Tuesday, May 5, 2009

வருடாந்த உற்சவத்திற்குப் பதிலாக பூஜை வழிபாடுகள்

பெரும்பான்மை இனத்தவர்களின் அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்குப் பதிலாக, சித்திரா பௌர்ணமி தினத்தன்று மாபெரும் பூஜை வழிபாடு செய்வதற்கு கோயில் நிர்வாக சபையினர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை அவரது அமைச்சில் சந்தித்தபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த உற்சவத்தை வெசாக் காலப்பகுதியில் நடத்தக்கூடாது என சில பெரும்பான்மையினர் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அதனை மீறினால் கொலை செய்யப்போவதாகவும் அச்சுறுத்தினர். இதனால், இக்கோயிலின் உற்சவம் இடைநிறுத்தப்பட்டது. கடந்த 28 ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 10 ஆம் திகதி வரை இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கோயில் நிர்வாக சபையினரை தமது அமைச்சுக்கு வரவழைத்து நிலைமையை கேட்டறிந்து கொண்டதுடன், இது குறித்து சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், அன்றைய தினமும் அதற்கு பின்னரும் இறக்குவானை பகுதியில் உரிய பாதுகாப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். இது குறித்து அமைச்சர் பௌத்த தலைவர்கள் மற்றும் மல்வத்த பீடாதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர ஒரு நாள் சம்பளத்தை வசூலிப்பது யுத்தத்தை ஆதரிக்கும் செயல் -பெ.சந்திரசேகரன்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தோட்டத் தொழிலாளர்களின் ஆகக் குறைந்த ஊதியத்தில் ஒரு நாள் சம்பளத்தை வசூலிக்க முயற்சிப்பது யுத்தத்துக்குத் துணை போவதாகவே அமையுமென அமைச்சர் பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் யுத்தத்தினால் அகதிகளாக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக என்று கூறி மலையக தோட்டத் தொழிலாளர்களிடம் ஒரு நாள் சம்பளத்தினைச் சேகரித்து வழங்குமாறு சில தொழிற்சங்கங்கள் நிர்வாகங்களிடம் கேட்டுள்ளன. அத்துடன் தொண்டு நிறுவனங்கள் பலவும் தோட்டத் தொழிலாளர்களிடம் பொருட்களையும் பணத்தையும் சேகரிக்க எத்தனிப்பதாக தெரிவிக்கப் படுகின்றது. பாரிய ஏவுகணைத் தாக்குதல்களினாலும் விமான குண்டு வீச்சுகளினாலும் அப்பாவிப் பொதுமக்களுக்குப் பல விதமான இழப்புகள் ஏற்படுமென உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கண்டனங்களை உதாசீனப்படுத்திக் கொண்டிருப்பதால்தான் பல இலட்சக்கணக்கானவர்கள் தமது சொந்த இருப்பிடங்களையும் வாழ்வையும் சொத்துகளையும் இழந்து அங்கவீனமடைந்த நிலையில் அகதிமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீதுமனிதாபிமானத்தோடு அனுதாபம் காட்டுவதற்கும் எவரோவிட்ட தவறுக்காக நட்ட ஈட்டினைத் தோட்டத் தொழிலாளர்களை செலுத்த நிர்ப்பந்திப்பதற்கும் வேறுபாடுள்ளது என்பதனை மலையக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மலையகத் தோட்டத்தொழிலாளர்களிடம் பணமும் பொருட்களும் சேகரிக்க எத்தனிப்பவர்கள் முதலில் இதனை மலையகத்துக்கு வெளியே நடைமுறைப்படுத்திக் காட்டுவார்களா? ஏன்று கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக அக்கறை செலுத்தும் தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வுக்கு உள பூர்வமாக செயற்படாமல் தோட்டத்தொழிலாளர்களிடம் மேலதிகமாக பணத்தினை பறிக்க நினைப்பது ஜீரணிக்கமுடியாத அவலமாகும் என்றார்.