Tuesday, February 22, 2011

பெருந்தோட்ட வனாந்தர திட்டங்களின் மூலம் சூழல் பாதுகாப்புடன் அந்நிய செலாவணியும் திரட்டு

பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் கீழ் அமைந்துள்ள பெருந்தோட்ட நிர்வாகங்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வனாந்தர திட்டங்களின் மூலம் சூழல் பாதுகாக்கப்படுவதுடன், பெருமளவு அந்நியச் செலாவணியையும் திரட்டக்கூடியதாகவுள்ளதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வனாந்தர செயற்திட்டம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று அண்மையில் இரத்தினபுரி, ஹப்புகஸ்தென்ன பெருந்தோட்டப்பகுதியில் இடம்பெற்றது. இங்கு ஹப்புகஸ்தென்ன மற்றும் உடபுசல்லாவ பெருந்தோட்டங்களின் வனாந்தர முகாமைத்துவ பிரிவின் விசேட நிபுணரான திரு.பிரியா குணவர்த்தன ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

"தேயிலை தயாரிப்பை பொறுத்தமட்டில் வனாந்தர திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த திட்டங்களின் மூலம் பெறப்படும் விறகு மூலம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களை விட அதிகளவு சிக்கனமான முறையில் தேயிலை உற்பத்தி நடவடிக்கையை மேற்கொள்ள முடிகிறது. எரிபொருளின் மூலம் ஒரு கிலோ தேயிலையை உற்பத்தி செய்ய 32 ரூபா செலவாகிறது. ஆயினும் விறகின் மூலம் ஒரு கிலோ தேயிலையை உற்பத்தி செய்ய 8 ரூபாவே செலவாகிறது. ஆயினும் வருடாந்த தேசிய தேவையான 300 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்வதற்கு 4000 ஹெக்டெயர் பரப்பளவில் வனாந்தர செய்கை மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே இந்த தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் பெருந்தோட்ட கம்பனிகளின் வனாந்தர திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன".

“இந்த வனாந்தர திட்டங்களின் மூலம் சூழல் பாதுகாப்பு சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகிறது. பெருந்தோட்டங்களிலிருந்து பெறப்படும் விறகுகளின் மூலம் உற்பத்தி செலவு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதுடன், இந்த திட்டங்களின் மூலம் மண் வளம் பேணப்படுவதுடன், நீர் சேகரிப்பு நிலையங்களுக்கு நிழலாகவும் பயன்படுகின்றன. வனாந்தர பாதுகாப்பு திணைக்களத்தின் கீழுள்ள பெருமளவான வர்த்தக நோக்கிலான வனாந்தரங்கள் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் நிர்வாகப்பகுதிகளிலேயே காணப்படுகின்றன. தற்போது பெருந்தோட்ட கம்பனிகளின் நிர்வாகப்பகுதியில் காணப்படும் வனாந்தரங்கள் மொத்தமாக 20000 ஹெக்டெயார் பரப்பில் காணப்படுகிறது. 10 மில்லியனுக்கும் அதிகமான மரங்கள் காணப்படுகின்றன. பெருந்தோட்ட வனாந்தர திட்டஙகளின் கீழ் பெருமளவில் இயுக்கலிப்டஸ் கிராண்டிஸ் மற்றும் அகாசியா மங்கியம் போன்ற இன மரங்களே அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இவை விறகு பாவனைக்காகவே பயிரிடப்படுகின்றன. தேக்கு மற்றும் மஹாகொனி போன்ற மரங்கள் உயர் பெறுமதியான தளபாட தயாரிப்புக்கு பயன்படுத்தும் நோக்கில் பயிரிடப்படுகின்றன".

"பெருந்தோட்ட வனாந்தர முகாமைத்துவ வரலாறு 1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களை பராமரிக்கும் குத்தகை உடன்படிக்கை கைச்சாத்திடலுடன் ஆரம்பமானது. இக்காலப்பகுதியிலேயே வனாந்தர திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது ஆரம்பமானது. இதற்காக இறப்பர், தேயிலை, தென்னை மற்றும் இதர பயிர்ச்செய்கைக்கு உதவாத நிலப்பகுதிகள் தெரிவு செய்யப்பட்டன. 1997ஃ98 ஆண்டிலிருந்து வனாந்தர திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் அரசாங்க திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டிருந்தது".

"அனைத்து வனாந்தர விஞ்ஞான வனாந்தர செயன்முறை (ளுஉநைவெகைiஉ கழசநளவசல pசயஉவiஉநள) உட்பட்டது. உரிய காலத்தில் வெட்டல், தறித்தல் மற்றும் சுத்தம் செய்தல் போன்றன இதில் அடங்குகின்றன. உறுதியான செயற்பாட்டுக்கான முகாமைத்துவ முறைக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது. பெருந்தோட்ட கம்பனிகளின் பெரும்பாலான வர்த்தக வனாந்தரங்கள் முறையாக கணக்கெடுக்கப்பட்டு, இலக்கமிடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன".

"ஏனைய பயிர்களைப் போன்று வர்த்தக நோக்குடைய வனாந்தரங்களும் முறையான தறிப்பு, மற்றும் மீள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியமாகும். இதில் தறிப்பு நடவடிக்கையின் போது நோக்கம் கருத்தில் கொள்ளப்படும். உதாரணமாக, விறகு பெறுவது நோக்காக இருப்பின், 8-10 வருட காலம் வளர்ச்சியடைந்த மரங்களே தறிக்கப்படுகிறது".

அங்கீகாரம் பெற்ற பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் வனாந்தர திட்டங்கள் தேசிய அமைப்புகளின் மூலம் அடிக்கடி மேற்பார்வை செய்யப்படுவதுடன், ஒரு மரம் தறிக்கப்படும் போது இறுக்கமான கடப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒரு மரத்தை தறிப்பதற்கு பெருந்தோட்ட கம்பனிகள், பெருந்தோட்டத்துறை அமைச்சின் பிரதிநிதி, மாவட்ட வனப்பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர், சூழல் மத்திய அதிகார சபையின் பிரதிநிதி மற்றும் மாவட்ட அல்லது மாகாண செயலகத்தின் உத்தியோகத்தரிடமிருந்து அனுமதியை பெற்றுக்கொண்டே மேற்கொள்ளப்படுகிறது." என்றார்

நன்றி- வீரகேசரி
(வர்த்தக உலா)

தோட்ட மக்களுக்கு குடியிருப்புகள் அமைக்க உடனடி நடவடிக்கை


பன்வில ஆகல சின்னகந்தக்கட்டி மேற்பிரிவு தோட்டத்தில் குடியிருப்புகளில் ஏற்பட்ட வெடிப்புகள் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்து நிர்க்கதியான தோட்டத்திலுள்ள 39 குடும்பங்களைச் சேர்ந்த 157 பேர் கடந்த 5 ஆம் திகதி முதல் ஆகல தமிழ் வித்தியாலயத்தில் தங்கியிருந்தனர். இவர்கள் தங்கியிருந்த பாடசாலையை இயங்க வைப்பதற்காகவும் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு செல்வதற்காகவும் இத் தொழிலாளர்கள் மீண்டும் தங்களின் பழைய இருப்பிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச் சம்பவத்தினை தொடர்ந்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்ட விசேட சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை பன்வில கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் இடம் பெற்றது. இச் சந்திப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீடுகளை அமைத்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில் சின்னபந்தகட்டி தோட்டத்தின் கீழ்ப்பிரிவில் ஆகல அரச பெருந்தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு 20 வீடுகளை கட்ட காணியை வழங்க தீர்மானித்துள்ளது.

மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்


மலையக மாணவர்களின் கல்விக்கு கைக்கொடுத்து வரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எட்டியாந்தோட்டை எக்கிலாஸ் தோட்டத்திலுள்ள பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்களையும் வித்தியாலயத்திற்காக தளபாடங்களையும் வழங்கவுள்ளது.

கொழும்பிலிருந்து இயங்கும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் மலையகத்தில் பல பாடசாலைகளில் மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றவேளை பல்கலைக்கழகத்தில் கற்கும் பல மாணவர்களுக்கும் புலமைப்பரிசில்களை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் சம்பள கூட்டு ஒப்பந்தம்- மனோ கணேசன்


தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தம் உண்மையிலேயே உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் ஒப்பந்தமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மலையகத் தமிழ் கூட்டமைப்பின் சார்பில் மஸ்கெலிய புதுக்காடு, வலதெல, க்ளன்டில் ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் உரையாற்றிய போது ஒப்பந்தம் பற்றி குறிப்பிட்டபோது

தற்பொழுது நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தம் 30ஆம் திகதி முடிவுக்குவருகின்றது. உண்மையிலேயே நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் உள்ளுராட்சி தேர்தலைவிட, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கையெழுத்திடப்படும் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தமே நமக்கு முக்கியமானதாகும். தேர்தல் முடிந்து, 13 நாட்களில் இன்று நடைமுறையில் இருக்கும் சம்பள ஒப்பந்தம் காலாவதியாகின்றது என்பதை மனதில்கொண்டு தொழிலாளர்கள் எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தலில் பிரதான பிரச்சார பொருளாக மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை முன்வைத்திருக்கின்றோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 405 ரூபாய் சம்பளம் என்று சொல்லப்பட்டாலும், உண்மையிலே அவர்களுக்கு கிடைப்பது 285 ரூபாய் மட்டுமே. வேலைக்கு வருகைத்தரும் நாட்களின் அடிப்படையிலான 90 ரூபாவும், 18 கிலோ கொழுந்து எடுக்கவேண்டிய நிபந்தனையின் அடிப்படையிலான 30 ரூபாவும் பெரும்பாளான தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. கர்ப்பமடையும் பெண்களுக்கு தொழில் வழங்கப்படுவதில்லை. சில தோட்டங்களில் 15 நாள் வேலைக்கு சமூகமளிக்காவிட்டால் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் சம்பளத்துடன் வழங்கப்படும் தேயிலை தூள் வழங்கப்படுவதில்லை. இதுபோன்று தொழிலாளர்களுக்கு பல்வேறு பாதகமான அம்சங்களை உள்ளடக்கியதுதான் பொருந்தோட்ட சம்;பள உடன்படிக்கையாகும். இத்தகைய மோசடி கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளவர்களுக்கு தொழிலாளர்கள் வாக்களிக்க முடியுமா? என்றார்.