Sunday, November 2, 2008

உலக நிதி நெருக்கடி தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை

உலக நிதி நெருக்கடியினால் தேயிலை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் உற்பத்தி தொழிற்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது. குறிப்பாக சிறுதோட்டத் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களே பாதிப்புக்குள்ளாவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே குறைந்த வருமானத்தைப் பெற்றுக் கொண்டு மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தத் தகவல் பேரிடியைத் தந்துள்ளதோடு தற்போதைய வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் சம்பள உயர்வு கோரிக்கை எதிர்நோக்கும் தொழிலாளர்களின் கோரிக்கையை வலுவிழக்கச் செய்துள்ளது. இலங்கையில் கண்டி, மாத்தளை, கேகாலை, களுத்துறை, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அதிகமாக உள்ளனர். இங்கு தொழில் புரியும் தொழிலாளர்கள் பெரிய கம்பனித் தோட்டங்களில் தொழிலாளர்கள் அனுபவிக்கும் சலுகைகளை இவர்கள் அனுபவிப்பதில்லை. தற்போதுள்ள நிலைமையில் கொழுந்து பறிப்பதை குறைத்து எதிர்காலத்தில் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கான வேலையை மட்டுமே செய்யும் வகையில் ஆலோசனைகள் தெரிவிக்கப்படும் போது புதிய கன்றுகளை நாட்டுதல், உரமிடுதல், போன்ற வேலைகள் ஒரு சில நாட்களில் மாத்திரமே செய்ய வேண்டியுள்ளது. வேலையில்லாது கஷ்டப்படும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள், தேயிலை உற்பத்தியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அரச தரப்பினர் ஒன்று சேர்ந்து கலந்தாலோசித்து இம் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டுமென தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.