Saturday, July 8, 2017

இறப்பர் தொழில்துறைக்கு புத்துயிரளிக்கும் திட்டங்கள்

வெள்ள அனர்த்தம் காரணமாக தாய்லாந்தின் இறப்பர் உற்பத்தி நூற்றுக்கு 76 வீதத்தால் 2017ம் ஆண்டு குறைவடையுமென்றும், அந்நாட்டின் இறப்பர் உற்பத்தி 4.38 இலட்சம் மெட்ரிக் தொன்னாக குறையுமென்றும் அந்நாட்டு இறப்பர் அதிகார சபை கூறியதாக ரொய்ட்டர் பத்திரிகையின் பொருளாதார ஆய்வு அறிக்கையில் ஜனவரி மாதம் 20ம் திகதி கூறப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் தற்போது இலங்கைக்கும் பொருத்தமாகவுள்ளன. ‘வெள்ளத்தில் மூழ்கிய அநேகமான இறப்பர் மரங்கள் மடிந்து வருகின்றன. இயற்கை இறப்பர் உற்பத்தி நாடான தாய்லாந்தில் மழை காரணமாக இறப்பர் மரங்களில் சரியான முறையில் பால் வெட்ட முடியாது போயுள்ளது. நான்கு வருடங்களுக்குப் பின்னர் இறப்பருக்கு அதிகபட்ச விலை கிடைக்கும் வேளையிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ஒரு இறப்பர் மரத்தில் இறப்பர் பால் வெட்டுவதற்கு ஏழு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என அந்த அறிக்கை கூறுகின்றது.
இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக அதிகமாகப் பாதிப்படைந்த களுத்துறை மாவட்டமானது தேயிலை இறப்பர் மற்றும் கறுவா பயிரிடப்படும் செழுமையான பிரதேசமாகும். அதேபோல் இரத்தினபுரி, கேகாலை மற்றும் காலி மாவட்டங்களிலும் இறப்பர் செய்கையில் பாதிப்பு ஏற்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. பாதிப்பின் அளவு தற்போது மதிப்பிடப்பட்டு வருகின்றது.
பயிர்ச் செய்கையாளர்களுக்குள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால் தேவையான இறப்பர் கன்றுகளை பெறமுடியாதிருப்பதாகும். அதிகரித்திருக்கும் இத்தேவையை பூர்த்தி செய்ய பெருந்தோட்டத்துறை அமைச்சு ஒட்டு இறப்பர் மரக்கன்று நாற்பது மேடைகளை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
வெலிகடமுல்ல, மீரிகம, எகல்ஓய, குருகொட, கரபிங்ச, மிந்தெனிய மற்றும் கும்புக்கன் ஆகிய இடங்களில் அரசு நாட்டு மேடைகளை அமைத்துள்ளதோடு தனியார் நாற்று மேடை கன்று உற்பத்தியாளர்களுக்கு 2017 ஆகஸ்ட், செப்டெம்பர் மாதத்துக்கான வணிக மட்டத்திலான பயிர் உற்பத்தி பொருட்களுக்கு தேவையான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான விண்ணப்பப்படிவங்கள் கடந்த வாரம் 30ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அனுமதிப்பத்திரம் பெறும் நாற்றுமேடை இடுபவர்கள் இம்மாதம் 31ம் திகதிக்குள் பாத்தியிடும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். அதேபோல் பாத்தி அமைப்பதற்கு எதிர்பார்க்கும் இடங்களையும் பரிசீலனைக்கு உட்படுத்தி இருக்க வேண்டும்.
இறப்பர் பயிர்ச் செய்கையை முற்றாக மாற்றியமைக்க வேண்டிய நிலைமையிலேயே இருந்தது. அவ்வேளையிலேயே வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது. 2016ம் ஆண்டு இலங்கை பெற்றுக்கொண்ட இறப்பர் உற்பத்தியானது கடந்த 50 வருடங்களில் பெற்றுக்கொண்ட மிகக் குறைந்த உற்பத்தியாகுமென 2016ம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி அறிக்கை கூறுகின்றது. 2016ம் ஆண்டு புதிதாக 592 ஹெக்டேயர் காணியிலேயே இறப்பர் பயிர் செய்யப்பட்டது. 2015ல் 769 ஹெக்டேயர், 2014ல் 1428 ஹெக்டேயரும் புதிதாக நடப்பட்டுள்ளன. இவ்வாறு பழைய மரங்கள் அகற்றப்பட்டு புதிதாக இறப்பர் கன்றுகள் 2016ம் ஆண்டு 591 ஹெக்டேயரில் நடப்பட்டன.
சாதாரணமாக இறப்பர் மரமொன்றிலிருந்து பால் வெட்டுவதற்கு 6 வருடங்கள் செல்ல வேண்டும். அந்த 30 வருடங்கள் நல்ல பலனைத் தரும். அவ்வாறு பார்க்கும்போது 2015ல் பாலை வெட்டக் கூடிய மரம் 2011ம் ஆண்டு நடப்பட்டதாகும். அவ்வாறான காணியின் அளவு 6504 ஹெக்டேயராகும். 2019ல் 4673 ஹெக்டேயர் காணிகளிலுள்ள மரங்களிலேயே பால் வெட்டப்படும்.
இறப்பர் செய்கையின் பாதிப்புக்கு முக்கியமான காரணம் சர்வதேச இறப்பர் விலை குறைவாகும். அதற்குக் காரணம் எண்ணெய் விலை குறைந்து செயற்கை இறப்பர் விலை குறைந்ததாகும்.
தோட்ட கம்பெனிகள் இறப்பருக்குப் பதிலாக கொப்பறா மற்றும் கறுவா உற்பத்தியில் ஈடுபட்டு நட்டத்தை ஈடுகட்டியதாக வருடாந்த அறிக்கைகள் கூறுகின்றன. சிறிய தோட்டச் செய்கையாளர்கள் இறப்பர் செய்கையிலிருந்து விலகத் தொடங்கியுள்ளார்கள். தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் தொழிலாளர்களுக்கு அதிகளவு கூலிகொடுக்க வேண்டிய நிலைமை உருவானதால் பயிர்ச் செய்கையை கைவிட காரணமாக அமைந்தது. வர்த்தக சபை பேச்சாளர் ஒருவர் உலக கையுறை தேவையானது தினம் தினம் அதிகரித்து வருவதாகவும் இறப்பர் கையுறை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தொடர்ந்து கேள்விகள் கிடைப்பதாகவும் ஆனாலும் அதில் போட்டி நிலவுவதாகவும் கூறினார். காரணம் சீனாவும் வியட்நாமும் சந்தையில் பிரவேசித்திருப்பதாகும்.
கடின டயர் மற்றும் வாயுவிலான டயருக்கு அமெரிக்கா, பிரேஸில் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் பெரும் கிராக்கி உள்ளதாகவும் ஐரோப்பிய யூனியன் வர்த்தக சந்தையிலும் இறப்பர் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு உண்டென்றும் வர்த்தக சபை கூறுகின்றது. இவற்றைக் கருத்தில் கொண்டு உள்ளூர் இறப்பர் உற்பத்தி தொழிலை பாதிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 79,100 மெட்ரிக் தொன்னான தேசிய இறப்பர் உற்பத்தியை இரண்டு லட்சம் மெட்ரிக் தொன்னாக அதிகரிக்க இறப்பர் அபிவிருத்திப் பிரிவு மூலோபாய வழிகளை மேற்கொண்டுள்ளது.
சிறிய தோட்ட உரிமையாளர்களுக்கு இறப்பரை மீள பயிரிட மற்றும் புதிதாகப் பயிரிட 2016ம் ஆண்டு 372.9 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இறப்பர் பயிரிடப்படாத (சம்பிரதாய இறப்பர் காணி அல்லாத) மாவட்டங்களிலும் இறப்பர் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி முல்லைத்தீவு மற்றும் வவுனியா போன்ற பிரதேசங்களிலும் இறப்பர் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புதிய பயிர்ச் செய்கைக்கும் தேவையான இறப்பர் கன்றுகள் கும்புக்கன் ஓயவில் அமைந்துள்ள நாற்று மேடையிலிருந்தே பெறப்படுகின்றன. அரசுக்குச் சொந்தமான இந்த நாற்று மேடையில் 50,000 கன்றுகள் வளர்க்கலாம். அதனை ஒன்று தொடக்கம் 1 ½ இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதைத் தவிர பதியத்தலாவையிலும் நாற்று மேடை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இறப்பர் செய்கையை மேம்படுத்த மண்ணின் வளத்தை அதிகரித்தல் உயர் தரத்திலான சீட் இறப்பர் உற்பத்தி, அதிக பலனைத் தரும் குளோரின் வகையிலான நோய் எதிர்ப்பு குளோரினை அறிந்துகொள்ளல் உள்ளிட்ட பலவித பரிசோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இறப்பர் தொழில் தொடர்பான சர்வதேச நிறுவனமன சர்வதேச இறப்பர் மகாநாடு 1944ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. விற்பனை உள்ளிட்ட இறப்பர் தொழிலுடன் தொடர்புடைய முப்பது நாடுகள் இதில் அங்கத்துவம் வகிக்கின்றன. அதைத் தவிர வேறு நிறுவனங்கள் 120ம் அங்கத்துவம் பெற்றுள்ளன. இம் மகாநாடு 2018ம வருடம் இலங்கையில் நடைபெற அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இலங்கைக்கு ஐரோப்பிய சங்க நாடுகள் பங்குபற்றுவது நல்ல பலனைத் தரும். இலங்கையில் இறப்பர் தொழிலுக்கு இம்மாநாட்டின் மூலம் நன்மைகள் கிடைக்கும்.
கருணாரத்ன அமரதுங்க
நன்றி- தினகரன்