Saturday, September 27, 2008

மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம்

மத்திய மாகாணத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் யாவும் போட்டி பரீட்சை முடிவுகள் மூலம் உள்வாங்;கப்படும் என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார். மத்திய மகாணத்திலி; பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் தற்போது 1133 என அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் போட்டி பரீட்சை முடிவுகளின்படி 2187 பேர் பரீட்சையில் சித்தியெய்துள்ளனர்.

Friday, September 26, 2008

அரசு தீர்மானித்திருக்கும் தேர்தல் முறை மலையகத் தமிழ் சமூகத்தை 30 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைக்குக் கொண்டு செல்லும்

விகிதாசார தேர்தல் முறையினால் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் சனத்தொகை அடிப்படையில் அமையாவிட்டாலும் அபூர்வமாக சில பகுதிகளில் மட்டும் ஒருசில அங்கத்துவத்தை பெறக்கூடிய நிலை இதுவரை இருந்தது.

தற்போது தொகுதிகளையும் உள்ளுராட்சிச் சபைகளில் வாட் முறையையும் அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்ற அரசின் ஆலோசனை நடைமுறைக்கு வந்தால் இந்திய வம்சாவளி மக்கள் வாழுகின்ற நாட்டின் எந்தப் பகுதியிலும் எம்மால் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய முடியாது.

1977 ஆம் ஆண்டு இ.தொ.கா.தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் நுவரெலியா மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்குக் காரணமாக அமைந்தது நுவரெலியா மாவட்டம் மூன்று அங்கத்தவர் தொகுதியாக ஆக்கப்பட்டதேயாகும். அவர் மூன்றாவது எம்.பி யாக தெரிவு செய்யப்பட்டார். விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் உள்ளூராட்சி சபைகளிலும் மாகாணசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் அங்கும் இங்குமாக சில மலையக தமிழர்கள் பிரதிநிதிகளாகத் தெரிவாகக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. இப்போதைய தேர்தல் முறைகளில் அரசு ஏற்படுத்த முனைகின்ற மாற்றம் மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தையே அடியோடு வேரறுத்து விடும். அது மலையகத் தமிழ் சமூகத்தை 30 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைக்குக் கொண்டு செல்வதாகவே அமைந்துவிடும்.

எனவே சகல மலையக சக்திகளும் ஒன்றுசேர்ந்து எமது பிரதிநிதித்துவத்துக்கு வரும் ஆபத்துக்கு எதிராக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதில் அவசர தேவை ஏற்பட்டுள்ளதை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு மலையக மக்கள் முன்னணி தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் தலவாக்கலையில் ஹொலீரூட், ட்ரூப் தோட்டங்களில் அமைச்சு நிதி ஒதுக்கீட்டிலான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோது தெரிவித்தார்.
28,500 இந்தியா வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை

தமிழ் நாட்டில் அகதி முகாம்களில் நாடற்றவர்களாக நீண்ட காலமாக இருந்துவரும் 28,500 இந்திய வம்சாவளி மக்களுக்கும் உடனடியாக இலங்கைப் பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இது குறித்த சட்ட மூலத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் செப்டெம்பர் 15 ஆம் திகதி வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, September 25, 2008

பெருந் தோட்டத்துறை சிறுவர் உரிமை மீறல்கள்

-தொடர்ச்சி-

மிகக் குறைவான வருமானத்தைக் கொண்ட வீட்டுத் துறையினர் பிள்ளைகளை தொழிலுக்கு அமர்த்துவது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகும். எனவே தொழிற் படையிலிருந்து சிறுவர்களை நீக்க வேண்டுமெனின் அவர்களின் குடும்ப வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். சிறுவர்களின் விருப்பத்திற்கு முரணான சூழ்நிலைகளினால் அவர்கள் தொழிலில் பலவந்தமாக தள்ளப்படுகின்றனர். பெருந்தோட்டத் துறைச் சிறுவர்களின் உரிமை மீறல்கள் காலனித்துவக் காலங்களிலிருந்தே இடம்பெற்று வருகின்றன. இலங்கையில் ஏனைய துறைகளுடன் ஒப்பிடும் போது பெருந்தோட்டத் துறையிலேயே அதிகளவான சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவது அண்மைக்கால ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இக் கட்டுரையில் தெரிவு செய்யப்பட்ட தோட்டங்களிலிருந்து 225 பிள்ளைகளிடமும் பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள், தோட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் போன்ற பலரிடமிருந்தும் கலந்துரையாடி தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இங்கு 6-14 வயது வரையிலான சிறுவர்கள் தொடர்பாகவே கவனம் செலுத்தப்பட்டது. அதிலும் 14 வயதிற்கு கீழ்ப்பட்ட முழு நேரத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்களின் பிரச்சினைகளே ஆராயப்பட்டன. இதில் 12 வீதமான சிறுவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகி தொழிலில் சேர்ந்துள்ளமை கவலைக்குரியதே. சிறுவர்கள் குடும்ப வறுமையின் காரணமாகவே தொழிலில் சேர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் 60 வீதமான சிறுவர்கள் தரகர்களின் ஊடாகவே தோட்டத்திற்கு வெளியில் தொழிலில் சேர்கின்றனர். இவர்கள் மிக மோசமான சூழ்நிலையிலேயே தொழில் புரிய வேண்டியுள்ளது. பெருந் தோட்டத்துறையில் சிறுவர் தொழிலை ஊக்குவிக்கின்ற ஒரு காரணியாக குடும்ப பிளவும் காணப்படுகின்றது. எனவே தொழிலில் ஈடுபடுகின்ற சிறுவர்களது நலன் முழுமையாக பாதுகாக்க முடியாத நிலை காணப்பட்டதுடன் எந்த உரிமைகளையும் அனுபவிக்க முடியாத ஒரு பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் இவர்கள் வாழ்நாள் முழுவதும் துன்ப துயரங்களுடனேயே வாழவேண்டிய நிலை காணப்படுகின்றது. அவர்களது திறன்கள் சிறு வயதிலேயே அழிந்து விடுகின்றன. இதனை விடவும் சிறுவர்களின் எண்ணங்கள், அபிலாசைகள் என்பவற்றை வெளிப்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்றது. இது காலப்போக்கில் அவர்கள் வாழ்க்கையில் விரக்தி நிலையும் சமூகத்தில் வெறுப்பும் தோன்றி அவர்களை தவறான வழியில் செல்லத் தூண்டுகின்றன. அண்மைக்காலமாக சமூக, தேசிய, சர்வதேச மட்டங்களிலிருந்தும் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பான பல கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இலங்கை அரசாங்கமானது ஒரு குடும்பத்திற்குள் பிள்ளையின் வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் ஊக்கப்படுத்தக்கூடிய வகையில் பல நிறுவன ரீதியான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இவற்றுள் இலவசக் கல்வி வசதி, இலவச மருத்துவ வசதி, தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கவையாகும். எனினும் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு இவற்றை அனுபவிக்கக்கூடிய வாய்ப்பு மிகவும் குறைவாகும். பெருந்தோட்டதுறைச் சமூகத்தில் சிறுவர் தொழிலாளர்களை தடுப்பதற்கு தேசிய சர்வதேசிய ரீதியிலான ஒத்துழைப்புக்கள் அவசியமாகின்றன. பெருந்தோட்டத்துறையின் சிறுவர் தொழிலாளர்களை குறைப்பதற்கு பல செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பெருந்தோட்டத்தில் சிறுவர் நலன் தொடர்பான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள கசல அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து சிறுவர் நல செயல்பாடுகள் தொடர்பான ஒரு பொதுவான செயற்திட்டத்தை உருவாக்க வேண்டும். இவ்வமைப்பில் தோட்டத்தில் இருக்கின்ற பிரஜைகள் குழுக்களின் உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுவர்கள் தொடர்பான செயற்திட்டங்களை முன் வைக்கும் போது முதலில் அவர்களது பிரச்சினைகள் சரியாக இனம் காணப்பட வேண்டும. சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம், அவர்களது உரிமைகள் தொடர்பான தெளிவான விளக்கம், உரிமை மீறல்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் அநீதிகள் போன்றவை தொடர்பான சிறந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தோட்டங்களில் பல மட்டங்களிலும் உள்ள மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அத்துடன் கல்வியின் பெறுமதி பற்றி தோட்டங்களில் பெற்றோர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும். இங்கு தொழிலற்று இருக்கும் இளைஞர், யுவதிகள் மத்தியில் தொழில் நுட்ப பயிற்சிகளை பெறக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். சுயதொழிலை ஆரம்பிப்பதற்கான இலகு தவணைக் கடன்களை அறிமுகப்படுத்த வேண்டும். அத்துடன் அவர்களது உற்பத்திகளுக்கு சந்தை பற்றிய தகவல்களை வழங்க வேண்டும். இதனை விடவும் தற்போது தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்களை இனம் கண்டு அவர்களுக்கு புனர் வாழ்வு வழங்கக்கூடிய செயற்பாடுகளை நேரடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் பெருந்தோட்டத்துறைச் சிறுவர் தொழிலாளர்களை தடை செய்து அவர்களை பாதுகாத்து அவர்களுக்கான சிறப்பான எதிர்காலத்தை வழங்குவதற்கு சகல தரப்பினரும் தமது ஒத்துழைப்பை நல்க வேண்டும். அப்பொழுதுதான் பெருந்தோட்டத்துறையில் ஒரு சுபிட்சமான எதிர்காலத்தை சிறார்களால் பெற்றுக் கொள்ள முடியும்.

அமரர் இரா. சிவலிங்கம் ஞாபகார்த்த நினைவு பேருரை
-ஷோபனாதேவி இராஜேந்திரன்-
பேராதனை பல்கலைகழக முதுநிலை விரிவுரையாளர்

Wednesday, September 24, 2008

பிரஜாவுரிமை சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

இந்திய தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினருக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்குவதற்கு ஏற்ற வகையில் பிரஜாவுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்படவிருக்கிறது.

இதற்கேற்ப 2003ம் ஆண்டின் 35ம் இலக்க இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்கல் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவது தொடர்பான சட்டத்திருத்த மூலம் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதேவேளை 1988ம் ஆண்டின் 39ம் இலக்க நாடற்றவர்களுக்குப் பிரஜாவுரிமை வழங்குதல் சிறப்பேடுகள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பிரேரணையொன்றையும் அமைச்சர் தினேஷ் சபையில் சமர்ப்பித்தார். இந்தச் சட்டத் திருத்தத்தின்படி தமிழ் நாட்டில் அகதிகளுக்கான சிறப்பு முகாமில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் அனைவரும் இலங்கை பிரஜாவுரிமையை பெறுகின்றனர்.

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்தபோதும் பொருட்களின் விலையில் வீழ்ச்சியில்லை. தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை அவசியம்

சர்வதேச சந்தையில் எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறைக்கப்படாமல் உள்ளமை எவ்வகையிலும் நியாயமானதல்ல. பெருந் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட உழைக்கும் தொழிலாளர்கள் வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் தினசரி வாடி வருகின்றனர். முன்பு எண்ணெய் விலை அதிகரிப்பினால் வாழ்க்கை செலவும் அதிகரித்தமைக்கு காரணமாய் அமைந்தது.

அண்டை நாடான தமிழகத்தில் தற்போத ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குகிறார்கள். உணவுப் பொருட்கள் உட்பட மண்ணெண்ணெய் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படுகி;ன்றது. இதே போல் நாட்டு மக்களின் பசிப் பிணியை போக்க வேண்டியது அரசின் கடமையாகும். எனவே எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் தொழிலாளர்களின் வாழக்கை செலவை குறைக்கவும், எண்ணெய் விலையை குறைக்கவும், சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந் தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் ஓ. ஏ. இராமையா தெரிவித்துள்ளார்.

பத்து வருடங்களாக தற்காலிக குடிசைகளில் வாழும் தொழிலாளர்கள்

நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் சுமார் 48 குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 10 வருடங்களாக தற்காலிக குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்த தற்காலிக குடிசை ஒன்றில் 4,5 பேர் பல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர். இது சம்பந்தமாக தோட்ட நிர்வாகத்துடன் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தும்பொழுது காணி வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இத்தோட்டத்தில் சுமார் 160 குடும்பங்கள் வசிக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Tuesday, September 23, 2008

மலையக மக்களின் பிரச்சினை பிரஜாவுரிமை பிரச்சினையாவே பார்க்கப்பட்டது அல்லது மட்டுப்படுத்தப்பட்டது.

1948ம் ஆண்டு மலையக மக்களின் நாட்டுரிமை பறிக்கப்பட்டதன் விளைவாக 1977ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் 30 ஆண்டுகள், எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாதொழிக்கப்பட்டது. அதன் பின் எமது மக்களினதும், தலைவர்களினதும் முழு சக்தியும் பிரஜாவுரிமையை மீளப் பெறுவதிலேயே கழிந்தது. இதய சுத்தியோடு சில போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் அதன் பிறகு மலையக மக்களின் பிரச்சினையை 2003ம் ஆண்டு பராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமை சட்டம் வரை எமது பிரச்சினை பிரஜாவுரிமை பிரச்சினை போன்றே பார்க்கப்பட்டது. எமது தேசிய இன அடையாளத்தையும், தேசிய இன உரிமையையும் நிலை நாட்டுவதன் மூலம் எமது பிரஜாவுரிமை உட்பட எமது சகல உரிமைகளையும் இந்த நாட்டின் ஏனைய இனங்களுக்கும் உள்ளது போல் நிலை நாட்டப்பட வேண்டுமென்ற தொலை நோக்குப் பார்வையில் எமது பிரச்சினை பார்க்கப்படவில்லை.

தேசிய கட்சிகளான ஐ.தே.க வாக இருந்தாலும் ஸ்ரீ.ல.சு.க ஆக இருந்தாலும் இந்த மக்களின் வாக்கு வங்கியை எப்படி தமது ஆட்சியதிகாரத்திற்கும், இருப்பிற்கும் பயன்படுத்திக் கொள்வது என்றே பார்க்கப்பட்டது. திமபு பேச்சுவார்த்தையில் தமிழ் இயக்கங்களின் பிரஜாவுரிமை தொடர்பான வலியுறுத்தல் மிக காத்திரமான பங்களிப்பைச் செய்தது. பௌத்த பிக்குகளும், சிங்கள இனவாத அமைப்புக்களும் இந்தியா போன்ற வல்லரசொன்று எமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதற்காக இந்த பிரஜாவுரிமை விடயத்தில் ஆதரவு நல்கின.

ஆகவே மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை ஒவ்வொரு கட்சியினதும் நலம் சார்ந்த பிரச்சினையாகவும், அவர்களது வாக்கு வங்கியை குறிக்கோளாக கொண்டதாகவும் அமைந்ததே அல்லாமல் மலையக தமிழ் மக்களின் பிரச்சினையை நீண்டகால நோக்கில், முழுமையாக தீர்க்க வேண்டுமென்ற அடிப்படையில் பார்க்கப்படவில்லை. எனவே எமது தலைவர்கள் உட்பட தேசிய கட்சிகள் வரை எமது மக்களின் பிரச்சினையை ஒரு பிரஜாவுரிமை பிரச்சினையோடு சகல உரிமைகளும் வழங்கப்பட்டு மற்ற இனங்களைப் போல தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட வேண்டுமென்ற அபிலாசையோடு பார்க்கப்படவில்லை

-சமகால அரசியல் - தீர்வு – அ. லோறன்ஸ் -

உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகள் தோட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்

உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகளை பெருந்தோட்டப் புறங்களுக்கும் முன்னெடுக்கப்பட கூடியதாக சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரின் பாரியார் புசல்லாவ நியூபீகொக் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்புக்களை பார்வையிடும் போது மக்கள் மத்தியில் தெரிவித்தார். மேலும் வடக்கு கிழக்குடன் ஒப்பிடும் போது அச்சமற்ற சூழலில் வாழக்கூடிய நிலையில் நாம் இருக்கின்றோம். உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகள் தோட்டப்புறங்களுக்கு சென்றடைவதில்லை. இதனால் பிரதிநிதிகளை தெரிவு செய்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அறிவூட்டல் நிகழ்வில் 500 பேர் பங்கேற்பு

தோட்டத் தொழிலாளர்களின் அடையாள அட்டையை பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாத தடையை நிவர்த்தி செய்யும் பொருட்டு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தினால் கண்டியிலும், மாத்தளையிலும் நடத்தப்பட்ட அறிவூட்டல் நிகழ்ச்சியில் ஐநூறுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வு மாத்தளை பிரதேச செயலகம், ரொக்சைட் தோட்ட மண்டபம், கண்டி குருதெனிய கல்வி வள நிலையம், லொவர் கொத்மலை கிளப் ஆகிய இடங்களில் இடம் பெற்ற இந் நிகழ்வில் தோட்ட முகாமையாளர்கள், தோட்ட சமூக நல அதிகாரிகள், தோட்ட மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். பிறப்பு சான்றிதழ் பிரச்சினை சம்பந்தமாக ஜனாதிபதிக்கும் சமூக அபிவிருத்தி, இளைஞர் வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருக்குமிடையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கமைய மனித வள அபிவிருத்தி நிதியம் இதனை முன்னெடுத்துள்ளது.
பெருந்தோட்டத்துறைச் சிறுவர் உரிமை மீறல்கள்

தொடர்ச்சி......

-ஷோபனாதேவி இராஜேந்திரன்-

ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் சமூக ரீதியான அங்கீகாரம் கிடைக்கக்கூடிய வகையிலான இலக்கினை அடைந்து கொள்வதற்கான ஒரு பயிற்சியினை கல்வி வழங்கி தயார்ப் படுத்துகின்றது. ஆனால், இத்தகைய அடிப்படை கல்வியைக்கூட பெருந்தோட்டத்துறையில் சுமார் 16 வீதமான சிறார்கள் எய்த முடியாத நிலை (தொழிலில் ஈடுபட்டுள்ள) காணப்படுகின்றது.

தொழிற் சந்தையில் நுழைவதற்கான வழிமுறைகள்

தோட்டத்துறையைச் சேர்ந்த சிறுவர்கள் தொழிலில் நுழைவதற்கான பல்வேறு விதமான வழிமுறைகள் காணப்படுகின்றன. இவர்கள் முறைசாராத தொழிற் சந்தைகளிலேயே தொழிலைப் பெறுகின்றனர். கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி 60 வீதமான சிறுவர்கள் தரகர்கள் மூலமே தோட்டத்திற்கு வெளியே தொழிலைப் பெற்றுக்கொள்கின்றனர். ஒவ்வொரு தோட்டத்திலும் குறிப்பாக வீட்டுப் பணியாட்களாக சிறுவர்களை அனுப்புவதற்கான தரகர்கள் அத்தோட்டத்திற்குள்ளேயே இருக்கின்றனர்.

இவ்வாறு சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தும் தரகர்கள் அவர்களது பெற்றோரை ஏமாற்றி சிறுவர்களைத் தொழிலுக்கு சேர்த்து விடுகின்றனர். இதற்கான சன்மானத்தை தொழிலுக்கு அமர்த்தும் இடத்திலிருந்து பெற்றுக்கொள்கின்றனர். அதுமட்டுமன்றி சிறுவர்களை ஏமாற்றி அவர்களை வீட்டுக்கு வீடு மாற்றுவதன் மூலம் தொழிலுக்கு அமர்த்தும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் தரகுப் பணத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். சிறுவர்களை மூலதனமாக வைத்து அவர்கள் உழைப்பை சுரண்டுகின்ற இந்த தரகர்கள் எத்தகைய குற்றவாளிகள் என்பது சிந்திக்கப்பட வேண்டிய விடயம் அல்லவா?

அட்டவணை-04
தரகர்கள் - 60 வீதம்

பெற்றோர் - 20.5 வீதம்
ஏனைய உறவினர்கள் - 6.5 வீதம்
தொழில் வழங்குநர் – 8.3 வீதம்
சிறுவர்கள் - (தாமாகவே சேருதல்) – 3.2 வீதம்
ஏனையவை – 1.4 வீதம்

மொத்தம் - 100 வீதம்

அட்டவணை 4 இன் படி 20.5 வீதமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நேரடியாகவே தொழிலில் சேர்த்து விடுகின்றனர். இவ்வாறு நேரடியாக தொழிலில் சேர்க்கின்றபோது தொழில் வழங்குநர்களால் தரகர்களுக்கு சன்மானம் கொடுப்பதைப் போலவே பெற்றோர்களும் சன்மானத்தைக் கொடுக்கின்றனர். இது பெற்றோர்கள் தம் சொந்தப் பிள்ளைகளை பணத்திற்காக விற்பனை செய்வதாக கருதும் நிலையை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் இவ்வாறு பெற்றுக்கொள்ளும் பணத்தில் அதிகமான பகுதியை தமது மதுபாவனைக்காக பயன்படுத்துவது ஆய்வின் போது அறியக்கூடியதாக இருந்தது. இவர்கள் சிறிதேனும் பிள்ளையின் எதிர்காலம் பற்றி சிந்திக்காமல் செயற்படுகின்றனர். பிள்ளைகளை தொழிலுக்கு அமர்த்தி அப்பிள்ளைகளின் அறிவு, ஆற்றல், ஆளுமை ஆகிய அனைத்தையும் அரும்பிலேயே கிள்ளி எறிந்து விடுகின்றனர். இந்நிலையில் பிள்ளைகளின் சுதந்திரத்திற்கு முழுமையாக பங்கம் விளைவிக்கப்படுவதன் மூலம் அவர்களது சகல உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. இவ்வகையில் நோக்கும்போது பிள்ளைகளை தொழிலில் அமர்த்துவதற்கு வழி செய்கின்ற பெற்றோர்களே முதல் குற்றவாளிகள். எனவே, பொறுப்பற்று பிள்ளைகளின் எதிர்காலத்தை வீணடிக்கும் பெற்றோர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள்.

சிறுவர் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டல்

இலங்கையில் சிறுவர்களை பாதுகாப்பதற்கான சிறந்த சட்ட ஏற்பாடுகள் காணப்படுகின்றன. இங்கு 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தொடர்பாக முழுமையாக கவனம் செலுத்தப்படுகின்றது. குறிப்பாக சிறுவர்களின் கல்விக்கான உரிமையை பாதுகாக்கும் வகையில் கட்டாயக் கல்வி அமுலாக்கம் நடைமுறையில் உள்ளது. இதன்படி 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் முழு நேரத் தொழிலில் ஈடுபடுவது முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும், சட்டத்திற்கு முரணான வகையில் சிறுவர்கள் தொழிலில் அமர்த்தப்படுவது தொடர்பாக ஏலவே இங்கு நோக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பொதுவாக முறைசாராத துறைகளில் தொழில்களை பெற்றுக்கொள்கின்றனர். பிள்ளைகளின் அபிவிருத்தித் தேவை, குடும்பத்தின் பொருளாதாரத் தேவை இவை இரண்டிற்குமிடையில் ஒரு சமத்துவத்தன்மை இல்லை என்றே குறிப்பிடலாம். இங்கு குடும்பத்தின் பொருளாதார தேவையை முன்னுரிமைப்படுத்தி அதனடிப்படையில் சிறுவர்களை தொழிலில் அமர்த்துவது ஒரு பொதுவான விடயமாக காணப்படுகின்றது. இவ்வாறு முறைசாரா துறைகளில் தொழில்புரியும் சிறுவர்களின் ஊழியச் சுரண்டல் மிக உயர்வான நிலையில் இருப்பதை அறியக்கூடியதாக உள்ளது. சிறுவர்கள் தமது குறைந்தபட்ச கூலியை பெற்றுக்கொள்ள மிகக்கூடிய மணித்தியாலங்கள் உழைக்க வேண்டியுள்ளது. எனவே, தொழில்புரியும் பிள்ளைகள் மிக குறைந்தளவு நேரமே ஓய்வினை அனுபவிக்கின்றனர். தொழில் வழங்குநர்கள் சிறுவர்களிடமிருந்து மிக நீண்ட நேர உழைப்பினை பெற்றுக்கொண்டு மாறாக, அவர்களுக்கு குறைந்தபட்ச கூலியையும் விட மிகக்குறைவான கூலியையே வழங்குகின்றனர். இதிலும், 90 வீதமான சிறுவர்களுக்கு வழங்கப்படும் கூலியை பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ பெற்றுக்கொள்கின்றனர்.

மேலும், தொழில்புரியும் சிறுவர்களுக்கு தொழில் செய்யும் இடத்தில் ஓர் ஆரோக்கியமான சூழல் இருப்பதில்லை. மாறாக, மிக மோசமான சூழ்நிலைகளின் கீழே இவர்கள் தொழில்புரிய வேண்டிய கட்டாயச் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இது அவர்களது முறையான உடல், உள ரீதியான வளர்ச்சிக்கு பாதகமாகவே உள்ளது. அத்துடன், முழுநேர சிறுவர் தொழிலாளர்களின் தொழிலில் ஈடுபடும் நிலைமையானது அவர்களது உடல் நலத்தினையும் தனியாள் அபிவிருத்தியையும் பாதிக்கின்றது.

சிறுவர்கள் தொழிலில் அமர்த்தப்படுவதற்கான காரணங்கள் வறுமையும் வேலையின்மையும்
சமூக, பொருளாதார சமத்துவமின்மையினாலும் போதியளவு கல்வி வசதியின்மையினாலும் உருவாக்கப்பட்ட வறுமை நிலையே சிறுவர்களை தொழிலில் அமர்த்துவதற்கு மூல காரணமாக இருக்கின்றது (சர்வதேச தொழிலாளர் தாபனம், 2002). பேரின மட்டத்தில் நோக்குகையில் ஒரு நாடு செல்வந்த நாடாக மாறுகின்ற போது அந்நாட்டின் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துகின்ற நிலை குறைவடைந்து செல்லும்.

சீனாவில் உன்னதமான உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பினையடுத்து 1970 களிலிருந்து அந்நாட்டில் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தலானது மிகத் துரித நிலையில் வீழ்ச்சி கண்டுள்ளது. (Basuand Tzannators, 2003). ஒரு நாட்டின் வறுமை நிலையும் தொழிற்படையில் சேர்ந்தவர்களில் அதிகமானோர் தொழிலற்று இருப்பதும் அந்நாட்டின் சிறுவர்களை தொழிலாளர்களாய் ஊக்குவிக்கும் பிரதான காரணியாக அமைந்துவிடுவதாக பல நாடுகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டுத்துறையினரது வருமானம் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தலுக்குமிடையே எதிர்க்கணிய தொடர்பு காணப்படுகின்றது எனலாம். பெருந்தோட்டத்துறையில் குடும்பப் பருமன் உயர்வாக இருத்தல், குறைந்த கூலி வீதம் என்பன வறுமையை தோற்றுவிக்க, அது சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தும் நிலையினை உயர்த்தியுள்ளது.

கல்வி

இலங்கையின் தேசிய ரீதியிலான கல்வி மட்டத்துடன் ஒப்பிடுகின்ற போது பெருந்தோட்டத் துறையின் கல்வி மட்டமானது மிகக் குறைவாக இருப்பதனை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இவ்வகையில் தோட்டத்துறையிலேயே பாடசாலை இடைவிலகல் வீதம் உயர்வாக காணப்படுகிறது. குறைவான கல்வி மட்டமும் சிறுவர் தொழிலாளர்கள் அதிகரிப்பிற்கு பங்களிப்பு செலுத்தும் காரணியாகவுள்ளது. அத்துடன் பெண்களின் கல்வியில் ஏற்படும் அதிகரிப்பானது அவர்களின் பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் போஷாக்கு நிலை, கல்வி என்பவற்றுடன் நேரான தொடர்பினை கொண்டுள்ளது.

சிறந்த கல்வியை பெற்ற தாய்மார்கள் சிறந்த வகையில் பிள்ளைகளை வழிநடத்துவார்கள் (Wolpin, 1994 ) இலங்கையில் பெண்களின் எழுத்தறிவு வீதமும் பாடசாலை சேரும் வீதமும் ஏனைய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை விட மிக உயர்வான நிலையல் காணப்படுவதாக 2005 ஆம் ஆண்டின் மனித அபிவிருத்தி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் இங்கு தோட்டத் துறையில் பெண் கல்வி வீதம் ஏனைய துறைகளுடன் ஒப்பிடும் போது மிக குறைந்த நிலையில் காணப்படுகின்றது (சுயதநனெசயn, 2007). எனவே பெண் கல்வியறிவும் சிறுவர் தொழிலாளர்களை குறைப்பதில் பாரிய பங்களிப்பினை செலுத்தும் காரணியாகவுள்ளது.

குடும்பப் பிளவும் தாய் அல்லது தந்தை மட்டும் உள்ள குடும்பங்களும்

பெருந்தோட்டத்துறையில் சிறுவர்களைத் தொழிலுக்கு தூண்டும், தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்றாக குடும்பப் பிளவு என்ற அம்சம் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆய்வுத் தகவல்களின்படி 14 வயதிற்குக் கீழ் சிறுவர் தொழிலாளராக உள்ள பிள்ளைகளில் 20 வீதமான பிள்ளைகளின் தகப்பன்மார்களும் 05 வீதமான பிள்ளைகளின் தாய்மார்களும் குடும்ப பிரச்சினைகளால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். மேலும் 07 வீதமான பிள்ளைகள் தாய், தகப்பன் இருவரும் இல்லாதவர்களாகக் காணப்படுகின்றனர். ஒரு பெற்றோரை மட்டும் கொண்டுள்ள பிள்ளைகள் தொழிற் சந்தையில் பலவந்தமாக தள்ளப்படுகின்றனர். பெற்றோரின் அன்பையும் அரவணைப்பையும் எந்த விதத்திலும் அனுபவிக்க முடியாத இப்பிள்ளைகளின் நிலை பற்றி அக்கறை கொள்ளாது தொழிலுக்கு தள்ளப்படுவது எவ்விதத்திலும் நியாயமாகாது.
இதனை விடவும் பெற்றோரின் மத்தியில் காணப்படும் மதுபாவனைப் பழக்கமும் பெரிதும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தப்படுவதற்கான காரணமாக உள்ளதை ஆய்வின் போது காணக்கூடியதாக இருந்தது. பெரும்பாலான பெற்றோர் தமது வருமானத்தில் 50 வீதத்திற்கும் அதிகமான பகுதியினை மதுபாவனைக்கு செலவழித்து விட்டு தம் சிறார்களை எஜமான்களின் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குவது மன்னிக்க முடியாத குற்றமல்லவா?

சிறுவர்களை தொழிலில் அமர்த்துவதால் ஏற்படும் விளைவுகள்

சிறுவர்கள் பெரும்பாலும் அவர்களது குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவே தொழிலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு தொழிலில் ஈடுபடும் சிறுவர்களினது தொழில் நிலைமைகள் மிக மோசமாக காணப்படுகின்றது. இதன் விளைவாக அச்சிறுவர்கள் இளம் பராயத்தை அடையும் போது அவர்கள் தரம் குறைந்த சுகாதாரத்தினைக் கொண்டவர்களாகவும், குறைந்த கல்வித் தரத்தினைக் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். இத்தகைய போக்கு அடுத்த தலைமுறையிலும் சிறுவர் தொழிலாளர்கள் உருவாகுவதற்கு வழி வகுக்கிறது.

பெருந்தோட்டத்துறையைப் பொறுத்த வரை தொழிலில் ஈடுபட்டுள்ள சிறவர்கள் குறைவான கல்வித் தரத்தினைக் கொண்டமையினால் அவர்களது வாழ்க்கையில் பல சிறந்த சந்தர்ப்பங்களை இழக்கின்றனர். அதனால் அவர்கள் பல பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அவையாவன்

  • இளம் பருவத்தில் தொழில்வாய்ப்பு குறைவாக காணப்படும்.
  • அவர்களது குறைந்த முதலீட்டால் தொழிற் சந்தையில் குறைந்த வருமானத்தையே உழைக்க முடியும்.
  • குறைந்த கல்வித் தரம் அவர்களது தொழில் சார் திறனை வளர்க்கும் இயலளவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
  • சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கான வாய்ப்பினை அதிகரிக்கின்றது.
  • அவர்களது தலைமைத்துவம் குறைந்த தரத்திலேயே காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட மனநிலை உள்ளவர்களாகவும் சமூகத்தின் மீது வெறுப்புணர்வுள்ளவர்களாகவும் வளர்கிறார்கள்.
  • பல சிறுவர் தொழிலாளர்கள் சமூக விரோதிகளாவும், குற்றவாளிகளாகவும் ஆகிவிடுகின்றனர்.

(தொடரும்...)

Monday, September 22, 2008

1931ம் ஆண்டு இலங்கையின் முதல் பொதுத் தேர்தலில் மலையகத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள்

இலங்கையை தாயகமாகக் கொண்டோர் அல்லது ஐந்து வருடங்கள் வாழ்ந்து கல்வி, சொத்து, வருமானத் தகைமை கொண்டோர் அல்லது ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வசித்து, மேலும் நிலையாக வசிக்கும் நோக்கமுடையோருக்கு வழங்கப்பட்ட குடியிருப்பு சான்றிதழ் கொண்டோர் என்போருக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. இச் சட்டத்தால் முதல் தடவையாக தோட்டத் தொழிலாளரில் ஒரு பகுதியினர் வாக்களிக்கும் உரிமை பெற்றனர்.

1931இல் இலங்கையின் முதல் பொதுத் தேர்தலில் தோட்டப்பகுதிகளில் கணிசமான அளவு அரசியல் பிரச்சாரம் நடைபெற்றது. எஸ்.பி. வைத்தியலிங்கம் (தலவாக்கொல்லை), பெரிசுந்தரம் (ஹட்டன்), ஆகிய இரு இந்திய வம்சாவழியினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெரி சுந்தரம் புதிய அரச கவுன்சிலில் (ஸ்டேட் கவுன்சில்) தொழில், கைத்தொழில் வர்த்தக மந்திரியானார். 1936 இல் இந்திய வாக்காளர்களின் தொகை 1,45,000 ஆக உயர்ந்தபோது தோட்டப்பகுதியில் அரசியல் குழப்பம் புதுப்பிக்கப்பட்டது. 1936ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இரு இந்தியர்களான எஸ்.பி வைத்தியலிங்கம் (தலவாக்கொல்லை), கே. நடேச ஐயர் (ஹட்டன்) ஆகிய இரு இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐந்து வருடத்துக்கொரு முறை பொதுத் தேர்தல் நடப்பதால் 1941ஆம் ஆண்டு தேர்தலுக்காக மிகுந்த தயாரிப்புகள் இடம் பெற்றன. (ஆனால் இரண்டாம் உலகப் போரினால் இது பின் போடப்பட்டது) இவ்வாண்டில் இந்திய வாக்காளர் தொகை 2,25,000 ஆக உயர்ந்தது. தோட்டத்துறையில் தேர்தல் உற்சாகம் பரவியதும், 1939க்குப் பின்னர் பரவிய தொழிற்சங்க ஆதரவும் அரசியல் விழிப்புக்கு வழிகோலியது.

-இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்- குமாரி ஜெயவர்த்தனா-

தோட்டப்புற வைத்தியசாலைகளில் அடிப்படை வசதிகள் இல்லை, மருந்துகளுக்கு தட்டுப்பாடு


மலையக தோட்டப்புற வைத்தியசாலைகள் பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியில் இயங்கி வருகின்றன. பயிற்சி பெற்ற வைத்தியர்களோ, அல்லது தாதியர்களோ இங்கு இருப்பதில்லை. ஒரு சில வைத்தியசாலைகள் தங்குமிட வசதியுடன் காணப்படுகின்ற போதிலும் ஏனையவை உரிய சுகாதார வசதிகளுமற்ற, படுக்கையறை வசதிகள், மலசலகூட வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் என்பன இல்லா நிரையே காணப்படுகின்றன. அண்மைக்காலமாக மருந்துக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏல்லா நோய்களுக்கும் ஒரே விதமான மருந்துகளே வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். பொருளாதார நெருக்கடியினால் தனியார் மருந்துசாலைகளில் பெற்றுக் கொள்ள முடியாத நிலை. தோட்டப்புற வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்க உள்ளதாக கடந்த தேர்தல் காலங்களில் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் முறையாக முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.

வாரத்தில் இரு நாட்கள் மாத்திரமே வேலை

மாத்தளை ரத்வத்தை- பன்சல தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் இரு நாட்கள் மாத்திரமே வேலை வழங்குவதால் தொழிலாளர்கள் வெலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இ.தொ.கா பிரதிநிதி தோட்ட நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையின் பின்னர் தொழிலாளர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்தும் தற்போது மீண்டும் வாரத்தில் மூன்று நாட்களே வேலை வழங்குவதால் மீண்டும் வேலை நிறுத்தத்தில் இறங்க போவதாக தெரிவிக்கின்றனர்.

Sunday, September 21, 2008

மலையக மக்களின் நாட்டுரிமையை பறித்த சுதந்திர இலங்கையின் முதல் பாராளுமன்றம்

1830 களில் தோட்டத் தொழிலாளர்களின் வருகைக்கும், 1948ம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டத்தின் அடிப்படையில் மலையகத் தமிழ் மக்களின் வாக்குரிமைப் பறிப்புக்கும் இடையில், சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றம் கொண்டு வந்த இரண்டு பிரதான சட்டங்கள் இம் மக்களின் வாழ்க்கையை அடியோடு மாற்றியதோடு அல்லாமல் இம் மக்களை 30 வருடங்கள் இந்த நாட்டின், அரசியல் அநாதைகளாக்கி விட்டன. அந்த இரண்டு மனித உரிமை மீறல் சட்டங்கள்தான் 1948ம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டமும், 1949ம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமுமாகும். இந்தச் சட்டங்களின் பாரதூரம் அன்று அவ்வளவாக தெரியவில்லை. மலையகத் தமிழ் மக்கள் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேல், அரசியல் அநாதைகளாக்கப்பட்டு சமகால அரசியலில் அவர்கள் அனுபவித்த மிக மோசமான இன அடக்குமுறை இந்தச் சட்டங்களின் கொடூரத் தன்மைக்கு சான்று பகர்வதாக உள்ளது.

இந்த மக்கள் அரசியல் பிரதிநிதித்துவமற்று, அபிவிருத்தி நடவடிக்கைகளிலே புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து புறம் தள்ளப்பட்டு, இந் நாட்டின் ஓரம் காட்டப்பட்ட சமூகமாக விளங்குவதற்கு, இச் சட்டங்கள் சமகால அரசியலிலே முக்கிய கருவியாக அமைந்தன. இந்தச் சட்டங்களிலே காணப்பட்ட மிக மோசமான, ஆனால் நுணுக்கமான ஒடுக்கு முறையை பிரித்தானியர்கள் கண்டு கொள்ளது, சிங்கள பெருந்தேசிய வெறியர்களை திருப்திப்படுத்துவதிலேயே, கண்ணும் கருத்துமாக இருந்தனர் என்பதைக் காட்டுவதாக அமைகின்றது. சர்வதேச சட்ட விதிகளையே இச்சட்டம் மீறுவதாக அமைந்தது.

சமகால அரசியல்- லோறன்ஸ்