Sunday, May 17, 2009

தொழிலாளர் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வேண்டும்

பெருந்தோட்ட நிர்வாகத் துறையில் ஏற்படும் வெற்றிடங்களுக்கு தோட்டத் துறையுடன் எதுவித தொடர்புமற்ற வெளியாரே நியமிக்கப்படுகின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் படித்த இளைஞா யுவதிகள் நியமிக்கப்படுவதில்லை என தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த மூன்று தலைமுறைக்கு மேலாக தொழிலாளர்களின் பிள்ளைகள் தோட்டத் தொழிலைத் தவிர வேறு தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள முடியாத நிலையிருந்தது. தோட்டங்கள் ஆங்கிலேயர்களால் நிர்;வகிக்கப்பட்ட காலத்தில் கங்காணிமார் தொழிலாளர்களை வழிநடத்தினர். வெள்ளைக்கார துரைமாருக்கு உதவியாக தோட்ட அலுவலகங்களில் ஆங்கிலம் தெரிந்த தோட்டத் துறையுடன் தொடர்புடையவர்களும், வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களும் உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டனர்
1974ல் தோட்டங்கள் பெருந்தோட்டங்கள் அரசு மயமாக்கப்பட்டதன் பின்னர் தோட்டக் கைத்தொழில் பெரும் பின்னடைவை எதிர்நோக்கியதுடன் பெரும் நட்டத்தில் இயங்கியதுடனட் நிர்வாகத்தினரோ பெருந்தோட்டங்களின் வளங்களை தங்கள் சுகபோக வாழ்க்கைக்கு பயன்படுத்தினார்கள். தோட்டங்கள் காடாகி கவனிப்பாரற்ற நிலையில் மூடப்பட்டன. வேலை செய்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. தோட்ட நிர்வாகங்களில் வெளியார் நியமிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் தோட்டங்கள் தனியார் கம்பனிகளிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. தற்போதைய கல்வி வளர்ச்சியினால் பெருந்தோட்டங்களில் படித்த இளைஞர், யுவதிகளுக்கு ஆசிரியர் தொழிலைத் தவிர அரச நிர்வாகத்துறையில் இணைத்துக் கொள்வதற்கு மலையகத் தலைமைகள் அந்த தகைமையுள்ள இளைஞர் யுவதிகளுக்கு கைகொடுப்பதில்லை.
தோட்ட நிர்வாகங்களில் லிகிதர் பதவிக்காக விண்ணப்பித்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தேவையான தகுதிகள் இருந்த போதிலும் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றி வேலைவாய்ப்பு கிடைக்குமென பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. நேர்முகப் பரீட்சைக்கு குறிப்பிட்ட தினத்தில் சமுகமளிக்காத சில வெளியாருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பாரபட்சம் காட்டும் இவ்வாறான அதிகாரிகளை தோட்டக் கம்பனிகளோ, தொழிற்சங்கங்களோ கண்டுகொள்வதில்லை.
தோட்ட நிர்வாகத்தில் எதுவித அனுபவமுமற்ற வெளியாரை நியமிப்பதற்கு பதிலாக தொழிலாளர்களின் பிள்ளைகளான படித்த தகைமையுள்ள இளைஞர் யுவதிகளை சேர்த்துக்கொள்ள வேண்டுமென தொழிலாளர்கள் விடுக்கும் கோரிக்கைக்கு சாதகமான முடிவை முகாமைத்துவ கம்பனிகளிடமிருந்து தொழிற்சங்கங்கள் பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.