Tuesday, September 22, 2009

பெருந்தோட்ட மாணவர்களின் கணிதத் திறன் வீழ்ச்சியடைந்திருப்பதேன்?

பெருந்தோட்டப் புற பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளில் க.பொ.த. (சா.த) பரீட்சையின் போது, கணிதப் பாடம் தொடர்பான சித்தி வீதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதைக் காணலாம். இலங்கையின் பரீட்சை விதிகளுக்கு அமைய ஒரு மாணவன் க.பொ.த. உயர் தரத்திற்கு கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளுக்குச் செல்ல வேண்டுமானால் க.பொ.த. சாதாரண தரத்தில் கணிதப் பாடத்தில் சித்தி பெற்றிருக்க வேண்டும். இது கட்டாயமான ஒரு நிபந்தனையாகும். ஆனால் இக் கணிதப் பாடத்தை ஆண்டு 1-11 வருடங்கள் தொடர்ச்சியாக இம்மாணவர்கள் கற்றப் பின் இறுதியாக நடைபெறும் க.பொ.த. சாதாரணப் பரீட்சையில் அநேகமான மாணவர்கள் சித்தியடையத் தவறி விடுவதை வருடம் தோறும் அவதானிக்கலாம். ஏன் இந்த நிலை இந்நிலைக்கான காரணகர்த்தா யார்? இந்த கணிதப் பாடப் பெறுபேறுகளை அதி கரிப்பதற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை நோக்கும் போது பல்வேறு தகவல்கள் கணிதப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களால் முன்வைக்கப்படுகின்றன.
இலங்கையின் பரீட்சை விதிகளின் படி கணிதப் பாடத்தில் சித்தி பெறாவிட்டால் அவளுக்கு வாழ்க்கையே இல்லை என்பது போல் இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் இப்பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்களும், மாணவர்களும் பெற்றோர்களும், பணிப்பாளர் விடயத்துக்கு பொறுப்பானவர் அதிபர் போன்றோர்கள் அதிக கரிசனை எடுத்து கணிதப் பாட பரீட்சைப் பெறுபேற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருடம் தோறும் பரீட்சைப் பெறுபேறுகள் வந்தவுடன் அவசர அவசரமாக கருத்தரங்குகளை வைப்பதும் கலந்துரையாடல்களை, நடத்துவதும், ஆசிரியர்கள், மாணவர்களை, பாடசாலை அதிபர்களை விமர்சிப்பதும் பொருத்தமற்ற ஒரு விடயமாகும், இந்த பெறுபேறு வீழ்ச்சியடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதை உணர வேண்டும்.
ஆசிரியர்கள் முன்வைக்கும் கருத்துக்களைப் பார்ப்போம். ஆரம்பக் கல்வியின் போது செயற்பாடுகளுடன் கூடிய கல்வி நிலை, எண்ணக்கரு விளக்கம் என்பன மிகமிக குறைவு இதற்கு காரணம் வீட்டுச் சூழல், பெற்றோர்கள், கணிதப்பாட அறிவு குறைந்த பயிற்றப்படாத ஆசிரியர்கள், மற்றும் தொடர்ச்சியான கணித அறிவு மட்டம் கணிப் பிடப்படாமை, வாசிப்பு திறனையும் அதிகரித்தால் தான் கணிதப் பாடத்தையும் விளங்கச் செய்ய முடியும்.
கணித எண்ணக் கருவில் முக்கியமான கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல், என்பவற்றை ஆரம்பத்தில் இருந்து சரியாகவும் முறையாகவும் சொல்லிக் கொடுக்க வேண்டும். எண் இடப் பெறுமானங்களைச் சரியாக மாணவர்களுக்கு புரிந்து கொள் ளும் வகையில் கற்பிக்க வேண்டும். சில மாணவர்களுக்கு 4,5,6,7,ம் வகுப்புகளில் கூட இடப் பெறுமானம் தெரிவது இல்லை என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டும்.
மீள அறிவுறுத்தல் இன்மை, கணிதம் பற்றிய மனப்பாங்கு எதிர்மறையாக இருத்தல் கணிதப் பாடம் கஷ்டம் (கடினம்) என ஆரம்பத்திலேயே நினைத்தல், சுயசிந்தனை இண்மை, தொடர்ச்சியாக முயற்சிக்காமை, பிறழ்வான நடத்தை, சந்தேகங்களை உடனுக்குடன் கேட்காமை, கணிதப் பாடத்தின் முக்கியத்துவம் புரியாமை. சில ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளில் உள்ள குறைபாடுகள். கணித பாட அறிவை வளர்க்கக் கூடிய வாய்ப்புகள் இப்பிரதேச பாடசாலைகளில் குறைவாகக் காணப்படுகின்றமை. கணிதப் பாடத்தில் திறமையில்லாத மாணவர்கள் வகுப்பறையிலும், சக மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்க ளிடத்திலும் கவனிப்பாரற்ற நிலையில் விடப்படு கின்றார்கள். இதனால் இம்மாணவர்கள் உள ரீதியாகப்
பாதிக்கப்படுகின்றார்கள். கணிதப் பாடத்தில் திறமை குறைந்த மாணவர்களே தரம் 8-9 வகுப்புக்களில் இடை விலகலுக்கு உட்படுகின்றார்கள். குறிப்பாக பெண் பிள்ளைகள். க.பொ.த. சதாரணத் தரத்திற்கான சில அடிப்படைக் கணக்குகள் இந்த வகுப்பில்தான் தொடங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாணவர்கள் உடல் ரீதியான மாற்றங்களுக்கு உள்ளாகும் வயதும் இவ்வயதே என்பதும் சுட்டிக்காட்ட வேண்டும்.
எனவே ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் கணிதப் பாடத்திற்கான ஆரம்ப எண்ணக் கருக்களை முறையாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கணித பாடத்தில் ஒரு விருப்பத்தை உருவாக்க வேண்டும். கணிதப் பாடத்தில் பயிற்சிப் பெற்ற ஆசிரியர்களை 6-11 வரையான வகுப்புகளுக்கு உள்ளவர்களை அனுப்பும் போது குறிப்பிட்ட ஆசிரியர்களின் கணிதப்பாடம் சம்பந்தமான பின் புலத்தை அறிந்து அனுப்ப வேண்டும். கணிதப் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடாமல், பணம் மட்டுமே முக்கியம் என்று டியூஷன் நடத்தாது, உங்களை நம்பி வரும் பாடசாலை மாணவர்களுக்கு புதிய கற்பித்தல் முறைகளை பயன்படுத்தி கற்பிப்பதோடு, இப்பாடத்தை ஒரு விருப்பமான பாடமாக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். 144 மாணவர்கள் பரீட்சை எடுத்து 100 மாணவர்கள் கணித பாடத்தில் சித்தி பெறவில்லை என்றால் கோளாறு எங்குள்ளது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் ஆராய முன்வரவேண்டும்.
கொட்டகலை இரா.சிவலிங்கம்
தினகரன் வாரமஞ்சரி