Wednesday, July 14, 2010

மலையக வரலாற்றில் தடம் பதித்த சி.வி

தொழிற்சங்கவாதியும் இலக்கியவாதியுமான சி.வி. வேலுப்பிள்ளை 1914-04-14 ம் திகதி கண்ணப்பன் வேல்சிங்கம் வேலுப்பிள்ளை வட்டக்கொடை மடக்கும்புர தோட்டத்தில் பெரிய கங்காணியின் மகனாக பிறந்து மலையக மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்தவர் என்றால் மிகையாகாது.

சி.வி என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர் மலைய இலக்கிய பரம்பலில் சாரல் நாடன், அந்தனி ஜீவா, இ. தம்பையா, பேராசிரியர் கா. சிவத்தம்பி பேராசியர் அம்பலவாணர் சிவராசா, கலாநிதி க. அருணாச்சலம், கவிஞர் சு. முரளிதரன், ஜெ. சற்குருநாதன் , லெனின் மதிவாணன், என பலதும் ஆய்வுகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளார். அதிகமானவர்கள் சி.வி யின் இலக்கிய ஆளுமையினையே அதிகமாக தொட்டு ஆய்வு செய்துள்ளனர். இவரது அரசியல் முன்னெடுப்புக்களும் செயற்பாடுகளும் குறைவாகவே ஆய்வுகளில் காணப்படுகின்றன.

அட்டன் மெதடிஸ்த கல்லூரி, நுவரெலியா புனித திருத்துவ கல்லூரி, கnhழும்பு நாலந்தா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று ஆசிரியராக தனது தொழிலை ஆரம்பித்த சி.வி, சுதந்திர இலங்கையின் முதல் நாடாளுமன்றத்தின் தலவாக்கொல்லை பிரதேச உறுப்பினர் ஆனார்.

இலங்கை இந்திய காங்கிரஸின் செயற்பாட்டாளரான சி.வி வேலுப்பிள்ளை 1948ம் ஆண்டு மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட காலத்தில் இதற்குக் காரணமாய் இருந்த டி.எஸ். சேனநாயக்காவிற்கு ஆதரவாக இருந்த பல தமிழ் தலைவர்களை கடுமையாக எதிர்த்தவர். பின் நாட்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து விலகி தோழர் கே. வெள்ளையனுடன் இணைந்து தொழிலாளர் தேசிய சங்கத்தினை நிறுவி மலையகத்தில் அடையாளப்படுத்தக் கூடியதும் மக்கள் நலன் சார்ந்ததுமான மாற்று தலைமைக்கான தொழிற்சங்கத்தினை நிறுவி கட்டிக் காத்தவர்.

தனது இலக்கிய வரலாற்றின் இலக்கிய படைப்பிலும் மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் தொடர்பாக எழுதிய சி. வி இலக்கியங்கள் உழைக்கும் பாட்டாளிகளின் குரலாக அன்று துவங்கி இன்று வரை கேட்டுக் கொண்டே இருக்கின்றது.

தமிழ் இலக்கிய வரலாற்றின் சிகரம் பேராசிரியர் கைலாசபதியின் பாராட்டைப் பெற்ற மலையக படைப்பாளி சி. வி மாத்திரமே என்று எழுத்தாளர் அந்தனி ஜீவா அடிக்கடி கூறியுள்ளார். மலையக வரலாற்றினை நோக்கும் போது சி.வி யின் இடததினை சமன் செய்ய இதுவரை எந்த இலக்கியவாதியும், தொழிற்சங்கவாதியும் தோன்றவில்லை என்றால் மிகையாகாது.

சி.வி யின் வாழ்வும் பணியும் நேர்மையும் உழைப்பும் இன்றைய தொழிற்சங்க வாதிகளும் இலக்கியவாதிகளும் கற்று வாழ வேண்டியது கட்டாயமாகும். மலையக வரலாற்றுத் தடத்தில் மிக ஆழமாக தனது பதிவுகளை வைத்தவர் சி. வி ஆவார்.

ஆங்கில மொழியில் மலையக தமிழ் மக்களின் துன்பங்களை உலகிற்கு எடுத்துக் காட்டிய இவர் தனது இலக்கிய பணியில் மாத்திரம் மட்டுப்பட்டு சோம்பிக் கி;டக்காமல் இயக்கப் பணியிலும் தடம் பதித்துள்ளமை குறிப்பிடப்பட வேண்டிய உண்மைகளாகும். 1984-11-19ம் திகதி இவ்வுலகை விட்டு பிரிந்தார் சி. வி அவரது நினைவாக வட்டக்கொடை பூண்டுலோயா வீதியில் கல்லறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

“ ஆழப்புதைந்த- தேயிலைச் செடியின் அடியிற்
புதைந்த அப்பனின் சிதைமேல்
ஏழை மகனும் - ஏறி மித்து இங்கெவர்
வாழவோ தன்னுயிர் தருவன்”

- சி.வி -

இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு வாக்குபதிவு மறுக்கப்படுகின்றதா?

வாக்காளர் பதிவும், மீளாய்வும் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் இந்திய கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டவர்களுக்கு வாக்குப்பதிவு செய்ய முடியாது என்று பல கிராம சேவகர் பிரிவுகளில் பதிவுகள் மறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெருந்தோட்ட பகுதிகளில் இந்திய கடவுச்சீட்டை கொண்டிருப்பவர்கள் நிலை குறித்து தற்போது பலரின் கவனம் திரும்பியுள்ளது.

இவ்வாறு வாக்குப்பதிவு மேற்கொள்ளாமையால் இவர்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடையாள அட்டை பெறுவது, அரச உத்தியோகம் பெறுவது போன்றவற்றின் போது பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அண்மையில் மலையகத்தில் வழங்கப்பட்ட அரச நியமனங்கள் சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர் மற்றும் பெருந்தோட்ட ஆசிரியர் நியமனம் மற்றும் ஆசிரியர் கலாசாலைக்கு பயிலுனர் ஆசிரியராக சேர்தல், போன்றவற்றின் போது தான் இலங்கை பிரஜை என்பதினை உறுதிப்படுத்த முடியாமல் பலர் இவ்வாய்ப்புக்களை இழந்துள்ளமை முக்கிய விடயம்.

எனினும் இவர்களும் வாக்குப்பதிவுக் உரித்துடையவர்கள் என பல அரச சார்பற்ற மற்றும் சிவில் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அது தொடர்பான தகவல்களையும் அறிவுறுத்தல்களையும் அவை தெளிவுப்படுத்தியுள்ளன.

1942ம் ஆண்டு பிரஜாவுரிமை சட்டத்தின் மூலம் நாடற்ற பிரஜையாக்கப்பட்ட மலையக சமூகத்தினருக்கு 1964ம் ஆண்டின் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் 1974ம் ஆண்டின் சிறிமா-இந்திரா ஒப்பந்தங்களின்படி 6,00,000 பேருக்கு இந்திய குடியுரிமையும் 375,000 பேருக்கு இலங்கை குடியுரிமையும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது. இவ்வாறு 6,00,000 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்ட போதும் அவற்றில் இந்திய குடியுரிமைக்கு 6,00,000 பேரும் விண்ணப்பிக்கவில்லை. குறிப்பாக இவர்களில் 94,000 பேர் இலங்கை குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு உடனனே இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்படவில்லை. 1986ம் ஆண்டு 5ம் இலக்க சட்ட மூலம் நாடற்ற இந்திய வம்சாவளி மக்களுக்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிறகும் 2003ம் ஆண்டு பிரஜா உரிமை திருத்தச்சட்டத்தின் மூலம் பிரஜா உரிமை வழங்கப்பட்டாலும் இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்போருக்கு வாக்குப்பதிவு மறுக்கப்படுகின்றமை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இலங்கையின் நடைமுறை அரசியலமைப்பின்படி ஒருவர் தன்னை வாக்காளராக பதிவு செய்வதற்கு இலங்கை பிரஜை என்ற அந்தஸ்து முக்கியமாகும். எனவே இந்திய கடவுச்சீட்டை கொண்டிருந்தாலும் இலங்கை பிரஜை என்ற அந்தஸ்த்தோடு உள்ள சகலரும் தம்மை வாக்காளராக பதிவு செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.