Wednesday, November 26, 2008



மண் சரிவால் மூன்று வீடுகள் முற்றாக சேதம்

மலையகத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழையைத் தொடர்ந்து கொட்டகலை அமைதிபுர பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவினால் மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. மேற்படி வீடுகளில் வசித்து வந்தோர் தற்போது உறவினர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களில் 6 குழந்தைகளும் உள்ளடங்குவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இம் மண்சரிவினால் சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது

தோட்ட வைத்தியசாலை அரசாங்கத்தின் பொறுப்பில்

பதுளை மாவட்டம் உடுவர பெருந்தோட்டப் பகுதியைச் சார்ந்த மிகவும் பின்தங்கிய தோட்ட வைத்தியசாலை கடந்த 23-11-2008 முதல் அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சீரற்ற போக்குவரத்துக் காரணமாகவும் மருந்துத் தட்டுப்பாடு காரணமாகவும் இப் பிரதேசத்திலுள்ள பொது மக்கள் மிகவும் சிரமங்களை உள்நோக்கி வந்ததையடுத்து அதனை உடனடியாக தீர்க்கும் வகையில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்தே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உடுவர தோட்ட வைத்தியசாலையின் சகல வேலைத் திட்டங்களையும் பதுளையிலுள்ள பிரதான வைத்தியசாலையிலிருந்து மருத்துவர்கள் வாரத்திற்கு ஒரு முறை அவ்வைத்தியசாலைக்கு சென்று அங்குள்ள நோயாளிகளை பரிசோதித்து அவர்களுக்கான சகல மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

பூசா தடுப்பு முகாமுக்கு சென்ற விசாரணை மேற்பார்வை குழு

காணாமல் போதல், கடத்தல் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வை செய்யும் குழு பூசா முகாமிற்கு 27-11-2008 விஜயம் செய்யவுள்ளனர். அவர்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 361 ஆண், பெண் தமிழ் முஸ்லிம் கைதிகளை சந்தித்து அவர்களுக்கான விசாரணைகளை துரிதப்படுத்தி நடவடிக்கை விடுதலைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் வடக்கு, கிழக்கு இளைஞர்களும் 108 மலையக இளைஞர், யுவதிகளும் உள்ளதாகவும் இவர்களில் நிரபராதிகளாகக் காணப்படுபவர்களை விடுவிப்பதற்காகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்படுவதாகவும் குழு உறுப்பினர்களில் ஒருவரான பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மேற்படி கண்காணிப்பு குழுவின் அங்கத்தவர்களில் அமைச்சர் ராஜித சேனாரட்ண, ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார, பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன், பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸ், குழுவின் செயலாளர்களான ஆர். திவ்வியராஜன், லால் வெடிக்கார, பிரதி பொலிஸ்மா அதிபர் சிசிர மெண்டிஸ், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு இயக்குனர் சி.என். வாக்கிஸ்டர் உட்பட உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளும் பூசா முகாமிற்கு செல்லவுள்ளனர்.

வத்தேகம நகர பகுதியில் 19 பேர் கைது

மத்திய மாகாணம் கண்டி மாவட்டம் வத்தேகம நகரப் பகுதியில் பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின்போது 6 பெண்கள் உட்பட 19 தமிழ் பொதுமக்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந் நடவடிக்கை கடந்த 25-11-2008 ம் இடம் பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் கூடுதலானோர் வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தொழில் புரிபவர்கள், வியாபாரம் செய்பவர்கள், சாப்பாட்டுக் கடைகளில் வேலை செய்வோர்கள், போன்றோரே கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றனர் எனவும் ஒரு சிலரே வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மின்மாற்றி வெடிப்புக்குள்ளானதில் குடியிருப்பாளர்கள் மின்சாரமின்றி அவதி

தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தில் அமைந்துள்ள 400 கி.வோ மின்சாரத்தை விநியோகம் செய்கின்ற மின் பரிமாற்றியொன்று வெடித்து தகர்க்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இலங்கை மின்சார சபைக்கு 20 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக லிந்துலை மின்சார விநியோக அதிகாரி எஸ்.எம்.என் சமரக்கோன் தெரிவித்துள்ளார். இதனால் இந்த பிரசேத்தில் அமைந்துள்ள 400 குடியிருப்புகளுக்கான மின்சார விநியோகம் பாதிப்படைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.