Tuesday, July 13, 2010

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் அபிவிருத்திக் கூட்டம்

நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்திக் கூட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் ஹட்டனில் (10-07-2010) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள், கல்விமான்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலில் நுவரெலியா, அம்பேகமுவ, கொத்மலை, ஹங்குராங்கத்த, மற்றும் வலப்பனை ஆகிய பிரதேசங்களில் இனங்கானப்பட்ட அபிருத்தி பணிகள் பற்றி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.

குல்வி, வீடமைப்பு. மின்சாரம், போக்குவரத்து, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மலையகத்திற்கென தனியான பல்கலைகழகம், ஹட்டன்- டிக்கோயா நகரசபையை மாநகரசபையாக தரம் உயர்த்துதல் மற்றும் அரசிலமைப்பு சீர்திருத்தம் பற்றிய விடயங்கள் இங்கு ஆராயப்பட்டன.

இந்த விடயங்கள் தொடர்பாக நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வைகையில் அபிவிருத்திக் குழுக்களை அமைப்பது பற்றி முன் வைக்கப்பட்ட பிரேரணையில் அக் குழுவில் பிரதேச கல்விமான்கள்,, புத்திஜீவிகள், அரசியல் பிரதினிதிகள் உள்ளடக்கப்படுவர். அக் குழுக்களின் ஊடாக அபிவிருத்திப் பணிகள் அமைச்சரின் கவனததிற்கு கொண்டு வருவது என உத்தேசிக்கப்பட்டது.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக மலையக மக்களினதும், ஏனைய கட்சிகளினதும் கருத்துக்களை உள்வாங்கி அறிக்கைகளை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான கூட்டங்களை ஏனைய பிரதேசங்களில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஆறுமுகன் தெரிவித்தார்.

ஓபாவத்தை தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்

இரத்தினபுரி மாவட்டம் கஹவத்தை ஓபாவத்தை தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தோட்டத் தொழிற்சங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின்படி தோட்ட தொழிலாளர்கள் ஒரு நாளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவை விட அதிகமாகக் கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை வற்புறுத்தியதையடுத்து இப் போராட்டம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஓப்பந்தத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 18 கிலோ கிராம் கொழுந்தை மட்டுமே பறித்து வந்தனர். ஆனால் தோட்ட முதலாளிமார்கள் ஒரு நாளைக்கு 22 கிலோ கிராம் கொழுந்து பறிக்கும்படி கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவித்த தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 18 கி.கி கொழுந்து பறிப்பவர்களுக்கு அரைநாள் சம்பளமே வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.