Wednesday, October 8, 2008

சபை நடவடிக்கைகள் அனைத்தும் தமிழில் நடைமுறைபடுத்தவும் - எஸ். இராதாகிருஷ்ணன்

மத்திய மாகாண சபை அதன் அனைத்து கடிதப் போக்குவரத்துக்கள் உட்பட பல்வேறுபட்ட அறிக்கைகளையும் வெளியீடுகளையும் அரச கரும மொழியான தமிழில் நடைமுறைப்படுத்தா விட்டால் இச் சபையின் தமிழ், முஸ்லீம் உறுப்பினர்கள் அடுத்த சபைக் கூட்டத்தை பகிஷ்கரித்து போராட்டம் நடத்துவார்கள் என மத்திய மாகாணசபை இ.தொ.கா உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ். இராதாகிருஷ்ணன் கண்டி பல்லேகல – கம்உதாவ மத்திய மாகாணசபை மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் இந்த மாகாணசபை ஆரம்பித்து 19 வருடங்கள் ஆகின்றபோதும் இன்றும் தமிழ் மொழிக்குரிய உரிமைகளும், அந்தஸ்தும் வழங்கப்படவில்லை. நமது மாகாண சபையிலும், ஏனைய அரச அலுவலகங்களிலும் அனைத்து கருமங்களும் சிங்க மொழியிலேயே நடைபெறுகின்றன. சபையின் தலைவர் டபிள்யூ. எம். யுசமான தங்களது தாய் மொழியில் கடிதங்களையும், அறிக்கைகளையும் பெற்றுக்கொள்ள உரிமை உண்டு. அது அவர்களது உரிமை என தெரிவித்திருக்கிறார். இதேவேளை சபைத் தலைவரின் தனிச் சிங்களத்திலான காப்புறுதி தொடர்பான அறிக்கை உறுப்பினர்களின் கையெழுத்திற்காக சபை சேவகரால் இராதாகிருஷ்ணனிடம் சமர்ப்பித்தபோது சிங்களத்தில் உள்ளதால் அதில் தான் கையெழுத்திட முடியாது என்று மறுப்பினை தெரிவித்தார்.

குளவிகள் கொட்டியதில் பெண் தொழிலாளி மரணம்

இரத்தினபுரி காவத்தை ஓபாத்த இல-02 தோட்டத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளியான வெள்ளையம்மா(53) தனியார் தேயிலை தோட்டமொன்றுக்கு தொழிலுக்கு சென்ற வேளை அங்கு குளவிக்கூடு ஒன்று உடைந்ததில் அதிலிருந்த பெருமளவிலான குளவிகள் கொட்டியதால் அப் பெண் தொழிலாளி ஸ்தலத்திலேயே மரணமானதாக காவத்தை பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் (07-10-2008) பிற்பகல் 1.00 மணியளவில் நிகழ்ந்துள்ளது. சுமார் 500க்கு மேற்பட்ட குளவிகள் கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மலையக கல்வி அபிவிருத்தியில் அமரர் தொண்டமான்பெருந்தோட்டப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கவும், சுவீடன் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்யவும், அதன் மூலம் கல்வி அபிவிருத்தி ஏற்படவும் காரணமாக இருந்த அமரர் எஸ். தொண்டமான் சேவை நினைவு கூரப்படும் என தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் எஸ். ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். மேலும் 1988ம் ஆண்டு மாகாணசபை நிர்வாக முறை அமுல்படுத்தப்பட்டபோது மத்திய மாகாணத்தில் கல்வி அமைச்சை கேட்டுப் பெற்றார். அதன் பயனாக எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்திய வம்சாவளி தமிழர் ஒருவர் மத்திய மாகாணத்தில் கல்வி அமைச்சராக பதவி வகிக்க முடிகிறது.

இந்திய வம்சாவளியினர் “இலங்கை தமிழர்கள்” என்ற வகையிலான சட்டமூலம்

இந்திய வம்சாவளியினர் என்ற மலையக மக்களின் நாமத்தை நீக்கி அவர்களை இலங்கை தமிழர்கள் என்று அழைக்கும் வகையிலான ஒரு சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவேன் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார். எதிர்காலத்தில் உள்ளுராட்சி தேர்தல் யாவும் தொகுதிவாரியாக நடத்தப்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மலையக மக்களும் முஸ்லீம் மக்களை போன்று பெரும்பான்மை கட்சிகளில் சேர்ந்து போட்டியிட்டு வெற்றி கொள்ள முடியும். தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினை, சம்பள பிரச்சினை தொழிற் பிரச்சினை போன்றவற்றுக்கு தொகுதி எம்.பி க்கள் மூலம் ஜனாதிபதி வரை எடுத்துச் சென்று தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.
இனப்பிரச்சினையில் தமிழக கட்சிகளின் நிலைப்பாடு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். – சந்திரசேகரன் பா.உ

1983ம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் ஏற்பட்டபோது அனைத்து தமிழக கட்சிகளும், மக்களும் திரண்டெழுந்த வரலாற்று சம்பவத்துக்கு பின்பு தமிழகத்தில் ஆளும், எதிர்கட்சிகள் இலங்கை சிறுபான்மை தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முனைந்திருக்கின்றமை இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என சமூக அபிவிருத்தி அமைச்சர் பெ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகம் திரண்டெழுந்தால் இந்திய டில்லி அரசு தலைகுனிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதுவே இலங்கை தமிழ் மக்களுக்கு தலை நிமிர்வை உருவாக்கும். இலங்கை வாழ் வடக்கு கிழக்கு தமிழர்களாக இருந்தாலும், மலையக தமிழ் மக்களாக இருந்தாலும் எவரும் சிங்கள மக்களை அடிமைப்படுத்த நினைத்தவர்கள் அல்ல. சிங்கள தலைமைகளோடு கைகோர்த்த கடந்த வரலாறே இது வரையிலும் பதியப்பட்டுள்ளது. தமிழர்களின் உயர்வுக்கு தேசிய தலைவர்கள் எப்போது தடைபோட ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே முறுகல் நிலையும் போராட்டமும் தோன்ற ஆரம்பித்து விட்டன. இலங்கை பிரச்சினையில் மௌனம் காத்த தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி தற்போது உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்க்க கூடிய அளவில் சில முடிவுகளை எடுத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். அதேபோல் எதிர்கட்சி தலைவி ஜெயலலிதா இலங்கை தொடர்பில் இவ்வளவு வெளிப்படையாக தமது கருத்தை வெளிப்படுத்தியிருப்பது இலங்கை தமிழர்களுக்கு புத்தூக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரலாற்று மாற்றங்கள் இலங்கையின் இனப்பிரச்சினையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மாணவனுக்கு பல்கலைகழக அனுமதி வழங்க கோரி அமைச்சர் செல்லச்சாமி கடிதம்

தேங்கிக் கிடந்த தபாலினால் பல்கலைகழக அனுமதியை இழந்த மாணவன் தொடர்பிலும் மேற்படி மாணவனுக்கு பல்கலைகழக அனுமதியை பெற்றுக் கொடுக்கும்படியும் உயர்கல்வி அமைச்சர் விஸ்வ வர்ணபால அவர்களுக்கு தபால், மற்றும் தொலை தொடர்பு பிரதியமைச்சர் அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த மாணவனுக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்குமாறு இரத்தினபுரி இ.தொ.கா காரியாலயத்திற்கும் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.