Monday, February 10, 2014

நுவரெலியாவில் வறட்சி; இரவில் பனியும் குளிரும்

நுவரெலியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கடும் வறட்சி நிலவுகின்றது. பகல் வேளையில் வெய்யிலினால் உஷ்ணம் அதிகமாகவும் இரவில் பனி பெய்வதால் கடும் குளிரும் காணப்படுகின்றது.

நுவரெலியாவில் கடந்த ஒருவாரமாக பனி பெய்து வருவதால் உருளைக்கிழங்கு பீட்றூட் போன்ற செடிகளும் ஒரு சில தோட்டங்களில் தேயிலை செடிகளும் கருகி போயுள்ளன. 

மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை பனியினால் குளிர் அதிகமாக காணப்படுவதால் பாடசாலை மாணவர்களும் அதிகாலையில் தொழிலுக்கு செல்பவர்களும் பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றனர். 

இதேவேளை நுவரெலியாவில் குடி நீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நுவரெலியா மாநகர சபை விநியோகிக்கும் குழாய் குடி நீரும் காலையிலும் மாலையிலும் மாத்திரம் விநியோகிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பெரும் தீ

திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பற்றியுள்ளது. நேற்று மாலை பரவிய தீ காரணமாக சுமார் 50 ஏக்கர் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

மலையகத்தில் தற்போது காணப்படும் அதிக வெப்பநிலை காரணமாக மலையகத்தில் உள்ள காடுகள் சிலவற்றுக்கு இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு வருகின்றனர்.

இவ்வாறு காடுகளுக்கு தீ வைப்பவர்களின் தகவல் கிடைத்தால் உடனடியாக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் படி பொதுமக்களிடம் நுவரெலியா மாவட்ட செயலாளர் டி..பி.ஜி.குமாரசிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.