Thursday, January 23, 2014

தோட்ட உத்தியோகத்தர்களின் காணிப்பிரச்சனை

தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு வீடு கட்டிக்கொள்வதற்கு ஏழு பேர்ச்சஸ் காணித்துண்டு கொடுத்ததைப் போன்று தோட்ட உத்தியோகத்தர்களுக்கும் வீடு கட்டிக்கொள்வதற்கு 10 பேர்ச்சஸ் காணித்துண்டுகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதியின் ஆதரவுடன் இப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். 

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் தம்மிக்க ஜயவர்த்தன பொதுச்செயலாளர் கிங்ஸ்லி ராஜேந்திரன் றொபர்ட் ஆகியோர்களின் எற்பாட்டில் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் சமரசிங்க இதனை தெரிவித்தார். 

அவர் அங்கு உரையாற்றுகையில் தோட்ட உத்தியோகத்தர்களின் பிரச்சனை சம்பந்தமாக ஜனாதிபதியுடன் நேரில் பேசுவதற்கு ஒழுங்குகள் செய்து தரப்படும் என்றும் ஜனாதிபதிக்கும் உங்களின் சக்தி நன்கு தெரியும். அவர் பெருந்தோட்ட மக்கள் மீது நல்ல நம்பிக்கை கொண்டுள்ளார். 

ஆரம்ப கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் எடின்பரோ தோட்டத்தில் தோட்ட உத்தியோகத்தர்களுக்கு காணி வழங்குவதற்கு தோட்ட அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். இவர்களின் பிரச்சனை பல வருடகாலமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த போதிலும் இப்போதுதான் செயற்படுகிறது. 

கண்டி, களுத்துறை, நாவலப்பிட்டி, ட்டன், நுவரெலியா, தலவாக்கலை, அவிசாவெல்ல, கேகாலை ஆகிய பகுதியிலிருந்து தோட்ட உத்தியோகத்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாகின்றார்கள்

மனித உரிமைகள் தொடர்பாக தற்போது அதிகமாக குரல் எழுப்பப்பட்டு வருகின்ற இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாகின்றமை வருந்தத்தக்க விடயமாகுமென மலையக மக்கள் முன்னணியில் அரசியல் பிரிவுத் தலைவர் வி. இராதாகிருஷ்ணன் நுவரெலியாவில் பொது மக்களுடனனான சந்திப்பில் கலந்து கொண்ட போது தெரிவித்தார். 

அவர் அங்கு தெரிவிக்கையில் தோட்டத் தொழிலாளர்கள் உழைப்பின் சிகரமாக திகழ்கின்றார்கள். நாட்டுக்கு உரமூட்டுகிறார்கள.; இவர்களுக்கு நீண்டகால வரலாறு இருக்கின்ற போதும் இதில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிட வில்லை என்பது கசப்பான உண்மையாகும். தொழிலாளர்கள் குடியிருக்கும் லயன்கள் சுமார் 200 வருடத்துக்கும் அதிகமான வரலாற்றைக் கொண்டதாகும். இந்த வாழ்க்கை முறையை மாற்றியமைத்து தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக குரல் எழுப்பப்பட்டு வருகின்ற போதும் தனி வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பதில் இழுபறி நிலைகளே காணப்படுகின்றன.

தொழிலாளர்களின் பல துறைகளில் குறிப்பிடத்தக்க எழுச்சி ஏற்படவில்லை. இவர்களை ஏணியாக வைத்து பலர் முன்னேறி செல்கின்ற போதும் தொழிலாளர்கள் இருந்த இடத்திலேயே இருந்து வருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 

வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற உலகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் தொழிலாளர்களின் வாழ்க்கை மாற்றியமைக்கப்பட வேண்டும். அவர்களின் கல்வி, கலை, கலாச்சாரம் விளையாட்டு போன்ற இன்னோரன்ன துறைகளின் அபிவிருத்தி கருதி நடைமுறைச்சாத்தியமான திட்டங்களை வகுத்து முன்னெடுக்க வேண்டும்.

இலங்கையில் பல்லின மக்கள் வாழ்கின்றார்கள். இவர்களின் பிரச்சினைகள் மாறுபட்ட தன்மை கொண்டவை மலையக மக்களுக்கும் தனித்துவமான பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகின்றன. இவற்றை தீர்ப்பதற்கு அரசு ஆர்வம் காட்ட வேண்டும். இதேவேளை மலையக தலைமைகள் அரசுக்கு உரிய அழுத்தத்தை கொடுத்து மலையக மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்.