Friday, April 17, 2009

மலையக அமைப்புகளின் ஆலோசனையுடன் புதிய ஒப்பந்தத்துக்கு கட்சிகள் வழிவிட வேண்டும்

கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மலையகக்கட்சிகள் அதிலிருந்து விலகி மக்களின் தேவைக்கேற்றவாறு ஒப்பந்தத்தை மாற்றி எழுதவேண்டும் அல்லது மக்களின் நலனில் அக்கறையுள்ள மலையக அமைப்புகளின் ஆலோசனைகளுடன் புதிய ஒப்பந்தத்தை எழுதுவதற்கு வழிவிட வேண்டும் என மலையக தொழிலாளர் முன்னணி தெரிவித்துள்ளது.

இக்கூட்டு ஒப்பந்தம் பற்றியோ இந்த ஒப்பந்தம் எவ்வாறு தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு தடையாக உள்ளது என்பது பற்றியோ போதிய விளக்கமோ, தெளிவோ இல்லை நடந்து முடிந்த மத்திய மாகாணசபைத் தேர்தலில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்து தொழிலாளர்களது வாக்குகளைப் பெற்றார்கள். தற்போது சம்பள உயர்வு பற்றி வேறு கதைகளை கதைக்கிறார்கள். கூட்டு ஒப்பந்தத்தில் ஒப்பம் இட வேண்டாம் என்று ஐ.தே.கட்சியிடம் இவர்கள் கூறமுடியாதா?

தொழிலாளர் தேசிய சங்கத்தை சேர்ந்தவர்களால்தான் மலையகம் மாறும் என்ற போக்கில் இன்னுமொரு மாயை உருவாக்கப்படுகின்றது. கூட்டுக் குழுவில் அங்கம் வகிக்கும் இவர்களால் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக முடியாதா அல்லது சம்பளத்தை கூட்டிக் கேட்க முடியாதா?