Friday, April 17, 2009

மலையக அமைப்புகளின் ஆலோசனையுடன் புதிய ஒப்பந்தத்துக்கு கட்சிகள் வழிவிட வேண்டும்

கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மலையகக்கட்சிகள் அதிலிருந்து விலகி மக்களின் தேவைக்கேற்றவாறு ஒப்பந்தத்தை மாற்றி எழுதவேண்டும் அல்லது மக்களின் நலனில் அக்கறையுள்ள மலையக அமைப்புகளின் ஆலோசனைகளுடன் புதிய ஒப்பந்தத்தை எழுதுவதற்கு வழிவிட வேண்டும் என மலையக தொழிலாளர் முன்னணி தெரிவித்துள்ளது.

இக்கூட்டு ஒப்பந்தம் பற்றியோ இந்த ஒப்பந்தம் எவ்வாறு தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு தடையாக உள்ளது என்பது பற்றியோ போதிய விளக்கமோ, தெளிவோ இல்லை நடந்து முடிந்த மத்திய மாகாணசபைத் தேர்தலில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்து தொழிலாளர்களது வாக்குகளைப் பெற்றார்கள். தற்போது சம்பள உயர்வு பற்றி வேறு கதைகளை கதைக்கிறார்கள். கூட்டு ஒப்பந்தத்தில் ஒப்பம் இட வேண்டாம் என்று ஐ.தே.கட்சியிடம் இவர்கள் கூறமுடியாதா?

தொழிலாளர் தேசிய சங்கத்தை சேர்ந்தவர்களால்தான் மலையகம் மாறும் என்ற போக்கில் இன்னுமொரு மாயை உருவாக்கப்படுகின்றது. கூட்டுக் குழுவில் அங்கம் வகிக்கும் இவர்களால் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக முடியாதா அல்லது சம்பளத்தை கூட்டிக் கேட்க முடியாதா?

Thursday, April 16, 2009

மொனராகலை பகுதி தமிழ் தொழிலாளர்கள் மீது காடையர்கள் அட்டகாசம்

மொனராகல மாவட்டம் புத்தள, இக்கம்பிட்டிய பகுதிகளில் அப்பாவி சிங்கள மக்கள் 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்ற பெரும்பான்மையின காடையர்கள் தொழிலாளர்களை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக காடுகளுக்குள் சென்று தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர்கள் வெள்ளச்சிட தோட்டம், போகாலயின் றப்பர் தோட்ட மக்களே. கிராமங்களிலிருந்து இளைஞர்கள் பலர் ஆயுதங்களுடன் சென்று தாக்கியுள்ளதாகவும், தோட்டங்களுக்குள் புகுந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டதனால் 11 தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் மொனராகலை அரசினர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெருந்தோட்ட மக்களுக்கும் நிவாரணங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும் - சுரேஷ் வடிவேல்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் வரட்சி மற்றும் வெள்ளநிவாரணம், தர்மசம்பளம், அங்கவீனர்களுக்கான நிவாரண உதவிகள், விதவைகளுக்கான மேம்பாட்டு உதவி ஆகியன இதுவரை காலமும் பெரும்பான்மையின மக்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த இச் உதவிகள்;, நிவாரணங்களை பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களுக்கும் கிடைக்கும் வகையிலானவேலை திட்டங்களை முன்னெடுத்து வருவதாக பிரதி சுகாதார அமைச்சர் சுரேஷ் வடிவேல் பசறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பயன்தரும் மரக்கன்றுகளை இலவசமாக பகிர்ந்தளிக்கும் விசேட நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார்.

Monday, April 13, 2009

தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை எதிர்வரும் 22 ஆம் திகதி இடம் பெறவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டடைப்பு பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் தெரிவித்தார் மேலும் இப் பேச்சுவார்த்தையில் தோட்டமுதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கு பற்ற உள்ளனர் என்றும இப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கூட்டொப்பந்தம் கைச்சாத்திடும் பட்சத்தில் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் புதிய கூட்டொப்பந்தம் செல்லுபடியாகுமென்றும் என்றார் தற்போதைய வாழ்க்கைச்செலவு உயர்வக்கேற்ப தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை நாட்சம்பளமாக 500 ரூபா முதல் 600 ரூபா வரை அதிகரிக்கப்படவேண்டுமென்று மலையக தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sunday, April 12, 2009

இந்திய அரசு பெருந்தோட்டத்துறை மக்களுக்கு உதவி செய்யும்- இந்திய தூதுவர்

இலங்கையில் பெருந்தோட்டத்துறை மக்களை நான் உடன் பிறப்புக்களாகவும் பெருந்தோட்டத்துறையை நான் முக்கியத்துவமுடையதாகவும் கருதுகிறேன். இந்திய அரசு தொடர்ந்து தோட்டத்துறை மக்களுக்கு உதவி செய்யக் காத்துக் கிடக்கிறது இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் இந்திய அரசு வழங்கிய 20 சிட்டி ரைட் பஸ் வண்டிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். இப் பஸ் போக்குவரத்து சேவை யாவும் மாணவ, மாணவியர் தமது கல்வி நடவடிக்கைகளை துரிதமாக நிறைவேற்றவும், இளைஞர், யுவதிகள் தமது கடமையை உரிய நேரத்தில் பூர்த்தி செய்து கொள்ள பேருதவியாக அமையும் என்றார். இந்த பஸ் வண்டிகளைத் தவிர எதிர்காலத்தில் மேலும் 30 பஸ் வண்டிகளை வழங்கி வைக்கவும் தொடர்ந்து இம் மக்களுக்கு உதவிகளை புரியவும் இந்திய அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.