Friday, November 14, 2014

சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தத்தின் ரணம்

இலங்கையில் 9,75,000 இந்திய வம்சா வளியினர், பிரஜா உரிமை இல்லாமல், நாடற்றவர்களாக நாதியற்று இருந்த காலத்தில், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்பதற்காக, சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தம் 1964 அக்டோபர் 30-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது. இன்றோடு 50 ஆண்டு நிறைவாகிறது. எதற்காக இந்த ஒப்பந்தம்?

1815 கால கட்டத்தில், கண்டி ராஜ்ஜியம் வீழ்த்தப்பட்டு, ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கையின் மய்யப் பகுதியான மலையகத்தில், ஆங்கிலேயர் காப்பி பயிரிட்டனர். காப்பித் தோட்டப் பணிகளுக்கு தொழிலாளர்கள் தேவைப்பட்டதால், தமிழகத்தின் திருநெல்வேலி, இராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளிலிருந்து தொழிலாளர்களை கடற்கரை வரை கூட்டம் கூட்டமாக நடத்தி அழைத்துச் சென்றனர்.

அங்கிருந்து கடலில் பயணித்தபோது பலர், தவறுதலாக வங்கக் கடலில் விழுந்து மாண்டனர். மன்னாரில் இறக்கி மலையகம் வரை அடர்ந்த காடுகள் வழியாக அழைத்துச் சென்றபொழுது, பலரும் நோய்வாய்பட்டும், காட்டு விலங்குகளுக்கு பலியாகியும் இறந்தனர். பயணத்தின்போது சோறு, தண்ணீர் இல்லை.

1842-லிருந்து 1945 வரை இந்தியாவிலிருந்து நான்கு முறை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோரை மனிதநேயமின்றி அடிமைகளைபோல் அழைத்துச் சென்றனர். பிரடெரிக் நார்த் என்ற ஆங்கிலேயர் பரிபாலனத்தில், இலங்கையில் இருந்த ஆங்கில அரசுகள் இந்திய வம்சாவளியினரை, மனிதர்கள் என்று நினைக்காமல் பார்சல் பொருளாக நடத்தின.

தமிழ்நாட்டில் அன்றைக்கு எஸ்டேட் மேனேஜ்மெண்ட் அலுவலகங்கள் செங்கல்பட்டு, வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, சேலம், சிவகாசி, கோயம்புத்தூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் துவக்கப்பட்டன. இதற்கு தலைமையிடமாக திருச்சியில் "பிளான்டேஷன் கோஸ்ட் ஏஜென்சி' என்ற அமைப்பு செயல்பட்டது. இதன் மூலம் தமிழகத்திலுள்ள ஏழ்மையான மக்கள் இலங்கைக்கு தோட்டத் தொழிலுக்காக அனுப்பப்பட்டனர்.

தோட்டத் தொழிலில் ஈடுபட்டபோது அங்குள்ள கடுங்குளிரும், சூழலும் ஒத்துகொள்ளாமல் 70,000 இந்திய வம்சாவளியினர் இறந்ததாக கொழும்பு "அப்சர்வர்' ஏடு அப்போது தெரிவித்தது. பஞ்சம், வறட்சி, கொள்ளை நோய் இங்கிருந்து சென்றவர்களை வாட்டி வதைத்தன.

ஒரு கட்டத்தில் காப்பி பயிர்கள் சரியாக விளையவில்லையென்று, ஆங்கிலேயர்கள் தேயிலை, ரப்பர், தென்னை, சிங்கோனா என்று விளைச்சலை மாற்றினர். கடுமையாக உழைத்த இந்த தொழிலாளர்கள் கங்காணி முறையில் கண்காணிக்கப்பட்டனர். ÷
அப்பகுதியில் பாடப்பட்ட நாட்டுப்புற பாடல் ஒன்று:

கண்டி கண்டி எங்கா தீங்கா
கண்டி பேச்சு பேசாதீங்க
சாதி கெட்ட கண்டியிலே
சங்கிலியன் கங்காணி

பயத்திலும், அச்சத்திலும் தொழிலாளர்கள் வாழ வேண்டிய நிலைமை இருந்தது. காலை 6 மணியிலிருந்து இரவு 7 மணி வரை கடும் உழைப்பு. அந்த உழைப்பின்போது, காட்டில் உள்ள அட்டைகள் அவர்கள் ரத்தத்தை உறிஞ்சின.

இதிலிருந்து அவர்கள் தப்பி போக முடியாதவாறு வேலிகள் இருந்தன. தப்ப முயன்று அகப்பட்டால் கடுமையான தண்டனை உண்டு. இது சுருக்கமான வரலாறு.

இலங்கை, 4.2.1948 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. அன்றைய தினத்திலிருந்து இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரஜா உரிமை மறுக்கப்பட்டு, சட்ட விரோதமாக குடியேறியவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

விடுதலை பெற்ற இலங்கை அரசு இதனைக் கண்டு கொள்ளவில்லை. இவர்கள் படும் அவஸ்தைகள், அன்றைய பிரதமர் நேருவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. நேரு இதுகுறித்து இலங்கை அதிபர் கொத்லவாலாவிடம் பேசினார்.

1954-இல் டில்லி வந்த கொத்லவாலா, நேருவின் கையைப் பிடித்துக் கொண்டு, "நீங்கள் இலங்கை வந்தபோது, உங்கள் கூட்டத்தில் எங்கள் நாட்டினர் கல் வீசினார்கள் என்று எங்கள் மீது கோபம் காட்டாதீர்கள். இந்திய வம்சாவளியினரின் பிரச்னைகளை தீர்க்க ஒத்துழைப்புத் தாருங்கள்' என்று மன்றாடி கேட்டுக் கொண்டார். பின்னர் நேரு - கொத்லவாலா ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

நேரு - கொத்லவாலா ஒப்பந்தத்தின்படி, மலையக தமிழ் மக்களுக்கு பிரஜா உரிமை வழங்க இலங்கை அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாது, நேரு காலமான பின்பு, இந்திய வம்சாவளியினரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதிலேயே இலங்கை கவனமாக இருந்தது.

நேருவின் அணிசேராக் கொள்கை, பஞ்சசீலம் இவற்றின் அடிப்படையில், அண்டை நாடுகளுடன் ஒத்துழைக்க வேண்டுமெனவும், சீன இந்திய போர் போன்றவைகளை காரணமாக வைத்து, சிரிமாவோ } சாஸ்திரி ஒப்பந்தத்தை உருவாக்க சரியான நேரம் இதுதான் என்றும் முடிவு செய்து பண்டார நாயகா 1964 அக்டோபர் 22-ஆம் தேதி தில்லி வந்தார்.

சிரிமாவோவின் கோரிக்கையை இந்திய அரசு ஏற்றது. இதனைத் தொடர்ந்து இலங்கையின் வற்புறுத்தலால், சாஸ்திரி } சிரிமாவோ ஒப்பந்தம் கையொப்பமானது. இந்திய அரசு இலங்கையின் கோரிக்கையை வாய்மூடி ஏற்றுக் கொண்டது.

பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுவரண் சிங், தமிழக அமைச்சர் வி. ராமய்யா ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்திற்கு இசைவு கொடுக்கப்பட்டது. தமிழக அமைச்சரான வி. ராமய்யா அப்போது வாய் திறந்து எந்த கருத்தையும் சொல்லவில்லை.
இந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கையில் பிரஜா உரிமையற்று, நாடற்றவர்களாக இருக்கும் 9,75,000 பேரில் 5.25 லட்சம் பேருக்கு இந்தியாவும், 3 லட்சம் பேருக்கு இலங்கையும் குடியுரிமை வழங்குவது, மீதமுள்ள 1.5 லட்சம் பேரின் நிலையை பிற்பாடு முடிவெடுப்பது என்கிற ஒப்பந்தம் 1964 அக்டோபர் 30 அன்று கையெழுத்தானது.

இதே 1964-இல் சேது சமுத்திரத் திட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்பும் கிடப்பில் போடப்பட்டதும், கச்சத்தீவு தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக காவு கொடுக்கப்பட்டது என்பதும் வேறு விஷயம். தமிழக தலைவர்கள் அண்ணா, ராஜாஜி, ம.பொ.சி. போன்றோர் தமிழகத்தின் கருத்து அறியாமல் இந்த ஒப்பந்தம் எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது என வினா எழுப்பினர்.

ஒப்பந்தம் 1964-இல் கையெழுத்தானாலும், 1967-இல்தான் நடைமுறைக்கு வரும் என்று ஒப்புக் கொண்டனர். ஆனால், 1965 - 66-லேயே சில தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களை இந்தியாவிற்கு அனுப்பியது இலங்கை அரசு.

ஆரம்பத்தில் தமிழகத்திலிருந்து தமிழர்களை எப்படி அழைத்துச் சென்றார்களோ, அதே போன்று சாரை சாரையாக கப்பலில் ஏற்றி தூத்துக்குடியிலும் சென்னையிலும் படகு மூலம் இராமேஸ்வரத்திலும் கைதிகள் போல் இந்திய மணலில் இறக்கி விட்டனர். என்ன வேதனை?

அப்படி வந்து இறங்கியவர்களுக்கு இந்தியா, தொடர்பற்ற மண்ணாக தெரிந்தது. தங்களுடைய மூதாதையரின் மண்ணில் திக்கு தெரியாமல் திகைத்தனர். இங்குள்ள மாறுபட்ட சூழலில், ஜீவனத்துக்கு வழியில்லாமலும், தொழில் தொடங்க கடனுக்கு மன்றாடுதல் எனவும் நிலைகுலைந்து போயினர்.

மீண்டும் தேயிலைத் தோட்டத் தொழிலுக்காக கொடைக்கானல், நீலகிரி, மூணாறு, வால்பாறை, கர்நாடகத்தில் உள்ள சிக்மகளூர், கேரளா, டார்ஜிலிங் வரை பயணித்தனர். பலர் துயரம் பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்திய மண்ணோ, அவர்களை தங்களுடைய சகோதரர்கள் என நினைக்காமல், சிலோன்காரர்கள் என்ற பிரிவினையோடு பார்த்தது. இதனால் பலர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு பைத்தியக்காரர்களான கதைகளும் உண்டு. இதே நிலைமை இன்று வரை நீடிக்கிறது.

பல குடும்பங்கள் வேதனையான வாழ்க்கையை இன்றும் அனுபவித்து வருகின்றனர். 1983 கலவரங்களுக்கு பின் ஈழத்திலிருந்து வந்து அகதிகளாக இருப்போர் இப்போது படுகின்ற துன்பங்களை போன்றுதான், அன்று மலையகத் தமிழர்களும் சொந்த நாட்டுக்குத் திரும்பிய பிறகும் கஷ்டங்களை அனுபவித்தனர்.

மனித உரிமைகள், மானுடம் என பேசிடும் நாம், 50 ஆண்டுகளுக்கு முன்னால் நிறைவேறிய சாஸ்திரி } சிரிமாவோ ஒப்பந்தம், மலையக மக்களை சாவு குழிக்கும், அடிமை சாசனத்திற்கும் அழைத்துச் சென்றது என்ற ரணமான செய்தியைப் பதிவு செய்யும் நிலையில் இருக்கின்றோம்.
பிஜித் தீவு காப்பி தோட்டத்தில் தமிழர்கள் பட்ட பாடுகளை கண்ட பாரதி, "விதியே விதியே, தமிழ் சாதியே என் செய்ய நினைத்தாய்?' என்று பாடினானே, அந்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

கே.எஸ். ராதாகிருஷ்ணன்-
தினமணி

மலையக மக்களின் நட்பு சக்திகளை சரியாக அடையாளம் காண்போம்


மலையகத்தில் பதுளை மீரியபெத்த என்ற இடத்தில் அண்மையில் நடைபெற்ற மண்சரிவினால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆதரவுக் கரங்களை நீட்டும் முகமாகவும், மரணித்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலிக்காகவும் இந்திய வம்சாவழித் இலங்கைத் தமிழர் (SLTCIO) என்ற அமைப்பு ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பொன்று எனக்கு கிடைத்தது. இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் இந்த உழைக்கும் மக்களின் நலன்களில் நீண்ட காலமாகவே எனக்கிருந்த ஈடுபாடு என்னை இந்த நிகழ்வில் கலந்து கொள்ள என்னை இழுத்துச் சென்றது.
 
புலம் பெயர் தேசம் ஒன்றில் முதல்? தடவையாக மலையக மக்களின் நிகழ்வு ஒன்றில் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரநிதிகள் கலந்து கொண்டதாக கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்களின் பேச்சுக்களில் குறிப்பிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை நிதிகளாகவும், பொருட்களாகவும் சேர்த்து அனுப்புதல் என்பதுவும் இந்த நிகழ்வின் ஒரு நோக்கமாக இருந்தது. மேலும் மலையக மக்களின் பிரச்சனையை மலையக மக்கள் தவிர்ந்த ஏனை வடக்கு, கிழக்கு மக்களுக்கு எடுத்தியம்பும் ஒரு ஏற்பாடாகவும் இதனைப் பார்க்கலாம் என்ற கருத்துக்களையும் ஏற்பாட்டாளர்கள் முன்வைத்தனர்.
இந்த கூட்டதை ஒழுங்கு செய்தவர்கள் யாவரும் மலையகத்தை பிறப்பிடமாக கொண்டவர்களாகவே இருந்தனர். ஆனால், இன்று மத்தியதர வர்க்க வாழ்க்கை முறைகளுக்குள் தம்மை இணைத்துக் கொண்டு அந்த வர்க்க குணாம்சத்துடன் வாழ்க்கை நடாத்துகின்றனர் என்ற செயற்பாடுகளே இங்கு மேலோங்கி இருந்தது. மக்களின் துயரத்தை பகிரும் ஒரு நிகழ்வில் ஒரு கொண்டாட்டத் தன்மை சற்று தலைதூக்கியிருந்தது என் பார்வையில் வருந்தத்தக்கதாக உணரப்பட்டது. இது எனது மனவலையிலிருந்து இருந்து உதிர்ந்தவைதான். வேறு எந்த குறை கூறும் நோக்கம் கொண்டு இங்கு நான் இதனைப் பதிவு செய்யவில்லை என்பதை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் கலந்து கொண்ட சிலரிடையே என்னையொத்த மனவலையின் பிரதி பலிப்பு இருந்ததை நான் உணர்ந்தும் கொண்டேன். இது திட்டமிட்டு நடைபெற்ற தவறு அல்ல? மாறாக ஏதேச்சையாக நடைபெற்ற தவறு என்ற எண்ணமும் என் மனவலையில் போராட்டமாக இன்றும் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தமிழ் (பேசும்) மக்கள் என்ற உணர்வலைகள் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களுடன் இணைவது என்ற இனத்துவ உணர்வுகளே மேலோங்கியிருக்கக் காணப்பட்டது. இலங்கையின் தலமைத்துவ வர்க்கமான இந்த அடிமட்ட உழைக்கும் மக்களின் சமூக மாற்றத்திற்கான முக்கியத்துவம் இங்கே சற்றே மறைந்திருந்தது காணக் கூடியதாக இருந்தது. மேலும் வடக்கு, கிழக்கில் இந்த உழைக்கும் மக்களின் நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில் நாடு கடந்த தமிழீழம், மாநகர கவுன்சிலர், தேர்தலில் எதிர்காலத்தில் நிற்கப் போகின்றவர்கள் என்ற மேற்தட்டு வர்க்க செயற்பாட்டாளர்களே இவர்களால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இது இவர்களின் வர்க்கக் அடிப்படையிலான ஐக்கிய முன்னணித் தந்திரோபாயக் கண்ணோட்டத்தில் உள்ள தப்புத் தாளங்களையே எடுத்தியம்பி நின்றன.
இந்த அமைப்பின் பெரும்பாலான செயற்பாட்டாளர்களிடம் இருந்த ‘வெள்ளந்தித்தனம்’ மலையக உழைக்கும் அடிமட்ட மக்களுக்கான விடுதலைக்கான நட்புச்சக்திகளை இனம் காணுவதில் தவறான போக்கிற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக என்னால் உணரப்பட்டது. இந்நிகழ்வின் பிரமுகர்களாக மீண்டும், மீண்டும் (கவனிக்க மீண்டும் மீண்டும்)) இனம் காட்ட பேசப்பட்ட பேச்சுக்கள், செயற்பாடுகள் போன்றவற்றின் வெளிப்படும் சேதியின் அடிப்படையில் இதனை நான் இங்கு பதிவு செய்கின்றேன். நம்பிக்கையுடன் பலகாலமாக என்னால் அவதானிக்கப்பட்டு வந்த மலையக சகாக்கள் சிலர் பேச்சுக்கள் கூட ஏமாற்றம் அழிப்பதாகவே இருந்தது. காரணம் இவர்கள் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரமுகர்கள் என்று அதிகமாக முதன்மைப்படுத்தி சுட்டிக் காட்டி பேசிய பேச்சுக்கள் ஆகும். இந்த நிகழ்விற்கு பெருமை சேர்ப்பவர்கள் யார் என்பதை அடையாளப்படுத்துவதில் இவர்கள் இந்த பிரமுகர்களிடம் தொங்கிக்கொண்டு இருப்பதாகவே இவர்கள் தம்மை காட்டிக் கொண்டனர்.

இவர்களின் இந்த பேச்சு, செயற்பாடுகள் ஒரு ஆரோக்கியமான தடங்களாக மலையக பெரும்பான்மை அடிமட்ட மக்களின் விடிவிற்கு அமையப் போவது இல்லை. ஒரு நல்ல முயற்சிற்கான நிகழ்வு சரியான நட்பு சக்திகளை அடையாளப்படுத்தாமல் எங்கேயோ இழுத்துச் செல்லப்படுவது போன்ற உணர்வலையை என்னிடம் இருந்து பிரித்தெடுக்க என்னால் முடியவில்லை என்பதை இங்கு மன வருத்ததுடன் பதிவு செய்ய விருப்புகின்றேன். ஒரு துயர் பகிர்வு நிகழ்வில் ‘யாரும்’ கலந்து கொள்ள அனுமதிப்பது இதற்கான சபை நாகரிகம், மரியாதை என்பது வேறு. மாறாக இவர்களே, இவர்களாலே இந்த துயர் பகிர்வு பெருமை, முழுமை அடைகின்றது என்ற கருத்தியல் அப்படையில் நடந்து கொள்வது வேறு.

மலையக மக்களின் வாழ்க்கைகான சமூகப் புரட்சி வெற்றியளிக்க வேண்டுமாயின் அங்கும், இங்கும் இந்த மக்களின் நலன்களில் உண்மையான அக்கறையுள்ளவர்களின் தலைமைத்துவத்தை உருவாக்கி நண்பர்கள் யார், நட்பு இல்லாத சக்திகள் யார்? என்பதை சரியாக இனம் கண்டு அவர்களுடன் ஐக்கிய முன்னணி அமைத்தல் வேண்டும். புரட்சிகரமாக வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்த மக்கள் அணிதிரட்டி வழி நடத்தி சரியான நட்பு சக்திகளுடன் ஐக்கியப்பட்டு இணைந்து இந்த மக்களின் தலமையில் போராடினால், செயற்பட்டாலே அது சாத்தியம் ஆகும். இதில் மனிதத்துவமே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் மாறாக இனம், மொழி, மதம் முன்னிலை பெற்றலால் வேணும் என்றால் உசுப்பேத்தி தேர்தலில் வெற்றி பெற்று தொண்டமான்காளாக வர உதவுமே தவிர இந்த மக்களின் நிரந்தர வடிவிற்கான செயற்பாடாக அமையப் போவதில்லை.
 
என்ன இன்னும் ஒரு ஆறுமுகம், செந்தில்களை மலையகத்தில் மட்டும் இல்லை புலம்பெயர் தேசங்கள் எல்லாம் உருவாக்க முடியுமே தவிர மலையக மக்களுக்கான விடிவு கிடைக்க உதவப் போவதில்லை. இந்த நிகழ்வில் உங்களால் முன்னிலைப்படுதப்பட்ட பிரமுகர்கள் மனோகணேசன், விக்னேஸ்வரன் வகையறாக்கள் என்பதை கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்வது போல் உணரப்படக் கூடாது என்ற அக்கறையில் இங்கு இதனைப் பதிவு செய்கின்றேன். இதில் நாங்கள் யாரும் தவறிவிடக் கூடாது என்பதை ஈழவிடுதலைப் போராட்டதின் முடிவுகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்வோம். இந்த துயர் பகிர்வு நிகழ்வுகளில் மேலோங்கி நின்ற தவறான சில விடயங்களை இங்கு பதிவு செய்கின்றேன். இந்நிகழ்வைப் பார்த்தால் அது ‘மௌனிக்கப்பட்டவர்’களின் சாம்பலில் இருந்து புறப்பட விளையும் தவறான நட்பு, நடப்புக்களையே எனக்கு உணர்த்தி நிற்கின்றது.

- சாகரன்-