Saturday, November 8, 2008

தேயிலை செடிக்கு அக்கறைகாட்டும் அரசாங்கத்தால் தொழிலாளர் புறக்கணிப்பு – டி.அய்யாத்துரை

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட 2009ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றுப்பட்டுள்ளதாக தொழிலாளர் விடுதலை முன்னணியின் தலைவர் டி. அய்யாத்துரை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில் அரச ஊழியர்கள், விவசாயிகள், உட்பட ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிவாரணமளித்த அரசாங்கம் இந் நாட்டுக்கு இலங்கையின் தேசிய வருமானத்தில் 65 சத வீதத்தை வருமானமாக பெற்றுக் கொடுக்கும் ஆறு லட்சம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தை தொடர்ந்தும் புறக்கணித்து வருகிறது. தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு பன்மடங்காக அதிகரித்துள்ள வேளையில் தோட்டக் கம்பனிகள் கூட்டொப்பந்தம் மூலமாக வகுத்துள்ள சம்பளத் திட்டம் தொழிலாளர்களை வறுமையில் வீழ்த்தியிருப்பது நாடறிந்த விடயம். இதைப் பற்றி அரசாங்கத்திற்கு பல முறை எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அரசாங்கம் தேயிலை செடிக்கு காட்டுகின்ற அக்கறை கூட தோட்டத் தொழிலாளர்களுக்கு காட்டுவதில்லை. இந்த வரவு செலவுத் திட்டம் சிறுபான்மை மக்களையும் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களையும் ஏமாற்றும் நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்

இந்நாடு அனைவருக்குமே சொந்தமானது –பூஜித ஜயசுந்தர

சிங்களவர்களுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் இந்நாடு சொந்தமானதாகும். அவர்க ளும் இந்நாட்டின் பிரஜைகளே. நாம் அவர்களை மொழியாலோ, சாதி, சமய இன, நிற ரீதியாகவோ ஒதுக்க்கீடு செய்யமுடியாது. நாட்டின் சுதந்திரம் பெறுவதற்கு சிங்கள, தமிழ் முஸ்லீம் தலைவர்கள் ஒன்றிணைந்து பாடுபட்டார்கள். என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இதனை இன்றைய இளைஞர்கள் அறியமாட்டார்கள். என மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அட்டன் பிரின்சஸ் மண்டபத்தில் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார்.