Monday, March 28, 2011

மாற்றுத் தொழிற்சங்கங்களின் செல்வாக்கு அதிகரிப்பு

பதுளை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பட்டியலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக 30 வேட்பாளர்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நிறுத்தப்பட்டபோதும் 7 உறுப்பினர்கள் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனால் மலையக மக்கள் முன்னணி மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிட்டபோதும் 7 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக 14 வேட்பாளர்கள் போட்டியிட்டபோதும் 9 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இ.தொ.கா.வுக்கு ஊவா மாகாண சபையில் அமைச்சர் ஒருவரும் மத்திய அரசாங்கத்திலும் பிரதி மற்றும் அமைச்சர் பதவிகளுடன் அதிகாரங்களும் இருந்த பொழுதும் பதுளை மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பசறை, பதுளை, ஹாலிஎல ஆகிய பிரதேச சபைகளிலும் ப்புத்தளை, பண்டாரவளை ஆகிய நகரசபைகளிலும் இ.தொ.கா.வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
எனினும் பசறை ஹாலிஎல , பதுளை பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் இ.தொ.கா.வுக்கு கணிசமான அங்கத்தினர்கள் இருக்கின்றபோதும் இவர்கள் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

விசேடமாக பசறை, பதுளை, பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் இ.தொ.கா.வினர் பெரும்பாலும் ஐ.தே.க.பட்டியலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களை ஆதரித்ததைக் காணக் கூடியதாகவிருந்தது. இதற்குச் சான்றாக பசறை,பதுளை, ஹாலி எல, பண்டாரவளை ஆகிய பிரதேச சபைகளில் போட்டியிட்ட ஐ.தே.க. தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.பசறை பிரதேச சபையில் ஆளும் கட்சிப் பட்டியலில் போட்டியிட்ட இ.தொ.கா.வேட்பாளர்கள் மூவரும் தோல்வியடைந்துள்ள போதும் அதே பட்டியலில் முன்னாள் பிரதியமைச்சரும் பசறை பொ.ஐ.மு. அமைப்பாளருமான வடிவேல் சுரேஸினால் நிறுத்தப்பட்ட தமிழ் வேட்பாளர் எஸ்.தயாபரன் 1955 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றதுடன் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

ஏன் இவ்வளவு சேவையினை மேற்கொண்டும் மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை அல்லது புறக்கணித்தனர் என்பதை இ.தொ.கா.வின் தலைமைப்பீடம் இப்போதே ஆராய்ந்து மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில் இனிவரும் தேர்தல்கள் இதைவிட இன்னும் பாரிய பின்னடைவை எதிர்கொள்ள வேண்டியதொரு நிலை ஏற்படும் என்று இ.தொ.கா.ஆதரவாளர்கள் கூறுகின்றார்கள்.

2013 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் தற்போதைய நிலையை விட மிகவும் பாதிக்கப்படலாம்.கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் ஆளும் கட்சிப் பட்டியலில் போட்டியிட்ட வடிவேல் சுரேஸ் 27 ஆயிரம் வாக்குகளையும், அதே பட்டியலில் போட்டியிட்ட இ.தொ.கா.வேட்பாளர்கள் இருவரும் 7 ஆயிரம் வாக்குகளையே பெற்றனர்.

ஐ.தே.கட்சிப் பட்டியலில் போட்டியிட்ட கே.வேலாயுதம் 25 ஆயிரம், எம்.சச்சிதானந்தன் 25 ஆயிரம் வாக்குகளையும் பெற்றனர். இதிலும் இ.தொ.கா.படுதோல்வியை தழுவியபோதும் இது குறித்து கவனம் செலுத்தி மாற்று நடவடிக்கை மேற்கொள்ளாததன் பிரதிபலிப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது.

பதுளை மாவட்டத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் அடாவடித்தனத்தையும் சர்வாதிகார அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லையென்பதுடன் ஜனநாயக முறையிலான அரசியலையே விரும்புகின்றனர் என்பது பாராளுமன்றம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் மக்கள் தெளிவாக தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணிக்கு ஒரு மாகாண சபை உறுப்பினரும் மத்திய அரசாங்கத்தில் ஒரு உறுப்பினரும் மாத்திரம் இருக்கின்றபோதும் உள்ளூராட்சித் தேர்தலில் 7 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளதற்கு ஊவா மாகாண சபை உறுப்பினர் எ.அரவிந்குமாரின் தனிப்பட்ட வெற்றியென்றே கூறவேண்டும்.


பெண் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாக விசனம்



தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலைத்தலங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென பல்வேறு தரப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் சில தோட்டங்களில் பெண் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரும்பாலான தோட்டவீதிகள் தற்போது குன்றும் குழியுமாக காணப்படுவதோடு; தோட்ட வாகனங்களின் போக்குவரத்துகள் இடம்பெறாத காரணத்தினால் கொழுந்து பறிக்கின்ற பெண்கள் தாம் பறித்த கொழுந்தினை நீண்ட நேரம் சுமந்து சென்று நிறுவை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.அத்துடன் தோட்டங்களில் கொழுந்து நிறுவைக்காக பயன்படுத்தப்படுகின்ற தராசுகளின் நம்பகத்தன்மையும் குறைந்து வருவதால் தமது உழைப்பு சுரண்டப்படுவதாக பெண்தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான தொழில் ரீதியான உரிமை மீறல்கள் குறித்து தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்கள் அக்கறைகொள்வதில்லை எனவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

இவ்வாறன நிலையில் பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்தில் பெண்தொழிலாளர்கள் பறிக்கின்ற கொழுந்தினை இந்தத் தோட்ட நிர்வாகம் நிறுக்கும் முறையானது பாரியதொரு மனித உரிமை மீறலாகுமென்று சுட்டிக்காட்டப்படுகின்றது.பெரும்பாலும் தோட்டங்களில் தொழிலாளர்கள் பறிக்கப்பட்ட கொழுந்தின் அளவை அறிந்து கொள்வற்காக தேயிலை மலைகளிலேயே நிறுக்கப்படுவது வாடிக்கையாகும்.அதன் போது இரும்பினால் அல்லது மரத்தடியினால் செய்யப்பட்ட கம்பங்களை பிடித்துக்கொண்டு அதன் நடுவில் அகலாமான கூடை ஒன்றில் கொழுந்து கொட்டப்பட்டு கொழுந்தின் அளவு கணிக்கப்படுகின்றது.இதனால் கம்பங்களைத் தலையில் சுமந்து கொண்டு நிற்கும் பெண்தொழிலாளர்கள் உடல் உபாதைகளுக்கு உள்ளாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு வேலைத்தலங்களில் பெருந்தோட்டப்பகுதி பெண்தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து தோட்டத்தொழிற்சங்கங்கள் உடனடியாக ஆராய்ந்து தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டுமென தொழிலாளர் நலன் சார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.