Monday, June 22, 2015

'20" குறித்து இறுதி முடிவு!

பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் கட்சித்தலைவர்களுக்கிடையிலான கூட்டம் இன்றைய தினம் பாராளுன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது. இதன்போது   சர்ச்சைகளுக்கு மத்தியில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 20ஆவது திருத்த சட்டமூலம் குறித்து ஆராயப்படவள்ளதாக தெரிய வருகின்றது. 

தற்போதுள்ள தேர்தல்கள் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில அரசியல் அமைப்பில 20ஆவது திருத்தச்சட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.  இதற்காக  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாரர்ளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை 237ஆக  அதிகரிக்கும் வகையிலும் தொகுதி விகிதாசாரத்தின் அடிப்படையில் 145பேரும், மாவட்ட விகிதாரசாரத்தின் அடிப்படையில் 55பேரும் தேசிய விகிதாசாரத்தின் அடிப்படையில் 37பேரும் தெரிவு செய்யப்படும் வகையில் முன்மொழிவொன்றை செய்து அவ்வரைபை அமைச்சரவை அங்கீகாரத்துடன் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சி அதன் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க ஆகியோருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லாப்பிரேரணைகளை உடன் நிறுத்த வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்திலேயே இச்சட்ட மூலத்தை பாராளுமன்றில் விவாதிக்க அனுமதிப்போம்  எனஉறுதியாகவுள்ளதுடன் பாரர்ளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைய 225ஆக தொடர்ந்தும் பேணவேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
மறுபுறத்தில் சிறுபான்மை இன, சிறு அரசியல் கட்சிகள் தொகுதிகளை மீள்நிர்ணயம் செய்வதை தற்காலிகமாக ஒத்திவைக்கவேண்டும் என்பதுடன் இரட்டை வாக்குசீட்டை அறிமுகப்படுத்தவேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படாவிடின் பல்கட்சி ஜனநாயகத்தை ஒழித்து பாராளுமன்றில் இரு கட்சி அரசியல் கலாசாரம் உருவாகி விடும் என தொடர்ச்சியாக கூறிவருவதுடன் தற்போதுள்ள முறைமையில் குறித்த சட்ட மூலம் பாரர்ளுமன்றுக்கு கொண்டுவரப்படுமாயின் அதனை எதிர்க்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும் வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக மீளப்பெறுமாறும் ஒன்றுபட்டு கோரியுள்ளன. 
இவ்வாறான நிலையிலேயே இன்றைய தினம் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் இடம்பெறவிருக்கின்றன. இதன்போது குறிப்பாக இச்சட்ட மூலம் தொடர்பில் பரஸ்பர கருத்துக்கள் முன்வைக்கப்படும் என தெரியவருவதுடன் 20ஆவது திருத்தம் தொடர்பில் பொது இணக்கப்பாடு எட்டப்படடு இறுதி முடிவு  எடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் அரசதரப்பு முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.