Monday, June 29, 2009

பசறை பிரதேச அபிவிருத்திக்கு 600 மில்லியன் ரூபா

பசறை பிரதேசத்தின் உட்கட்டமைப்பு, புதிய பஸ்தரிப்பு நிலையம், இரு வழிப்பாதை, குடிநீர் போன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார போஷாக்கு நலன்புரி பிரதியமைச்சருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். கமநெகும, மகநெகுமபோன்ற திட்டங்கள் ஊடாக பசறை மடூல்சீமை லுணுகலை பிரதேசத்தில் பல பாதைகள் பல படிக்கட்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு மேலாக பசறையில் பஸ்தரிப்பு நிலையம், அமைக்கப்பட்டு பூர்த்திசெய்யப்படாமல் இருக்கிறது. இந்த பஸ்நிலையம் மிக விரைவில் திறக்கப்படும். அதற்கான அனைத்து வேலைகளும் போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஊடாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பசறை நகரம் குறுகிய இடவசதிக்குள் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதன் காரணமாக இருவழிப்பாதை மிக விரைவில் அமைக்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மற்றும் மில்லபெத்த பகுதியிலிருந்து பசறை நகரம் வரைக்கும் நீர்;திட்டம் ஒன்று ஆரம்பிப்பதற்கான திட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் சிந்தித்து செயற்படாவிட்டால் தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோகும்

பதுளை மாவட்டத்தில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க தவறினால் தமிழர் பிரதிநிதிதித்துவம் பறிபோகக்கூடிய அபாயம் உள்ளதாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் டி..வி. சென்னன் தெரிவித்துள்ளார். ஊவா மாகாண சபையில் ஏற்கெனவே ஐந்து தமிழ் உறுப்பினர்கள் இருந்தனர். நடைபெறவுள்ள தேர்தலில் அதிகமாக தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும். இருக்கும் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்க செய்துவிடக்கூடாது. பதுளை மாவட்டத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கு ஒருபோதும் துணைபோய்விடக்கூடாது. இதனை கருத்தில்கொண்டு அனைவரும் சிந்தித்து செயல்பட்டால் மாத்திரமே தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைக்க முடியும்
அடைமழையால் வெள்ளப்பெருக்கு, மணிசரிவி அபாயம்

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக இடி மின்னலுடன் கூடிய அடை மழையால் தாழ் நிலங்களில் வெள்ளம் நிரம்பிக் காணப்படுகின்றது. இந்நிலை தொடருமானால் இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்படுமென இடர் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவிக்கின்றது. இதேவேளை, சில இடங்களில் மண்சரிவு ஏற்படும் நிலையும் காணப்படுகிறது. சில பகுதிகளில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. இரத்தினபுரி காவத்தை பிரதான வீதியில் கெட்டேதென்ன என்னுமிடத்தில் கடந்த 27-06-2009 மாலை 5.30 மணிக்கு ஏற்பட்ட மண்சரிவில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன், அதில் வசித்து வந்த இரு பெண்கள் படுகாயமடைந்து காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில். ஒருவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இப்பகுதி மக்களுக்கு மண்சரிவு வெள்ளப்பெருக்கு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இரத்தினபுரி எல்லாவெல மகா வித்தியாலயத்திற்கு அண்மையிலுள்ள மலை சரிந்து வருவதாக எகலியகொடை பிரதேச சபையினர் தெரிவிக்கின்றனர். அடை மழை காரணமாக இந்த மலையின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்துள்ளதால். இப்பகுதியிலுள்ள சுமார் 14 குடும்பங்கள் இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு எல்லாவெல மகா வித்தியாலயத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா
மக்களின் நீண்டகாலப் பிரச்சினை தீர்க்கப்படாதது கவலையளிக்கிறது

பெருந் தோட்டத்துறைச் சார்ந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இதுவரை காலமும் தீர்க்கப்படாமலிருப்பது கவலைதரக் கூடிய விடயமென ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.வேலாயுதம் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்று வந்த கொடிய யுத்தம் தற்போது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இலங்கைக்கு வெளிநாட்டு செலாவணியைப் பெற்றுக் கொடுக்கும் முதுகெலும்பான தோட்டப்புற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு முகங்கொடுத்து அதற்குத் தீர்வு காண்பதில் எமக்குப் பங்குண்டு. அரசாங்கத்தில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பல அமைச்சர்கள் இருக்கின்ற போதிலும் இவர்களிடையே சரியான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். தோட்டப்புற பகுதியிலுள்ள வெற்றுக் காணிகளையெல்லாம் தனியாருக்கு கொடுக்க வேண்டுமென அரசு வெள்ளையறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் சிறுபான்மை மக்களின் தீர்மானமிக்க வளம் குறைக்கப்பட்டு மீண்டும் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையொன்று உருவாகும். கடந்த 200 வருடங்களாக குளிரிலும் பலத்த காற்றின் மத்தியிலும் வேலை செய்து நாட்டின் வருமானத்தின் பிரதான தூண்களாக இருந்த தோட்டத் தொழிலாளர்கள் இதுவரை முகவரி கிடையாத சமூகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சிலரின் சொந்த விருப்பு வெறுப்புக்கோ,சுயநலனுக்காகவோ மூடி மறைக்கப்படாமல் பகிரங்கப்படுத்த என்றும் தயங்கக்கூடாது.
இறப்பர் உற்பத்தியை ஊக்குவிக்க ரூபா 200 மில்லியன்

சகல வாகனங்களுக்குரிய ரயர்களையும் உள்ளுரிலேயே உற்பத்தி செய்யும் வகையில் இறப்பர் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நவீன தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் ஏதுவாக 200 மில்லியன் ரூபாவை குறைநிரப்பு பிரேரணையாக முன்வைப்பதாக தெரிவிதத்த கைத்தொழில் அமைச்சர் குமார்வெலகம
வருடாந்தம் ரயர் இறக்குமதிக்கென 3 பில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளது. தேசிய மட்டத்தில் 44 வீதம் இறப்பர் உற்பத்தி செய்யப்படுகின்றது. 7 வீதம் அல்லது 9 வீதம் செயற்கை இறப்பர் உற்பத்தி செய்யப்படுகின்றது. தேசிய மட்டத்தில் ரயர் உற்பத்தியை அதிகரிக்கும் போது வெளிநாட்டுக்குச் செல்லும் எமது பணத்தை மீதப்படுத்த முடியுமென்ற நோக்கத்திலேயே உள்ளுரிலேயே ரயர் உற்பத்தி மேற்கொள்ளவும் இதற்கு நவீன தொழில்நுட்பமும் தேவைப்படுகிறது என்றார்













அப்புகஸ்தனை திபட்டன் தோட்டம்


காடு மண்டிய தோட்டம் தேயிலை மலையாவது எப்போது?



180 ஏக்கர் பரப்பளவில் தேயிலைக் காடாகக் காட்சியளித்த இத்தோட்டம் இன்று காடு மண்டிக் கிடக்கிறது. 175 குடும்பங்கள் வாழ்ந்த இத் தோட்டத்தில் இன்று சில குடும்பங்களே பலத்த எதிர்பார்ப்புக்களுடன் நாட்களை கடத்தி வருகின்றனர். இவர்களுக்கு விடிவு எப்போது யாரால் வரும்?’
மஸ்கெலியா நகரிலிருந்து நோட்டன் வழியில் செல்லும்போது சுமார் 18 கி.மீற்றர் தூரத்தில் அப்புகஸ்தனை தோட்ட திபட்டன் பிரிவு இருக்கிறது. தனியார் துறைக்குச் சொந்தமான திபட்டன் பிரிவானது 180 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட தேயிலைத் தோட்டமாகும். சுமார் 175 குடும்பங்கள் இத்தோட்டத்தில் வசித்து வந்தன. தேயிலை உற்பத்தியே பிரதான தொழிலாகும். சிறந்த முறையில் இயங்கி வந்த இத்தோட்டம் அப்புகஸ்தனையுடன் இணைக்கப்பட்டு அரச பெருந்தோட்ட யாக்கத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது
பெருந்தோட்டங்கள் மீண்டும் நீண்டகாலக் குத்தகைக்கு தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டதன் பின்னர் தேயிலைச் செடிகளுக்கிடையே வாகை இன மரங்கள் நடப்பட்டன. 100 ஏக்கர் நிலப்பரப்பில் பெருமளவிலான வாகை கன்றுகள் நாட்டப்பட்டன. எஞ்சிய 80 ஏக்கர் நிலப்பரப்பில் தனியே தேயிலைச் செடிகள் வளர்ந்திருந்தன. எனினும் தேயிலையை உற்பத்தி செய்தவற்கான எந்தவொரு முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை. காலா காலத்திற்கேற்றவாறு உரமோ, மருந்துகளோ இடப்படாமல், சரியான முறையில் பராமரிக்காமல் தேயிலைக் கொழுந்தை மட்டும் எடுத்து வந்தது, புற்கள், மரம், செடி, கொடிகள் வளர்ந்து இன்னும் 10 வருட காலப்பகுதிக்குள் திபட்டன் தோட்டம் காடாக மாறக்கூடிய வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். வாகை மரங்கள் பெரிதாக வளர்ந்து விட்டதால் தேயிலை உற்பத்தி வெகுவாக குறைந்து கொண்டே போகிறது. பாரிய வாகை மரங்கள் வெட்டப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை தேயிலை உற்பத்தியில் முதலீடு செய்தால் தொழிலாளர்களாகிய எமது வாழ்வு சிறப்பாக அமையும். நிர்வாகத்திற்கு பெருமளவு இலாபம் தொடர்ந்து கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது என்றார் பெருமாள் ஜயசேகரன். தோட்ட நிர்வாகம் தேயிலை உற்பத்தியில் அதிகளவு அக்கறை செலுத்த வேண்டும். தரிசு நிலப்பகுதியில் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் நிர்வாகங்கள் மேலதிக வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அதேவேளை தேயிலைக் செடிகளுக்கு இடையே பாரியளவில் வளரக்கூடிய மரக்கன்றுகளை நடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மலைப்பகுதியில் பெரிய மரங்கள் வளர்வதால் அதிகளவு நீரை உறிஞ்சுவதால் எதிர்காலத்தில் நீர் ஊற்றுக்கள் இல்லாமல் போகலாம். எனவே எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்பில்லாத வகையில் தோட்ட நிர்வாகம் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றார் ஜயசேகரன்
அதே தோட்டத்தில் கீழ் பிரிவில் இருக்கும் அஜித்குமார், குடியிருப்புக்கள் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கின்றன. சுமார் 2 கி.மீ. தூரப் பயணத்தை கடப்பதற்கான பாதை நீண்டகாலமாக கவனிப்பாரற்று குன்றும் குழியுமாக காட்சி தருகிறது. ஒரு நோயாளியை வைத்தியசாலைக்கு அவசரமாக கொண்டு செல்ல முடியாதுள்ளது.
இவ் வீதியை புனரமைப்பு செய்வதற்கென அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது. இன்று வரை எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தோட்ட நிர்வாகமும் எதனையும் கண்டுகொள்வதில்லை என்றார் புஷ்பகுமார். பெண் தொழிலாளியான சுசிலா, கருத்து தெரிவிக்கையில், தேயிலைச் செடிகள் இருந்த போதிலும் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்குகின்றனர். புற்கள் தேயிலைச் செடிகளுக்கு மேலாக வளர்ந்து காடுகள் போல காட்சி தருகிறது. ஏனைய மூன்று நாட்களிலும் அப்புகஸ்தனை மேல் பிரிவில் வேலை செய்ய வேண்டியுள்ளது. அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து பிள்ளைகளுக்கு உணவு தயாரித்து அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்துவிட்டு வேலைக்கு போனால் மாலை 6 மணிக்கு வீடு வந்து சேருகிறோம் என்றார்.
மழைக்காலங்களில் அட்டைக்கடியால் பெரிதும் சிரமப்படுவதாக புஷ்பவதி தெரிவிக்கிறார். தோல் வியாதிகள் ஏற்படுகின்றன. எமது தோட்டத்தில் வைத்தியசாலை இருந்தும் அங்கு வைத்தியர் ஒருவர் இல்லாததால் அருகிலுள்ள தோட்ட வைத்தியசாலைகளை நாடவேண்டியிருக்கிறது. தோட்ட வைத்தியர் மாலை 5 மணிவரை வைத்தியசாலையில் இருப்பார். நாங்களும் ஆறு மணியாவதற்குள் வீட்டுக்கு சென்றால்தான். அதன் பின்னர் தனியே செல்ல முடியாது பன்றி மற்றும் காட்டு மிருகங்களின் தொல்லையும் அதிகரித்து விட்டது.
எமது தோட்டத்தினூடாக பிரதான வழியை சென்றடைவதற்கு இலகுவாக இருக்கும் என்பதால் அல்வா லக்சபான தோட்ட மற்றும் மக்கள் இவ் வீதியையே பெரிதும் பபயன்படுத்துவதுண்டு. மத்திய மாகாண உறுப்பினர் ஒருவர் தோட்ட வழியாகச் செல்லும் ஆற்றை ஊடறுத்து பாலம் ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்தார். எனினும் 25 சதவீத வேலைகள் நடைபெற்று பாதியில் முடங்கிவிட்டது. நாளொன்று ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வீதியையும் பாலத்தையும் பயன்படுத்துவதால் அதனை புனரமைப்புச் செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார் புஷ்பவதி.
1987ம் ஆண்டில் ஐ.தே.கட்சி ஆட்சியில் இருந்தபோது எமது தோட்டப் பகுதியிலுள்ள ஒரு சமதரையான 40 ஏக்கர் காணியில் விமானத்தளம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. காணி ஒதுக்கப்பட்டு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. இறுதியில் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. திபட்டன் பிரிவிலுள்ள லயன் குடியிருப்பில் 16 குடும்பங்கள் வசித்து வந்தன. இக்குடியிருப்புக்கள் 150 வருடகால பழைமை வாய்ந்தவை. தற்போது 5 குடும்பங்கள் மட்டுமே அதில் வசித்து வருகின்றன. ஏனையோர் வேறு தோட்டங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர். அக்குடியிருப்பின் கூரைத்தகடுகள் ஓட்டையாகி சல்லடைபோல தோன்றுகின்றன. மின்சார வசதியிருந்தும் மின் இணைப்பை பெறுவதற்கான போதிய பணமில்லாத நிலையில் வாழும் இத்தோட்ட மக்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டியது நமது அரசியல் தலைவர்களின் கடமையாகும்.


இடிந்து விழும் அபாய நிலையில் இருக்கும் லயன் காம்பராக்களை தகர்த்து புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொண்டுக்க தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு முன்வர வேண்டும். இவ்வாறான இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்பதே தோட்ட மக்களின் அவாவாகும். தேர்தல் காலங்களில் மட்டும் வந்து வாக்கு கேட்பார்கள் நாங்களும் வாக்குகளை அளித்து அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்புகிறோம். ஆனால் அவர்களால் மக்களுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படவில்லையென அப்பகுதி தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செ. தி. பெருமாள்
நன்றி- தினகரன்