Saturday, October 18, 2008

தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

ஜனவசம, பெருந்தோட்டத்துறை போன்ற அரச தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய கொடுப்பனவுகள் கிட்டாமை குறித்து நீதிமன்றம் சென்று சட்ட நடவடிக்கை மேற்கொள்ள போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், சமூக துறை, இளைஞர் வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் சம்பள பிரச்சினை மக்களின் பிரச்சினையை தீர்ப்பதாக அமைய வேண்டும்

தொழில் அமைச்சர் அத்தாவுட செனவிரத்ன அறிவித்துள்ள, தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, நிபந்தனைகளுக்கு உட்படாத, இம்மக்களின் பிரச்சினைகளை முற்றாகத் தீர்க்கின்ற வகையில் அமையவேண்டுமென மலையக தொழிலாளர் முன்னணி தெரிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்குள் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க உள்ளதாக தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளமை மகிழ்ச்சியான விடயம். இம் முயற்சி கூட்டு ஒப்பந்தத்தின் சிக்கலான சரத்துக்களைப் போல நிபந்தனைகளுடன் அமைந்துவிடாமல் இருப்பதனை தொழில் அமைச்சர் உறுதி செய்தால் அப்பாவி தொழிலாளர்கள் முழுதாக பயனடைவார்கள். கூட்டு ஒப்பந்தம் என்ற மரணப்பொறி எமது எல்லா முயற்சிகளையுமே பயனற்றதாக்கிவிட்டது. தமது தினக்கூலியையும் இழந்த தொழிலாளர்கள் என்ன தான் ஒற்றுமையாக போராடினாலும் கூட இந்த கூட்டு ஒப்பந்தம் என்ற அகழியை தாண்ட அவர்களால் முடியாமலேயே போய் விடுகிறது. எனவே இம்முறையாவது தொழில் அமைச்சரின் நேரடித் தலையீட்டால் வாழ்க்கை செலவு புள்ளியோடு அமைந்த சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை வீண் போகக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.