Wednesday, January 1, 2014

மலையகத் தமிழர்கள் காணி பெறுவதை அரசு விரும்பவில்லை- ஆர். யோகராஜன் பா.உ


இலங்கையில் மலையகத் தமிழர்கள் சொந்தக் காணிகளைப் பெற்றுவிடக்கூடாது என்ற இனவாத நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெரிவித்துள்ளார். 

தேயிலை மீள்நடுகை நடவடிக்கையிலும் அரசாங்கத்திடம் ஆக்கபூர்வமான- செயற்திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் சுமார் ஆறு லட்சம் ஏக்கர் தேயிலைக் காணியில், சுமார் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் பரப்பிலுள்ள தேயிலைச் செடிகளை பிடுங்கிவிட்டு புதிதாக மீள்நடுகை செய்ய வேண்டியிருப்பதாக  தெரிவித்த யோகராஜன்  பா.உ; வெறும் 400 ஏக்கர் பரப்பில் மட்டுமே மீள்நடுகை செய்வதற்குப் போதுமான 500 மில்லியன் ரூபா நிதியையே அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கியிருப்பதை சுட்டிக்காட்டினார்.

தொழிலாளர்களுக்கு தலா இரண்டு ஏக்கர் காணியை பகிர்ந்தளித்து அதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைத்து, தேயிலை உற்பத்தியை பெருக்குவது மட்டுமன்றி- தொழிலாளர்களுக்கும் உதவமுடியும் என்பதே பொருத்தமான நடவடிக்கை என்று அரசாங்கத்திடம் தான் யோசனையை முன்வைத்துள்ளதாக தெரிவித்த யோகராஜன் தொழிலாளர் குடும்பங்களுக்கான மாடிவீட்டுத்திட்டம் பற்றி குறிப்பிடுகையில்

கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின்போது, தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 10 பேர்ச்சஸ் (சுமார் 253 சதுர மீட்டர்) காணியை வீடமைப்புக்காக ஒதுக்குவதாக ஜனாதிபதி மலையக தோட்ட மக்களுக்கு வாக்குறதி அளித்திருந்த போதிலும், இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் அந்த வாக்குறுதி மீறப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்

தோட்டத் தொழிலாளர்களுக்கு தனித்தனி வீடுகளுக்குப் பதிலாக 50 ஆயிரம் தொடர்மாடி வீடுகளை அமைத்துக் கொடுக்கவுள்ளதாக வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் கூறியிருப்பதன் பின்னணியில், தோட்டத் தொழிலாளர்களுக்கு காணியுடன் வீடு கிடைக்கக் கூடாது என்ற இனவாத நோக்கமே இருக்கிறது என்றார்.

விவசாயிகளுக்கு நிலமே ஆதாரம். தேயிலைத் தொழிலாளர்களும் விவசாயிகளே என்றபடியால், அவர்களுக்கு மாடிவீடு வழங்குவது ஏற்புடையதா என கேள்வி எழுப்பினார்.

ஆனால், அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கின்ற மலையகத்தின் பிரதான அரசியல்கட்சிகள் இந்த வீடமைப்பு முறையின் பாரதூர தன்மையைப் புரிந்துகொள்ளாமல் உள்ளனர் என்றார்

இனிய புது வருட வாழ்த்துக்கள்