Sunday, March 7, 2010

தொழிலாளர் வர்க்க சக்திகளே பெண் விடுதலைக்கான இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும்.

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 08ம் திகதி சர்வதேச ரீதியில் உணர்வு பூர்வமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உழைக்கும் பெண்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு பெண் விடுதலைக்காக கோராடி அர்ப்பணித்த தலைவிகளுக்கும் விடுதலை போராளிகளுக்கும் புரட்சிகர அஞ்சலியை சமர்ப்பித்து அவர்களை நினைவு கூருவோமாக.

கம்யூனிஸ்ட் அறிக்கையும் பெண் விடுதலை இயக்கமும்

1848ம் ஆண்டு கம்யூனிஸ்ட் அறி;க்கையிலும் பின் சர்வதேச கம்யூனிஸ்ட் சோஷலிச இயக்கங்களிலும் பெண் விடுதலைக்கான கோஷங்கள் எழுப்பப்பட்டன. பல போராட்டங்களும் நடைபெற்றன. தொழிலாளர் தோழியர் கிளேரா ஷெட்கின் தலைமையில் உருவாகிய சோஷலிச பெண்கள் இயக்கம் பெண் விடுதலைக்காக அளப்பரிய சேவையாற்றியுள்ளது. சோஷலிச சக்திகளே பெண் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்து பல வெற்றிகளை பெற்றுள்ளன.

சமகால போராட்டங்கள்

சம காலத்திலும் பெண் விடுதலைக்கான போராட்டங்கள் தொடர்கின்றன. குறிப்பாக உழைக்கும் பெண்கள் உரிமைகளுக்கான போராட்டங்கள் தொடர்கின்றன. வர்க்கப் போராட்டத்திலிருந்து பெண் விடுதலை போராட்டத்தை பிரிக்க முடியாது.

அக்டோபர் புரட்சியும் பெண் விடுதலையும்

1817ம் ஆண்டு நவம்பர் மாதம் 07ம் திகதி மாமேதை லெனின் தலைமையில் சோவியத் ஒன்றியத்தில் அக்டோபர் புரட்சி வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து சோவியத் யூனியனிலும் சோஷலிச நாடுகளிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டது. சகல துறைகளிலும் பெண்கள் சம உரிமை பெற்றனர். இதன் தாக்கம் மேலை நாடுகளில் எதிரொலித்தது. அங்கேயும் பெண் விடுதலை இயக்கங்கள் வளர்ந்தன. பெண்கள் பல்வேறு உரிமைகளை வென்றனர். பிரபுத்துவ பழைய கலாச்சாரம் தகர்ந்தது. ஆனாலும் மூன்றாம் உலக நாடுகளில் பெண் விடுதலை தீவிரமாக பரவவில்லை.

மார்க்ஸிசம், லெனினிசம் பெண் விடுதலைக்கு உந்து சக்தியாக விளங்கின.

மூன்றாம் உலக நாடுகளில் தொடரும் பிரபுத்துவ பழைய கலாச்சாரம் ஆதிக்கமும் பெண் விடுதலையை, சமத்துவத்தை தடுக்கிறது. ஆகவே பிரபுத்துவ மத, முதலாளித்துவ ஆதிக்க சிந்தனைகளுக்கு எதிராக போராடாமல் பெண் விடுதலைக்கான இயக்கம் வேகமாக வளர முடியாது.

பெண்களின் உடை

தேயிலைத் தோட்ட தமிழ் பெண்கள் முதலில் தமது தற்போதைய ஆடை அணியும் முறையை மாற்ற வேண்டும். சேலை, படங்கு, றப்பர் சீட் போன்றவற்றை இல்லாதொழிக்க வேண்டும். பிரபுத்துவ காலனித்துவ ஆடை அணியும் கலாச்சார நிலையிலிருந்து மாறி நவீன யுகத்திற்கு வர வேண்டும். டெனிம் காற்சட்டை(லோங்ஸ்) கோட்டு, தொப்பி, கையுறை காலுக்கு பூட்ஸ் அணியும் நிலைக்கு மாற வேண்டும். தலையில் கூடை சுமக்கும் முறையை மாற்ற வேண்டும். கூடை காலாச்சாரமும் தகர்க்கப்பட வேண்டும். இது பற்றி செங்கொடிச் சங்கம் பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்த போதும் பலனில்லை.

மேல்தட்டு மத்தியதர வர்க்க கலாச்சாரம்

கல்வியறிவு இல்லாததனாலேயே பெருந்தோட்ட தமிழ்ப் பெண்கள் மூட நம்பிக்கையில் வாழ்கிறார்கள் என்பதில் உண்மையில்லை. உதாரணமாக கல்வித் துறையில் சேவை செய்யும் படித்த பெண்களும், பழைய கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றனர். தற்போது தொலைகாட்சி கலாச்சாரத்தை மத்திய வர்க்க தமிழ்ப் பெண்கள் பின்பற்றுகின்றனர். வருமானத்தின் பெரும் பகுதியை அழகு சாதனங்களுக்கு தலை அலங்காரத்திற்கு மத சடங்குகளுக்காக என செலவிடுகின்றனர். தொழில்களில் நிறப் பாகுபாடு பின்பற்றப்படுகிறது. கருமை நிறமான பெண்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனம்.

ஐக்கிய நாடுகள் சபை 1997ம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினமாக மார்ச் 08ம் திகதியை பிரகடனப்படுத்தியவுடன் முதலாளித்துவ அரசாங்கங்களும் மத்திய தர பெண்கள்அமைப்புக்களும் சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடுவதில் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து சர்வதேச பெண்கள் தினத்தின் வர்க்க குணாம்சத்தை மழுங்கடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டன. வர்க்கப் போராட்டத்திலிருந்து பெண் விடுதலையை பிரிக்க முடியாது. உதாரணமாக சிறிமாவோ பண்டாரநாயக்காவும், சந்திரிகா குமாரதுங்காவும் பிரதமராக, ஜனாதிபதியாக பதவி வகித்த போதிலும் இலங்கையின் தொழிலாள விவசாய பெண்கள் விமோசனம் பெறவில்லை. தொழிலாளர் வர்க்க சக்திகளே பெண் விடுதலைக்கான இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். மார்க்ஸிய சிந்தனையை வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச பெண்கள் தினத்தின் அறைகூவல்.

சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடும் பெண்கள் அமைப்புக்கள், பெண்கள், பகுத்தறிவு, பரட்சிகர படலத்தி;ல் அணிதிரள வேண்டும் கார்ல் மார்க்ஸ், பெரியார் ஆகியோர் உட்பட புரட்சிகர சீர்திருத்த கருத்துக்களை படித்து விழிப்புணர்வு பெற வேண்டும்

ஓ.ஏ. இராமையா

செங்கொடி சங்கம்