந் நோய்த் தாக்கத்தால் உயிரிழப்பும் ஏற்படும்.

இந்த நோய் ஏற்பட்டுள்ளதை சாதாரண முறை சோதனைகளால் கண்டு பிடிக்க முடியாது. பல்வேறு கட்ட சோதனைகளின் பின்னரே நோயை உறுதிப்படுத்த முடியும். நோய் தாக்கியவரிடமிருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் வேகமாக பரவும்.

சளி மூலம் அதிகளவில் பரவும். நோய் தாக்கியவரின் உமிழ் நீர் அல்லது சளியை தொட்டுவிட்டு கை கழுவாமல் மற்றவரை தொட்டால் அதன் மூலமும் பரவி விடும்.

எனவே நோய் தாக்கியவரை தனிமைபடுத்தினால்தான் மேலும் பரவாமல் தடுக்க முடியும். இந் நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் தவறாது வைத்திய பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

Friday, November 27, 2009

நுவரெலியா மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகள் கிட்டும் : பசில் ராஜபக்ஷ

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அதிக கூடிய வாக்குகள் கிடைக்கும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ கொட்டக்கலை காங்கிரஸ் தொழில்நுட்ப வளாகத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் அரசாங்கத்தின் கடந்த நான்கு வருட ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்டப் பகுதிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளமையை நீங்கள் கண்கூடாக பார்க்கின்றீர்கள். ஆமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனைகளுக்கமைய மலையக மக்களுக்கு மேலும் பல சேவைகளை நாம் செய்து வருகின்றோம்.

வடக்கில் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்த போது இந்திய மக்கள் எமது நாட்டின் மீது தப்பான அபிப்பிராயத்தையே கொண்டிருந்தனர். இதன்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசி இந்திய நாடாளுமன்ற குழுவினரை இலங்கைக்கு வரவழைத்தார்.

இவ்வாறு வருகை தந்த குழுவினர் வடக்கின் இடம்பெயர் முகாம்களுக்கும் சென்று அங்கு தங்கியிருந்த மக்களின் நிலைமைகளை ஆராய்ந்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கும் இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கும் கொண்டு வந்தனர். இதன் மூலமாக இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒரு தொகை வீடுகள் அமைத்து கொடுப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அத்துடன் இந்திய நாடாளுமன்ற குழுவினரின் மலையக விஜயத்தின் ஊடாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனைக்கேற்ப தோட்டப் பகுதி மக்களுக்கும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வீடுகள் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெருந்தோட்ட மக்கள் அளப்பரிய சேவையாற்றி வருகின்றனர். இதனைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி மஹிந்த சிந்தனையில் பெருந்தோட்ட மக்களின் நலன்கருதி பல்வேறு திட்டங்களை உருவாக்கியுள்ளார்.

கடந்த காலங்களில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு கணிசமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

எனவே எதிர்வரும் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து கூடுதலான வாக்குகளைப் பெற்று வெற்றிபெறுவார் என்று உறுதியாக நம்புகிறேன் என்றார். இக் கூட்டத்தில் அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த். சி.பி.ரத்நாயக்கா, முத்துசிவலிங்கம், எஸ் ஜெகதீஸ்வரன், மத்திய மாகாண கல்வி அமைச்சர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

Thursday, November 26, 2009

தென் மாகாண தோட்டப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கை – ஆளுநர்

13வது அரசியல் யாப்பிற்கு இணங்க கிடைக்கப்பெற்ற அதிகாரங்களின்படி பாதுகாப்பு அதிகாரங்களைக் கொண்டவர்களுடன் இணைந்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டுமென தென்மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய மகாணசபையின் கூட்டத்தில் கொள்கை விளக்கவுரை ஆற்றும் போது தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றும் போது நோயார்களுக்கான சிகிச்சை சேவைகளின் கீழ் இரசாயண வசதி கூடங்களிலுள்ள ஆஸ்பத்திரிகளை இனங்கண்டு மேம்படுத்தவும், சுற்று சூழல்களை பவித்திரமாக வைத்துக் கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வைத்தியர்களுக்காகவும், தாதியர்களுக்காகவும் ஆஸ்பத்திரி அருகே விடுதிகள் நிறுவுதல், விசர் நாய்கடி நோய் ஒழித்தல், டெங்கு, மலேரியா ஒழித்தல், தேசிய வேலைத்திட்டங்களின் கீழு; நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விசேடமாக தோட்ட மக்களின் சுகாதார திட்டங்களை மேம்படுத்த சுகாதார வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

தென் மாகாணத்தில் காலி, மாத்தறை மாவட்டங்களில் வாழ்கின்ற தோட்ட மக்களின் தேவைகளை இனங்கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஆவண செய்தல்,

தோட்ட மக்களுக்கு சகாதார வசதிகளை அளித்தல் தோட்டங்களை சார்ந்த பகுதிகளுக்கு பாதைகளை அமைத்தல் போன்ற திட்டங்கள் தோட்டக்கட்டமைப்பு விடயங்களில் பங்களிப்பு செய்யப்பகிறது. அதேபோல்இதுவரை இனங்காணாத தோட்டக் குறைபாடுகளை 2010ம் ஆண்டில் அவைகளை பூரணத்துவப்படுத்தி அம் மக்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை எடுத்தல்.

Sunday, November 22, 2009

வளர்ச்சி கண்டுவரும் மலையக கல்வி

மலையகம் கல்வித் துறையில் வளர்ச்சியடைந்து வருகிறது. இலங்கையின் கல்வி வரலாறு பல தசாப்தங்களை கடந்துள்ளது. குருகுலக் கல்வி முதல் போர்த்துகேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்ற வெளிநாட்டவர்கள்
இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு வழிகோலினார்கள். இலங்கையில் சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரவால் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1945 ஆம் ஆண்டு இக் கல்வி முறைமையில் ஆரம்ப வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி முறையை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டன. 1946 ஜூன் மாதத்தில் ‘இலவச கல்வி சட்டம்’ அமுல்படுத்தப்பட்டது. 1951 இல் கட்டாயக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதுடன் 6 வயது முதல் 16 வயது வரையான எல்லா பிள்ளைகளும் கட்டாயக் கல்வியைப் பெற வேண்டும் என்ற சட்டமும் அமுலுக்கு வந்தது.
இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச கல்வியானது மலையக மக்களுக்கு கிடைப்பதற்கு 30 வருடங்கள் சென்றன. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் 03 தசாப்தங்களுக்கு பின்னரே தோட்டப் பாடசாலைகள் அரசுடைமைகளாக்கப்பட்டன.
ஏனைய சமூகங்களுக்கு கிடைத்த கல்வி வாய்ப்புக்களை 30 வருடங்களின் பின்னரே நோக்கவேண்டும். இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்ட மலையகச் சமூகம் பல வழிகளாலும் பல துறைகளாலும், தொழில் துறை ரீதியாகவும், கலை, கலாசார, பண்பாட்டு அம்சங்களாலும் சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளாலும் மாற்றங்களை காணக்கூடியதாக உள்ளது.
பாடசாலைக்கு மாணவர் அனுமதி, பெற்றோரின் பங்களிப்பு, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த நிலை போன்றவற்றை சுட்டிக் காட்டலாம். இன்னும் 2ம் தர கல்வியை உயர்த்த வேண்டும். அத்தோடு உயர்தர கல்வி பெறுபேற்றையும், பல்கலைக்கழக அனுமதியையும் அதிகரிக்க கூடிய வகையில் வேலைத்திட்டங்களை அமைச்சு மட்டங்களில் முன்னெடுக்க வேண்டும்.
இன்று மலையகத்தில் பிறந்து வளர்ந்தவர்களில் ஆசிரியர்களாக, விரிவுரையாளராக, எஞ்சினியர்களாக, வக்கீல்களாக, நிர்வாக உத்தியோகத்தர்களாக, அதிபர்களாக, கல்வி சேவை உத்தியோகத்தர்களாக, கல்வி அதிகாரிகளாக, அரசியல்வாதிகளாக (அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்களாக உள்ளார்கள்) வெளிநாட்டு தூதுவர்களாக, உலக வங்கி நிறுவனங்களில் வேலை செய்பவர்களை, அரச சார்பற்ற நிறுவனங்களை கொண்டு நடத்துபவர்களாக, உயர் அதிகாரிகளை, பொலிஸ் உத்தியோகஸ்தர்களாக, வர்த்தகர்களாக, உழைப்பாளர்களாக (தோட்ட தொழிலாளர்கள்) இன்று காணப்படுகின்றனர்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் கூட வருடா வருடம் தேசிய மட்ட புள்ளிகளோடு போட்டி போடுகின்றார்கள். மாவட்ட, மாகாண, தேசிய மட்டத்தில் 2ம், 10ம் இடங்களையும் கூட பெற்றுக் கொள்கின்றார்கள்.
மலையகப் பிரதேசத்தில் இருந்து இன்று பெரும்பாலான மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இம்முறையும் நுவரெலியா மாவட்டத்தில் 185, 181 புள்ளிகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் இருக்கின்றார்கள்.
இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். நாங்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். க. பொ. த. சாதாரண பரீட்சையில் கூட 9 ‘ஏ’ சித்திகளை அதிகமான மாணவர்கள் பெற்றுக் கொள்வதைக் காணலாம். தற்போது உயர் தரத்திற்கு வரும் மாணவர்கள் கலை, வர்த்தகத்தை தெரிவு செய்வதை விட விஞ்ஞான, கணித பிரிவுகளுக்கு செல்வதே அதிகமாக உள்ளது.
உயர்தரப் பரீட்சையில் கூட கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் போன்ற துறைகளில் 3 ‘ஏ’ சித்திகளை பெற்றுக்கொள்ளும் மாணவர்கள் மிக அதிகமாக உள்ளார்கள். மலையகத்தில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் விகிதம் கூடியுள்ளது.
அண்மையில் ஒலிம்பியாட் கணிதப் போட்டியில் உலக ரீதியில் 5 ம் இடத்தைப் பெற்ற மாணவர்கள் கூட மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காலகட்டத்தில் மலையக பிரதேசத்தில் ஆசிரியர்கள் கூட வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றார்கள். ஆனால் இன்று மலையகத்தில் பிறந்து வளர்ந்து இப்பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்றவர்களே ஆசிரியர்களாக அதிபர்களாக, விரிவுரையாளர்களாக, ஆசிரிய ஆலோசகர்களாக, பட்டதாரி ஆசிரியர்களாக () உத்தியோகத்தர்களாக கல்விப் பணிப்பாளர்களாக, ஆலோசகர்களாக உருவாகியிருப்பது மலையகத்தின் கல்வி வளர்ச்சியை ஒரு படி மேல் உயர்த்தி காட்டுகிறது.
எமக்கு கிடைத்த மனித பௌதிக வளங்களை பயன்படுத்திக் கொண்டு இச்சமூகம் இப்போது ஓரளவு கல்வித் துறையில் வளர்ந்து வருகின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
யார் எந்த வகையில் விமர்சனங்களை முன்வைத்தாலும் பல அமைச்சர்களின் அயராத உழைப்பினால் பாடசாலை கட்டடங்களில், ஆசிரியர் நியமனங்களும் பௌதிக வளங்களும் கிடைத்திருக்கின்றன. இவற்றை நாம் போராடியே பெற்றுள்ளோம். பிரதிக் கல்வி அமைசச்ர், மாகாணக் கல்வி அமைச்சர் பதவிகளைப் பெற்றதும் கல்வி மறுமலர்ச்சியின் வெளிபாடே ஆகும்.
எனவே கல்வி வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்ற மலையகம் இன்று பூரணமாக வளர்ச்சி அடைய நீண்டகாலம் காத்திருக்க தேவையில்லை. மலையகம் கல்வியில் முன்னேற முடியும்.
முன்னேறும் இன்றைய ஆசிரியர்களின் அயராத உழைப்பின் மூலம் எமது சமூகத்தின் கல்வி வளர்ச்சியை துரிதப்படுத்த முடியும்.மலையக அமைச்சர்கள், உறுப்பினர்கள் தொழிற் சங்கங்கள் மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கான வேலைத் திட்டங்களை கட்சி, இனம், மதம், சாதி பார்க்காமல் மலையகத்தின் கல்வி வளர்ச்சியே எமது சமூகத்தின் வளர்ச்சி என்ற தொனிப் பொருளில் சேவையாற்ற வேண்டும். தற்போது பல அமைச்சர்கள் இவ் விடயத்தில் அதிக கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்கது.
மலையகப் பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திசெய்வதன் மூலம் மலையகத்தின் கல்வி அபிவிருத்தியை பிரசித்தப்படுத்தலாம். இதற்கு உயர் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை ஒரே நோக்கோடு செயற்பட வேண்டும்.
இன்று இருப்பதை விட பல மகா வித்தியாலயங்கள், மத்திய மகா வித்தியாலயங்கள், தேசியப் பாடசாலைகள், கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள் மலையகத்தில் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கல்வியியல் கல்லூரிகளை மேலும் மலையகத்திற்கு நன்மை தரக்கூடியவாறு பல பயிற்சி நெறிகளையும் ஆரம்பிக்க வேண்டும். மலையகத்திற்கென வாசிகசாலை, அருங்காட்சியகம், கணனி வளநிலையம், ஆய்வு கூடங்கள், தகவல் மையங்கள் என்பன கல்வித் துறையை மையப்படுத்தி உருவாக்க வேண்டும். குறிப்பாக மலையகத்தில் இருந்து கற்று இன்று உயர் ஸ்தாபனங்களில் இருப்பவர்களின் சேவையை மலையகம் முழுமையாக பெறும் போது எமது கல்வி வளர்ச்சி வெகு தூரத்தில் இல்லை என்பது உறுதி.
எமது, மக்களையும், ஆசிரியர்களையும், அதிபரையும் குறைகூறுவதை விட்டுவிட்டு செயற்பாட்டில் இறங்குவோம். அதற்காக சிறப்பாக சேவை செய்பவர்களையும், சிறந்த பெறுபேற்றை எடுத்த மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்க வேண்டும். ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் உச்சாகப்படுத்த வேண்டும்.
வருடா வருடம் இவர்களை உற்சாகப்படுத்தல் செயற்திட்டங்களை உருவாக்க கல்வித் திணைக்களங்கள் கல்வி அமைச்சு உட்பட கல்வித் துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பும் முன்வர வேண்டும்.
பரீட்சை பெறுபேறுகளை அதிகரிப்பதற்கு பாடசாலை மட்டத்திலும், மாவட்ட, மாகாண மட்டத்திலும் (6 – 9) தேசிய மட்டத்திலும் பரீட்சைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். குறிப்பாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கு செயலமர்வுகளை செய்வதோடு மாணவருக்கும் வழிகாட்டல் கருத்தரங்குகளையும் பரீட்சைகளையும் நடத்தி பரீட்சை பெறுபேறுகளை பாடசாலை மட்டத்தில் மீள் பரிசீலனை செய்யப்பட்டு குறைபாடுகள், பிரச்சினைகள் காணப்படின் நிவர்த்தி செய்யவேண்டும். பாடசாலை சமூகத்தோடு தொடர்புடைய (SDS) பழைய மாணவர் சங்கம், நலன்விரும்பிகள், அரசியல்வாதிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றின் சேவைகளையும் பெற்றுக் கொள்வதோடு JSA SUBJECT AD வளவாளர்கள், கற்றோர்கள் நிபுணர்களின் சேவைகளை கூடுமானவரை பெற்றுக்கொள்ள வேண்டும். சாதாரண தரத்திற்கு ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர்கள், சிரேஷ்ட ஆசிரியர்கள் போன்றோரை பாடசாலைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இரா. சிவலிங்கம்
நன்றி- தினகரன் வாரமஞ்சரி
தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்தில்லை- சிவா ஸ்ரீதரராவ்

தமிழர்கள் செறிந்து வாழும் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள அரசாங்கத் திணைக்களங்களில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்த்து வழங்கப்படுவதில்லை. இதனால் தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அரச கரும மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை சகல அரச உத்தியோகத்தர்களும் ஓரளவுக்கேனும் அறிந்திருக்க வேண்டும் என்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளில் அச் சட்டங்கள் வெறும் ஏட்டுச் சட்டங்களாகவே இருக்கின்றன.
தமிழ் மொழி பேசுபவர்களுக்கு பெரும் சோதனை
அரச திணைக்களங்களுக்கு தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக செல்கின்ற தமிழ் பேசும் மக்களுக்கு தங்களது தேவைகளை உரிய முறையில் சரியாக செய்து கொள்ள முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. தமிழ் மொழி பேசுகின்றவர்கள் தாங்கள் தமிழ் மொழி மூலம் தெரிவிக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மலையகப் பகுதிகளிலுள்ள அரச திணைக்களங்களில் தொடர்பாடல் வசதியளிப்பாளர் என்ற நியமனங்களையும் அரசாங்கம் வழங்கியுள்ளது.
மேற்படி தொடர்பாடல் வசதியளிப்பாளர்கள் என நியமனம் பெற்றவர்கள் பிரதேச செயலகத்திலும் உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்திலும் தபாற் காரியாலயத்திலும் கடமையாற்றி வந்த போதிலும் அவர்களில் அதிகமானோர் ஆசிரியர் நியமனம் கிடைத்து சென்று விட்டனர். இவர்களின் வெற்றிடங்களுக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படாதமை தமிழ் மக்களுக்கு சோதனை மேல் சோதனையாக விளங்குகின்றது.
விளம்பரப் பலகைகளில் தமிழ் பிழைகள்
அரச மற்றும் தனியார் திணைக்களங்களிலுள்ள விளம்பர பலகைகளில் தமிழ் மொழியில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டாலும் கூட அதில் எண்ணிறைந்த தமிழ் பிழைகள் காணப்படுகின்றன. தமிழ் மொழிக்கு இவ்வாறு பாரபட்சம் காட்டப்படுவதனால் அரசாங்கத் திணைக்களங்களுக்கு தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள செல்வோர் மொழி தெரியாமல் திரும்பி விடுகின்றனர்.
அரச காரியாலயங்களிலுள்ள நுழைவாயில் தொடக்கம் ஏனைய எல்லா இடங்களிலும் காட்சியளிக்கின்ற அறிவித்தல்கள் தமிழ் மொழி பேசுபவர்களுக்கு பெரும் சோதனையாகவே காணப்படுகின்றன. இவ்வாறு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருவது இம் மாவட்டத்தில் பெருந் தொகையாக வாழும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலென பலரும் கருதுகின்றனர்.
தனிச் சிங்களத்தில் அனுப்பப்படும் சுற்று நிருபங்களால் பெரும் சிரமம்.
சம்பரகமுவ மாகாணத்தின் கல்வி அமைச்சு மற்றும் கல்விக் காரியாலங்களில் காணப்டுகின்ற அறிவித்தல்கள் எல்லாமே சிங்கள மொழியில் மாத்திரமே காணப்படுகின்றமையால் சேவைகைளைப் பெற்றுக் கொள்வதற்கு இக் காரியாலயங்களுக்கு வருகை தரும் நூற்றுக்கணக்கான தமிழ் ஆசிரியர்கள் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனனர்.
கல்வி அமைச்ச மற்றும் கல்வித் திணைக்களங்கள், காரியாலயங்கள் என்பவற்றிலிருந்து தமிழ் பாடசாலைககளுக்கு அனுப்பி வைக்கப்படும் அதிகளவான கடிதங்களும் சகல சுற்று நிருபங்களும் சிங்கள மொழியிலேயே அனுப்பப்பட்டு வருவாதாக அதிபர்களும் , ஆசிரியர்களும் முறையிடுகின்றனர். மேற்படி சுற்று நிருபங்களை மொழிப்பெயர்ப்பதற்காக சிங்கள மொழி தெரிந்தவர்களிடம் அதிபர்,ஆசிரியர்கள் செல்ல வேண்டியிருப்பதால் உரிய நேரத்திற்கு தகவல்களை சமர்ப்பிக்க முடியாத நிலை காணப்படுகிறது.
ஆசிரியர்களின் சம்பள உயர்வுக் கடிதங்கள் மற்றும் நியமனக் கடிதங்கள் என்பன சிங்கள மொழியில் இருப்பதனால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பள விளம்பரத்தைக் கூட விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர்.
தபால் நிலையங்களில் தந்தி செய்திகளை தமிழில் அனுப்ப முடியாத நிலை
இம் மாவட்டத்தில் உள்ள தபால் மற்றும் உப தபாற் கந்தோர்களில் அவசர தந்திகள் கூட தமிழில் அனுப்ப முடியாமல் இருப்பதும் பெரும் கவலைக்குரிய விடயமென தெரிவிக்கப்படுகிறது. அரச நிறுவனங்களுக்கு அன்றாட கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள வரும் போதிய கல்வி அறிவில்லாத தோட்ட மக்கள் தரகர்களை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. இவர்களுக்கான கொடுப்பனவுகளும் கணிசமான தொகையாக இருப்பதால் ஏற்கனவே பொருளாதார பிரச்சினைகளால் நொந்திருக்கும் அநேகமானோர் இந் நிறுவனங்களுக்கு வருவதை தவிர்ப்பதே மேலென கருதுகின்றனர்.
தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படல் வேண்டும்
அரச கரும மொழியாக தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் நடைமுறையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே தமிழ் மொழிக்கு தகுந்த இடத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது சமுதாய முன்னேற்றத்தை விரும்பும் அரசியல்வாதிகள், அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் மலையக புத்திஜீவிகளின் தலையாய கடமையாகும் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

Saturday, November 21, 2009

அதிகாரப் பரவலாக்கல் முன்னெடுப்புக்களில் மலையக தமிழ் மக்களின் அபிலாசைகள் உள்வாங்கப்படுமா?- இரா. ரமேஸ்

30 ஆண்டுகால நீண்ட வரலாற்றைக் கொண்ட யுத்தம் முடிவடைந்துள்ள அதேநேரம் அரசியல் தீர்வினை நோக்கிய பயணமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சகல சமூகத்தவர்களையும் தேசிய அரசியல் நீரோட்டத்துக்குள் அரவணைத்து அரசியல் அதிகாரமிக்க ஆட்சி முறை ஒன்றினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
மறுபுறமாக அண்மைக்கால அரசியல் மாற்றங்களும் தேசிய சிறுபான்மை இன எழுச்சியும் தேசிய அரசியலில் அவர்களுக்குள்ள முக்கியத்துவமும் சிறுபான்மை இன உரிமை போராட்டங்களும் நாகரிகமான அரசியல் தீர்வு ஒன்றிற்கான அதிகரித்த தேவையினை ஏற்படுத்தியுள்ளது என்பது வெளிப்படையான யதார்த்தமாகும்.
இத்தகையதோர் பின்புலத்திலேயே இலங்கையின் நிருவாக ஆட்புலத்துக்குள் அதிகாரப் பரவலாக்கம் குறித்த கருத்தாடல்கள் மிக அதிகமாகவே இடம் பெற்று வருகின்றன. ஒரு புறம் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவும் மறுபுறமாக அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் இப்பணியில் ஆழமாக ஈடுபட்டு வருவதினை கண்டுகொள்ள முடிகிறது.
13வது சீர்திருத்தத்தின் மூலம் அரசியல் தீர்வினை முன் வைப்பதில் அரசாங்கம் அதிக கரிசணை காட்டி வருகின்றது. பிறிதொரு வகையில் கூறுவதாயின் தற்போதைய மாகாணசபை முறையில் காணப்படும் குறைபாடுகளை களைந்து அதனூடாக அரசியல் தீர்வினை முன் வைப்பதே அரசாங்கத்தின் உள்ளாந்த நோக்கமாகும்.
எவ்வாறாயினும் 1980களில் அரசியல் தீர்வு குறித்து நிலவிய சூழல் அமைவுக்கும் தற்போது உள்ள சூழல் அமைவுக்கும் இடையே பிரமாண்டமான வேறுபாடுகள் உண்டு. இன்று மோதல் தீர்வு என்பது பல பரிமாணம் பெற்றுள்ளதுடன் அரசியல் தீர்வில் இலங்கைத் தமிழர்கள் மாத்திரமின்றி இந்திய வம்சாவளித் தமிழர்களையும், முஸ்லீம்களையும் உள்வாங்க வேண்டிய தேவையொன்று காணப்படுகின்றது.
சகல சமூகத்தினரதும் அரசியல் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் கருத்துக்களையும் மனங்கொண்டு அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய தேவையொன்று காணப்படுவதுடன் மறுபுறமாக சகல சிறுபான்மை அரசியல் கட்சிகளும் இத்தகையதோர் நிலைக்கு தம்மை தயார் படுத்த வேண்டிய அவசரத் தேவையொன்றும் காணப்படுகின்றது.
பலரின் கருத்துப்படி இத்தகையதோர் தீர்வு பூரணத்துவமிக்க ஒரு தீர்வாக அமையும் என்றும் நாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ள இன ரீதிpலான கசப்புணர்வினையும், பகைமையினையும் களைந்து இனங்களுக்கிடையில் கூடி வாழும் எண்ணத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் எனவும் பேசப்படுகின்றது.
எனவே புதிய அரசியல் தீர்வானது இந் நாட்டில் வாழும் சகல இனக்குழுக்களும் தமது பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை பேணிப் பாதுகாப்தற்கான சூழலையும் தமது அரசியல் தலைமைகள் மூலம் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவும் தமக்கென ஒரு அரசியல் அலகினையும் கட்டமைப்பினையும் கொண்டிருக்கவும் அதனை நிர்வகிக்கவும் வழி செய்வதாக அமைய வேண்டும்.
இத்தகைய எல்லா ஏற்பாடுகளும் இந் நாட்டில் சுமார் 200 வருடங்களுக்கு மேலாக பரந்தும் செறிந்தும் வாழ்ந்து வருகின்ற மலையகத் தமிழ் மக்களுக்கும் கிடைக்க வழி சமைக்க வேண்டும்.
உண்மையில் சுதந்திரத்தின் பின் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆயினும் இவற்றில் மலையகத் தமிழ் மக்கள் ஒரு பொருட்டாக கருதப்படவில்லை. குறிப்பாக திம்பு பேச்சுவார்த்தையின் போது இம் மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என வடக்கு கிழக்கு அரசியல் தலைமைகள் அழுத்தங்களை முன் வைத்தன.
சுதேசிய அரசியல் வாதிகள் பிரஜா உரிமை விடயத்தில் கரிசனை செலுத்துவதற்கு இத்தகைய அழுத்தங்கள் வழி செய்தது. ஆயினும் இக் காலகட்டத்தில் மலையகத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும்அதிகாரப் பகிர்வு குறித்த கருத்தாடல்கள் இடம்பெற வில்லை. இலங்கையில் அரசியல் அதிகாரத்தை பரவலாக்குவதற்கான பிரயத்தனங்கள் 1957ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட பண்டா-செல்ல ஒப்பந்தத்துடன் ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து 1965ம் ஆண்டு டட்லி-செல்வா ஒப்பந்தமும், 1981ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி சபையும், 1987ம் ஆண்டு மாகாணசபை முறைமையும் நல்ல உதாரணங்களாகும். இவற்றைவிட 1991ம் ஆண்டு பிரதேச சபை முறையும் அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன் 1994ம் ஆண்டு புதிய அரசியல் யாப்பு வரையும் முஸ்தீபுகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் அதனோடு இணைந்த வகையில் அதிகாரப் பரவலாக்க முன்னெடுப்புக்களும் இடம் பெற்றன.
தொடரும்……

Friday, November 20, 2009

மலையகத் தமிழர் குறித்து தமிழகத்தில் போதிய விளக்கமில்லை


இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் குறித்து தமிழக மக்களுக்கு போதிய விளக்கமில்லை என்று அண்மையில் நுவரெலியாவுக்கு விஜயம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய இசைப் பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி – அனிதா தம்பதிகள் தெரிவித்தனர்.


அவர்கள் மேலும் தெரிவித்ததாவது தமிழகத்தைப் பொறுத்த வரை இலங்கைத் தமிழர்கள் என்று சொல்லுகின்ற போது இலங்கையில் வடக்குக் கிழக்கு பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்கள் குறித்தே பேசுகின்றனர்.


ஆனால் இலங்கையில் மலையகப் பகுதிகளில் வாழ்கின்ற இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் குறித்து தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர்களோ ஏனையவர்களோ பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.


எனினும் இந்த மக்கள் குறித்து நாம் பங்குபற்றுகின்ற இசை நிகழ்வுகளில் கூறிவருகின்றோம். இலங்கையில் மலையகப் பகுதிகளில் வாழும் இந்த மக்கள் தனித்துவத்துடன் வாழ்வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

Thursday, November 19, 2009

தேர்தல்களில் அரசுக்கு ஆதரவு - எஸ்.அருள்சாமி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும், நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும் தொழிலாளர் விடுதலை முன்னணி அரசுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அக் கட்சியில் பொதுச் செயலாளர் எஸ் அருள்சாமி தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் தொழிலாளர் விடுதலை முன்னணியின் உயர் மட்ட அரசியல் குழு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவை கொழும்பில் 16 ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடியபோது
  • தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு தோட்டத் தொழிலாளர்கள் மானிய விலையில் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தற்போது தோட்டப்பகுதிகளில் மந்தகதியில் முன்னெடுக்கப்படுகின்ற தனி வீட்டுத் திட்டத்தினைத் துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பெருந்தோட்டப்பகுதி இளைஞர், யுவதிகள் வாழ்கின்ற பிரதேசங்களில் உரிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். போன்ற விடயங்கள் பேச்சுவார்த்தையின் போது மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிட்டார்
கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக 40,000 கையெழுத்துக்கள்

மலையகத்தின் பிரதான தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக இதுவரை 40,000 தொழிலாளர்கள் கையொப்பம் இட்டுள்ளதாகவும், ஒப்பந்தத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஐக்கிய மக்கள் முன்னணி தலைவர் எஸ் சதாசிவம் ஐக்கிய மக்கள் முன்னணியினருடன் இணைந்து கொண்ட பின் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் முதற்கட்டமாக கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்ல நடவடிக்கைகள் எடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர் தொழிலாளர்களிடமிருந்து கையொப்பம் பெறும் பணி தொடரும் என்றார்.
மத்திய மாகாண பாடசாலைகள் 23 ஆம் திகதி முதல் மூடப்படும்

மத்திய மாகாணத்தில் ஏ (எச் 1 என் 1) இன்புளுவென்சா காய்ச்சலுக்கான அச்சுறுத்தல் நிலவுவதையடுத்து இம் மாதம் எதிர்வரும் 23 ஆம் திகதியிலிருந்து மறு அறிவித்தல் வரை மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடி விட அரசு தீர்மானித்துள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகளுடன் 19-11-2009 அன்று நடத்திய விசேட கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டது.