Sunday, December 6, 2015

தொழிற்சங்க போராட்டத்திற்கு முஸ்தீபு

கடந்த ஒன்பது (9) மாதங்களுக்கும் மேலாக இழுபறி நிலையில் காணப்பட்டு வரும் பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பாக தோட்டக் கம்பனிகளும், முதலாளிமார் சம்மேளனமும் கடைப்பிடித்து வரும் உதாசீனப் போக்கைக் கண்டித்து, தொழிலாளர்களைத் தொழிற்சங்கப் போராட்டத்தில் இறக்கும் முஸ்தீபில் அனைத்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்களும் இறங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பெருந்தோட்டத் தொழிற் சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ். இராமநாதன் தெரிவித்தார்.நேற்று முன்தினம் (6ம் திகதி) காலை 9.30 மணியளவில் மாத்தளை தொழிற்சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இலங்கைத் தோட்ட சேவையாளர் சங்க அலுவலகத்தில் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் பி.ஜி. சந்திரசேனவின் தலைமையில் நடைபெற்ற பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் விசேட செயற் குழுக் கூட்டத்தில் தொழிற் சங்கப் போராட்டத்தில் இறங்குவது தொடர்பாகத் தீவிரமாக ஆராயப்பட்டதாகவும், எஸ். இராமநாதன் மேலும் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கூறியதாவது,

தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு விடயத்தில் தலையிட்டு மூன்று வாரங்களுக்குள் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறும், தவறும் பட்சத்தில் மலையகத்தின் ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி தொழிற்சங்கப் போராட்டமொன்றில் ஈடுபடுத்த நேரிடும் எனவும் கடிதங்கள் மூலம் ஜனாதிபதி, பிரதமர், தொழிலாளர்கள், முதலாளிமார் சம்மேளனம், தோட்டக் கம்பனிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவிப்பதென இக்கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது என்னுடன் எஸ். முத்தையா, ஐயாத்துரை, பி. தேவகுமார், என்.எம்.ஆர். சிறில், எஸ். கந்தையா, போரசிரியர் விஜேகுமார், நாத் அரமசிங்ஹ, மேனகா கந்தசாமி, மற்றும் ஏ. முத்துலிங்கம் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர் எனத் தெரிவித்த எஸ். இராமநாதன் மேலும் கூறுகையில், தோட்டத் தொழிலாளர்களது கூட்டு ஒப்பந்தம் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவுற்ற பின்னர் தோட்டக் கம்பனிகள் தொழிற் திணைக்களம், மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றுடன் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடத்தியும் தோட்டத் தொழிலாளர்களுடைய சம்பளத்தை உயர்த்தித் தராது பிடிவாதமாக இருந்து வருகின்றன.

இது தொடர்பாக தொழிலாளர்கள் ஆங்காங்கே எதிர்ப்புப் போராட்டங்களிலும் மெதுவாகப் பணி செய்யும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளமை தொடர்பிலும் கொழும்பில் 4 ஆம் திகதி இக்கூட்டத்தில் முகவும் உன்னிப்பாக ஆராயப்பட்டது.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை ஒன்றைத் தோட்டக் கம்பனிகளுடனும் தொழிற்சங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுத் தருமாறு விடுத்த கோரிக்கைக்கும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

தொழிலாளர்களைத் தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபடுத்தும் பட்சத்தில் அதற்கு முன்னதாக சகல அரசியல் சமூக தொழிற்சங்க அமைப்புகளுடனும் கலந்து பேசி அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ். இ¡மநாதன் மேலும் தெரிவித்தார்.

-தினகரன் -

மலையகத் தலைமைகளின் முரண்பாடுகள் சம்பள உயர்வுக்கு பெரும் தடைக்கல்.

தோட்டத் தொழிலாளர்க ளின் சம்பள உயர்வுப் பிரச்சினை முடி வின்றி தொடர்கின்றது. சம்பளப் பேச்சுவார்த்தையில் பிரதான பங்கை வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தாம் முன்வைத்த ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரிக்கையிலிருந்து கீழிறங்காது அதனையே முன்னிறுத்தி வந்ததுடன், அதனை ஏனைய இரு தொழிற்சங்கங்களான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும் வலியுறுத்தி வந்தன. மறுபுறம் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினை வழங்க முடியாது என ஆரம்பம் முதலே முதலாளிமார் சம்மேளனம் கூறிவருகின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை தவிர்த்து வருகிறது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான அமைச்சர்கள் மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் பிதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி தீர்வொன்றினைப் பெற்றுக் கொடுக்க முனைந்தபோதிலும் அதுவும் முடங்கியுள்ளது. அமைச்சர்கள் இருவரும் பிரதமருடன் பேசித் தீர்வுக்கு வந்தாலும் அதனை இ.தொ.கா ஏற்காவிட்டால் கூட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது.

இதேவேளை, அரசாங்கத்துடன் இல்லாத ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, அமைச்சர்களாக இருக்கும் பழனி திகாம்பரம் மற்றும் மனோ கணேசன் பெற்றுத்தரும் தீர்வை ஏற்றுக்கொள்வார் என்பது சந்தேகமே. தோட்டக் கம்பனிகளின் பிரச்சினை ஒருபுறமிருக்க மலையகத் தலைமைகளின் முரண்நிலைகளும் சம்பள உயர்வுக்கு இன்னுமொரு பாரிய தடைக்கல்லாக எழுந்துள்ளது. இதனால் இன்றைய சம்பளப் பிரச்சினை இன்னும் சில காலங்களுக்குத் தொடரலாம் என்பது கண்கூடு.

இந்நிலையில் நாட்டில் அதிகரித்துச் செல்லும் விலைவாசிக்கேற்ப வாழ்வதற்கான சம்பளமே தோட்டத் தொழிலாளர்களுக்குத் தேவைப்படுகின்றது. ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தற்போதைய நிலையில் நியாயமான கோரிக்கையாக காணப்பட்டாலும் அது அடுத்த வருடத்தில் அதிகரிக்கும் விலைவாசிக்கு நிகரானதாக அமையாது.

 எனவே, ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் ஒரு முறை பெரும் போராட்டத்திற்கு மத்தியில் அதிகரிக்கப்படும் சிறிய சம்பள அதிகரிப்பானது ஒருபோதும் தோட்டத்தொழிலாளர்களின் குடும்பங்களின் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்வதற்கு போதியதானதாக அமையாது.
எனவே இவ் யதார்த்தத்தைக் கருத்திற் கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு மாற்று உபாயங்களை இப்போதே அடையாளம் கண்டு அமுல்படுத்த முனைவது காலத்தின் தேவையாகத் தோன்றியுள்ளது.

இன்றைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அரசாஙகம் நிவாரணமாக தோட்டக்கம்பனிகளுக்கு கடன் உதவியை வழங்கினாலும் முதலாளிமார் சம்மேளனம் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முன்வராது. எனவே, ஆயிரம் ரூபாவிற்கும் குறைந்த சம்பள அதிகரிப்பிற்கே தோட்டக் கம்பனிகள் இணங்கும். இதனை தோட்டத் தொழிலாளர்களும் நன்கு புரிந்துள்ளனர்.

காலத்திற்கு காலம் தேயிலைத் தொழிற்றுறையில் ஏற்படும் நெருக்கடியானது இலங்கைக்கு மட்டும் உரியதல்ல. மாறாக, தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கென்யா, இந்தியா, இந்தோனேஷியா, வியட்னாம், சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் பொதுமையானதாகக் காணப்படுகின்றது. தேயிலை தொழிற்றுறை முழுமையாக சந்தை கேள்வியுடன் தொடர்புள்ளதாக இருக்கின்றது.

 தேயிலைப் பண்டமானது மனித தேவைக்கு அத்தியாவசியமான பண்டமல்ல. மாறாக உதிரிப் பானமாகும். இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படுகையில் மக்கள் தேயிலைப் பானத்தை பருகாமல் இருக்கலாம் அல்லது குறைவாகப் பருகலாம். இதேவேளை, நாடுகளில் காணப்படும் பணவீக்கம், உள்ளூர் மற்றும் நாடுகளுக்கிடையிலான யுத்தங்கள் என்பனவும் தேயிலையின் விலையை தீர்மானிக்கும் காரணிகளாக அமைகின்றன.

 உதாரணத்திற்கு எமது நாட்டினை விட அதிகமாக தேயிலை உற்பத்தி செய்யும் நாடான இந்தியா, தமது தேயிலைக்கான சந்தையை உள்ளூரிலேயே கொண்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்தியாவின் தேயிலை உற்பத்தி இந்தியாவின் சந்தைக் கேள்விக்கு போதுமானதல்ல.

ஆயினும் இந்திய சந்தையில் தேயிலையின் விலை கடந்த பல மாதங்களாகக் குறைந்துள்ளது. அந்நாட்டின் பணவீக்கம் தேயிலையின் விலையை தீர்மானிக்கின்றது. இதனால் தேயிலையின் விலை இந்தியாவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களும் சம்பள அதிகரிப்பைக் கோரி பல போராட்டங்களை ஆங்காங்கே மேற்கொண்டு வந்தனர். கடந்த ஒக்டோபர் மாதம் முதல் கேரள மாநிலத்தின் மூனார் பகுதியின் “கண்ணன் தேவன்” தோட்டத்தைச் சேர்ந்த தோட்டப் பெண்கள் ஒன்றுகூடி 231 ரூபாவாக உள்ள நாட்சம்பளத்தை 500ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி தன்னிச்சையான போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இப்போராட்டத்தை அவர்களது நான்கு தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததுடன் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரின. ஆனால் தொழிற்சங்கங்களின் மறுப்பை எதிர்த்து 7000 பெண்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இவர்களில் 85 சதவீதமானோர் தமிழ் பெண் தொழிலாளர்களாவர். ஒரு மாதம் தொடர்ந்த போராட்டத்தில் ஈற்றில் எதிர்க்கட்சியும் அரசாங்கமும் தலையிட்டு 100 ரூபா சம்பள அதிகரிப்பை ஏற்குமாறு கோரினர். அதாவது 331 சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முன்வந்தனர். ஆனால் பெண் தொழிலாளர்கள் இதனை ஏற்க மறுத்தனர்.

இப்பிரச்சினை இதுவரை தீர்க்கப்படவில்லை.

எனவே, தேயிலைத் தொழிற்றுறை இலாபகரமான தொழிற்றுறையாகவும் மற்றும் தேயிலைக்கான கேள்வி பரவலாகக் காணப்பட்டாலும் உள்ளக வெளியாக பொருளாதார தாக்கங்களுக்கு உட்பட்டதாகவே இத்தொழிற்றுறை காணப்படுகின்றது. இதனால் ஆரம்பம் முதலே தோட்டத் தொழிலில் தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்பட்டதுடன் அவர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்பட்டதுடன் மானிய அடிப்படையில் உணவுப் பொருட்கள், ஆரம்ப மருத்துவ வசதி மற்றும் வீடு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

ஆனால், இன்று ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாறாக சுதந்திரத் தொழிலாளர்களாக தோட்டத் தொழிலாளர்கள் நிலைமாற்றம் அடைந்துள்ளதுடன், அவர்களது அடிப்படை தேவைகள் மற்றும் வாழ்க்கை சுற்றோட்டத்தில் பாரிய மாற்றம் அடைந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் வாழ்க்கைச் சுற்றோட்டமும் அடிப்படைத் தேவைகளும் மாறுபட்டுள்ளதால் அவர்களது வருமானமும் அதிகரிக்க வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. வெறுமனே தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை தொழிலிலிருந்து மட்டும் பெறும் சம்பளத்தின் மூலம் தமது குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே ஒட்டுமொத்தமாக வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் நிலைக்குத் தோட்டத் தொழிலாளர் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தோட்டத்தில் வாழும் மலையக மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க சமூக அசைவியக்கம் ஏற்பட்டுள்ளது. முழுமையாக தோட்டத்தொழிலாளரை மட்டும் கொண்டிருந்த தோட்ட வாழ் மலையக சமூகம் இன்று பல வர்க்கத் தட்டுக்களை கொண்டமைந்துள்ளது. இவ்வளர்ச்சி மேலும் முன்னோக்கி நகருமே தவிர பின்னோக்கி நகராது.
அதாவது தோட்டத் தொழிலை மட்டும் நம்பியிருக்கும் பட்டாளம் உருவாகாது, மாறாக தோட்டத்தை விட்டகன்று தொழில் தேடிச் செல்லும் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும்.

 எனவே மாற்று வருமான வழிகளைத் தேடி செல்ல வேண்டிய நிலைக்கு புதியத் தொழிலாளர்கள் சமூகம் ஆளாகியுள்ளது. மறுபுறம் முதலாளித்துவ கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தோட்டக் கம்பனிகளும் நிரந்தரத் தொழிலாளர் பட்டாளத்தை வைத்திருப்பதை தவிர்க்க ஆரம்பித்துள்ளது.

இதன் வெளிப்பாடாக குத்தகைத் தொழிலாளர்கள், நாட் சம்பளம் பெறும் தொழிலாளர்கள், அளவுத் தொழிலாளர்கள் என பலதரப்பட்ட நிரந்தரமற்ற தொழிலாளர்கள் இன்று தோட்டத்திற்குள்ளேயே உருவாக்கப்பட்டுள்ளனர்.

இப்பின்புலத்தில் சில தோட்டக்கம்பனிகள் தேயிலைக்காணிகளை பல்வேறு திட்டங்களின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கி வருகின்றன. மதுரட்ட தோட்டக் கம்பனி தமது தோட்டத் தொழிலாளருக்கு சேவைக்கால கொடுப்பனவை வழங்கி அவர்களை தோட்டத் தொழிலிலிருந்து முழுமையாக நீக்கி விட்டு அவர்களுக்கு இருவருட குத்தகையின் அடிப்படையில் தலா 2 ஏக்கர் தேயிலைக் காணியை வழங்கியிருகின்றது. குறிப்பிட்ட தோட்டத் தொழிலாளர்கள் தமது சொந்த பணத்தை தேயிலை உற்பத்தியில் முதலீடு செய்து அதிலிருந்து பெறும் தேயிலைக் கொழுந்தினை தோட்டத் தொழிற்சாலைக்கு வழங்க முடியும். அதேபோல் ஏனைய சிறுதோட்ட தேயிலை உரிமையாளர்கள் போல் சுந்திரமாக எந்தவொரு தொழிற்சாலைக்கும் அவர்களது கொழுந்தை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தோட்ட நிர்வாகம் கண்காணிப்பு வேலையை மட்டும் மேற்கொள்ளும்.

இதேவேளை எல்பிடிய கம்பனி தோட்டத் தொழிலாளர்களை வேலையில் அமர்த்திக்கொண்டே அதிக விளைச்சல் தராத தேயிலைக் காணிகளில் காணப்படும் தேயிலைச் செடிகளில் தலா 3000 தேயிலைச் செடிகளை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கியுள்ளது. அத்தேயிலை மரங்களை பராமரிப்பதற்கான உரம் மற்றும் தேவையான மருந்துவகைகளை கம்பனி வழங்கி கண்காணிக்கும்.
தேயிலை மரங்களைப் பெற்ற குத்தகையாளர் கொழுந்தினை அத் தோட்டத்திற்கே வழங்க வேண்டும். தேயிலைக் கொழுந்து கிலோ ஒன்றிற்கான விலைய தோட்ட நிர்வாகமே நிர்ணயிக்கும். இவ்வாறு கம்பனிக்கு கம்பனி மாறுபட்ட குத்தகைத் திட்டங்களை கம்பனிகள் அமுல்படுத்தி வருகின்றன.

இன்றைய முதலாளித்துவம் தொழிலாளியை எட்டு மணிநேர கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதை இலாபத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கின்றது. அதாவது எட்டு மணித்தியாலய வேலையிலமர்த்துவது நட்டமாகின் அதனை தவிர்த்து குத்தகை முறைக்கு செல்லும், சில சமயம் எட்டு மணித்தியாலய வேலையிலமர்த்துவது இலாபமாகின் குத்தகையை முறையை கைவிட்டு எட்டு மணித்தியால வேலைநேரத்தை அறிமுகப்படுத்தும்.

இன்றை சூழலில் குத்தகையாளர் முறையையே தோட்டக் கம்பனிகள் பின்பற்ற முனைந்துள்ளன. தோட்டக் கம்பனிகள் அறிமுகப்படுத்தும் குத்தகை முறை தோட்டத் தொழிலாளர்களது வருமானத்தை அதிகரிக்குமா என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாக இருந்தபோதிலும் தற்போதைய நிலையில் தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் உடனடி வருமானத்தைக் கருத்திற்கொண்டு குத்தகை முறையை ஏற்றுக்கொள்கின்றனர்.
இம்முறை மூலம் தொழிலாளர்கள் என்ற நிலையிலிருந்து விடுபட்டு நில உரிமையற்ற சிறு உற்பத்தியாளர்களாக மாறுகின்றனர்.

சில திட்டத்தின்படி தொழிலாளர்களாகவும் குத்தகையாளர்கள் என்ற இரண்டு பாத்திரத்தையும் வகிக்கின்றனர். இதன் சாதக பாதகத் தன்மையை சிலகாலம் கழித்தே அடையாளம் காணமுடியும்.

 இன்றைய நிலையில் தொழிற்சங்கங்கள் இத்திட்டத்தை தடுத்து நிறுத்தக்கூடிய நிலையில் இல்லை. ஆகையால் அமுல்படுத்தப்படும் குத்தகை முறை திட்டங்களை ஒரு பொதுத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தும்படி மலையக தொழிற்சங்க அரசியற் தலைமைகள் கம்பனிகளுக்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதாவது தோட்டக்காணிகளை பகிர்ந்தளிக்கும் போது குறைந்த பயன் தரும் காணிகளை மட்டும் பகிர்ந்தளிக்காது அதிக விளைச்சல் தரும் காணிகளையும் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதுடன் ஆகக்குறைந்தது நான்கு ஏக்கர் தேயிலை காணிகளை ஒரு குடும்பத்திற்கு வழங்க கோரவேண்டும்.

மேலும் குத்தகைக் காலம் குறைந்தபட்சம் 20 முதல் 30 வருட குத்தகை காலத்தை கொண்டதாக இருத்தல் வேண்டும். இதேவேளை அரசாங்க சிறு தேயிலை உடைமையாளருக்கு வழங்கும் மானியங்கள் மற்றும் சேவைகளை இவர்களுக்கு வழங்கும்படி கோர வேண்டும். அத்துடன் அவர்களது விருப்பின் பேரில் அதிக விலைதரும் தேயிலை தொழிற்சாலைக்கு கொழுந்தை வழங்கும் உரிமையை வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே தோட்டத்தொழிலாளர்கள் வாழ்வதற்கான வருமானத்தைப் பெறமுடியும்.

அவ்வாறு செய்ய முடியாவிடின் அனைத்து தோட்டங்களையும் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும்படி கோரி தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக ஒரு நாளைக்கு ரூபா 1500 வழங்கி அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் சம்பள உயர்வு பொறிமுறையை உருவாக்கிக் கொள்ளும் முறைமையை அறிமுகப்படுத்தும்படி கோர வேண்டும்.

இவ்விரண்டு மாற்று உபாயங்களில் ஏதாவது ஒன்றினை அமுல்படுத்தும்படி மலையகத் தலைமைகள் அரசாங்கத்தை கோராவிடில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பிரச்சினை என்றும் தொடரும் நெருக்கடியாக அமைவதுடன் தொழிலாளர் ஒருபோதும் வாழ்வதற்கான வருமானத்தைப் பெறமுடியாது.

இந்நெருக்கடியை தொழிற்சங்கங்கள் கருத்திற் கொண்டு செயற்படாவிடின் எதிர்வரும் காலத்தில் மூனார் தொழிலாளர்கள் போல் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களை நிராகரிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர்.

நன்றி- தினகரன்

சென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன?

சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப் நிலைகுலையச் செய்துள்ளது என செண்டர் ஃபார் சயன்ஸ் அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நரெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில்

இயற்கையான நீர்நிலைகளை பராமரிப்பது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாதது, தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முக்கியமான காரணம்

சென்னை மட்டுமல்லாமல் டில்லி,கொல்கத்தா, மும்பை, ஸ்ரீநகர் ஆகிய நகரங்களும் இத்தகைய நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இயற்கை நீர்நிலைகளும், வடிகால்களும் முறையாக பராமரிக்கப்பட்டிந்ருதால், சென்னை இப்படியான வரலாறு காணாத நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம் என அந்த மையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சென்னை,மும்பை போன்ற பெரு நகரங்களில் போதுமான வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல், திட்டமிடாத வகையில் நகரம் வளர்ந்து கட்டிடங்கள் கட்டப்படுவதால், வெள்ளம் ஏற்பட்டதும் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுகிறது என தெரிவித்துள்ளார் சுனிதா நரெயன்.

இப்படியான அதிவேக நகரமயமாக்கல்கள், இயற்கை வடிகால்களை அழித்துள்ளன என்றும், சென்னை போன்ற நகரங்கள் இதன் தாக்கத்தை இப்போது உணர்ந்துள்ளன என தெரிவித்து;ள்ள அந்த அமைப்பு சென்னை தனது இயற்கை வடிகால் வசதிகளை பராமரிக்கத் தவறியுள்ளது எனவும் சி எஸ் இ அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 1980களில் சென்னையில் 600 நீர் நிலைகள் இருந்தன, ஆனால் இப்போது அதில் மிகச் சொற்பமானவையே எஞ்சியுள்ளன

நீர்நிலைகள் மற்றும் வடிகால் அமைப்புகளை பேணிப் பராமரிக்காத நிலையில் பருவநிலை மாற்றத்தால் அசாதாரணமான அளவுக்கு மழை பெய்யும்போது, நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது

பாரிஸில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாடு நடைபெற்று வரும் வேளையில், இப்படியான விஷயங்கள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
நீர்நிலைகள் எப்படி சீரழிந்து போயுள்ளன என்பதற்கு போரூர் ஏரி ஒரு உதாரணம் எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நீர்நிலைகள், நிலத்தடி நீர் மீண்டும் ஊறுவதற்கும், வெள்ளம் ஏற்படும் போது அதை சமாளிப்பதற்கும் பெரும் உதவியாக இருந்திருக்கும எனத் தெரிவித்துள்ள அறிக்கையில் மேலும்  ஈரநிலப்பகுதியில் எப்படி கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றன எனும் கேள்விக்கு ஒருநாளும் பதில் கிடைத்தது இல்லை எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நிலங்கள் நகர நிலச் சட்டங்களின் கீழ் மிகவும் அரிதாகவே பதியப்படுகின்றன எனவும், அதன் காரணமாக பலருக்கு அது தெரியவருவதில்லை என்கிறார் சுனிதா நரெயின்.

அனுமதி கோரி மனுக்கள் வரும்போது மேலோட்டமாக நிலங்களை மட்டுமே அதிகாரிகள் பார்க்கிறார்கள், அதிலுள்ள நீராதாரங்களைப் பார்ப்பதில்லை, எனவே பேராசை பிடித்த கட்டுமான நிறுவனங்கள் அதை தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன எனவும் சி எஸ் இயின் அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழக அரசின் ஆவணங்களின்படி கடந்த 1980களில் 19 பெரிய ஏரிகளின் பரப்பளவு 1,130ஹெக்டேர்களாக இருந்தது, 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் 645 ஹெக்டேர்களாக சுருங்கியுள்ளன, அதன் காரணமாக அந்த ஏரிகளின் கொள்ளளவு குறைந்து போயின என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளதோடு சென்னையின் பல இடங்களில் மழைநீர் கால்வாய்களில் குப்பைக் கூளங்களால் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன, அவை உடனடியாக தூர்வாரி சரிசெய்யப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

சென்னை மாநகரில் 2,847 கிமீ நீளத்துக்கு சாலைகள் உள்ள நிலையில், மழைநீர் கால்வாய்கள் 855கிமீ மட்டுமே உள்ளன என்றும், இதுவே பெருமழையின் போது, சாலைகளில் நீர் ஓடுவதற்கும் தேங்கி நிற்பதற்கும் காரணமாகின்றன.

மனிதர்களால் உருவாக்கப்படும் வடிகால் அமைப்புகள், ஒருநாளும் இயற்கை வடிகால் அமைப்புகளுக்கு மாற்றாக இருக்க முடியாது எனவும் வலியுறுத்தியுள்ள அவ்வறிக்கையில்  சென்னையில் கூவம், அடையாறு போன்ற நதிகளை இணைக்கும் இயற்கை கால்வாய்களும், வடிகால்களும் இருப்பதை தமது ஆய்வுகள் காட்டுகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

உதாரணமாக, நகரின் 75 குளங்களில் நீரின் அளவு உயர்ந்து கொள்ளளவைக் கடக்கும்போது, அந்த நீர் கூவத்தில் கலக்கவும், அதேபோல் 450 குளங்களில் உள்ள உபரி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு உயரும்போது அதிலுள்ள உபரி நீரும் அடையாற்றில் கலப்பதற்கு வசதிகள் இருந்தன என்று அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.
 
கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் சென்னையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் 1,218 மிமீ மழை பெய்துள்ளது. இது சராசரியாக ஆண்டொன்றுக்கு கிடைக்கும் மழையின் அளவைவிட மூன்று மடங்கானது.
 
நன்றி- பி.பி.சி