Monday, February 28, 2011

சம்பள உயர்வு தொடர்பாக தொழிற்சங்கத் தலைமைகள் மௌனம் ஏன்?

கடந்த வருடங்களில் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு தொடர்பாக மலையக தொழிற்சங்கத் தலைமைகள் ஐந்தாறு மாதங்களுக்கு முன்பிருந்தே ஆரவாரத்துடன் அமர்க்களமாக குரல் எழுப்பி வந்தன. முழங்கின. அறிக்கைகளை ஆர்ப்பரித்துவிட்டு வந்தன.

இந்த வருடம் இன்னும் சில வாரங்களே இருக்கின்ற நிலையில் 20 இற்கும் மேலான தொழிற்சங்கங்கள் இருந்தும் ஒரே ஒரு தொழிற்சங்கம் மாத்திரம் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 700 ரூபா சம்பள உயர்வினை வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்து அறிக்கை விட்டிருக்கிறது. ஏனைய தொழிற்சங்கங்கள் மௌனம் சாதித்து வருவது எதனால், இதுதான் தொழிலாளர் நலன் கருதி ஆற்றுகின்ற சேவையா?

கடந்த காலங்களில் நாம் கேட்ட சம்பளத்; தொகை கிடைக்கவா செய்தது என்ற தாழ்வு மனப்பான்மையில் இருக்கின்றனரா, அல்லது பெரும் தொழிற்சங்கங்கள் என்ன தொகை கேட்கிறதோ அதனைப் பார்த்துவிட்டு பிறகு கேட்போம் என்ற நிலையில் இருக்கின்றனவா? ஆனால் ஏனைய தொழிற்சங்கங்கள் கேட்கும் தொகைக்கு ஏறுக்கு மாறாக அல்லது கூட்டிக் குறைத்து கேட்போம் என்ற நிலையில் இருப்போம் என்கின்றனரா?

தொழிலாளர்கள் நலனையே கொண்டு செயற்படும் தொழிற்சங்களாக இருந்தால் முன் கூட்டியே இந்த தொழிற்சங்கங்கள் கேட்டிருக்கும் அல்லவா?

இப்படி காலத்தை கடத்தி வந்தால் எப்படி? தலைவர்களுக்கு அப்படி ஒன்றும் நட்ட ஏற்பட போவதில்லை எப்படியும் தோட்டதொழிலாளர்களே நட்டமும் கஷ்டமும் அடைவர்.

வருடா வருடம் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கிடைக்கும் என்று தலைவர்களின் வாக்குறுதிகளை வேதவாக்காக எண்ணி மனப்பால் குடித்து பின்னர் இறுதியில் பெரும் ஏமாற்றம் அடைகின்றனர்.

இந்த நிலை தொடரக்கூடாது. தொழிற்சங்க மகத்துவம் மலையகத்தில் ஓரளவுக்கு மங்கி வருகின்ற வேளையில் தொழிலாளர் தலைவர்கள் மீதும் தொழிற்சங்கங்கள் மீதும் முன்பு போல் பிடிப்பு ஏற்பட வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஆயுதம் தொழிலாளர்களுக்கு நியாயபூர்வமான சம்பளத்தை பெற்று தருவதுதான். தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த காலங்களில் பெரும் தொகையினைப்பெற்றுத தருவோமென்று கூறி கடைசியில் யானைப் பசிக்கு சோளப்பொரி என்ற கதையாக்கியதை போன்ற கதையாகி விடக்கூடாது.

தலைவர்கள் தியாக சிந்தையுடனும் உயர் சிந்தையுடனும் உழைகை;கும் வர்க்கத்தின் மேன்மைக்காக ஒன்றிணைந்து இவ்வருடம் சம்பள உயர்வினை பெற்றுத் தருவார்கள் என்று பலரும் நம்பியே இருக்கின்றனர்.

இராகலை டி. ஆர். எஸ்

மரக்கறி உற்பத்தியாலர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு


மலையகத்தில் மரக்கறி உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் மரக்கறி வகைகளை சாக்குகளில் அடைத்து அனுப்புவது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் நுவரெலியா, கந்தப்பளை, வெலிமடை பகுதி விவசாயிகள் வர்த்தகர்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்

மரக்கறி வகைகளை உற்பத்தி செய்யும் தோட்டங்களில் இருந்து அதிக தூரத்தில் உள்ள பிரதான வீதிக்கு கொண்டுவரும் போது பிளாஸ்டிக் கூடைகளில் கொண்டு வருவது சிரமமாக இருப்பதாகவும் அதனால் சாக்குகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் அமைச்சரிடம் விடுதத கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

வெளிமாவட்டங்களுக்கும் மரக்கறி வகைகளை அனுப்பும்போது பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்துவதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.இன்னும் ஆறு மாதங்களில் அதனை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சாக்குகளில் மரக்கறிகளை அனுப்பும்போது அவை பழுதடைவதால் பிளாஸ்டிக் கூடைகளில் அவற்றை அனுப்பவேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

சாக்குகளில் மரக்கறிகளை உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்து பிரதான பாதைக்கு கொண்டுவர சாக்குகளை பயன்படுத்த பொலிஸார் தடுப்பது குறித்தும் அமைச்சரின் கவனத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

Friday, February 25, 2011

தோட்டத் தொழிலாளியின் பயிர்ச் செய்கையை அழிக்க தோட்ட நிர்வாகம் முயற்சி


ஹொரணை பிரதேசத்திலுள்ள தோட்டத் தொழிலாளி ஒருவர் தமது குடியிருப்புக் குமுன்னால் உள்ள வீட்டுத் தோட்டத்தில் நீண்டகாலமாக மேற்கொண்டுவரும் தென்னை, வாழை, மரவள்ளி மற்றும் பயிர் வகைகள் கொண்ட காணியை தோட்ட நிர்வாகம் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விளையாட்டு மைதானத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ள காணியுடன் பயிச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள காணியையும் உள்ளடக்கும் நோக்குடனேயே தோட்ட நிர்வாகம் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கிராம உத்தியோகத்தர், விவசாய அபிவிருத்தி அதிகாரி, பொலிசார் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த தொழிற்சங்க பிரதிநிதி ஒருவரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக இவர் இங்கு பயிர்ச்செய்கை மேற்கொண்டுவரும் அதேவேளையில் 2007ம் ஆண்டிலும் தொழிலாளர்கள் இது போன்ற பயிர்ச்செய்கையைத் தோட்ட நிர்வாகம் அழித்து பெரும் சேதம் விளைவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பயிரிடப்படாத தோட்டக் காணிகளை சுவீகரித்து வேலை வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்க அரசாங்கம் திட்டம் மேற்கொண்டிருக்கும் வேளையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பயிர்ச்செய்கையை தோட்ட நிர்வாகம் அழிக்க முற்படுவது குறித்து தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Thursday, February 24, 2011

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் ரூ 500 ஆக உயர்த்ப்பட வேண்டும்- மனோ கணேசன்



தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 285 ரூபாய் இன்று வழங்கப்படுகின்றது. இந்த அடிப்படை சம்பளம் மார்ச் மாதம் 30ம் திகதிக்கு பிறகு 500 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும். இதுவே எமது மலையக தமிழ் கூட்டமைப்பின் முதன்மை கோரிக்கையாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் ராகலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்; உரையாற்றியபோது தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று 285 ரூபாய் நாட்சம்பளமாக வழங்கப்படுகின்றது. இந்த தொகை 2009ம் வருடம் கையெழுத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டதாகும். கடந்த இரண்டு வருடங்களில் விலைவாசி வானளாவ உயர்ந்து விட்டது. அத்தியாவசிய உணவு பொருட்களான மாவு, அரிசி, சீனி, தேங்காய் விலைகள் இரண்டிலிருந்து, மூன்று மடங்குவரை உயர்ந்துவிட்டன. ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளம் இன்னும் 285 ரூபாய்தான். எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தப்பட்ச அடிப்படை சம்பளமாக 500 ரூபாய் வழங்கப்பட்டேயாக வேண்டும்.

கடந்தமுறை சம்பளம் 405 ரூபாய் என்று சொல்லப்பட்டாலும் அதில் அடிப்படை சம்பளமாக 285 ரூபாவே கிடைத்துவந்தது. மிகுதி 120 ரூபாய் வேலைக்கு சமூகமளிக்கும் நாட்களையும், பறிக்கப்படும் கொழுந்து நிறையையும் சார்ந்த ஊக்குவிப்பு கொடுப்பனவுகளாக வழங்கப்பட்டன. இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு தொகை நடைமுறை காரணங்களினால் பொரும்பாலான தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. ஆகவேதான் அடிப்படை சம்பளத்தை 285 ரூபாயிலிருந்து 500 ரூபாவாக உயர்த்துமாறு நாம் கோருகிறோம்.
கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள் இன்று மக்கள் முன்னால் வந்து வாக்குகளை கோருவதற்கு முன்னர் சம்பளத்தை உயர்த்தவேண்டும். சம்பள பேச்சுவார்த்தையை கூட்டு ஒப்பந்தம் மார்ச் 30 திகதிக்கு பிறகு காலாவதியான பின்னர்தான் நடத்தவேண்டும் என்பது கட்டாயம் இல்லை. உண்மையில் இந்த பேச்சுவார்த்தைகள் ஜனவரி மாதமே ஆரம்பிக்கப்பட்டு, இன்று முடிவுக்கு வந்திருக்கவேண்டும். தேர்தல் நடக்கும்வரை பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்காமல் காலம் கடத்துவது அரசியல் நோக்கம் கொண்டதாகும். தேர்தலுக்கு பிறகு 25 ரூபாவை உயர்த்திவிட்டு சம்பள உயர்வு வழங்கிவிட்டோம் என்று சொல்லும் நிலைமை ஏற்படக்கூடாது.

பொகவானத் தோட்டத் தொழிலாளர்களின் பணி நிறுத்தம் முடிவு


பொகவந்தலாவை பொகவானத் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 19 ஆம் திகதி முதல் மேற்கொண்டு வந்த பணி நிறுத்தப்போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமையைத் தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் இன்று 24 ஆம் திகதி முதல் தமது வழமையான தொழிலுக்குச்சென்றனர்.

பொகவான தோட்டத்தில் கடந்த 19 ஆம் திகதி தேயிலை நாற்றுமேடையில் தொழில் புரிகின்ற தொழிலாளி ஒருவரை அந்தத்தோட்டத்தைச்சேர்ந்த உதவித்தோட்ட அதிகாரியும் தோட்ட உத்தியோகஸ்தர் ஒருவரும் சேர்ந்து தாக்கியதைத்தொடர்ந்து குறிப்பிட்டத்தொழிலாளியும் தோட்ட உதவி அதிகாரியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் தோட்டத்தொழிலாளியைத் தாக்கியவர்களைத் தோட்டத்திலிருந்து வெளியேறுமாறுக்கோரி பொகவானத் தோட்டத்தைச்சேர்ந்த சுமார் 700 தொழிலாளர்கள் கடந்த 19 ஆம் திகதி முதல் பணிநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தப்போராட்டம் தொடர்பாக தோட்டத்தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் தோட்ட நிருவாகத்திற்குமிடையில் அட்டன் தொழிற்திணைக்களத்தில் நேற்று 23 ஆம் திகதி மாலை இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட இணக்கப்பாட்டினைத்தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் இன்று 24 ஆம் திகதி முதல் மீளவும் தொழிலுக்குச் சென்றுள்ளனர்.


யெல்வடன் தோட்ட குடியிருப்புகளில் வெடிப்பு; 115 பேர் பெரும் பாதிப்பு

பதுளை யெல்வடன் தோட்டத்தில் தோட்டக் குடியிருப்புகளில் ஏற்பட்ட திடீர் வெடிப்புகளையடுத்து 49 குடும்பங்களைச் சேர்ந்த 115 பேர் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறி ஹாலி எல கொப்பேகடுவ சிங்கள வித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பதுளை மாவட்டத்தில் பெய்த கடும் மழைகாரணமாக இப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், நிலம் மற்றும் குடியிருப்புகளில் திடீரென வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் அச்சம் காரணமாக இந்தக் குடியிருப்புகளில் வசித்தவர்கள் ஹாலி எல கொப்பேகடுவ சிங்கள வித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.இவர்களை ஹாலி எல பிரதேச செயலாளர் எம்.ஆர்.ரஞ்சித் நேரில் சென்று பார்வையிட்டதுடன், இவர்களுக்கு உலருணவுப் பொருட்களை கிரமமாக வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை பதுளையில் ஓரளவு மழை ஓய்ந்துள்ள போதிலும் நிலம் மற்றும் குடியிருப்புகளில் வெடிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது

யுவதியின் மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது


பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெய்த்திலி தோட்டத்தில் கடந்த திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்ட யுவுதியின் மரணம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து மூன்று சந்தேக நபர்கள் கைது செய்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மரணமான யுவதியின் தந்தையும் அண்ணனும் மாமானாரும் என தெரிய வருகின்றது. சாந்த கருணாசேன ஷாமிலாகுமாரி (வயது 20) என்ற இந்த யுவதியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும் மரணமான யுவதி குறித்து பத்தனை பொலிஸில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்ற இந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

மலையக தமிழ் கூட்டமைபின் அலை இன்று நுவரெலியா மாவட்டத்தில் அடிக்கின்றது- தலவாக்கலையில் மனோ கணேசன்

எமது ஜனநாயக மக்கள் முன்னணியும், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியும் இணைந்து உருவாக்கியுள்ள மலையக தமிழ் கூட்டமைபின் அலை இன்று நுவரெலியா மாவட்டம் முழுக்க எழுச்சியுடன் அடிக்கின்றது. விலைவாசி உயர்வினால் திண்டாடும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எமது கூட்டமைப்பு நம்பிக்கைத்தரும் ஒளி விளக்காய் வழிகாட்டுகின்றதாக தோட்டத் தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்; என தலவாக்கலை மேற் பிரிவு, கட்டுகல, கிலான்மோர் ஆகிய தோட்டங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்ட மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மலையக தமிழ் கூட்டமைப்பின் இணைத்தலைவர்களான மனோ கணேசன் மற்றும் சதாசிவம் ஆகியோர் கலந்துகொண்ட இக்கூட்டங்களில்; உரையாற்றிய மனோ கணேசன் மேலும் தெரிவிதுள்ளதாவது,

மலையகத்திலே இன்று, ஒரு தரப்பினர் தொழிலாளர்களின் வருமானத்திற்கு தடைவிதித்துள்ள கூட்டு ஒப்பந்தத்திற்கு வழி கோலியுள்ளார்கள். இன்னொரு தரப்பினர் பாராளுமன்றத்திலே வாய்மூடிமௌனிகளாக இருக்கின்றார்கள். இந்நிலையில் தொழிலாளர்களின் நம்பிக்கைத்தரும் கூட்டமைப்பாக நாங்கள் எழுச்சி பெற்று வருகின்றோம்.

இந்நாட்டில் விலைவாசிகள் உயர்கின்றபோது ஏனைய தொழிலாளர்களுக்கு உரமானியம், வாழ்க்கை செலவு புள்ளிமானியம் என்று பல்வேறு மானியங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்நாட்டில் அந்நியச் செலாவணியை பெற்றுத்தரும்; தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத்திரம் எதுவும் வழங்கப்படுவதில்லை. நமது தொழிலாளர்கள் இந்நாட்டின் பிரஜைகள் இல்லையா? நமது மக்கள் மாற்றான்தாய் பிள்ளைகளா? இன்றைய கழுத்தை நெரிக்கும் விலைவாசி உயர்விலே தோட்டத் தொழிலாளர்கள் தாங்கள் பறிக்கும் கொழுந்தையா, புல்லையா அல்லது மண்ணையா சாப்பிடுவது? என்ற கேள்விகள் இன்று மலையக மக்கள் மனங்களிலே எதிரொலிக்கின்றன. ஆனால் இந்த மக்களின் கேள்விகள் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கவில்லை. மலையக மக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற சபையிலே உரையாடாதது ஏன்? கேள்விகள் எழுப்பாதது ஏன்? பிரேணைகள் கொண்டுவராதது ஏன்? சபை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டங்கள் செய்யாதது ஏன்? என்ற கேள்விகளை மலையக தோட்டத் தொழிலாளிகள் இன்று எழுப்புகின்றார்கள்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்காக, ஏனைய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மானியங்களை நமது மக்களுக்கு வாங்கி கொடுப்பதற்காக எமது மலையக தமிழ் கூட்டமைப்பு ஜனநாயக போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த போராட்டத்தின் ஒரு அம்சமாகவே நாம் இந்த தேர்தலை நோக்குகின்றோம். எங்களது நோக்கத்தின் வெற்றி தேர்தல் வெற்றிக்கு அப்பால் செல்கின்றது. தேர்தலின் போது மலையக மக்கள் தரும் ஆணையை நாம் சம்பள போராட்டத்திற்கு பயன்படுத்துவோம். தேவையற்ற நிபந்தனைகள் அல்லாத அடிப்படை சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான ஆணையை எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலிலே மலையக தோட்டத் தொழிலாளர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

Wednesday, February 23, 2011

மலையக மக்கள் வர்க்க ரீதியில் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே உரிமைகளை பெற முடியும்- ஆறுமுகன் தொண்டமான்


மலையக மக்கள் அரசியல் கட்சி பேதங்களையும் தனி மனித பேதங்களையும் ஒதுக்கிவிட்டு வர்க்க ரீதியில் ஒன்றுபட்டு செயற்பட்டால் மாத்திரமே அந்த பலத்தை முன்வைத்து மேலும் பல உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் . எனவே நாம் ஒரு பேரம் பேசும் சக்தியாக எம்மை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என இ.தொ.கா பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் இ.தொ.கா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசும் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மாத்தளை மாவட்டத்தில் எல்கடுவ தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காண முடியாதுள்ளது. தோட்டத் தொழிலாளர்களிடம் காணப்படும் ஒற்றுமையின்மையே இதற்கு பிரதான காரணம். தொழிலாளர்கள் பல தொழிற்சங்கங்களில் அங்கம் வகிப்பதால் தோட்ட நிர்வாகங்கள் பிரச்சினைகளை தட்டிக் கழிக்கின்றன. எனவே தொழிலாளர்கள் எம்முடன் இணைந்து ஒரே கொடியின் கீழ் செயற்படுபவர்களாயின் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

தொழிற்சாலையை மூடுவதற்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்


தெரேசியாத் தோட்டத் தேயிலைத் தொழிற்சாலையை திடீரென மூடிவிடுவதற்கு தோட்ட நிர்வாகம் எடுத்த தீர்மானத்திற்கெதிராக தேயிலைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இந்தத் தேயிலைத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தேயிலைத் தூளினை இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிலையம் பரிசோதனை செய்தபோது அந்தத் தூளில் அதிகமான இரசாயன கலவை இருந்தமையாலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக தெரேசியா தோட்டத் தேயிலைத் தொழிற்சாலையைத் தொடர்ந்து மூடி விடுவதற்கும் இந்தத் தேயிலைத் தொழிற்சாலையில் அரைக்கப்பட வேண்டிய கொழுந்துகள் இனிமேல் கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்திலுள்ள தேயிலைத் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இணக்கப்பாடு ஒன்று நேற்று புதன்கிழமை தோட்ட நிர்வாகத்தின் பிரதிநிதிகளுக்கும் தோட்டத் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு மிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் 14 நாட்களுக்குள் மீண்டும் இந்தத் தேயிலைத் தொழிற்சாலையை இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தோட்ட நிர்வாகம் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, February 22, 2011

பெருந்தோட்ட வனாந்தர திட்டங்களின் மூலம் சூழல் பாதுகாப்புடன் அந்நிய செலாவணியும் திரட்டு

பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் கீழ் அமைந்துள்ள பெருந்தோட்ட நிர்வாகங்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வனாந்தர திட்டங்களின் மூலம் சூழல் பாதுகாக்கப்படுவதுடன், பெருமளவு அந்நியச் செலாவணியையும் திரட்டக்கூடியதாகவுள்ளதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வனாந்தர செயற்திட்டம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று அண்மையில் இரத்தினபுரி, ஹப்புகஸ்தென்ன பெருந்தோட்டப்பகுதியில் இடம்பெற்றது. இங்கு ஹப்புகஸ்தென்ன மற்றும் உடபுசல்லாவ பெருந்தோட்டங்களின் வனாந்தர முகாமைத்துவ பிரிவின் விசேட நிபுணரான திரு.பிரியா குணவர்த்தன ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

"தேயிலை தயாரிப்பை பொறுத்தமட்டில் வனாந்தர திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த திட்டங்களின் மூலம் பெறப்படும் விறகு மூலம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களை விட அதிகளவு சிக்கனமான முறையில் தேயிலை உற்பத்தி நடவடிக்கையை மேற்கொள்ள முடிகிறது. எரிபொருளின் மூலம் ஒரு கிலோ தேயிலையை உற்பத்தி செய்ய 32 ரூபா செலவாகிறது. ஆயினும் விறகின் மூலம் ஒரு கிலோ தேயிலையை உற்பத்தி செய்ய 8 ரூபாவே செலவாகிறது. ஆயினும் வருடாந்த தேசிய தேவையான 300 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்வதற்கு 4000 ஹெக்டெயர் பரப்பளவில் வனாந்தர செய்கை மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே இந்த தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் பெருந்தோட்ட கம்பனிகளின் வனாந்தர திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன".

“இந்த வனாந்தர திட்டங்களின் மூலம் சூழல் பாதுகாப்பு சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகிறது. பெருந்தோட்டங்களிலிருந்து பெறப்படும் விறகுகளின் மூலம் உற்பத்தி செலவு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதுடன், இந்த திட்டங்களின் மூலம் மண் வளம் பேணப்படுவதுடன், நீர் சேகரிப்பு நிலையங்களுக்கு நிழலாகவும் பயன்படுகின்றன. வனாந்தர பாதுகாப்பு திணைக்களத்தின் கீழுள்ள பெருமளவான வர்த்தக நோக்கிலான வனாந்தரங்கள் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் நிர்வாகப்பகுதிகளிலேயே காணப்படுகின்றன. தற்போது பெருந்தோட்ட கம்பனிகளின் நிர்வாகப்பகுதியில் காணப்படும் வனாந்தரங்கள் மொத்தமாக 20000 ஹெக்டெயார் பரப்பில் காணப்படுகிறது. 10 மில்லியனுக்கும் அதிகமான மரங்கள் காணப்படுகின்றன. பெருந்தோட்ட வனாந்தர திட்டஙகளின் கீழ் பெருமளவில் இயுக்கலிப்டஸ் கிராண்டிஸ் மற்றும் அகாசியா மங்கியம் போன்ற இன மரங்களே அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இவை விறகு பாவனைக்காகவே பயிரிடப்படுகின்றன. தேக்கு மற்றும் மஹாகொனி போன்ற மரங்கள் உயர் பெறுமதியான தளபாட தயாரிப்புக்கு பயன்படுத்தும் நோக்கில் பயிரிடப்படுகின்றன".

"பெருந்தோட்ட வனாந்தர முகாமைத்துவ வரலாறு 1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களை பராமரிக்கும் குத்தகை உடன்படிக்கை கைச்சாத்திடலுடன் ஆரம்பமானது. இக்காலப்பகுதியிலேயே வனாந்தர திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது ஆரம்பமானது. இதற்காக இறப்பர், தேயிலை, தென்னை மற்றும் இதர பயிர்ச்செய்கைக்கு உதவாத நிலப்பகுதிகள் தெரிவு செய்யப்பட்டன. 1997ஃ98 ஆண்டிலிருந்து வனாந்தர திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் அரசாங்க திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டிருந்தது".

"அனைத்து வனாந்தர விஞ்ஞான வனாந்தர செயன்முறை (ளுஉநைவெகைiஉ கழசநளவசல pசயஉவiஉநள) உட்பட்டது. உரிய காலத்தில் வெட்டல், தறித்தல் மற்றும் சுத்தம் செய்தல் போன்றன இதில் அடங்குகின்றன. உறுதியான செயற்பாட்டுக்கான முகாமைத்துவ முறைக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது. பெருந்தோட்ட கம்பனிகளின் பெரும்பாலான வர்த்தக வனாந்தரங்கள் முறையாக கணக்கெடுக்கப்பட்டு, இலக்கமிடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன".

"ஏனைய பயிர்களைப் போன்று வர்த்தக நோக்குடைய வனாந்தரங்களும் முறையான தறிப்பு, மற்றும் மீள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியமாகும். இதில் தறிப்பு நடவடிக்கையின் போது நோக்கம் கருத்தில் கொள்ளப்படும். உதாரணமாக, விறகு பெறுவது நோக்காக இருப்பின், 8-10 வருட காலம் வளர்ச்சியடைந்த மரங்களே தறிக்கப்படுகிறது".

அங்கீகாரம் பெற்ற பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் வனாந்தர திட்டங்கள் தேசிய அமைப்புகளின் மூலம் அடிக்கடி மேற்பார்வை செய்யப்படுவதுடன், ஒரு மரம் தறிக்கப்படும் போது இறுக்கமான கடப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒரு மரத்தை தறிப்பதற்கு பெருந்தோட்ட கம்பனிகள், பெருந்தோட்டத்துறை அமைச்சின் பிரதிநிதி, மாவட்ட வனப்பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர், சூழல் மத்திய அதிகார சபையின் பிரதிநிதி மற்றும் மாவட்ட அல்லது மாகாண செயலகத்தின் உத்தியோகத்தரிடமிருந்து அனுமதியை பெற்றுக்கொண்டே மேற்கொள்ளப்படுகிறது." என்றார்

நன்றி- வீரகேசரி
(வர்த்தக உலா)

தோட்ட மக்களுக்கு குடியிருப்புகள் அமைக்க உடனடி நடவடிக்கை


பன்வில ஆகல சின்னகந்தக்கட்டி மேற்பிரிவு தோட்டத்தில் குடியிருப்புகளில் ஏற்பட்ட வெடிப்புகள் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்து நிர்க்கதியான தோட்டத்திலுள்ள 39 குடும்பங்களைச் சேர்ந்த 157 பேர் கடந்த 5 ஆம் திகதி முதல் ஆகல தமிழ் வித்தியாலயத்தில் தங்கியிருந்தனர். இவர்கள் தங்கியிருந்த பாடசாலையை இயங்க வைப்பதற்காகவும் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு செல்வதற்காகவும் இத் தொழிலாளர்கள் மீண்டும் தங்களின் பழைய இருப்பிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச் சம்பவத்தினை தொடர்ந்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்ட விசேட சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை பன்வில கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் இடம் பெற்றது. இச் சந்திப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீடுகளை அமைத்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில் சின்னபந்தகட்டி தோட்டத்தின் கீழ்ப்பிரிவில் ஆகல அரச பெருந்தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு 20 வீடுகளை கட்ட காணியை வழங்க தீர்மானித்துள்ளது.

மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்


மலையக மாணவர்களின் கல்விக்கு கைக்கொடுத்து வரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எட்டியாந்தோட்டை எக்கிலாஸ் தோட்டத்திலுள்ள பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்களையும் வித்தியாலயத்திற்காக தளபாடங்களையும் வழங்கவுள்ளது.

கொழும்பிலிருந்து இயங்கும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் மலையகத்தில் பல பாடசாலைகளில் மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றவேளை பல்கலைக்கழகத்தில் கற்கும் பல மாணவர்களுக்கும் புலமைப்பரிசில்களை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் சம்பள கூட்டு ஒப்பந்தம்- மனோ கணேசன்


தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தம் உண்மையிலேயே உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் ஒப்பந்தமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மலையகத் தமிழ் கூட்டமைப்பின் சார்பில் மஸ்கெலிய புதுக்காடு, வலதெல, க்ளன்டில் ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் உரையாற்றிய போது ஒப்பந்தம் பற்றி குறிப்பிட்டபோது

தற்பொழுது நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தம் 30ஆம் திகதி முடிவுக்குவருகின்றது. உண்மையிலேயே நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் உள்ளுராட்சி தேர்தலைவிட, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கையெழுத்திடப்படும் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தமே நமக்கு முக்கியமானதாகும். தேர்தல் முடிந்து, 13 நாட்களில் இன்று நடைமுறையில் இருக்கும் சம்பள ஒப்பந்தம் காலாவதியாகின்றது என்பதை மனதில்கொண்டு தொழிலாளர்கள் எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தலில் பிரதான பிரச்சார பொருளாக மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை முன்வைத்திருக்கின்றோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 405 ரூபாய் சம்பளம் என்று சொல்லப்பட்டாலும், உண்மையிலே அவர்களுக்கு கிடைப்பது 285 ரூபாய் மட்டுமே. வேலைக்கு வருகைத்தரும் நாட்களின் அடிப்படையிலான 90 ரூபாவும், 18 கிலோ கொழுந்து எடுக்கவேண்டிய நிபந்தனையின் அடிப்படையிலான 30 ரூபாவும் பெரும்பாளான தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. கர்ப்பமடையும் பெண்களுக்கு தொழில் வழங்கப்படுவதில்லை. சில தோட்டங்களில் 15 நாள் வேலைக்கு சமூகமளிக்காவிட்டால் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் சம்பளத்துடன் வழங்கப்படும் தேயிலை தூள் வழங்கப்படுவதில்லை. இதுபோன்று தொழிலாளர்களுக்கு பல்வேறு பாதகமான அம்சங்களை உள்ளடக்கியதுதான் பொருந்தோட்ட சம்;பள உடன்படிக்கையாகும். இத்தகைய மோசடி கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளவர்களுக்கு தொழிலாளர்கள் வாக்களிக்க முடியுமா? என்றார்.

Monday, February 21, 2011

வேலைநிறுத்தப் போராட்டத்தில் 400 தொழிலாளர்கள்

பொகவந்தலாவை கொட்டியாக்கலை மத்திய பிரிவைச்சேர்ந்த சுமார் 400 தொழிலாளர்கள் இன்று (21-02-20011) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆண் தொழிலாளர்களுக்கு உரிய தொழிலை வழங்காமல் தொடர்ந்து கொழுந்து பறிக்கும் தொழிலில் ஈடுபடுமாறு தோட்ட நிருவாகம் வலியுறுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலை நிறுத்ப் போராட்டத்தை மேற்கொள்வதாக தோட்டத் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கொட்டியாக்கலைத்தோட்ட நிருவாகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, தொழிலாளர்களின் கோரிக்கைக்கேற்ப ஆண் தொழிலாளர்களுக்கு கொழுந்து பறிப்பதைத் தவிர்த்து ஏனைய தொழிலினை வழங்குவதற்கு தோட்ட நிருவாகம் சம்மதித்தபோதும் குறிப்பிட்ட தொழிலாளர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்து இன்று தொழிலுக்குச் சமுகம் தரவில்லை என்று கொட்டியாக்கலைத் தோட்ட நிருவாகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடியில் மலையக மக்கள்

இலங்கையில் அண்மையில் பெய்த பெருமழையின் காரணமாக மலையகப் பகுதியில் தேயிலை மற்றும் ரப்பர் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றம் தெரிவித்துள்ளது.

மழையினால் மலையகப் பகுதியில் தேயிலை, ரப்பர் மட்டுமல்லாமல், காய்கறி சாகுபடியும் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் பெருளாதார ரீதியாக மிகவும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அந்த அமைப்பின் தலைவர் ஓ ஏ ராமையா பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்திருந்தார்

தேயிலை தோட்டங்களில் மழை மற்றும் கடுமையான காற்றின் காரணமாக, தேயிலை அரும்புகள் உதிர்ந்து கீழே விழுந்து விடுவதால், உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து விட்டதாகவும் அவர் கூறுகிறார்.
இப்படியான நிலைமை காரணமாக உற்பத்தி குறையும் நிலையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்த நாட்களே வேலை கிடைப்பதாகவும், அதனால் வருமானம் இல்லாத நிலையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவிக்கின்றார்

அண்மைய மழையின் காரணமாக காய்கறி விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் பல குடும்பங்கள் வருமானம் இல்லாத நிலையில், வெளியில் கடன் வாங்கி தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் மழையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணங்கள் அரசால் உரிய அளவில் வழங்கப்படவில்லை என்றும் அது இந்த விவசாயிகளை பெருமளவில் பாதித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்

Wednesday, February 16, 2011

மலையகத்தில் 31,000 வீட்டுத்தோட்டங்கள் அமைக்கத் திட்டம்

உலக உணவுப் பற்றாக்குறை எதிர்வரும் ஆண்டில் ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதால் நாடளாவிய ரீதியில் பத்து இலட்சம் வீட்டுத் தோட்டங்களை அமைக்கும் திட்டம் ஒன்றை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய மலையகத்தில் 31,000; வீட்டுத் தோட்டங்களை 550 இலட்ச ரூபா செலவில் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மலையக அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் அமரநந்தன வீரசிங்க தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் அக்குறணை பிரதேச செயலகப் பிரிவில் 3,500 வீட்டுத் தோட்டங்களும் பூஜாபிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் 6,700 வீட்டுத் தோட்டங்களும், ஹரிஸ்பத்துவ பிரதேச செயலகப்பிரிவில் 8,400 வீட்டுத் தோட்டங்களும், கலகெதர பிரதேச செயலகப்பிரிவில் 5,700 வீட்டுத் தோட்டங்களும், ஹத்தரலியத்த பிரதேச செயலகப் பிரிவில் 6,700 வீட்டுத் தோட்டங்களும் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தில் 11 பாடசாலைகள் மண்சரிவு அபாயத்தில்


மாத்தளை மாவட்டத்தில் 11 பாடசாலைகள் உள்ளடங்கிய பிரதேசம் மண் சரிவு அபாயத்தை எதிர் நோக்கியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி மத்திய நிலையத்தின் புவியியல் துறை பிரதான அதிகாரி எம்.சீ.யூ மொரேமட தெரிவித்துள்ளார்.
இதில் மாத்தளை இந்து தேசிய பாடசாலை, மாத்தளை சிறிமாவோ பண்டாரநாயக்க பாடசாலை, புஸ்வெல்ல மகா வித்தியாலயம், கம்மடுவ பாடசாலை, பம்பரகலை பாடசாலை, வெஹிகலை பாடசாலை, வாலவலை பாடசாலை மற்றும் பமுனுவ பாடசாலை ஆகிய பாடசாலைகளே இம் மண் சரிவு அபாயத்தை எதிர்நோக்கி உள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழு மலையக மக்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமர்வுகள் மற்றும் விசாரணைகள் நுவரெலியா,அட்டன்,பதுளை போன்ற பிரதேசங்களில் நடத்தப்பட வேண்டும். பெருந்தோட்ட மக்கள் பல்வேறு பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு இன்றுவரையும் இலங்கை சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே ஏனைய பிரதேசங்களில் நடத்தப்பட்டதைப்போன்று மலையக பிரதேசங்களிலும் ஆணைக்குழு அதன் அமர்வுகளை நடத்தினால் இம்மக்களுக்கு தாமாகவே தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.அதேவேளை இம்மக்களின் பிரச்சினைகளை தெளிவுபடுத்தி அவர்களின் பிரதிநிதித்துவ அமைப்புகளுக்கும் வாய்ப்பாக இருக்குமென்பதுடன் ஆணைக்குழு அரசிடம் தனது பரிந்துரைகளை முன்வைக்கும்போது மலையக மக்களின் பிரச்சினைகளையும் இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்பாக அமையும் என மனித அபிவிருத்தி தாபன தலைவர் பி.பி.சிவப்பிரகாசம் இந்த ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

பசறையில் 8 தோட்டங்களில் 3,603 பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை

பசறை பிரதேசத்தில் 8 தோட்டங்களில் 3,603 பேர் தேசிய அடையாள அட்டையின்றி உள்ளனர்.இவர்களில் சுமார் 400 பேர் மாத்திரம் கடந்த வருடம் நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது தற்காலிக அடையாள அட்டை பெற்றுள்ளனர்.ஏனையவர்கள் போதியளவு தெளிவின்மையால் வெறுமனே வாக்களிக்காமல் இருந்துள்ளனர்.இது குறித்து பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்தவில்லை.இதன் காரணமாக இவர்கள் வாக்களிக்கவில்லை. இதை கவனத்தில் கொண்டு இவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி கிராம சேவகர் ஊடாக தேசிய அடையாள அட்டையின்றி இருப்பவர்களின் விபரம் திரட்டப்பட்டுள்ளவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்க அப் பிரதேச தமிழ் அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்.