Sunday, April 26, 2009

மலையக மக்களின் உணர்வுப் பிரவாகமான மலையக நாட்டார் பாடல்கள் ஒலிப்பேழைகளாக வேண்டும்

இலங்கைத் தமிழ் வழக்கில் இன்று மலையகத் தமிழர் எனும் சொற்றொடர் இலங்கையின் மலைப் பிரதேசங்களிலுள்ள பெருந்தோட்டங்களிலும் அவற்றைச் சார்ந்த நகரங்களிலும் வாழும் இந்திய வம்சாவளித் தமிழரை குறிப்பதாகும்.
மலையக மக்கள் என்ற பெயரால் இன்று அழைக்கப்படும் இந்தியத் தமிழர் குடியேற்றங்கள் 1828ம் ஆண்டின் பின்னர் ஏற்பட்டன. மலையக பகுதிகளை சாராத பகுதிகளிலுள்ள பெருந்தோட்டங்களில் அதாவது மேல்-தென் மாகாணங்கள், வடகிழக்கு பகுதியான விவசாய பிரதேசங்கள் கொழும்பில் வாழ்பவர்களையும் கூட மலையகத் தமிழர் என்ற தொடர்கொண்டே சுட்டும் மரபு இன்று வழக்கிலுள்ளது. கோப்பித் தோட்டங்களிலும் பின்னர் தேயிலை, இறப்பர் தோட்டங்களிலும் குடியமர்த்தப்பட்ட மக்களின் வழித்தோன்றல்களே இன்று இவ்விதம் அழைக்கப்படுகின்றார்கள். பிரித்தானிய பேரரசால் ஆயிரக்கணக்கான மக்கள் கடல் கடந்து இலங்கை வந்து மலைப் பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டனர். இவர்கள் யாவரும் தென்னிந்திய விவசாயிகளாவர். இவர்கள் தமது இன, மத, மொழி, பண்பாட்டுக் கலாசாரத்தை பேணத் தலைப்பட்டனர். அவ்விதம் அவர்கள் பேணியது தென்னிந்தியக் கலாசாரமே. இவர்கள் ஏழைகளாகவும் கல்வியறிவு குறைந்தவர்களாகவும் இருந்தனர். எழுத்தறிவில்லாத மக்களிடையே வாய்மொழி இலக்கியமும், கலைகளும் செழிப்புறும் என்பது வரலாறு கண்ட உண்மை. அந்த வகையில் மலையக தமிழரிடையேயும் நாட்டுப் பாடல்கள் அதிகமாகவே வாய்மொழி வழக்கில் காணப்பட்டு வந்தன.
கல்வியறிவில்லாத எளிய பாமர மக்களாக காணப்பட்ட இவர்கள் தங்களுடைய இனிமையான பேச்சுவகையிலும் எல்லோரும் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் தங்களது இன்பதுன்பங்களை பாடல் வடிவில் ஆக்குகின்றனர். இவற்றையே நாட்டுப்புறப் பாடல் என்கிறோம்.
இப் பாடல்கள் மேடையேறி பாடுவதற்கோ, ஒரு கூட்டத்தை மகிழ்விப்பதற்காகவோ பாடப் பெற்றவை அல்ல. அந்நேரத்தில் பாடுவோரின் உணர்ச்சிகள் அடங்கிய இன்பதுன்பங்களை வெளிப்படுத்துபவையாகவே உள்ளன.
எழுத வாசிக்கத் தெரியாதவர்களின் சொத்தாகவே இதுவரை உயிர் வாழ்ந்து வரும் இந்நாட்டார் பாடல்கள் ஒரு தலைமுறையினரிடமிருந்து அடுத்த தலைமுறை கேள்வி மூலமாகவும், வாய்மொழி மூலமாகவும் அறிந்துகொள்ளும் முறையில் அமைந்துள்ளன. தென்னிந்தியாவிலிருந்து கண்டிச் சீமைக்கு வாழ்வு தேடிவந்த இந்த மக்கள் தமது வாழ்வில் கண்டதென்ன? விவசாயம் தழைத்தோங்கும் பிரதேசங்களில் வாழும் உழைக்கும் மக்கள் மத்தியிலே வாய்மொழிப் பாடல்கள் வீறார்ந்த நிலையில் காணப்படும் என்பார் க. கைலாசபதி.
ஆயிரக்கணக்கில் காணக்கிடைக்கும் இப்பாடல்களில் அவர்களின் கட்டுக்கடங்காத துன்பம், துயரம், ஏக்கம், ஏமாற்றம், ஆத்திரம், ஆடி மகிழும் ஆனந்தப் பூரிப்பு, மனக்குமைச்சல் அடங்கிய இதய ஒலிகளாக மனித மனத்தின் நித்திய உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் முறையில் அமைந்துள்ளன. இப்பாடல்களில்,
‘ஊரான ஊரிழந்தேன்
ஒத்தப்பனை தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாய நான் மறந்தேன்’

போன்ற நெஞ்சை நெகிழும் வரிகள் பல காணப்படுகின்றன. இப்பாடல்கள் பல தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்துள்ளமை பாராட்டுக்குரியது.

எனினும் எத்தனை பேருக்கு இந்நூல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும் பெருந்தோட்ட மக்களிடையே எத்தனை பேருக்கு வாசிக்க முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இப்பாடல்கள் ஒலிப்பேழைகளாக வெளிவர வேண்டும் என்பதே எமது அவாவாகும்.
ஏனெனில் வாசிக்க முடியாதவர்களும் இப்பாடலை கேட்பதன் மூலம் விளங்கி இப்பாடல்கள் மீண்டும் மக்கள் வாய்களில் முணுமுணுக்க வேண்டும். மலையகத்தில் இருந்து உதயமாகி பிரபலமான இசையமைப்பாளர்கள் இலங்கையில் உள்ளனர். இவர்கள் இம்முயற்சியில் இறங்கி வெற்றிபெற வேண்டும். மலையக இலக்கியங்களின் பாதுகாப்பும் அதன் அவசியமும் உணர்ந்தவர்கள் இந்நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
வே. முரளிதரன் (நோர்வூட்)