Friday, October 24, 2008

தொழிலாளர்களின் சம்பள உயர்வில் அரசு உறுதியா இருக்கிறது – அத்தாவுட

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் அவர்களது தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கொள்கையில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக தொழில் உறவுகள் மற்றும் மனிதவள அமைச்சர் அத்தாவுட செனிவிரத்ன அமைச்சில் அண்மையில் நடைபெற்ற இலங்கை சுதந்திர தோட்டத் ஊழியர் சங்கத்தினர் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார். மேலம் தெரிவிக்கையில் இது தொடர்பாக சம்பள நிர்வாக சபைகளின் திட்டங்களுக்கு அமைய முதலாளிமார் சம்மேளத்தில் அங்கம் வகித்துள்ள சிலர் குறித்த திட்டத்தை நடமுறைப்படுத்துவதை தட்டிக்கழித்து வருவதும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைகிறது என்றார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில், அனைத்துப் பிரதேச செயலகங்களிலும், தமிழ்மொழி அறிந்த ஒரு அதிகாரி இருக்க வேண்டும், எனினும் சில பிரதேச செயலகங்களில் அவ்வாறான அதிகாரிகள் இல்லை. இதனால் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் தலையீடுகளை மேற்கொண்டு, பணிகளை செய்து முடிக்கும் பாரிய பொறுப்பு தோட்டத் தொழிற்சங்களுக்கு உள்ளது.

பாதையை சீரமைக்க கோரி பிரதேச மக்கள், பாடசாலை மாணவர்கள் ஊர்வலம்

மத்தியமாகாணம் பூண்டுலோயா மற்றும் டன்சினன் இடையே சுமார் 15 கி.மீ பாதை குன்றும் குழியுமாக காணப்படுவதால் இப் பாதையில் போக்குவரத்து செய்ய முடியாத நிலை இருப்பதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை அப் பிரதேசத்தில் பூண்டுலோயா, நுவரெலியா உள்ளிட்ட நகர்புற பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் உரிய பஸ் வசதிகளின்றி அல்லல்படுகின்றனர். நடைபாதை வழியாகவே இவர்கள் நகர்புற பாடசாலைகளை சென்றடைய வேண்டியுள்ளது. இதனை தொடர்ந்து பல மாணவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கையை இடையிலே நிறுத்தியும் உள்ளனர். எனவே இப் பாதையை சீரமைத்து தருமாரும் இல்லாவிடில் எதிர்காலத்தில் தொடர்ச்சியான வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் என்பவற்றில் ஈடுபட போவதாக தெரிவித்து நேற்று பாதையை சீரமைக்க கோரி இப் பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள் பாடசாலை மாணவர்கள் ஊர்வலமாக சென்று தங்கள் எதிர்ப்பு நடவடிக்கைளை வெளிக்காட்டினர்.