Thursday, August 6, 2009

தொழிலாளர்களை வெளியேற உத்தரவு

மாத்தளை வேவல்மட, காலேகொலுவ, மவுசாகல ஆகிய தோட்டப் பிரிவுகளில் வசித்து வரும் தொழிலாளர்களை இம் மாதம் 11ம் திகதிக்கு முன்னர் அவர்களின் குடியிருப்புக்களில் இருந்து வெளியேறுமாறு தோட்ட உரிமையாளர்களால் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் வேவல்மட தோட்டத்துக்கு மட்டும் நோட்டீஸ் மூலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேற்படி மூன்று தோட்டங்களும் 1985ம் ஆண்டு தனியாருக்கு விற்கப்பட்டது. இதில் வேவல்மட தோட்டத்தில் இருந்த தேயிலை தொழிற்சாலையும் கடந்த வருடம் உடைக்கப்பட்டு விட்டது. மவுசாகல தோட்டத்தில் இருந்த தொழிற்சலை கடந்த 20 வருடங்களுக்கு முன்பே உடைக்கப்பட்டு விட்டது. இம் மூன்று தோட்டங்களையும் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்கள் பலவந்தமாக தனியார் காணிகளில் குடியேறியுள்ளதாகவும் தற்போது அவர்கள் அங்கிருந்து வெளியேறுமாறும் தோட்ட நிர்வாகத்தால் கேட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இத் தோட்டக் காணியில் குடியிருப்புக்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். தனியாருக்கு விற்கப்பட்டதால் இத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றி எந்தவொரு அரசியல் கட்சியோ, தொழிற்சங்கமோ அக்கறை கொள்ளவில்லை. ஆரம்பத்தில் இத் தோட்டப்பிரிவு தொழிலாளர்கள் ஐ.தே.க, மற்றும் இ.தொ.கா ஆகிய கட்சிகளின் அங்கத்தினராக இருந்துள்ளனர். இத் தொழிலாளர்களின் நிலை குறித்து எவரும் அக்கறை கொள்ளாத நிலையில் இவர்களின் எதிர்காலம் குறித்து அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரஜா உரிமை சான்றிதழ் அவசியம்

1988ம் ஆண்டில் 39ம் இலக்க சட்டத்தின் கீழ் இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டு வருகிறது. எனவே எமது மலையக மக்கள் எந்தளவுக்கு பிரஜாவுரிமைச் சான்றிதழை பெற்றுள்ளனர் என்பது தெரியாமலே உள்ளது. முழு மலையகத்திலும் குறிப்பிட்ட சிலர்தான் பிராஜாவுரிமைச் சான்றிதழ் வைத்துள்ளனர். அநேகமானோர் இந்தச் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கு எவ்விதமான அக்கறையும் கொள்வதில்லை என்பது தெரியவருகிறது. எமது மக்கள் வாக்களிக்கும் உரிமை இருந்தால் போதும் என்ற அசமந்த போக்கில் உள்ளனர். வாக்களிக்கும் உரிமை வேறு. பிரஜாவுரிமை என்பது வேறு என்பதை தெளிவாகப் புரிந்துக் கொள்வது அவசியமாகும். இந்த நாட்டில் நாமும் அங்கீகரிக்கப்பட்ட பிரஜையாக வாழ வேண்டுமாயின் நமது மக்கள் அனைவருமே பிரஜாவுரிமைச் சான்றிதழை பெற்றுக் கொள்வது அவசியமாகும். ஆத்தோடு இதன் சிறப்பையும் பெறுமதியையும் உணர்தல் முக்கியமானதாகும்.
எனவே தோட்டங்கள் தோறும் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வது சம்பந்தமாக நடமாடும் சேவைகளை ஏற்படுத்த எமது மலையகத் தலைவர்கள் முன்வருவது காலத்தின் கட்டாயமாகும். எமது மக்களும் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ள ஆர்வத்தோடு முன்வர வேண்டும். அதுபோல் அநேகமானோருக்கு பிரஜாவுரிமைச் சான்றிதழை பெற்றுக்கொள்வது எவ்வாறு என்பது தெரியாமல் இருக்கலாம். அப்படியெனில் ஒரு தொழிற்சங்கத்தினூடாகவோ அல்லது மலையக நலன்புரி அமைப்புக்களினூடாகவோ இவற்றைப் பெற்றுக்கொள்வது மாத்திரமின்றி தனிப்பட்ட முறையிலும் பெற்றுக்கொள்ளலாம். இந்திய வம்சாவளியினர் ஆட்களை பதிவு செய்யும் திணகை;களத் தோடு தொடர்பு கொண்டு இதற்கான விண்ணப்ப படிவங்களை பெற்று தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்வதன்; மூலம் பிரஜாவுரிமை சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே எமது மலையக மக்கள் ஏனோதானோ என்று தொடர்ந்தும் இருக்காமல் அடுத்து வரும் எமது பரம்பரையினரை உரிமையோடு வாழ்வதற்கான உருப்படியான ஒன்றையாவது செய்து வைக்க முன்வர வேண்டும். அப்படியில்லாமல் கிணற்றுத் தவளையைப் போல் வாழ்ந்து மடிந்தால் போதும் என்ற குறுகிய மனப்பான்மையுடன் இருந்துவிடக் கூடாது. ஆகவே இன்றே ஆரம்பியுங்கள். நல்ல பலன் கிடைக்கும்

ஆர். ராமசுந்தரம்
காவத்தை