Monday, October 26, 2015

பெருந்தோட்ட சமுதாயத்தின் சமூக அபிவிருத்திக்கான பத்தாண்டு திட்டம்

சர்வதேச முன்னெடுப்புகள்  புத்தாயிரம் அபிவிருத்தி இலக்குகள் (MGD)
சர்வதேச மட்டத்தில் நாடுகளின் அபிவிருத்தி குறித்து 2000 ஆம் ஆண்டளவில் ஐக்கிய நாடுகள் சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான புத்தாயிரம் அபிவிருத்தி இலக்குகள் அல்லது மிலேனியம் அபிவிருத்தி குறிக்கோள்கள் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். இதன்படி 2015இல் எய்தப்பட வேண்டிய 8 குறிக்கோள்கள் அடையாளம் காணப்பட்டன. அவை:

1. தீவிர பசிப்பிணியையும், வறுமையை யும் இல்லாது ஒழித்தல்
2. சகலரும் அடிப்படைக் கல்வியைப் பெற்றுக்கொள்ளல்
3. பால் சமத்துவத்தை மேம்படுத்துதலும், பெண்களை வலுவூட்டுதலும்
4. சிறுவர் மரண வீதத்தை குறைத்தல்
5. பால் சுகாதாரத்தை மேம்படுத்துதல்
6. எச்.ஐ.வி எய்ட்ஸ், மலேரியா மற்றும் ஏனைய நோய்களை குறைத்தல்
7. சூழல் நிலைப்பேற்று தன்மையை உறு திப்படுத்துதல்
8. அபிவிருத்திக்கான சர்வதேச பங்குடைமையை அபிவிருத்தி செய்தல்

நிலைபேண்தகு குறிக்கோள்கள் – (Sustainable Development Goals–(SDG)
2015ஆம் ஆண்டு மிலேனியம் அபிவிருத்தி குறிக்கோள்களுக்கான கால எல்லை நிறைவடைந்த நிலையில், 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை புதிய அபிவிருத்தி இலக்குகள் குறித்து 2015இல் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற முடிவொன்றை மேற்கொண்டது. இதன்படி 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிலைப்பேண்தகு அபிவிருத்திக்கான (Sustainable Development Goals)–SDG நிகழ்ச்சி நிரல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இத் தீர்மானத்தின்படி 193 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிலைப்பேண்தகு அபிவிருத்தி குறிக்கோள்களாக 17ஐ அடையாளம் கண்டு 15ஆம் ஆண்டுகளின் எய்தப்படவேண்டும் என தீர்மானித்தது.

இப்பதினேழு குறிக்கோள்களாவன:

1. வறுமையை எல்லா வடிவங்களிலும் இல்லாதொழித்தல்

2. பசியை இல்லாதொழித்து உணவு பாதுகாப்பை எய்தி போசாக்கை மேம்படுத்துதலும் நிலைப்பேண்தகு விவசாயத்தை மேம்படுத்துதலும்

3. சுகாதாரமான வாழ்க்கையை உறுதிப்படுத்தி எல்லாருக்கும் எல்லா வயதினருக்கும் நல்வாழ்வினை மேம்படுத்தல்

4. அனைத்தையும் உள்ளடங்கியதும் சமூக நீதியானதுமான தரம்மிக்க கல்வியை உறுதி செய்தலும் வாழ்நாள் முழுவதற்கும் கற்றலுக்கான சந்தர்ப்பத்தை மேம்படுத்துதல்.

5. பால்நிலை சமத்துவத்தை எய்துதலும் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளை வலுப்படுத்துதல்

6. நீர் மற்றும் மலசலக்கூட வசதிகள் என்பவற்றை எல்லோருக்கும் கிடைப்பதையும் அவற்றின் நிலைப்பேண் முகாமைத்துவத்தையும் உறுதிசெய்தல்

7. பெற்றுக்கொள்ள கூடியதும் நம்பத்தகுந்ததும் நிலைப்பேறானதும் நவீனத்துவமான சக்தியைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்தல்

8. நிலைபேறானதும் அனைத்தையும் உள்ளடங்கியதும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சியையும் முழுமையானதும் உற்பத்தி சார்ந்த சூழலையும் மதிக்கத்தக்க தொழிலையும் மேம்படுத்துதல்

9. உறுதியான உட்கட்டமைப்பை நிர்மாணித்து அனைத்தையும் உள்ளடங்கியதும் நிலைத்து நிற்கக்கூடிய கைத்தொழில்மயத்தை பேணுதலும் புத்தாக்கத்தை வளர்த்தலும்

10. நாட்டுக்குள்ளேயும், நாடுகளுக்கிடையேயும் சமத்துவமின்மையை குறைத்தல்

11. நகரங்களையும் மனித குடியமைப்புகளை உள்ளடங்கியதாகவும் பாதுகாப்பானதும் உறுதியானதும் மற்றும் நிலைத்து நிற்கக்கூடியதாக உருவாகுதல்.

12. நிலைத்து நிற்கக்கூடிய நுகர்வு மற்றும் உற்பத்தி முறைமைகளை உறுதிசெய்தல்

13. காலநிலை மாறுதல்களையும் அதன் பாதிப்புக்களை குறைப்பதற்காக உடனடி நடவடிக்கைகளை எடுத்தல்  காலநிலை மாறுதலுக்கான ஐக்கிய நாட்டு சட்டகத்தில் மகா நாட்டினை காலநிலை மாறுதல்களுக்கு பூகோள ரீதியாக முகம் கொடுப்பதற்கு பேச்சுவார்த்தைக்காக அடிப்படை சர்வதேச நாடுகளுக்கிடையேயான மன்றமாக ஏற்றுக்கொள்ளல்

14. சமுத்திரம், கடல், கரையோர வளங்கள் என்பவற்றை நிலைப்பேறான அபிவிருத்திக்காக பாதுகாத்தலும் நிலைப்பேறாக உபயோகித்தல்

15. சூழல் அமைப்புகளை நிலைத்து நிற்கக்கூடிய உபயோகத்திற்காக பாதுகாத்தலும் மீளமைத்தலும், மேம்படுத்தலும். நிலைத்து நிற்கக்கூடிய வகையில் காடுகளை மேற்பார்வை செய்தல். பாலைவனமாக்குதல் மற்றும் நிலச்சீரழிவினை பின்நோக்கி செய்தலும், அதனை தடுத்து பாலைவனமாக்குதலை நிறுத்துதல்

16. நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்காக சமாதானமானதும் எல்லாவற்றையும் உள்ளடங்கிய சமுதாயங்களை பேணுதலும், எல்லோருக்கும் நீதியை பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்தலும், எல்லா மட்டங்களிலும் பயனுறு முறையிலானதும் பொறுப்பானதும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய நிறுவனங்களை ஸ்தாபித்தல்

17. நிலைப்பேறான அபிவிருத்திக்காக பூகோள பங்குடைமையை உயிர்ப்பித்தலும், நடைமுறைப்படுத்தலுக்கான சாதனங்களை வலுப்படுத்தலும்

இங்கு 17 குறிக்கோள்கள் ஒவ்வொன்றும் 8 இலிருந்து 12 இலக்குகளைக் கொண்டதாக 169 இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இக்குறிக்கோள்களை அடைந்து கொள்ள (2020–2030) இடைப்பட்ட கால இடைவெளி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புத்தாயிரம் அபிவிருத்தி குறிக்கோள்களான எட்டும், புதிய குறிக்கோள்களாக 17ஆக உயர்ந்து விரிவுபடுத்தப்பட்ட ஒன்றாக காணப்படுகின்றது. முன்னைய குறிக்கோள்களில் ஒன்றாக இருந்த பசியும், வறுமையும் இப்பொழுது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. சில விடயங்களில் (கல்வி, சுகாதாரம்) புதியவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்து 17 குறிக்கோள்களிலும் நிலைத்து நிற்கக்கூடிய அம்சம் வலியுறுத்தப்படுகின்றன. எனவேதான் புதிய அபிவிருத்தி குறிக்கோள்கள் நிலைப்பேற்று அபிவிருத்தி குறிக்கோள்களாக அடையாளம் காணப்படுகின்றன. நிலைப்பேற்று தன்மை என்பது பொருளாதாரம் மற்றும் சூழல் அம்சங்களையும் இணைந்த ஒன்றாக இருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.

தேசிய மட்ட முன்னெடுப்புகள்
தேசிய மட்டத்தில் தற்போது இது குறித்த நடைமுறைப்படுத்தல் பற்றிய முன்னெடுப்புகள் ஆரம்பமாகியுள்ளன. தேசிய மட்டத்தில் ஒவ்வொரு நாடும் தங்களது நிலைமைகளுக்கேற்ப இக்குறிக்கோள்களுக்கு அழுத்தம் கொடுத்து கொள்ளலாம். இலங்கையைப் பொறுத்தவரை சில ஆய்வாளர்கள் பலவற்றிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வாதிடுகிறார்கள். டுலிப் ஜயவர்தன என்பவர் தனது கட்டுரையொன்றில் (Daily Mirror 16/10) 3,7,10 மற்றும் 11 தவிர்ந்த ஏனைய 13 குறிக்கோள்களில் அரசாங்கம் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்கிறார். அவர் நாட்டிற்கு சுகாதாரமான வாழ்வு (3) நவீனத்துவமான சக்தி (7) சமத்துவமின்மை (10) நகரங்கள் மற்றும் மனித குடியிருப்புகளின் பாதுகாப்பு (11) என்பவற்றிற்கு குறைந்த அளவிலான முக்கியத்துவமே அளிக்கின்றார். இந்த நாட்டிலே பிரதேசம் மற்றும் இனங்களுக்கிடையே பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக நலன் குறித்து பல்வேறு சமத்துவமின்மைகள் காணப்படுகின்றன. எனவே, குறிக்கோள் இலக்கம் 10ம் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டியவொன்று என நாம் வாதிடலாம். ஜனாதிபதியின் கீழ் வருகின்ற சூழல் விடயங்கள் இப்பொழுது அழுத்தம் பெறுவதை காணக்கூடியதாக உள்ளது. இந்த பகைப்புலத்தில் மலையகம் குறித்த அபிவிருத்தி எத்தகையதாக அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெருந்தோட்டத் துறைக்கான பத்தாண்டு திட்ட உருவாக்கம்
முன்னைய புத்தாயிரம் அபிவிருத்தி குறிக்கோள்களை (1990.20.15) ஒட்டியதாக (2006.20.15) ஆண்டு தோட்ட சமுதாயத்தின் தேசிய நடவடிக்கை திட்டம் ஒன்று ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையுடன் தோட்ட உட்கட்டமைப்பு, வீடமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சினால் உருவாக்கப்பட்டது. இதுவே பத்தாண்டு திட்டம் என அடையாளம் காணப்பட்டது. இந்த திட்டம் அதிகமான அளவில் புத்தாயிரம் அபிவிருத்தி குறிக்கோள்களுடன் இணைந்த ஒன்றாக இருந்தது. இத்திட்டத்திற்காக அமைச்சரவை 2006ஆம் ஆண்டு அனுமதி வழங்கியிருந்தாலும் அரசியல் மற்றும் அமைச்சுகள் அரசாங்க கொள்கைகள் மாற்றம் காரணமாக இத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால், இத்திட்டத்தின் நடைமுறை ஆக்கம் குறித்து ஊடகங்களும் மற்றும் சிவில் அமைப்புகளும் தொடர்ந்தே வலியுறுத்தி வந்தன.

2015இல் ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து அமைக்கப்பட்ட புதிய அரசாங்கத்தின் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு மீள் உருவாக்கம் செய்யப்பட்டது. அந்த அமைச்சின் நூறுநாள் வேலைத்திட்டத்தின் ஒன்றாக இந்த பத்தாண்டு திட்டத்தின் மீள் உருவாக்கம் சேர்த்துக்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கை மீண்டும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்ட உருவாக்கலில் சம்பந்தப்பட்ட சகல உரித்தாளர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர். இதன் ஆரம்ப நிகழ்வாக தேசிய மட்டத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. அன்றைய நிதி அமைச்சரும், கொள்கை திட்டமிடல் பிரதியமைச்சரும் பெருமளவிலான நன்கொடை நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2ஆவது நிகழ்வாக பிராந்திய மட்டத்தில் மாகாண, மாவட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்தின் பங்களிப்போடு கலந்தாலோசனை நடைபெற்றது. அதன் பின்னர் பிரதேச செயலக மட்ட பிரிவுகள் சம்பந்தப்பட்ட அரசாங்க துறைசார் நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக குழுக்கள் என்பவற்றோடு கலந்துரையாடல் இடம்பெற்றது. அத்தோடு ஒரு செயல் தூண்டல் குழு ஒன்று உருவாக்கப்பட்டு அதன் அங்கத்தவர்களிடையே இத்திட்டத்தின் வரைவு சமர்ப்பிக்கப்பட்டு அவர்களிடமிருந்து கருத்துக்களை உள்ளடக்கியதான திட்டவரைவு அனைத்து தரப்பினரின் ஆலோசனையுடன் தேசிய மட்டத்திலான ஒரு கலந்துரையாடல் மூலம் இறுதியாக்கப்பட்டது.

சமீபத்தில் பொதுத்தேர்தலை (ஆகஸ்ட் 17) தொடர்ந்து தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி என அமைக்கப்பட்டுள்ளது. இதுவே பத்தாண்டு திட்ட நடைமுறைப்படுத்தலுக்கு பொறுப்பான அமைச்சாகும். இந்த இறுதி வடிவம் தற்போது அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் கிடைத்ததற்கு பின்னால் இத்திட்ட நடைமுறைப்படுத்தலுக்கு தேவையான நிதி வளங்களை திரட்டுவதற்காக நன்கொடையாளர் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்படும். அங்கு இத்திட்டம் அச்சு வடிவில் வெளியிடப்பட்டு, சகலருக்கும் விநியோகிக்கப்படும்.

பத்தாண்டு திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள்
இத்திட்டம் பெருமளவில் வீடமைப்பினருக்கே அதிக அழுத்தம் கொடுத்துள்ளது. 160,000 வீடுகள், நீர்வசதி, மலசலக்கூடம், பாதைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுடன் நிர்மாணித்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அத்தோடு கல்வி, சுகாதாரம், தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதோடு, சமுதாயத்தில் வலுப்படுத்தலுக்கு உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இங்கு பெண்களின் சமத்துவம், சிறுவர் மற்றும் இளைஞர் உரிமைகள், விளையாட்டு மற்றும் கலாசார தேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக நல்லாட்சி பிரதேச மட்டங்களிடையே காணப்படும் வேறுபாடுகள் மற்றும் இந்த மக்களின் உரிமைநிலை போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆக, அபிவிருத்தியின் பல்வகை பரிமாணங்கள் சமூகம், பொருளாதாரம், அரசியல் கலாசாரம்  உள்ளடக்கியதாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

செயலாக்கம்
இத்திட்டத்தின் செயற்படுத்துகைக்கு பல்வேறு உரித்தாளர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது.

*வெளிநாட்டு நன்கொடையாளர்களின் நிதி
*அரசாங்க வரவு–செலவு திட்டத்தின் மூலமான நிதி
*ஏனைய துறைசார் அமைச்சுகளின் ஈடுபாடு
*சிவில் சமூகத்தின் பங்களிப்பு
*நிறைவேற்றும் அமைச்சினது நிறுவன ரீதியான பலம்

இவை அனைத்தும் கவனிக்கப்பட வேண்டியவையாகும். இவற்றுள் நிறைவேற்று அமைச்சினது நிறுவனங்களினது நிறுவன ரீதியான பலம் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

இந்த அமைச்சின் கீழுள்ள ஆளணி எண்ணிக்கை அளவில் அதிகமாக காணப்பட்டாலும் உயர் மட்டத்தில் செயல்திறன் மற்றும் இயல்திறன் (ஊயியடிடைவைல யனெ ஊயியஉவைல) உள்ளவர்கள் குறைவானவர்களே உள்ளனர். எண்ணிக்கை அளவில் 250க்கு மேற்பட்ட பெருந்தோட்ட சமூக தொடர்பாடல் வசதியாளர் (Pடயவெயவழைn ஊழஅஅரnவைல ஊழஅஅரniஉயவழைn குயஉடைவையவழசள) பெருந்தோட்ட மாகாணஇ மாவட்ட அரசாங்க நிறுவனங்களில்இ தொழில்நுட்ப மல்லாதஇ முகாமைத்துவ உதவியாளர்களுக்கு குறைவானதும் சிற்றூழியர்களுக்கு சற்று உயர்வான நிலையில் கணிக்கப்படுகின்றனர். அத்தோடு இவர்கள் தோட்டத்துறையோடு அடையாளம் காணப்படாது மாகாண, மாவட்ட, பிரதேச மட்டங்களில் அமைந்துள்ளன. அரச நிறுவனங்களில் பல்வேறு பணிகளுக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். அத்தோடு தற்போது இவர்களில் கணிசமானோர் முகாமைத்துவ உதவியாளர் பரீட்சையில் தேர்வு பெற்றுஇ பதவி உயர்விற்காக காத்திருக்கின்றனர். இவர்களை விடஇ ஏனைய உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையும் செயற்றிறனும் மட்டுப்படுத்தப்பட்டவொன்றாகவே உள்ளது.

இந்த அமைச்சின் கீழ் இரண்டு நிறுவனங்கள் நிரல்படுத்தப்பட்டிருக்கின்றன.

1. பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம் (PHDT)
2. சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த நிறுவனம் (STMF)

முதலாவதுஇ டிரஸ்ட் என பொதுவாக அறியப்படுகின்றது. இதுவே தற்போது அமைச்சின் வேலைத்திட்டங்களை செயற்படுத்தும் நிறுவனமாக உபயோகப்படுத்தப்படுகின்றது. இது தோட்ட முகாமைத்துவம், அரசாங்கம் தொழிற்சங்கம் என்ற முத்தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முகாமைத்துவத்தை கொண்டிருந்தாலும் இது பெருமளவில் தோட்ட முகாமைத்துவம் சார்ந்த ஒன்றாகும். இந்நிறுவனத்தின் மீள்வரும் செலவுகள் (Recurrent Expenditure) தோட்டக் கம்பனிகளால் வழங்கப்பட்டு வருகின்றது. அரசாங்க நிதி, அந்நிறுவனம் செயற்படுத்தும் அபிவிருத்தி திட்டங்கள் ஊடாகவே வழங்கப்பட்டு வருகின்றது. இதனது விடயப்பரப்பு, வீடமைப்பு, சுகாதாரம் போன்றவற்றிற்கு மட்டுப்படுத்தப்பட்டதாக தோட்டத்தொழிலாளரின் நலன் (Welfare) சார்ந்ததாக அமைந்துள்ளதே தவிர அவர்களது அபிவிருத்தி சார்ந்ததாக இல்லை.

இரண்டாவது சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த நிறுவனம். இது பாராளுமன்ற சட்டத்தினால் 2005இல் மறைந்த தொண்டமானின் நினைவை நிலைத்திருக்க வைக்கும் நோக்கம் கொண்டதாக நிறுவப்பட்டது! இதனது முகாமைத்துவம் அரசியல் சார்பு தன்மையானது. தொழிற்கல்வி(ஹட்டன்);, கலாசாரம் (றம்பொடை), விளையாட்டு (நோர்வூட்) போன்றவற்றிற்கான 272 மில்லியன் ரூபா அரசாங்க நிதியினால் ஆரம்பிக்கப்பட்ட மூன்று அமைப்புகள் இந்த நிறுவனத்தின் கீழ் செயற்படுகின்றன. இதைவிடஇ பிரஜா சக்தி திட்டத்தின் கீழ் 400க்கு மேற்பட்ட செயற்றிட்டங்கள் தோட்ட மட்டத்தில் இந்நிறுவனத்தினூடாக செயற்படுத்தப்படுகின்றது. இதற்கான மீள்வரும் மற்றும் மூலதன செலவுகள் (சநஉரசசநவெ யனெ உயிவையட) அமைச்சினது செயற்றிட்டம் ஒன்றின் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது. சொந்த நிதியிலிருந்து (ளநடக கயைnஉé) இதனது செயற்பாடுகள் நிறைவேற்றப்படவில்லை. நிதி அமைச்சின் அங்கீகாரத்துடன் 150பேர் இந்நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். எனினும் இந்நிறுவனத்தின் அரசியல் சார்புத்தன்மை காரணமாக புதிய அமைச்சின் கீழ் இதனது செயற்பாடு தற்போது கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கின்றது.
புதிய அதிகாரசபையின் தேவை

இத்தகைய பகைப்புலத்தில் பத்தாண்டு திட்டத்தினை செயற்படுத்துவதற்கான உரிய தெரிவு (Choice) என்ன? 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர் வெளியிடப்பட்ட மஹிந்த சிந்தனை தேர்தல் விஞ்ஞாபனத்தில் அப்போதைய அமைச்சு தயாரித்த மூன்றாண்டு அபிவிருத்தி திட்டத்தை செயற்படுத்த “ஒரு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அதிகார சபை” உருவாக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தேர்தலுக்கு பின்னர் அன்றைய அமைச்சு இந்த அதிகாரசபையை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்தபோது அது அமைச்சரவையினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் இத்தகைய அதிகாரசபை உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து ஊடகங்களிலும் சிவில் சமூகத்தினாலும்; வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. அத்தோடு 2015இல் பொதுத் தேர்தலுக்கு முன் “தமிழ் முற்போக்கு முன்னணி” தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த 23 கோரிக்கைகளில் இத்தகைய அதிகாரசபை உருவாக்கப்படவேண்டும் என்பதையும் முன்வைத்துள்ளது.

எனவே தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் அது விடயப்பரப்புக்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில்இ மலைநாட்டு புதிய கிராமங்களை அபிவிருத்திக்கான அதிகாரசபை (Hill Country, New Village Development Authority என்ற கோரிக்கை உரிய கவனத்துடன் பரிசீலிக்கப்படவேண்டிய ஒன்றாகும். ஏற்கனவே தற்போது இறுதியாக்கப்பட்டுள்ள பத்தாண்டு திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இத்தகைய அதிகாரசபை போதிய நிறுவன ரீதியான கட்டமைப்பை தருவதோடு தேவையான உந்து சக்தியையும் அளிக்கக் கூடியதாக அமையும்.

-எம்.வாமதேவன்-

நன்றி - வீரகேசரி

ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் சீரற்ற காலநிலை-மண்சரிவுகள்,வெள்ளப்பெருக்கு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பல மாவட்டங்களில் மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு என்பன ஏற்பட்டுள்ளன. ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்ட நிலையில் தென்பகுதியில் குறிப்பாக காலி மாட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஊவா மாகாணத்தின் பண்டாரவளை, தியகலை தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவைத் தொடர்ந்து அங்கிருந்த பல குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

கொஸ்லந்தை மீரியபெத்தயில் மீண்டும் மண்சரிவு ஏற்படக்கூடுமென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலை தொடர்வதாலேயே மண்சரிவுகள் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக மாலை நேரங்களில் கடுமையான மழைபெய்கின்றமை மண்சரிவு ஏற்படக் காரணமாகின்றது.

இந்த நிலையில் நாட்டின் 9 மாவட்டங்களில் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் தேசிய கட்டட ஆய்வு நிலையம் கடந்தவாரம் அறிவித்திருந்தது.

நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நோர்வூட், ரொக்வூட் தோட்டம், ஹட்டன் சமனலகம ஆகிய இடங்களிலும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் பலாங்கொடை பகுதியிலும் மண்சரிவுகள் குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தின் கொஸ்லந்தை மீரியபெத்தையில் ஏற்பட்ட மண்சரிவை எவரும் மறந்திருக்கு முடியாது.

அது எப்போதும் மறக்கக்கூடியதல்ல.

இது இவ்வாறிருக்க கடந்த மாதம் 25 ஆம் திகதி கொத்மலை பிரதேசத்தின் ரம்பொடை வெதமுல்ல தோட்டத்தின் கயிறுகட்டி பிரிவில் ஏற்பட்ட மண்சரிவில் 7 பேர் உயிரிழந்தமை மற்றுமொரு பாரிய அனர்த்தமாகும் இதனையும் எவராலும் மறக்கமுடியாது.

இந்த நிலையில் கடந்த இரு வாரகாலமாக தொடரும் சீரற்ற காலநிலையும் அடைமழையும் இவ்வருடத்திலும் இவ்வாறான அனர்த்தத்தை ஏற்படுத்தி விடுமோ என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு அனர்த்த அபாயம் ஏற்படுவதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன.

சில இடங்களில் சிறிய அளவில் மண்சரிவுகள் நிலம் தாழிறங்குதல் மற்றும் நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.

பதுளை மாவட்டத்தின் பசறை தொகுதியிலுள்ள பசறை வீதி 8ஆம் கட்டையில் அமைந்துள்ள யூரி தோட்டத்தில் கடந்த வருடத்தைப் போலவே இவ்வருடமும் மண்சரிவு அனர்த்தம் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. அதிக மழைவீழ்ச்சி காரணமாக இப்பகுதி வீடொன்றில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் தாயொருவரும் இரு பிள்ளைகளும் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

பசறை வீதி 10 ஆம் கட்டை பகுதியிலுள்ள கோணக்கலை தோட்டத்தின் மேற்பிரிவில் மண்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த 48 குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெளியேறி அகதிகளாக கோணக்கலை தோட்ட வைத்தியசாலையில் தஞ்சமடைந்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேறிய இவர்களுக்குரிய நிவாரணங்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைமை தோன்றியிருந்தது. இவ்விடயம் தொடர்பாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்குமாரின் கவனத்திற்கு தோட்ட பொதுமக்கள் கொண்டுவந்ததை தொடர்ந்து குறித்த மக்களுக்குரிய நிவாரணங்களை பசறை பிரதேச செயலாளரின் மூலமாக பெற்றுக் கொடுப்பதற்குரிய கலந்துரையாடல்களை இவர் மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, பசறை – நமுனுகுல வீதியின் 16 ஆம் கட்டை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதிக்குரிய வாகனப் போக்குவரத்து கடந்த வாரத்தின் இறுதி இரு நாட்களிலும் தடைப்பட்டிருந்தது. வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகளை சீர் செய்ய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் சீரற்ற காலநிலை அதற்கு இடமளிக்கவில்லை.

மாலை வேளையில் தொடரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக பனிமூட்டம் அதிகரித்துள்ளது. சிறு அருவிகளும் ஓடைகளும் பெருக்கெடுத்துள்ளன. ஆறுகளிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான நிலைமை காரணமாக பசறை பகுதிலுள்ள மீதும்பிட்டிய, சோலண்டஸ், பட்டாவத்தை, யூரி, கணவரல்ல, கோணாக்கலை ஆகிய பகுதிகளிலும் பதுளை தொகுதியில் செல்வகந்தை, ஸ்பிரிங்வெளி உட்பட பல பகுதிகளிலும் மண்சரிவு அனர்த்த அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதே போன்று பண்டாரவளை, அப்புத்தளை பகுதிகளிலுள்ள அதிகமான தோட்டங்களில் மீண்டும் பாரிய மண்சரிவு அனர்த்தம் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. பிட்டரத்மலை, தம்பேதன்ன பகுதிகளிலும் ஹல்துமுல்லை பகுதியிலும் மண்சரிவு அனர்த்த அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த கால அனுபவங்களை கருத்திற்கொண்டுள்ள தோட்டக் கம்பனி நிர்வாகங்கள் மண்சரிவு அனர்த்த அபாயத்தை எதிர்நோக்கியுள்ள தொழிலாளர் குடும்பங்களை அழைத்து அனர்த்தம் ஏற்படும்போது பொது இடங்களில் சென்று பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மூளைச் சலவை செய்கின்றனர். கடந்த வருடம் அகதிகளான மக்களின் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பின்னடித்ததை யாரும் மறந்து விடமுடியாது. தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்து கொள்ளவே தோட்ட நிர்வாகங்கள் இவ்வாறு தந்திரமாக செயற்பட முனைந்துள்ளன. மண்சரிவு அனர்த்த அபாயம் நிலவும் பகுதிகளில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து அனர்த்தத்தின் போது பாதுகாப்பு பெறுவது தொடர்பான பயிற்களையும் வழங்கி வருகின்றது. இவ்வாறான பயிற்சிகள் பதுளை, தெளிவத்தை தோட்டம், பசறை, மீதும்பிட்டிய தோட்டபகுதிகளிலும் இடம்பெற்றுள்ளன.

மழையுடன் கூடிய காலநிலையின் போது தொடர் லயன் குடியிருப்புகளை சுற்றியுள்ள வடிகான்களில் மழை நீர் வழிந்தோடுவதற்குரிய வழிவகைகள் முறையாக செய்யப்படவில்லை. இதனால் பெரும்பாலான இடங்களில் நீர் தேங்கி குடியிருப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. எனவே பொதுமக்களும் தமக்குரிய பாதுகாப்பை முறையாகப் பேண நடவடிக்கை எடுத்தால் ஏற்படும் பாரிய ஆபத்துகளை ஓரளவுக்கேனும் குறைத்துக் கொள்ள முடியும்.

நன்றி - வீரகேசரி

சம்பள உயர்வு கோரி தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய, 1000 ருபா சம்பள உயர்வு எமக்கு வேண்டும் என கோரி  தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வார்ப்பாட்டம் மெராயா தங்ககலை தோட்ட சந்தியில் இன்று காலை 08 மணிக்கு நடைபெற்றுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக 07 தடவை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் உண்மையான வெளிப்பாடு என்ன என தொழிலாளர்கள் சந்தேகம் கொள்கின்றனர்.
எமக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஆறுமுகன் தொண்டமான், திகாம்பரம், இராதாகிருஸ்ணன் மனோ கணேசன் இன்னும் பல தலைவர்கள் பேசுகின்றார்களே தவிர 1000 ருபா சம்பள உயர்வு எந்தவகையில் பெற போகின்றார்கள் என்ற உண்மையை எமக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
ஆனால் வாக்களியுங்கள் 1000 ருபா சம்பள உயர்வை பெற்று தருகின்றோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நம்பியே வாக்களித்தோம்.
ஆகையால் ஜனாதிபதியும், பிரதமரும் இந்த சம்பள விடயத்தில் தலையிட வேண்டுமென வலியுறுத்துகின்றோம். சீரற்ற காலநிலையிலும் அட்டை கடியை பொருட்படுத்தாமல் 08 மணிநேரம் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம்.
தொழிலாளர்களை பகடகாய்களாக்கி துரோகம் நினைக்க இனிமேலும் இடம் கொடுக்கப் போவதில்லை என தெரிவிக்கும் தொழிலாளர்கள் நாங்கள் விழித்து கொண்டே இருக்கின்றோம்.
ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்கும் வாக்கு பலத்தினை கொண்ட எமக்கு எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில் என்ன செய்வது என்று தெரியும். தற்போது கிடைக்கும் சம்பளத் தொகையில் வாழ்க்கையை சமாளிக்க முடியவில்லை.
பிள்ளைகளின் கல்வி பாழாகி போகின்றது என்பதினை உணர்ந்தவர்கள். தான் எமது தலைவர்கள் தீபாவளி திரு நாளை கொண்டாட காத்திருக்கின்றோம்.
இந் நிலையில் பொருட்களின் விலைவாசி ஏற்றம் கண்டுள்ளது.
எங்களுடைய பண்டிகை காலத்தில் மாத்திரம் ஏன் இந்த நிலை ஏற்படுகின்றது என தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
ஆகவே இம்மாத இறுதிக்குள் சம்பள உயர்வு கிடைக்காவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களுக்கு சந்தா பணத்தினை நிறுத்துவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.