Thursday, January 22, 2009

சிந்தித்து வாக்களிக்குமா மலையகம்?

மலையகத்திற்கு மீண்டும் ஒரு தேர்தல். அது மாகாணசபைத் தேர்தல். நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 1741 சதுர கி.மீ. விஸ்தாரமான இப் பிரதேசம் ஐந்து பிரிவுகளாக நுவரெலியா, மஸ்கெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குரன்கெத்த என அமைந்துள்ளது. மக்கள் தொகை 742,083 ஆக இருப்பினும், வாக்காளர்களாக 452,495 பேரே உள்ளனர். ஒரு காலத்தில் தமிழர்கள் பெரும்பான்மை வாக்காளர்களாக இருந்தனர். ஆனால் படிப்படியாக இழக்கப்பட்டு இன்று தமிழர் 16,879 வாக்காளர்களாக பின் தங்கி நிற்கின்றனர். இந் நிலையில் நடைபெறவுள்ள இம் மாகாணசபைத் தேர்தலைப் பற்றி சிந்திப்போமாக!

சிறுபான்மை இனம் ஒன்று சேர்ந்து (தமிழ், முஸ்லீம்) ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆனால் நடைமுறையில் சாத்தியமாகுமா? சப்ரகமுவவில் நடந்த மாதிரி எம் பிரதிநிதித்துவம் இங்கு பாதிக்கப்படுமா? இங்கும் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் சூழ்நிலைகள் அமைந்திருப்பது கவலை அளிக்கிறது. அதன் தாக்கமே இந்த வேண்டுகோள்!

நுவரெலியா மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் 452,395 என்பது தெரிந்ததே. இம்; முறை 14 அரசியல் கட்சிகள் சார்பிலும் 10 சுயேட்சைக் குழுக்கள் சார்பிலும் மொத்தமாக 456 பேர் 16 மாகாணசபை அங்கத்தினர் பதவிகளுக்காக போட்டியிடுகின்றனர். சுமார் நான்கு லட்சம் பேர் வாக்களித்தால் ஒரு மாகாணசபை அங்கத்தினர் தெரிவாவதற்கு பெரும்பாலாக ஒரு அங்கத்தினருக்கு சராசரியாக 15,000 முதல் 20,000 வாக்குகள் தேவைப்படுகின்றது. அதன்படி முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல்களை பார்க்கும் போது எம் விருப்பு வாக்குகள் சிதறடிக்கப்படும் சூழ்ச்சி தெளிவாகின்றது. இன வாக்குகள் சமனாக இருக்கும் போது வேட்பாளர் பட்டியலில் எம்மவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதன் நோக்கம் என்ன? எம் வாக்குகளை சிதறடிக்கத்தானே இந்த மறைமுக நாடகம்.

அது ஏன் எம்மவர்களுக்கு புரியவிலலை! ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியில் 10 தமிழர்கள், ஐக்கிய தேசிய கட்சியிலும் 10 தமிழர்கள். விருப்பு வாக்குகள் சிதறும் பட்சத்தில் எம் இனத்தவரின் தெரிவு பாதிக்கப்படுமல்லவா? எனவே தகுதியுள்ள ஒருவருக்கே உங்கள் விருப்பு வாக்குகளை அளியுங்கள்.

பொதுஜன ஐக்கிய முன்னணி இப்போது மலையகத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள் தொடர்வதற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்யும் அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி தமிழர் அடக்கு முறைக்கு ஒரு திருப்பு முனையாக அமைய வாக்களிக்குமாறு வேண்டுகிறது.

எம் சமூகம் பெரும்பாலும் இவ்விரு கட்சிகளில் ஒன்றைத்தான் தெரிவு செய்து வாக்களிக்கும். ஆனால் அக் கட்சிகளுக்கே வேட்பாளர் பட்டியலில் தமிழர் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டுமென்பதில் தான் பொதுவான இணக்கம்.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற ரீதியில் இ.தொ.கா,ம.ம.மு, மாகாண முன்னாள் அமைச்சர் அருள்சாமி என பலரும் பொதுஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிட நாமும் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் சதாசிவம், கணபதி கனகராஜ், மற்றும் மனோ கணேசன், திகாம்பரம், கூட்டணியுடன் ஐ.தே.க தமிழ் உறுப்பினர்களும் களத்தில் குதிக்கின்றனர். விருப்பு வாக்குகள் அளிக்கும் போது எந்த முன்னணி குதிரைகள் ஜெயிக்கும் என்று தெரிந்து அவர்களுக்கு வாக்களிக்கவும், வாக்குகளை (விருப்பு வாக்குகளை) சிதறடித்து உங்கள் பிரதிநிதித்துவத்தை நீங்களே சிதறடிக்காதீர்கள். சிந்தித்து செயல்பட்டு வெற்றி காண்பீராக

- கிருஷ்ணசாமி விவேகானந்தன்-
தேயிலை பெருந்தோட்டங்களுக்கு சிற்றுடைமைகளின் நன்மைகள் - கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ்

தொடர்ச்சி…..

இவ்வாறு காணிகளை பெற்றவர்கள் இன்று தேயிலைச் சிற்றுடைமையாளர்களாக வளர்ச்சியடைந்துள்ளனர். ஏறக்குறைய இன்று தேயிலைச் சிற்றுடைமையின் பரப்பு 100,000 ஹெக்டயராகக் காணப்படுகின்றது. இது இலங்கையில் மொத்த தேயிலை பயிர் செய்யப்படும் பரப்பில் 48 வீதமாகும். இவற்றில் பெரும்பாலானவை தாழ்நிலப் பகுதிகளிலேயே பரந்து காணப்படுகின்றன. இதில் ஏறக்குறைய 216,000 பேர் சிறு தோட்ட உரிமையாளர்களாக உள்ளனர். ஆகக்குறைந்தது 1/8 ஹெக்டயர் பரப்பிலான காணித்துண்டுகளை பெருமளவில் கொண்டுள்ள சிற்றுடமை தேயிலை கைத் தொழிலில் மேலோங்கிய நிலையில் காணப்படுகின்றது. இலங்கையின் மொத்த தேயிலை உற்பத்தியில் ஏறக்குறைய 65 சதவீதமானவற்றை இந்த தேயிலை சிற்றுடைமைகளே வழங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த சிற்றுடைமையாளர்களை பராமரிப்பதற்கு தேயிலை சிறு உடைமை அதிகாரசபை ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு மானியங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக உயர் விளைவு தரக்கூடிய தேயிலைக் கன்றுகளை 1980களின் பின் வழங்கி வருகின்றன. ஏறக்குறைய எல்லா சிறு நில தோட்டங்களும் உயர் விளைவு தரும் தேயிலை செடிகளைக் கொண்ட நிலப்பரப்பாகவே காணப்படுகின்றன. இலகு வட்டியில் கடன்கள் வழங்கியமை, பசளை மானியம் வழங்கியமை, பச்சைக் கொழுந்துக்கு உயர்ந்த விலையை பெற்றுக் கொடுத்தமை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்ட உதவியுடன் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய தொழிற்சாலைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இன்று இத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிற்றுடைமையாளர்கள் இப் பிரதேசத்தில் ஒரு பலம் மிக்க மத்தியதர சமூகமாக வளர்ச்சியடைந்துள்ளனர். இவர்கள் சிறந்த முயற்சியாளர்களாகவும் வளர்ந்திருப்பதுடன் தேயிலை உற்பத்தியில் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களாகவும் குறுகிய காலத்தில் வளர்;ந்துள்ளனர். தம் சொந்த வீடுகளில் வசிக்கும் இவர்கள் மத்தியில் வறுமையானவர்கள் என அடையாளப்படுத்தக் கூடிய குடும்பங்களை அவதானிக்க முடியவில்லை. ஒரு மத்தியதர சமூகக் கட்டமைப்பை விஸ்தரித்துள்ள இச் சிறு நிலச் சொந்தக்காரர்கள் காணிகளுக்கு உரித்துடையவர்களாக இருப்பதுடன் ஒப்பீட்டளவில் வசதியான வீடுகளிலும் வாழ்கின்றனர். அரசியல் ரீதியாக சிறந்த பின்னணியைக் கொண்டுள்ள இம் மக்கள் அரசாங்கத்துடன் பேரம் பேசி தமது எதிர்பார்ப்புக்களை குறுகிய காலத்தில் பெற்றுக்கொள்ளக் கூடிய அளவில் வளர்ச்சியடைந்துளம் உள்ளனர்.

இந்த நன்மைகள் ஏதேனும் கடந்த 150 வருடங்களுக்கு மேலாக தேயிலைத் தொழிலைச் செய்யும் தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ளதாகத் தெரியவில்லை. தேயிலைத் தொழில் என்பது பெருந்தோட்டங்களுக்கே மட்டுப்படுத்தப்பட்ட ஒரு தொழில் என்ற கோட்பாட்டை சிற்றுடைமையாளர்களின் வளர்ச்சியானது பொய்மை படுத்திவிட்டது. தேயிலைச் செய்கையில் சிறு தோட்டங்களே முன்னிலையில் இருக்கின்றன. காலனித்துவ முகாமைத்துவத்தினால் சாதிக்க முடியாதவற்றை சிற்றுடைமைகள் இன்று மிகக் குறுகிய காலத்தில் சாதுரியமாக செய்திருக்கின்றன. தேயிலைச் செய்கையில் சிறு தோட்டங்களின் வெற்றிகரமான இலக்கு இலங்கையில் மட்டுமல்ல கென்யா, கெமரூன், இந்தியாவில் நீலகிரி போன்ற இடங்களிலும் உற்பத்தி, சந்தை, தொழிலாளர் நலன் போன்றவற்றில் உன்னத நிலை காணப்படுகின்றன.

விஸ்தரிக்கப்பட்ட தேயிலைச் சிற்றுடைமையின் நன்மைகளை பெருந்தோட்ட மக்கள் பெற்றுக் கொள்வது பல வழிகளிலும் நன்மை தரும் விடயமாகும். வறுமையில் இருந்து மீள்வதற்கும் நாளாந்த வேதனத்திற்கும் ஊழியம் செய்யும் மிகப் பழைமையான பொருளாதார உறவுகளில் இருந்து மீண்டெழுந்து சுயமாக தொழில் செய்யும் சமூகமாக மாறுவதற்கும் சிற்றுடைமைகளின் விஸ்தரிப்பு மிக அவசியமாகின்றது. இதனூடாக அரசாங்கம் பொருளாதார உதவிகளை நேரடியாக உள்வாங்கிக் கொள்ளக் கூடிய ஒரு சமூகமாக பெருந்தோட்டங்களில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் வளரலாம்.

சிற்றுடைமைகளின் பிணக்குகளை அரசாங்கம் நேரடியாக தலையிட்டு தீர்வு காணப்பட்ட சந்தர்ப்பங்களை அண்மைக் காலத்தில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. உதாரணமாக கடந்த ஒக்டோபர் மாதத்தில் சிற்றுடைமையாளர்களின் தேயிலை ஏற்றுமதியில் நெருக்கடிகள் ஏற்பட்டதை யாவரும் அறிவர். சிற்றுடைமைகளின் தேயிலையில் 60 சத வீதத்திற்கும் அதிகமானவற்றை கொள்வனவு செய்யும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான முகவர்கள் விலை உயர்வு, தரம், மற்றும் வேறு காரணங்களால் இலங்கையின் தேயிலையை வாங்க மறுத்தனர்.
இதனால் சிற்றுடைமைகளின் தேயிலை ஏலவிற்பனையின் போது எதிர்பார்த்த விலைக்கு விற்கக் கூடியமாக இல்லை. உடனடியாக தேயிலைச் சபை தலையிட்டு அதனை உடனடியாகக் கொள்வனவு செய்ததுடன் அடுத்த வாரமே அதனை மீளவும் விற்பனை செய்து நெருக்கடிக்கு தீர்வு கண்டது. சிற்றுடைமைகளின் தேயிலை விலை ஏற்றத்திற்கு காரணமாக இருக்கும் காரணிகளை அரசாங்கம் அடையாளப்படுத்தியதுடன் அதற்கு படிப்படியான தீர்வுத் திட்டங்களையும் முன்வைத்தது. அதில் முக்கியமாக தேயிலைக்கு பயன்படுத்தப்படும் பசளையை மானியமாக வழங்கியதாகும். இதன்படி 50 கிலோ கிராம் பசளை ரூபா 5000 வரையில் இருந்ததை அரசாங்கம் தலையிட்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரூபா 1000 ஆக விநியோகிக்க முன்வந்தது. இதனால் சிற்றுடைமையாளர்கள் பெருமளவு நன்மையை அரசாங்கத்திடம் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. இது போன்ற வேறு சில பிரச்சினைகளுக்கும் முறையான தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே பெருந்தோட்டங்களில் தொடர்ந்து தொழிலாளர்களை தக்க வைத்து வறுமை மற்றும் காணியின்மை போன்ற துன்பச் சூழலில் இந்த மக்களை தொடர்ச்சியாக நிறுத்தி வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதா அல்லது இந்த நாட்டில் சிற்றுடைமைகளின் நன்மைகளை இந்த மக்களுக்கும் விஸ்தரிப்பதற்கு பொருத்தமான கொள்கைத் திட்டங்களை வகுத்துக் கொள்ளதா என்பது பற்றி கொள்கை திட்டமிடலாளர்களும் இச் சமூகம் தொடர்பான ஆர்வலர்களும் போதுமான அளவு புரிந்துணர்வை பெற்றுக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.

Tuesday, January 13, 2009

தேயிலை பெருந்தோட்டங்களுக்கு சிற்றுடைமைகளின் நன்மைகள் - கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ்

இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் காணிகளை கிராமிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் வேலைத் திட்டங்களை முதன்மைப்படுத்தின. ஆதனால் மிகவும் உயர்ந்த அளவில் ஏனைய ஆசிய நாடுகளிலும் பார்க்க இலங்கையின் கிராமிய விவசாயிகளின் காணி உரிமை உன்னத நிலையில் காணப்படுகின்றது. இந்தியா, தாய்லாந்து, தென் கொரியா, தாய்வான் போன்ற நாடுகளிலும் கிராமிய விவசாயிகளின் வளர்ச்சியில் காணிப் பகிர்வு முக்கியமான தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் இலங்கையில் வெற்றிகரமாக மேற்கொண்ட காணிப் பகிர்வுகள் பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு எட்டவில்லை.

பெருந்தோட்ட சமூகம் இன்று காணிகளுக்கு உரிமையுடையவர்களாகவும் இல்லை. அது மட்டுமன்றி தான் வாழும் வீட்டையும் உரிமை கொண்டாடுபவர்களாகவும் இல்லை. இதனால் இம் மக்கள் தாம் வாழ்கின்ற பிரதேசங்களில் முகவரியற்றவர்களாக இருப்பதுடன் கணிசமான இடம் பெயர்வுகளும் ஏற்பட்டு வருகின்றன. உதாரணமாக 1980 களில் ஏறக்குறைய 400,000 பேராக தோட்டங்களில் பதிவு செய்துள்ள பெருந்தோட்ட மக்கள் இன்று 250,000 பேராக ஏறக்குறைய இவர்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இத் தகவல்களை பெருந்தோட்டக் கைத் தொழில் அமைச்சின் புள்ளி விபர கையேட்டில் காணலாம்.
கடந்த பல ஆண்டுகளாக மலையக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தாலும் அரசாங்கம் மேற்கொண்ட ஆய்வின்படி 74 சவீதமான தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள் தமக்குச் சொந்தமானதாக இல்லை என எடுத்துக் காட்டப்படுகிறது.

இக் கட்டுரையை வாசிப்பவர்கள் கிராமங்களையும், நகரங்களையும் ஒப்பிடுவது பொருத்தமானதொன்றல்ல என்றும், பெருந்தோட்டங்களின் அமைப்பு வேறு, கிராமிய அமைப்பு வேறு என்று வாதிடலாம். தோட்டங்களில் தொழிலாளர்கள் நாளாந்த வேலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். தோட்ட முகாமை வீடு, மற்றும் மருத்துவ செலவுகளை வழங்குகின்றது. தொழிலாளர்களின் நலன்கள் தொழிற்சட்டங்களால் பராமரிக்கப்படுகின்றன. தொழிலாளர்களுக்கென தொழிற்சங்கங்கள் தொழிலுறவு மற்றும் சம்பளங்கள் தொடர்பாக கண்காணிக்கப்படுகின்றன. எனவே கிராமியம் வேறு, தோட்டங்கள் வேறு. தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் மக்களை பராமரிக்க உதவுகின்றன. கிராமியத்துறையில் அவ்வாறான பாதுகாப்பு இல்லை என்றும் கிராமிய மக்களைவிட தோட்ட மக்கள் பல்வேறு சலுகைகளை பெற்றவர்களாகக் கருத வேண்டும் என்று வாதிடலாம்.
ஆனாலும் மிக வேகமாகவே தேயிலைப் பயிர்ச்செய்கை கிராமிய சூழ்நிலைக்கு மாற்றியமைக்கப்பட்டதையும் அவை வெற்றிகரமாகச் செயற்படுத்தப்படுவதையும் அவதானிக்கலாம். இத்தகைய வரப்பிரசாதங்கள் ஏன் பெருந்தோட்ட மக்களுக்கு ஏற்படுத்தக் கூடாது என்பதும் வினவப்பட வேண்டிய விடயமாகும்.

பெருந்தோட்டங்கள் எவ்வாறு கிராமிய சூழ்நிலைக்கு உள்வாங்கப்பட்டன என்பதை சற்று பின்நோக்கிச் சென்று பார்ப்பதும் அவசியமானது. 1972-1975 களில் காணிச் சீர்திருத்தம் மேற்கொண்டபோது அதன் பிரதானமாக காணப்பட்டது காணி இல்லாதவர்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்தல் என்பதாகும். இரத்தினபுரி, கண்டி, கம்பளை, களுத்துறை, மாத்தளை, மத்துகம, காவத்தை, கேகாலை, தெனியாய, போன்ற இடங்களில் காணப்பட்ட பெருந்தோட்டக் காணிகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு பின்னர் அந் நிலங்களில் பெரும்பாலானவை அங்குள்ள கிராமிய விவசாயிகளுக்கு தேயிலை பயிர்ச் செய்கைக்காக பகிர்ந்தளிக்கப்பட்டன. மிக விவேகமுடன் இயங்கிய மத ஸ்தாபனங்களும், பாரம்பரிய தேவாலயக் காணிகள் என அடையாளப்படுத்தப்பட்ட காணிகளுக்காக வழக்கு தொடரப்பட்டு அக் காணிகள் கிராமிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. காவத்தை பகுதியில் இவ்வாறான காணித் துண்டுகளின் பகிர்ந்தளிப்பை அவதானிக்கலாம்.

தொடரும்…..

Sunday, January 11, 2009

மத்திய மாகாணசபை தேர்தல் அன்றும் இன்றும்

மத்திய மகாணசபைத் தேர்தல் - கண்டி மாவட்டத்தில் கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில்
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2,44,595 வாக்குகளை பெற்று 16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். சிறுபான்மை மக்கள் சார்பாக எவரும் தெரிவாகவில்லை.
    எதிர்வரும் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் இ.தொ.கா சார்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைமதியுகராஜா, மற்றும் கே. செல்லமுத்து ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
  • மலையக மக்கள் முன்னணி சார்பில் கே. வரதராஜ் என்பவர் போட்டியிடுகின்றார்.
  • ஸ்ரீ.ல.சு.க சார்பாக கே. கோவிந்தராஜ் போட்டியிடுகின்றார்.
  • 2004 ஐக்கிய தேசிய கட்சி 2,02,264 வாக்குகளை பெற்று 14 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். சிறுபான்மை சமூகத்தின் சார்பில் தெரிவாகியிருந்த ஐந்து பேரில் இ.தொ.கா வின் துரை மதியுகராஜா தெரிவாகியிருந்தார்.
    மாத்தளை மாவட்டம்- 2004ம் ஆண்டு தேர்தலில்
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 92,510 வாக்குகளை பெற்று ஆறு பேர் தெரிவாகினர். தமிழ், முஸ்லீம் பிரதிநிதிகள் எவரும் தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    மத்திய மகாணத்தில் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை -56 கண்டி மாவட்டம்- 30 உறுப்பினர்கள்மாத்தளை மாவட்டம்-10 உறுப்பினர்கள்நுவரெலியா மாவட்டம்-16 உறுப்பினர்கள் வீரகேசரியில் - பானா. தங்கம்

மாத்தளை வாழ் தமிழ் மக்கள் சிந்தனைக்கு….

மாத்தளை மாவட்டத்தில் ஏறத்தாழ 35,000 தமிழர் வாக்குகள் இருந்த போதும் தமிழர் பிரதிநிதித்துவம் தெரிவு செய்யப்படவில்லை. 1994ம் ஆண்டில் ஒருவரும், 2000ம் ஆண்டில் ஒருவரும் மத்திய மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

எதிர்வரும் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் (வெற்றிலை சின்னம்) இ.தொ.கா சார்பாக எம். சிவஞானம், ஐ.தே.க சார்பாக (யானை சின்னம்) எம். சுதாகரனும் போட்டியிடுகின்றனர். இதேவேளை மாத்தளை எல்கடுவ தோட்டத்தைச் சேர்ந்த சண்முகம் ஸ்ரீனிவாஸ் தலைமையில் 13 தமிழ் வேட்பாளர்களை கொண்ட சுயேட்சைக் குழு களத்தில் இறங்கியுள்ளது.

15 - 16 ஆயிரம் விருப்பு வாக்குகளே மாகாணசபைக்கு தெரிவாவதற்கு போதுமானது. தமிழர்களின் வாக்குகளை சிதறடிப்பதற்கு மறைமுக முயற்சிகளும் இடம் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய மாத்தளை வாழ் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

தோட்டங்கள் கிராமங்களாக மாற்றப்பட வேண்டும்.
தோட்ட நிர்வாகங்களின் ஆதிகத்திலிருந்து மீள்வதே முன்னேற்றத்திற்கான முதல்படி!

இலங்கையில் காலனித்துவ காலம் தொட்டு இன்றுவரை சகல துறைகளிலும் பின் தங்கிய சமூகமாக மலையக சமூகம் காணப்படுகின்றது என்பதை கடந்த வரவு செலவு திட்ட உரையின் போது ஜனாதிபதி, பெருந்தோட்ட மக்கள் கணிசமாக வாழ்கின்ற நுவரெலியா மாவட்டத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த பின் தங்கிய நிலைமைக்கான அடிப்படை காரணம் என்ன? முதலாவதாக நாம் தோட்ட நிர்வாகங்களின் பிடியிலிருந்து மீள வேண்டும். தோட்ட நிர்வாகங்கள் தொழில் வழங்குநர்களாக மாத்திரமே செயற்பட வேண்டுமே தவிர அரசு நேரடியாக அம் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

பெருந்தோட்டப் புறங்களில் பல ஆண்டுகளாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது தோல்வியை தழுவியிருப்பதுடன் மேலும் மேலும் அம் மக்களின் ஏழ்மையை அதிகரிக்கவே வழிவகுத்துள்ளது. அரசு இம் மக்களின் சமூக, பொருளாதார மாற்றங்கள் ஏற்பட பெருந்தொகை நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்ட போதும் அத் திட்டங்கள் அனைத்தும் பெருந்தோட்டக் கம்பனிகள் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக மகிந்த சிந்தனையின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் பாதை சீரமைப்பிற்காக தோட்ட நிர்வாகங்கள் ஊடாக நிதி வழங்கப்பட்டது. ஆனால் தோட்ட கம்பனிகள் தோட்டப்புற பாதைகளை சீர் செய்யாமல் தோட்ட நிர்வாகிகளின் விடுதிகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் செல்கின்ற பாதைகளை சீர் செய்திருக்கின்றன.

எனவே அபிவிருத்தி திட்டங்கள், பொருளாதார செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் போது அங்கு வாழ்கின்ற மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை. ஆனால் கிராமப் புறங்களில் அல்லது நகரப்புறங்களில் அரசினால் நேரடியாக மேற்கொள்ளப்படும் போது தரமானதாகவும், சிறப்பானதாகவும் அமைகின்றன. ஆனால் பெருந்தோட்ட சமூகம் தோட்ட கட்டமைப்புக்கள் இருந்த போதும் ஏனைய சமூகங்களோடு முன்னேற்றத்தில் பங்கு கொள்ள முடியாது விலகி நிற்கின்றது.

பெருந் தோட்டங்களில் அடிப்படை அத்தியாவசிய சேவைகளான கல்வி, சுகாதாரம், தபால் சேவை என்பன அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. அரசின் நடவடிக்கையால் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தோட்டப் புறங்களில் தமிழ் கிராம அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நியமிக்க போதும் அவர்கள் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்தவென உருவாக்கப்பட்டுள்ள மனிதவள நிறுவனம் தோட்ட கம்பனி நிர்வாகங்களின் நேரடி தொடர்பில் உள்ளது. அரச அபிவிருத்தி செயற் திட்டங்கள் பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள் ஊடாக நேரடியாக மேற்கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. அரச திட்டங்களை மேற்கொள்ளும் போது தோட்ட நிர்வாகங்களிடம் கருத்துக்களை கேட்பதை விடுத்து அம் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, அதற்காக அங்கு உருவாக்கப்படும் கிராம அபிவிருத்தி சங்கம், விவசாய சங்கங்கள் கிராமிய எழுச்சி அமைப்புக்கள் போன்றவற்றின் ஊடாக செயற்பட அரசு முன்வர வேண்டும்- சந்திரமோகன்- லுணுகலை

Saturday, January 10, 2009

மத்திய மாகாணசபைத் தேர்தல் அன்றும் இன்றும்

எதிர்வரும் பெப்ரவரி 14ம் திகதி நடைபெறவுள்ள வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய பிரதான கட்சி கூட்டணிகளும், சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழும் மத்திய மாகாணத்தில் சிறுபான்மை கட்சிகள் தனித்து போட்டியிடாமல் பிரதான தேசிய கட்சிகளில் இணைந்து போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆளும் அரசு கட்சியான ஐ.ம.சு முன்னணியின் வெற்றிலை சின்னத்தில்
இ.தொ.கா சார்பில் முன்னாள் மத்திய மாகாண கல்வியமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன், மற்றும் திருமதி அனுஷா சிவராஜா, சிங் பொன்னையா, ஏ. சத்திவேல் எம்.ராம், எம். ரமேஷ் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

மலையக மக்கள் முன்னணி சார்பில் எல். பாரதிதாசன், ஆர். கணகரட்ணம், எம். மயில்வாகனம் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் எஸ் அருள்சாமி, ஏ.கே. கல்யாணகுமார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
புத்திரசிகாமணி தலைமையிலான மலையக தேசிய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் எம். நடராஜபிள்ளை போட்டியிட இருந்தபோதும் அவர் சுகயீனம் காரணமாக விலகிக் கொண்டார் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.

ஆக மொத்தம் ஐ.ம.சு முன்னணி சார்பில் 11 தமிழ் வேட்பாளர்களும், 8 பெரும்பான்மை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில்
ஐ.தே.க சார்பில் எம் ரவீந்திரன், ஏ.ஹரிசந்திரன், எல். நேருஜி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் பி. திகாம்பரம், சங்கத்தின் பொருளாளர் ஆர். உதயகுமார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் சார்பில் எஸ் சதாசிவம், அக் கட்சியின் உப தலைவருமான கணபதி கணகராஜ் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் (மனோ கணேசன் தலைமை) பிரகாஷ் கணேசன் களத்தில் உள்ளார்.

குறிப்பு:-
  • 2004ம் ஆண்டு ஐ.தே.க யின் யானை சின்னத்தில் இ.தொ.கா சார்பில் போட்டியிட்ட ஆறு பேர் வெற்றி பெற்றிருந்தனர். அன்று ஐ.தே.க(ஐ.தே.க, இதொ.கா, தொழிலாளர் தேசிய சங்கம்) முன்னணிக்கு 1,38,572 வாக்குகள் கிடைத்திருந்ததால் இ.தொ.கா வின் உறுப்பினர்கள் ஆறு பேர் உட்பட மேலும் இருவர் தெரிவாகி இருந்தார்கள்.
  • 2004ம் ஆண்டு மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டியிட்டு 36,939 வாக்குகளை பெற்று இரு உறுப்பினர்கள் தெரிவானார்கள்.(எஸ் அருள்சாமி, பி.திகாம்பரம்)
  • 2004ம் ஆண்டு ஐக்கிய சுதந்திர முன்னணி (பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜே.வி.பி, இலங்கை ஜனநாயக முன்னணி) க்கு 89,192 வாக்குகள் பெற்று ஆறு உறுப்பினர்கள் தெரிவானார்கள். இங்கு சிறுபான்மை இனத்தவர்கள் யாரும் வெற்றி பெறவில்லை.
    எதிர்வரும் தேர்தலில் கள நிலைமைகள் முற்றும் மாறுபட்டவையாகவே காணப்படுகின்றன. முன்பு ஒன்றாக இணைந்து வெற்றி பெற்றவர்கள் இன்று இரு வௌ;வேறு கூட்டணிகளில் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற சிறுபான்மை கட்சிகளின் உறுப்பினர்கள் இம் முறை வெற்றி பெறுவது பெரும் பல பரீட்சையாக அமைந்துள்ளது. – பானா தங்கம்