Wednesday, May 31, 2017

மண், கற்பாறை சரிவால் 428 பேர் வெளியேற்றம்

நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், நேற்று (30) ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிவுகளால், இதுவரையிலும் 49 குடும்பங்களைச் சேர்ந்த 428 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அக்கரப்பத்தனை-யுனிபீல்ட், ஹோல்புறூக், திம்புள்ள- பத்தனை, யுனிபீல்ட் ஆகிய இடங்களிலேயே, மண்சரிவுகளும் கற்பாறைச் சரிவு அனர்த்தங்களும் இடம்பெற்றுள்ளன.   
அக்கரப்பத்தனை, யுனிபீல்ட் ஆகிய தோட்டங்களில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறைச் சரிவு காரணமாக, 25 குடும்பங்களைச் சேர்ந்த 170 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  

அக்கரப்பத்தனை, ஹோல்புறூக் நியூகொலனி பிரதேசத்தில், திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு காரணமாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 வெளியேற்றப்பட்டுள்ளனர்.  
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவு, யுனிபீல்ட் தோட்டத்தில் நேற்று (30) அதிகாலை ஏற்பட்ட மண்சரிவினால், 19 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  
நுவரெலியா, டெப்பாஸ் கிராமத்தில் மண்சரிவு அனர்த்தம் ஏற்படும் அபாயமுள்ளதால், கிராமத்திலுள்ள 84 குடும்பங்களை வெளியேறுமாறு, தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவகம் பணித்துள்ளது.  
மேலும் நுவரெலியா டொப்பாஸ் முதல் இறம்பொடை வரையிலான பகுதிகளில் வாழும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு, நுவரெலியா இடர் முகாமைத்துவ பிரிவு அதிகாரி எம்.பண்டார தெரிவித்தார்.  
ஹரிஸ்பத்துவ மகாவூவா பகுதியில் மண்சரிவு ஏற்படும் வாய்புள்ளதால் அவதானமாக இருக்குமாறு அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.   
இரத்தினபுரி பொத்குல் விகாரை மலைப் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேறும் படி,  இரத்தினபுரி மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

Wednesday, May 10, 2017

பாரதப் பிரதமரின் செவிகளில் மலையக அரசியல் தலைவர்கள் எதனைக் கூறப்போகிறார்கள்


பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையக விஜயம் மலையகத்தில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையிலான முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அநேகமானவர்களின் எதிர்பார்ப்பாகும்.

எனினும், பாரதப் பிரதமரின் விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு அரங்கேறும் அரசியல் நிகழ்வுகள் இன்று நாட்டின் அரசியல் அரங்கில் பிரதான தலைப்பாக மாறியுள்ளது.

பாரதத்தில் இருந்து தொழிலுக்காக கடல் கடந்து வந்த இந்திய வம்சாவளி மக்கள், மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

காலனித்துவ ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட குடியிருப்புக்களில் இன்றளவும் சிலரது வாழ்க்கைச்சக்கரம் சுழல்கின்றமை கவலைக்குரியதே.நாட்டின் பொருளாதாரத்தை நிமிரச் செய்வதற்காக தினமும் தலைகுணிந்து தேயிலை பறிக்கும் இவர்களது வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது எட்டாக்கனியாகவே தொடர்கிறது.

வனவிலங்குகள், இயற்கை அனர்த்தங்கள் என சற்றும் குறைவிலாத ஆபத்துக்களுடன், பாதுகாப்பற்ற தொழிலாளர் தொடர் குடியிருப்புக்களில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த குடியிருப்புக்களின் பாதுகாப்பற்ற தன்மை காரணமாக பல உயிர்கள் பறிபோனதுடன் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டிருந்தது.

இந்தியாவின் அயல் நாடான இலங்கையில் வாழும் இந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது இன்றும் கேள்விக்குறியே?
இந்தப் பின்புலத்திலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையக விஜயம் அமையப்போகிறது.

இந்த சிறந்த சந்தர்ப்பத்தை எவ்வாறு ஒன்றிணைந்து பயன்படுத்துவது என்பதனை சிந்திக்காமல் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தமது பலத்தை நிரூபிப்பதற்காக, இதனைப் பயன்படுத்த முயல்வதையே அண்மையில் நோர்வூட்டில் இடம்பெற்ற சம்பவம் பிரதிபலிக்கின்றது.
மலையகத்தின் பல பகுதிகளில் இந்தியப் பிரதமரின் புகைப்படத்துடன் தமது புகைப்படங்களைக் காட்சிப்படுத்தி, வாகனங்களிலும் அதனை ஒட்டி நடமாடும் காட்சிகளை இன்றும் காணமுடிகின்றது.

நோர்வூட் நகரில் இருந்து 3 கிலோமீற்றர் தூரத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை அமைந்துள்ளது. 1865 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வைத்தியசாலை 152 வருட வரலாற்றைக் கொண்டது.

வைத்தியசாலையில் நிலவிய குறைபாடுகளையும் மக்களின் தேவைகளையும் கருத்திற்கொண்டு 2011 ஆம் ஆண்டு புதிய மூன்று மாடிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் மூன்று மாடிக் கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் 2013 ஆம் ஆண்டு நிறைவடைந்த போதிலும் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக அந்தக் கட்டடம் மூடப்பட்டிருந்தது.

150 கட்டில்களையும் 6 சத்திரசிகிச்சைப் பிரிவுகளையும் ஒரு அவசர சிகிச்சைப் பிரிவையும் நவீன சமயலறை, வைத்தியர்களுக்கான விடுதி என சகல வசதிகளையும் உள்ளடக்கி இந்தக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ள போதிலும், அதனை மக்கள் பயன்பாட்டிற்கு அவசரமாகத் திறந்து வைக்கும் முயற்சிகள் மலையக அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலையளிக்கும் விடயமாகும்.

கொள்கைப் பிரகடனங்களை ‘மாகாண சபையில் முன்வைக்க வேண்டும்

 எதிர்வரும் மாதங்களிலாவது, மலையக மக்களின் சமூக சீரமைப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து கொள்கைப் பிரகடனங்களை மாகாண சபைகளில் முன்வைக்க வேண்டும். அதற்கான அழுத்தங்களையே இங்கு முன்வைக்கின்றோம்” என்று, ஊவா சக்தி அமைப்பின் இணைப்பாளர் இராமசுந்தரம் ரகுராஜ் தெரிவித்தார். ஊவா சக்தி அமைப்பினால், அவ் அமைப்பின் தலைவர் நடேசன் சுரேஸ் தலைமையில் நேற்று(09) பதுளை ரிவர் சைட் விடுதியில் நடைபெற்ற மலையக மக்களின் சமூக சீரமைப்பு விடயமான கொள்கைப்பிரகடனமொன்றினை வெளியீட்டுவைக்கும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு பதுளை மாவட்ட அரச அதிபர் நிமால் அபேயசிரி கருத்துத் தெரிவிக்கையில், “பதுளை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் முஸ்லிம் பாடசாலைகள் சிலவற்றில் க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞானம், கணிதம் பாடங்கள் புகட்டப்படுகின்றன. ஆனால், தமிழ் மொழி மூலப்பாடசாலைகளில் க.பொ.த உயர்தரங்களில் விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களை கற்பிக்க பாட ரீதியிலான ஆசிரியர்கள் இல்லாதுள்ளனர். பெருந்தோட்ட மக்களின் மேம்பாடுகளுக்கு பெரும் தடைகளாக இருப்பது தெளிவற்ற நிலையும் கல்வி மேம்பாடுகள் இன்மைகளேயாகும். அம்மக்களின் பெரியவர்கள் எத்தனை பேருக்கு தமிழ் அறிச்சுவடிகள் தெரியுமென்பதே, கேள்விக்குறியாகும். இந்நிலை மாற வேண்டும்” என்றார் -

மலையகத் தமிழ் சமூகத்துடன் இந்தியத் தலைவரின் சந்திப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 12ஆம் திகதியன்று நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட் விளையாட்டு மைதானத் தில் மலையக தமிழ் சமுதாய மக்க ளைச் சந்திப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்தியாவின் பல அரசியல் தலை வர்கள் இலங்கைக்கு விஜயம் செய் துள்ளதோடு மலையக சமுதாய தலைவர்களையும் சந்தித்துள்ளனர். எவ்வாறாயினும் இந்தியப் பிரதமர் மோடியின் விஜயமானது விஷேட கவனத்துக்கு உரியது.

அன்றைய இந்திய காங்கிரஸின் தலைவரும் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியுமான ஜவஹர்லால் நேரு 1939ஆம் ஆண்டு வருகை தந்தமை அதிகளவில் குறிப்பிடப் படுகிறது. 1939ஆம் ஆண்டு இச் சமுதாயத்தை பல்வேறு தொழில் மற்றும் சாதி அடிப்படையிலான அமைப்புகள் பிரதிநிதித்துவப்படுத்தி வந்தன. இவ்வமைப்புகளை ஒர் அமைப்பின் கீழ் இயங்குமாறு நேரு ஆலோசனை வழங்கினார்.

இதன் விளைவாக உருவாகியதே இலங்கை-இந்திய காங்கிரஸாகும். இதுவே பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றது. நேருவின் வரு கையோடு தற்போதைய மோடி வருகையை ஒப்பிடுகையில் அர சியல் சமூக சூழ்நிலையானது பொதுவாக முழு நாட்டையும் குறிப்பாக மலையக சமூகத்தினரை பொறுத்தவரையிலும் அன்றைய நிலையிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் கண்டுள்ளது. அன்றைய காலப் பகுதியில் இந்திய தமிழர்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர். ஆனால் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இம்மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதோடு வாக்குரிமையும் இழந்தனர்.

இதன் பின்னால் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் குடியுரிமைப் பிரச்சினையே பிரதான மாக அமைந்திருந்தது. 1964ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இந்தியப் பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் மூலமாக இம்மக்களின் அரைவாசிப் பேர் இந்தியாவான தமது தாயகத்திற்குத் குடிபெயர்ந்தனர்.

5 இலட்சத்திற்கும் மேற்பட் டோர் தாயகம் திரும்பியதைத் தொடர்ந்து, 2003ஆம் ஆண்டு குடியுரிமை பிரச்சினை முற்றிலும் தீர்க்கப்பட்டதோடு இம்மக்களைப் பொறுத்தவரையில் ஒரு அரசியல் உறுதித் தன்மை ஏற்படத் தொடங்கியது. தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக தனிமைப்ப டுத்தப்பட்டிருந்த இந்த சமுதாயம் தேசிய நீரோட்டத்தில் இணையத்தொடங்கியது. இத்தகைய அபிவிருத்தி செயற்பாடு துரிதப்படுத்தப் பட வேண்டிய ஒன்றாகும்.

இத் துரிதப்படுத்தும் செயன்முறையில் மோடியின் வருகையானது ஒரு முக்கிய நிகழ்வாக அமைகின்றது. தற்போது இலங்கையில் ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான செயல்முறை இடம்பெற்று வருகிறது. இதில் மலையக சமூகம் தமது அரசியல் மற்றும் சிவில் உரிமைகளை பாதுகாப்பதன் மூலம் தமக்குரிய பிரதி நிதித்துவத்தை பல்வேறு அரசியல் மட்டங்களில் உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல் அதிகார பரவலாக்கல் மற்றும் தேர்தல் தொகுதி சீர்திருத் தம் என்பவற்றினூடாக ஏற்படக் கூடிய அரசியல் ஏற்பாடுகளில் இந்த மக்கள் தங்களது அரசியல் உரி மைகளை ஏனைய சமூகத்தினரை போல அனுபவிக்கக் கூடிய நிலை உருவாக வேண்டும். இச்சமூகமா னது ஏனைய சமூகங்களில் இருந்து வேறுபட்ட கலாசார மற்றும் பொருளாதார சமூக அடையாளங் களைக் கொண்ட ஒரு தனித்துவ இனத்துவக் குழுவாக அங்கீகரிக் கப்பட வேண்டும். வருகை தரும் இந்தியப் பிரதமர் தன்னுடைய பேச்சுவார்த்தையில் இலங்கைத் தலைவர்களுடன் இது குறித்து பேச வேண்டுமென இச்சமுதாயத்தினர் விரும்புகின்றனர்.

மேலும் இம்மக்களது சமூக பொருளாதார கலாசார உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இச்சமூகம் இன்னும் நிலம் மற்றும் வீடுகளுக்கான சட்டரீதியான உரிமைகளை அனுபவிக்க வேண்டிய நிலைமை உள்ளது. அபிவிருத்தி

குறித்த நோக்கில் சமூக அபிவிருத்தி குறிகாட்டிகள், இம்மக்கள் ஏனைய மக்களோடு ஒப்பிடும் போது பின்தங்கிய நிலையில் இருப்பது துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றன. இவற்றுள் வறுமை நிலை, போஷாக்கு மற்றும் சுகாதார நிலை கல்வி அடைவுகள் என்பவை குறிப்பிடக் கூடியவையாகும். 

குறைவான கல்வி அடைவுகள் காரணமாக இச்சமூ கத்தினர் பொதுச் சேவை துறையில் உயர்நிலையிலும் அரச சேவையில் ஈடுபடுவ தும் பூச்சியமாகக் காணப்படு கிறது. தேசிய பல்கலைக்கழ கங்களில் வருடாந்த மொத்த அனுமதியில் இச்சமூகத்தின் பங்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுகிறது. சமீப காலங்களில் தோட்டத்துறையில் இருந்து அதிகளவிலான இடம்பெ யர்வு நகர்புறங்களை நோக்கி திறமையற்ற தொழில்களை நாடி இடம்பெறுகின்றது. இரண்டாம் தர மற்றும் உயர் இரண்டாம் தர பள்ளிக்கூடங்களை விட்டு விலகுவோர் தங்களது கல்வி தொழில்சார் அல்லது தொழில்நுட்பதிற மைகளை விருத்தி செய்வ தற்கான போதிய வசதிகள் காணப்படவில்லை.

இந்திய அரசாங்கத்தின் கடந்தகால உதவிகள்:

மேற்குறிப்பிட்ட தோற்றப்பாட்டில் இந்தியாவின் உதவிகள் மற்றும் தலையீடுகளை இந்த சமூகம் ஒரு தார்மிக கடப்பாடாகக் கருதுகிறது. ஏனெனில் இச்சமூகம் வரலாற்று ரீதியாக இந்தியாவோடு தொடர்புடையதாக இருப்பதோடு இன்னும் கலாசார உறவுகளைப் பேணி வருவதாக உள்ளது. கடந்த காலத்திலே இச்சமூகத்திற்கான இந்திய உதவிகள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். குறிப்பாக கல்வி, தொழிற்பயிற்சி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் வீடமைப்பு ஆகிய சில துறைகளை அடையா ளப்படுத்தலாம்.

கல்வித்துறையை பொறுத்த வரையில் இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் கல்வி நிதியமா னது 1947ஆம் ஆண்டு அப்போது இலங்கையில் இருந்த இந்தியப் பிரதிநிதியான எம்.எஸ். அனி என் பவரின் முயற்சியால் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இது 1947இல் நான்கு மாணவர்களுடன் ஆரம்பித்து, உயர்கல்வி பெற விரும்பும் தகுதி யுள்ள மாணவர்களுக்கு தொடர்ந் தும் உதவி செய்து வருவது குறிப்பி டத்தக்க ஒன்றாகும்.

தற்போது (2016_2017இல்) இந்த எண்ணிக்கை 369ஆக உயர்ந் துள்ளது. க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் (237பேருக்கு) உயர்தரத்தில் கற்பதற்கும் மற்றும் 132 பேருக்கு பல் கலைக்கழகம் செல்வதற்கும் கல்வியியல் கல்லூரியில் கற்பதற்கும் இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை நிதி அங்கத்தவர் திரட்டுவதோடு இந்திய அரசாங் கத்தாலும் வழங்கப்படுகின்றது. இதில் பயன்பெறுவதற்குரியமானவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளாக இருப்பதோடு கணிதம் உட்பட சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்களாக இருக்கவேண்டும். இந்நிதியத் தின் மூலமாக நூறுக்கு மேற்பட்டவர்கள் பல்கலைக்கழக பட்டத்தைப் பெற்றுள்ளனர். இவர்களில் மருத்துவம் பொறி யியல் விவசாயம் என்பனவும் அடங்குகின்றன. தற்போது க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைவோர் தொகை அதிகரித்து செல்வ தால் இந்நிதியத்தின் பணிகளை விரிவுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. 

தொழிற்பயிற்சியை பொறுத்த வரை ஹட்டனில் அமைந்துள்ள நோராட் அமைப்பின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையமானது இந்த சமூகத்தின் தொழிற் பயிற்சி தேவைகளை நிறைவேற் றும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இந்நிறுவனத்தினுடைய பிரதான பிரச்சினை தமிழ் மொழிமூல பயிற்சியாளர் இல்லாது இருந்தமையாகும். இதனை நிவர்த்தி செய்யும் முகமாக 20.11.2017 வரைக்கும் பல தமிழ் மொழி பயிற்றுவிப்பா ளர்களை இந்திய அரசாங்கம் இந்த பயிற்சி நிலையத்திற்கு வழங்கியுள் ளது. இவர்கள் மோட்டார் சக்கர மெக்கானிக், மின்சார பொருத்துனர், தன்னியக்க இயக்கமுள்ள மெக்கானிக், இயந்திர லெய்டர் பொருத்துனர், அலுமினிய பொருத் துனர் போன்ற துறை சார்ந்தவர்கள் ஆவர். தற்போது இந்நிறுவனத்தில் 4 பயிற்றுவிப்பாளர்கள் கடமை புரிகின்றனர். அத்தோடு இந் நிறுவ னத்தினரின் உபகரணங்கள் மற்றும் கட்டடங்கள் வழங்குவதற்காக 199 மில்லியன் ரூபா உதவியில் இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்க ஒன்றாகும்.

அத்தோடு கணிதம் மற்றும் விஞ் ஞானம் போன்ற பாடங்களில் ஆசி ரியர்களை பயிற்றுவிப்பதற்காக பல பயிற்சித் திட்டங்கள் நடைமு றைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலமாக இந்தியாவில் ஒருதொகை ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ள னர். அத்தோடு இந்திய பயிற்று விப்பாளர் இங்குள்ள ஆசிரியருக்கு பயிற்சிஅளித்துள்ளனர். அத்தோடு 25 ஆசிரியர்கள் விஞ்ஞானத் துறையில் பட்டம் பெறுவதற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்தியா செல்வதற்கு முன்னால் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு இங்கு பயிற்சியும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்துத் துறை குறித்த பிரச்சினைகள் முக்கியமானவை. தோட்டங்கள் நகரங்களில் இருந்து தொலைதூரத்தில் அமைந்துள்ள காரணத்தினால் பொதுப் போக்குவ ரத்து வசதிகளை பெற்றுக் கொள்ள lug) இடர்பாடுகள் உள்ளன. இவற்றை ஓரளவு தீர்க்கும் முகமாக 40 சிறு பஸ் வண்டிகள் நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டன. இவை எந்தளவிற்கு பயன ளித்துள்ளன என்பது கேள்விக்குரிய ஒன்றாகும்.

இந்திய உதவியில் முக்கியமாகக் கருதப்பட வேண்டியது சுகாதாரத் துறையாகும். நுவரெலியா மாவட் டத்தில் டிக்கோயா நகரத்துக்கு அருகில் அமைந்துள்ள கிளங்கன் வைத்தியசாலையின் நிர்மாணம் இந்திய அரசாங்க உதவியுடன் 1200 மில்லியன் ரூபாவில் 2011இல் ஆரம்பிக்கப்பட்டு 2015இல் முடி வுற்றது. இருப்பினும் உரிய உபகர ணங்களை கொள்வனவு செய்வதி லும் நிர்வாக பொறுப்பினை ஏற்றுக் கொள்வதில் மத்திய அரசாங்கத்திற் கும் மாகாண சபைக்கும் ஏற்பட்ட இழுபறி காரணமாக இதனுடைய தொடக்கம் தாமதப்படுத்தப்பட்டு இறுதியாக இந்த வைத்தியசாலை பிரதம மந்திரி மோடியினால் மே மாதம் 12ஆம் திகதி திறக்கப்பட வுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

வடமாகாணத்தில் இடம்பெ யர்ந்தோருக்காக இந்திய அரசாங்கம் ஐம்பதாயிரம் வீடுகளை வழங்க முன்வந்தது. பின்னர் இத்தொகை யில் 4000 வீடுகள் தோட்டத்துறைக்காக ஒதுக்கப்பட்டன. ஒவ்வொரு வீட்டுக்கும் ரூபா 10 இலட்சம் என்ற அடிப்படையில் இவ்வீடு கள் இலவசமாக வழங்கப்பட்டன. பல்வேறு காரணங்களால் இக்கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகள் தாமதிக்கப்பட்டு 2017ஆம் ஆண் டிலேயே ஆரம்பிக்கப்பட்டன. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இவ்வீடுகளின் நிர்மானப் பணிகள் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்கால உதவிகளுக்கான தேவைகளில் முதலாவது வீட்டுத் தேவையாகும்.

160,000க்கும் மேலதிகமான வீடமைப்பு தேவைகள் காணப்படுவதால் அதற்காக நிதியை இலங்கை அரசாங்கத்திடம் பெற்றுக் கொள் வதில் பல்வேறு சிரமங்கள் காணப் படுகின்றன. 2015 ஆம் ஆண்டு அமைச்சரவையின் அங்கீகாரத் தோடு இருபதாயிரம்வீடுகளுக்கான வீடமைப்பு செயற்திட்டம் ஒன்று இந்திய அரசாங்கத்திடம் சமர்ப்பிக் கப்பட்டுள்ளது. இதற்கான இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு எதிர் பார்க்கப்பட்ட நிலையில் உள்ளது.

அடுத்தது கல்வித்துறையாகும். உயர் இரண்டாம் தர கல்வியின் விரிவு காரணமாக தற்போது பல் கலைக்கழகத்தின் அனுமதிக்காக தகுதி பெறும் மாணவர்களின் எண் ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும் தேசிய பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக் கையான 27 ஆயிரத்தில் ஒரு சத வீதத்தை கூட இன்னும் மிஞ்சவில்லை. தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியம் நூறு பல்கலைக்கழக மாணவர்களுக்கே உதவி செய்கின்றது. தகுதி இருந்தும் அனுமதி பெறாது இருப்பவர்களுக்கு உதவி செய்யும் முகமாக தங்களுடைய பல்கலைக்கழக கல்வியை பூர்த்தி செய்வதற்கு மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் புலமைப் பரிசில்களை வழங்குவதற் காக இந்திய அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.

பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை மலையக சமூ கத்திற்கு மாத்திரமே தங்களுக் கென ஒரு பல்கலைக்கழகத்தை அடையாளம் காட்ட முடியாத நிலை உள்ளது. பேராதனை, ஊவா மற்றும் சப்ரகமுவ போன்ற பகுதிகளில் பல்க லைக்கழகங்கள் காணப்பட்டாலும் அவற்றை மலையக பல் கலைக்கழகம் என்று சொல்ல முடியாத நிலையில், தனித்த ஒரு பல்கலைக்கழகம் தேவை என்பது இச்சமூகத்தின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இச்சமூகத்தின் வரலாறு கலாசாரம் சமூகப் பிரச்சினை என்பவற்றில் ஆய்வினை மேற்கொள்வதற்கும் தனியான பல்கலைக்கழகத்தின் தேவை உணரப்பட்டுள்ளது. எனவே இதைப் பூர்த்தி செய்யும் முகமாக இந்திய அரசாங்கம் இது குறித்த சாத்திய வள ஆய்வினை மேற் கொள்ள வேண்டியது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

அத்தோடு பல்கலைக்கழகத் திற்கு அனுமதி பெற முடியாத மாணவர்கள் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்ற னர். பிரதானமாக அமைந்துள்ளது தமிழ்மொழி மூலம் போதுமான போதனைகள் இல்லாமையாகும். ஒரு தனித்த தொழில்நுட்ப கல்லூரி ஒன்றின் மூலமாகவே இத்தகைய மாணவர்களின் தேவை முழுமை யாக பூர்த்தி செய்யக் கூடியதாக அமையும். இதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பற்றாக்குறை நிலவுகின்ற முக்கிய பாடங்களான கணிதம், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், பெளதிகவியல், இரசாயனவியல், ஆங்கிலம் மற்றும் முகாமைத்துவம் போன்ற துறைகளில் ஆசிரியர்களுக்காக பயிற்சி தேவைப்படுகின்றது. முன்னர் செயற்பட்டு வந்த செயற்திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம். கல்வித் துறையைப் பொறுத்தவரை இறுதியாக பல்வேறு பாடசாலைகள் தரம் உயர்த்தப்பட வேண்டிய தேவையுள்ளது.

1980களில் சீடா, ஜி.டி.இசட் போன்ற நிறுவனங்களினால் 300இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன. ஏனைய பாடசாலைகள் அரசாங்க நிதி உதவியோடு குறைந்த எண்ணிக்கையில் தரமுயர்த்தல் படிப்படியாக இடம்பெற்று வருகின்றது. இந்திய அரசாங்கம் 100 பாடசாலைகளை பொறுப்பேற்குமானால் இந்த தரமுயர்த்தல் முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதம மந்திரி மோடியின் வரு கையோடு இம்மக்களின் உரிமை மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான பிரச்சினைகளை முன்வைப்பதில் மக்களின் தலைமைகள் முன்வந் திருக்கின்றன. இந்திய அரசாங்கம் கடந்த காலத்தில் செய்த உதவிகளை மதிப்பீடு செய்வதின் மூலமாக அந்த திட்டங்களினு டைய செயல்முறைகளின் குறைநி றைகளை அறிய முடிகிறது. இவை எதிர்காலத்தில் வழங்கவிருக்கும் உதவிகளை வழிப்படுத்துவதற்கு உதவியாய் அமையும். மலையக சமூக அபிவிருத்தியில் நோர்வே, சுவீடன், போன்ற நாடுகள் கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்களவு உதவிகளை நல்கியுள்ளன. இவற்றை மிஞ்சியதாக இந்திய உதவிகள் அமைய வேண்டும் என்பதே இம்மக்களின் எதிர்பார்ப்பாகும்.

எம்.வாமதேவன். 
நன்றி - தினகரன்