Thursday, September 10, 2009

அடிப்படைச்சம்பளமாக 500 ரூபாவினை பெற்றுக்கொடுக்க வேண்டும் - சந்திரசேகரன்

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 500 ரூபாவினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அச் சம்பளம் பல்வேறு கொடுப்பனவுகளை உள்ளடக்கியதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருக்குமானால் அது தோட்டத் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்கும் செயலாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரன் தெரிவித்தார். இரண்டரை வருடங்களுக்குப் பின் கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 600 ரூபா வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

ஆனால் ஏனைய தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு ஒத்துப்போக வேண்டும் என்பதற்காக மலையக மக்கள் முன்னணியும் அடிப்படை சம்பளமாக 500 ரூபாவுக்கு இணங்கிப் போக வேண்டி ஏற்பட்டுள்ளது என ஹோல்பேஸ் ஹோட்டல் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தற்போது பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவருக்கு அடிப்படைச் சம்பளமாக 200 ரூபாவே வழங்கப்படுகிறது. இந்த நாட்சம்பளமானது அதிகரித்து செல்லும் வாழ்க்கை செலவுகளுக்கு ஈடுகொடுக்க போதுமானதல்ல. எனவே தான் அடிப்படை சம்பளமாக 500 ரூபா வேண்டுமென கோருகிறோம்

இந்த அடிப்படைச் சம்பளமான 500 ரூபாவுடன் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவுகளும் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும். தற்போது அரச சிற்×றூழியர் ஒருவர் 11500 ரூபாவை மாத சம்பளமாக பெறுகின்றார். இந்தச் சாதாரண சிற்×றூழியர்கள் பெறுகின்ற சம்பளத்தைக்கூட பயிற்றப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெறவில்லை. எனவே இது ஒரு பாரபட்சமான செயலாகும். இந்த நாட்டில் வாழுகின்ற சகல மக்களும் சமமானவர்கள் என்பது உன்மையாயின் சம்பள உயர்வு விடயத்திலும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அந்தச் சமத்துவம் காட்டப்பட வேண்டும். அதனால் தான் இந்தப் பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட்டு சிறந்தவொரு தீர்வினை பெற்றுத்தர வேண்டுமென நாம் கூறினோம். அதாவது கூட்டு ஒப்பந்தம் என்பது வெறுமனே சம்பளப் பிரச்சினையை மாத்திரம் உள்ளடக்கியதல்ல. அதில் பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அந்த சகல அம்சங்கள் பற்றியும் ஆராய வேண்டும். அதன் பின்னரே கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும். ஆனால் தற்போது சம்பள உயர்வு தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் இ.தொ.கா. உட்பட ஏனைய தொழிற்சங்கங்களும் இதை மூடு மந்திரமாகவே வைத்துள்ளன. தற்போது மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒத்துழையாமை போராட்டம் கூட இ.தொ.கா. வால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவே. இது தொடர்பில் கலந்தாலோசனைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே இவ்வாறான தான்தோன்றித் தனமான செயற்பாடுகளை நாங்கள் வன்மையாக எதிர்க்கின்றோம்.

தற்போதைய கால சூழலுக்கு ஏற்ப கூட்டு ஒப்பந்தத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் இணைக்கப்பட வேண்டும். அவ்வாறான சில அம்சங்களை நாங்கள் முன்வைக்கின்றோம். புதிய கூட்டு ஒப்பந்தத்தில் சம்பளத்திற்கு அப்பால் மேலதிகமாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள்: புதிய கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் சம்பளத்திற்கும் மேலதிகமாக சேர்க்கப்படவேண்டிய கோரிக்கைகள். தொழிலற்ற இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பினை பெறக்கூடிய வகையிலும் தொழிலாளர்களுக்கு மேலதிக வருமானத்தை ஏற்படுத்தும் வகையிலும் தோட்டங்களில் தற்போதுள்ள தரிசு நிலங்களை பகிர்ந்தளிப்பதோடு கால்நடை வளர்ப்பு மற்றும் சுயதொழில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மூடப்பட்டுக் கிடக்கும் தேயிலை தொழிற்சாலைகளை இயங்க வைப்பதோடு தோட்டப் பகுதிகளில் தொழில்பேட்டைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தோட்டங்களில் தேயிலை உற்பத்திக்கு பயன்படாது என ஒதுக்கப்பட்ட காணிகளை தொழிலிலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் வீடமைப்பிற்காக பகிர்ந்தளிக்க வேண்டும்.
மரண சகாய நிதி 7000 ரூபாவாக அதிகரிக்கப்படவேண்டும். மரங்கள் தறிக்கப்படும்போது அதன் மூலம் கிடைக்கும் வருமானம் தோட்டத் தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். வரட்சிக் காலத்தில் நிவாரண உதவி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதோடு இதனை சம்பளத்தில் அதற்கு பின்வரும் காலங்களில் கழிக்கப்படக் கூடாது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்று செல்பவர்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதோடு நாடு திரும்பியவுடன் எவ்வித காலதாமதமுமின்றி வேலை வழங்கப்படவேண்டும்.

தொழிலாளர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கும்போது இரண்டு விதமாக தண்டனை வழங்குவதை நிறுத்த வேண்டும். உதாரணமாக பொலிஸ் நடவடிக்கை, தோட்டத்தில் வேலை நிறுத்துதல். தோட்டங்களுக்கு சொந்தமான தேயிலை விற்பனை நிலையங்களில் தோட்ட இளைஞர், யுவதிகளுக்கே வேலை வாய்ப்பு வழங்கப்படுவதோடு புதிய விற்பனை நிலையங்களும் இதுபோல ஆரம்பிக்கப்படவேண்டும். முன்பு தோட்டங்களில் நடைமுறையிலிருந்த சில சுத்திகரிப்பு ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை போன்ற நிதிகளையும் நலன்புரி தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
தோட்ட பாடசாலை மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்களை தோட்ட நிர்வாகம் வழங்குகின்ற புதிய நடைமுறையை நிர்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டும். விளையாட்டுத் துறைக்கும் கலாசாரம் மற்றும் சமயத் துறைக்கும் தோட்ட கம்பனிகள் விசேட நிதிகளை ஒதுக்கீடு செய்யவேண்டும். அதற்கான காணி ஒதுக்கீட்டையும் கட்டாயமாக்க வேண்டும். தோட்டங்களில் உள்ள நோயாளர்களுக்கு இலவச வாகன வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கணவன் ஏதேனும் குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டால் மனைவி மீது எந்த நடவடிக்கையும் எடுப்பது நிறுத்தப்படல் வேண்டும்
தொழிற்சங்க நடவடிக்கை - 100 கோடி ரூபா இழப்பு

தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரி தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழையாமை போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு 100 கோடி ரூபாவுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிப் பணிப்பாளர் கனிஷ்க வீரசிங்க தெரிவித்துள்ளார். மலையகப் பகுதிகளில் மாத்திரமல்லாது ஏனைய பிரதேசங்களிலும் தேயிலை உற்பத்தி குறைவடைந்துள்ளது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் தொழிற்சங்கங்களுடன் 10-10-2009 பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் வீரசிங்க தெரிவித்தார். அதேவேளை தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அடுத்த ஏல விற்பனைக்கான தேயிலை குறைவடையும் என தெரிவித்த இலங்கை தேயிலைச் சபையின் தலைவர் லலித் ஹெட்டியாராச்சி வாராவாரம் நடைபெறும் ஏல விற்பனையில் ஒன்றரை மில்லின் கிலோ கிராம் தேயிலை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சம்பள உயர்வு - நுவரெலியா மாவட்டத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா கிளண்டில் தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஊர்வலமாக வந்து தேயிலைத் தொழிற்சாலை முன்றலில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் - சம்பள விடயத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும் போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

லிந்துலை பிரதேசத்தில் மெரேயா, ஊவாக்கலை, தங்ககெலை, கேம்பிரி, என்போல்ட், எல்ஜின், திஸ்பனை ஆகிய தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக வந்து லிந்துலை – டயகம பிரதான வீதி, திஸ்பனை சந்தியில் ஒன்று கூடி சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவை வெம்பா தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 500 தொழிலாளர்கள் எவ்வித தொழிற்சங்க பேதமுமின்றி மெதுவாக பணிசெய்யும் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

ஒத்துழையாமைப் போராட்டம் குறித்து தமக்குத் தொழிற்சங்கங்கள் உரிய விளக்கம் வழங்காத காரணத்தினால் தாமாகவே சிந்தித்து மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபட்டதாக வெம்பாத் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.