Wednesday, July 8, 2015

தேயிலை தொழிற்சாலைகள் இயங்கவில்லை

மலையகத்தில் தோட்ட தொழிலாளர்கள் மெதுவாக வேலைசெய்யும் போராட்டத்தில் ஈடுபடுவதால் 23 பெருந்தோட்ட கம்பனிகளின் தோட்ட உத்தியோகத்தர்கள், மற்றும் தோட்ட அதிகாரிகள் வேலைக்கு செல்லாததால் தொழிற்சாலைகள் தற்காலிகமாக இயங்காமல் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தொழிலாளர்கள் குறைவான கொழுந்து பறிப்பதனால் கம்பனிகளுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளதால் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தோட்டங்களில் பணிபுரியும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்களை தொழிலில் ஈடுபட வேண்டாமென முதலாளிமார் சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதனையடுத்து தங்களுக்கு மலையக தொழிற்சங்கங்கள் இவ்வாறு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் தங்களின் பாதுகாப்புக்காக தோட்ட நிர்வாகத்திலிருந்து விலகி கொள்ளப்போவதாகவும் மேற்படி தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

போராட்டம் தொடர்ந்தால் வேலை வழங்க முடியாது

தொழிலாளர்களால் 1000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் மெதுவாக பணிசெய்யும் போராட்டமானது சட்டத்துக்கு முரணானது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இப்போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமானால் தொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் வேலை வழங்க முடியாத நிலை ஏற்படுமென்பதுடன் சம்பளம் வழங்க முடியாதுபோகுமென 21 பெருந்தோட்ட கம்பனிகள் சார்பில் பேச்சாளர் முதலாளிமார் சம்மேளனத்தின் பெருந்தோட்ட பிரிவு பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகுமார் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சத்தியாக்கிரகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை முதலாளிமார் சம்மேளனம் வழங்ககோரி தமிழ் முற்போக்கு கூட்டணியினர் தலவாக்கலை விளையாட்டு மைதானத்தில் இன்று (08-07-2015) சத்தியாகிர போராட்டத்தை முன்னெடுத்தனர். தொழிலாளர் தேசியசங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஸ்ணன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோர் உட்பட தோட்டத் தொழிலாளர்கள் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கோரிக்கையை தட்டிக்கழிப்பது நியாயமற்றது

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு கோரிக்கையை தோட்ட கம்பனிகள் தட்டிக்கழிக்க முற்படுவது நியாயமற்றது என பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில தொழிலாளர்களுக்கான 1,000 ரூபாய் சம்பள கோரிக்கை நியாயமானது. தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சம்பளத்தில் 200 ரூபாயை அதிகரித்து 650 ரூபாவாகவும் தேயிலை இறப்பர் விலை உயர்வுக்கேற்ப 30 ரூபாயும் வரவுத்தொகையாக 250 ரூபாயும் மேலதிகமாக பறிக்கப்படும் கொழுந்து கிலோகிராம் ஒன்றுக்கு 35 ரூபாயும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைத்தன.
தொழிலாளர்களின் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள இக்கோரிக்கை நியாயமானது. தேயிலை, இறப்பரின்; விலை குறைந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் இக்கோரிக்கையை முன்வைத்திருப்பது பொருத்தமானதல்ல என தோட்ட நிர்வாகங்கள் கூறுவதில் எவ்வித நியாயமுமில்லை.
தோட்டத் தொழிற்துறையில் தேயிலை, இறப்பர் விலைகளில் வீழ்ச்சி ஏற்படுவதும் அதிகரிப்பதும் சாதாரணவொரு விடயமாகும். இது நிரந்தரமானதல்ல. கூட்டொப்பந்த பேச்சுவார்த்தை சுமார் 20 வருடங்களாக தொடரப்பட்டு வருகின்றது. இக்காலப் பகுதியில் தேயிலையின் விலை உயர்ந்தும் உற்பத்தி அதிகரித்தும் பாரிய அளவில் இலாபம் ஈட்டிய சந்தர்ப்பங்களும் அதேவேளை தேயிலையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் இருந்து வந்துள்ளன. ஆனால், இரண்டு வருடங்களுக்கொருமுறை தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு சம்பந்தமாக ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டே வந்துள்ளது. இன்று தோட்டக் கம்பனிகள் பிடிவாதமாகவும் வித்தியாசமான முறையிலும் நடந்து கொள்வது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறான சூழ்நிலையில் தோட்ட நிர்வாகங்களுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்தே எமது பிரச்சினையை நாம் வெற்றிகொள்ள வேண்டியுள்ளது என்றார் இராமநாதன்.
அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா வழங்குகையில் தோட்ட தொழிலாளிக்கு 1000 ரூபாவை தட்டிக்கழிப்பது நியாயமற்றது

ஆறுமுகன் தொண்டமான் சத்தியாக்கிரக போராட்டம்

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான நள்ளிரவு 12.30 மணிமுதல் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆறுமுகன் தொண்டமான் அங்கு செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில் தொழிலாளர்களின் நியாயமான சம்பளம் 1000 ரூபாவை கோரி முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர்களின் தீர்மானங்கள் எங்களுக்கு ஒத்துவராத காரணத்தினால் தொழிலாளர்களை மெதுவான பணிகளில் ஈடுபடுமாறு அறிவித்திருந்தோம்.
இதனைத் தொடர்ந்து முதலாளிமார் சம்மேளனம் தோட்டத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் அனைவரையும் தொழிலில் ஈடுபட வேண்டாமென்று கேட்டுக்கொண்டதற்கிணங்க சகல தோட்டங்களில் பணிபரியும் தோட்ட உத்தியோகத்தர்கள் நேற்று மாலை முதல் வேலைக்கு செல்லவில்லை தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதோடு தொழிலாளர்கள் பறித்த கொழுந்து அத் தோட்டங்களில் உள்ள கொழுந்து மடுவங்களில் கிடக்கிறது. கொழுந்தை தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல வாகனங்களை தருவதற்கு கூட தோட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டததன் காரணமாக பொலிஸாரும், அரச அதிகாரிகளும் உடனடியாக இவ்விடத்திற்கு வந்துள்ளார்கள். தற்போது இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. போராட்டம் தொழிற்சங்களுக்கும் கம்பனிக்கிடையிலேயே நடைபெறுகிறது.
இதற்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளும், சிறுவர் நிலையத்திற்கும், தோட்ட உத்தியோகஸ்தர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் இவ்வாறு செயல்படுகின்ற கம்பனிகளுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் எனவும் தெரிவித்ததோடு தொழிலாளர்களுக்கு போதிய சம்பளம் பெற்று தரும் வரை நாங்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர் மேலும் தெரிவித்தார்