Saturday, October 24, 2015

உழைப்­புக்கு ஏற்ற ஊதி­யத்தை மாத்­தி­ரமே உரி­மை­யாக நினைக்கும் தொழி­லா­ளர்கள்

 

நாட்டு மக்­களின் நலன்­புரி, அர­சியல் அபி­லா­ஷைகள், தேவைப்­பா­டுகள், விருப்பு வெறுப்­பு­களில் தமிழ் மக்கள் ஒட்டு மொத்த அர­சி­ய­லி­லி­ருந்தும் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­கின்ற நிலைமை காணப்­ப­டு­கின்ற நிலையில் தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளிடம் இருந்து வெளி­ப்ப­டை­யா­கவே அவர்கள் ஏமாற்­றப்­பட்டு வரு­கின்­றனர்.
 
குறிப்­பாக தேயிலை உற்­பத்தித் துறையைச் சேர்ந்த அப்­பாவித் தொழி­லா­ளர்­களைப் பொறுத்­த­வ­ரையில் இன்­னு­மின்னும் பரி­தா­பத்­துக்­கு­ரி­ய­வர்­க­ளா­கவே இருக்­கின்­றனர்.
 
தமிழ் அர­சியல் வாதி­களைப் பொறுத்­த­வ­ரையில் அவர்கள் மேடை­களில் தோன்றும் போது கும்­பி­டு­போ­டு­வ­தற்கும், வீர வச­னங்கள், பசப்பு வார்த்­தை­களைக் கூறும் போது கைதட்டி மகிழ்­விப்­ப­தற்கும் மாத்­தி­ரமே இது வரையில் தமிழ் சமூ­கத்தைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். அதிலும் மலை­யக அர­சியல் பற்றி சொல்லித் தெரிய வேண்­டி­யது கிடை­யாது. பந்தா காட்­டு­வ­தற்கே சிலர் வலம் வந்து கொண்­டி­ருக்­கின்­றன.
 
சிங்­கள அர­சியல் வாதிகள் மற்றும் முஸ்லிம் அர­சியல் வாதி­களைப் பொறுத்­த­வ­ரையில் போட்டி போட்டுக் கொண்டு தமது சமூ­கங்­க­ளுக்கு சேவை செய்து வரு­கின்­றனர்.
 
பாரா­ளு­மன்­றத்­திலும் இது தொடர்­பான கருத்து வாதங்­களை முன் வைத்து வரு­கின்­றனர். அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து வரு­கின்­றனர்.
 
எனினும் மலை­யக மக்கள் தொடர்­பிலும் அவர்­க­ளது சம்­பள விட­யத்­துக்கு நிலை­யான தீர்­வொன்றை முன்­வைப்­ப­தற்கும் பாரா­ளு­மன்­றத்தைப் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்கும் மலை­யகத் தலை­மைகள் தொடர்ச்­சி­யா­கவே தவறி வரு­கின்­றன.
 
புதிய அர­சாங்கம் அமைத்து இரண்டு மாதங்கள் கடந்து விட்­டன. செப்­டெம்பர் முதலாம் திகதி பாரா­ளு­மன்றம் கூடி­யதன் பின்னர் பல அமர்­வுகள் இடம்­பெற்று விட்­டன. ஆனாலும் நீண்டு வரும் மலை­யக தேயிலை உற்­பத்­தி­யா­ளர்­களின் சம்­பள விவ­காரம் 7 மாதங்கள் கடந்தும் தீர்­வின்றி காணப்­ப­டு­வது தொடர்பில் மலை­ய­கத்தைப் பிர­தி­நி­தித்துவப்படுத்தும் தலை­வர்கள் சந்­தர்ப்­பங்­களைப் பயன்­ப­டுத்திக் கொள்ளத் தவ­றி­யுள்­ளனர்.
 
பாராட்­டுக்­க­ளையும் பொன்­னா­டை­க­ளையும் மாலை­க­ளையும் கைதட்­டல்­க­ளையும் வாங்கிக் கொள்ள முண்­டி­ய­டிக்கும் மலை­யகத் தலை­மைகள் தமது மக்­களின் விட­யங்­க­ளிலும் அவர்­க­ளது வாழ்­வா­தார விட­யங்­க­ளிலும் கூட குரு­டர்­க­ளாக இருந்து வரு­கின்­றனர்.
 
ஐக்­கிய தேசியக் கட்சி, இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு முன்­னணி என்ற பெயர்­களில் பாரா­ளு­மன்றம் சென்றோர் தமது கட­மை­க­ளையும் பொறுப்­புக்­க­ளையும் உணர்ந்து செயற்­பட்­டுள்­ள­னரா? என்­பதை மன­சாட்­சியைத் தொட்டு கேட்டுப் பார்க்க வேண்டும். இந்த இரண்டு மாத காலப்­ப­கு­தியில் இடம்­பெற்ற விவா­தங்கள் மலை­ய­கத்தைச் சார்ந்த உறுப்­பி­னர்கள் எவ்­வ­ளவு பாரா­ளு­மன்­றத்தில் செல­விட்­டுள்­ளனர் என்­பதும் விவா­தங்­களில் நேரத்தை ஒதுக்கி தமது மக்­களின் பிரச்­சி­னை­களை முன்­வைப்­ப­தற்கு எந்­த­ளவில் பிர­யத்­த­னப்­பட்­டுள்­ளனர் என்­பதும் கேள்விக் குறிதான்.
 
தேர்தல் காலங்­களில் இவர்கள் காட்­டிய ஆர்வம் இப்­போது கிடை­யாது. இன்னும் ஐந்து வரு­டங்­க­ளுக்கு இவர்கள் தான் சீமான்கள் என்­பதால் வாக்­க­ளித்த மக்கள் கைகட்­டியே நிற்க வேண்­டி­யது தான் இறு­தி­யாக இருக்­கி­றது.
 
கேட்­ப­தற்கு வேம்­பா­கவே இருந்­தாலும் மலை­யக மக்கள் அவர்­க­ளது தலை­மை­களால் அப்­பட்­ட­மாக ஏமாற்­றப்­ப­டு­கின்­றனர். பாரா­ளு­மன்ற சிறப்­பு­ரி­மைக்கும் சுக­போ­கத்­துக்கும் மக்­களின் முன்னால் தாங்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், அமைச்­சர்கள் என்­பதைக் காட்­டிக்­கொள்­வதே இவர்­களின் சிறப்­பம்­ச­மாக இருக்­கி­றது.
 
“ஐயா பெரி­ய­வர்­களே உங்­க­ளுக்கு மன­சாட்­சியே கிடை­யாதா? எங்­களை ஏன் இப்­படி ஏமாற்­று­கி­றீர்கள்? இன்னும் எத்­தனை காலத்­திற்­குத்தான் எங்­களை ஏமாற்றி எங்­க­ளது முதுகில் ஏறி சவாரி செய்­வ­தற்கு முயற்­சித்துக் கொண்­டி­ருக்­கி­றீர்கள்?. ஏ.சி.காம்­பி­ராக்­க­ளிலும் ஏசி வாக­னங்­க­ளிலும் காலத்தைக் கழித்து வரும் நீங்கள் ஏழு­மாத கால­மாக எமக்­கான ஆக்­க­பூர்வ செயற்­பா­டு­களை மேற்­கொள்­ளா­தி­ருக்­கி­றீர்­களே! ஆறு முறை­களும் சம்­பளப் பேச்­சு­வார்த்தை தோல்­வி­கண்­டுள்ள நிலை­யிலும் அர­சாங்­கத்­துக்கும் எமது வேதனை புரி­ய­வில்­லையே! உங்­க­ளுக்­கெல்லாம் மன­ச்சாட்சி என்று ஒன்று இருக்­கி­றதா” என்ற நிலை­யில்தான் இன்று மலை­ய­கத்தில் பெருந்­தோட்டத் தொழிலில் ஈடு­பட்டு வரும் தொழி­லா­ளர்கள் அங்­க­லாய்த்துக் கொண்­டி­ருக்­கின்­றனர்.
பெருந்­தோட்­டங்­களை நிர்­வ­கித்து வரும் கம்­ப­னிக்­கா­ரர்­களும் மலை­யக அர­சியல் வாதி­களும் இணைந்து தொழி­லா­ளர்­க­ளுக்­கான ஊதி­யத்தை மறுத்து வரு­கின்ற ஏமாற்றுத் தன்­மையை, அர­சாங்­கமும் வாய்­மூடி மெள­ன­மாக பார்த்துக் கொண்­டி­ருப்­பது கவ­லைக்­கு­ரிய விட­ய­மா­கவே பார்க்­கப்­பட வேண்டும்.
 
மலை­ய­கத்தில் தேயிலை உற்­பத்தி என்­பது இன்று நாட்டின் தேசிய வரு­மா­னத்தின் மூன்­றா­வது பங்­கா­ளித்­து­வத்தைக் கொண்­டி­ருக்­கின்­றது. ஆடைத் தொழில், வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு ஆகி­ய­வற்­றுக்கு அடுத்­த­தாக தேயிலை உற்­பத்­தியே காணப்­ப­டு­கி­றது.
 
குண்­டூசி கூட சீனாவில் இருந்து இறக்­கு­மதி செய்­கின்ற இலங்கைத் திரு­நாடு, தேயிலை என்ற பொருளை இறக்­கு­மதி செய்­கின்­றதா? என்­பதை சிந்­தித்துப் பார்க்க வேண்டும். மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் குள­வி­க­ளிடம் கொட்­டுக்கள் வாங்­கியும் இன்னும் இன்­னோ­ரன்ன துன்ப துய­ரங்­களை சுமந்­த­வர்­க­ளா­கவும் இருக்­கின்ற தேயிலை உற்­பத்­தி­யா­ளர்­களால் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்ற தேயி­லையை ஏற்­று­மதி செய்­வ­தற்கும் ருசித்து ரசித்து தேநீர் அருந்­து­வ­தற்கும், ஒரு சமூகம் நிதமும் தன்னை வருத்திக் கொண்­டி­ருக்­கி­றது என்­பதை ஏன் சிந்­திக்­கத் ­தவறு­கின்­ற­னர் என்பது தெரி­யா­துள்­ளது.
 
எதிர்­பார்ப்­புகள் எது­வு­மே­யின்றி உழைப்­புக்கு ஏற்ற ஊதி­யத்தை மாத்­தி­ரமே உரி­மை­யாக்கிக் கொள்ள நினைக்கும் மேற்­படி தொழி­லா­ளர்கள் மட்டில் மன­சாட்சி இல்­லா­த­வர்­களைப் போன்ற செயற்­பா­டு­களே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.
 
தேயிலை உற்­பத்­தி­யா­ளர்கள் அல்­லது பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்கள் என்ற வர்க்­கத்­தி­னரைப் பொறுத்த வரையில் அவர்­க­ளுக்­கான சம்­பளம் நலன் புரி­வி­ட­யங்கள் என்­பன இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு தடவை நிர்­ண­யிப்­ப­தா­கவே சுமார் 23 வரு­டங்­க­ளாக நீடித்து வரு­கின்­றது. உண்­மை­யா­கவே கூறப்­போனால் இதுவும் ஒரு வகை­யி­லான அடிமைச் சாசனம் போன்­ற­தா­கவே அமைந்து­ விட்­டது.
 
நாட்டின் பொரு­ளா­தார நிலையில் எத்­த­கைய ஏற்றத் தாழ்­வுகள் இடம்­பெற்­றாலும் கூட தேயிலை உற்­பத்தித் தொழிலில் ஈடு­படும் தொழி­லா­ளர்­க­ளுக்­கான சம்­ப­ள­மா­னது இரண்டு வரு­டங்­க­ளுக்கு மாறா­நி­லை­யி­லேயே காத்­தி­ருக்கும் நிலை உண்டு.
 
அரச ஊழி­யர்கள் மட்டில் பொது­மக்­க­ளுக்கு இன்­றைய நிலை வரை­யிலும் திருப்­தி­யான நிலைப்­பாடு காணப்­ப­ட­வில்லை. அதிலும் பெருந்­தோட்ட மக்­களைப் பொறுத்த வரையில் அரச நிறு­வ­னங்­களில் தமது கட­மை­களை செய்து கொள்­வ­தற்கு நாயா­கவும் பேயா­கவும் அலை­ய­வேண்­டிய நிலையை உரு­வாக்கித் தரு­ப­வர்கள் தான் இந்த அரச ஊழி­யர்கள் எனும் அந்­தஸ்­துக்­கு­ரி­ய­வர்கள்.
 
நாளைக் கடத்தி ஊதியம் பெற்று வரும் இவர்­க­ளுக்கு வருடா வருடம் சம்­ப­ளத்­தையும் ஏனைய கொடுப்­ப­ன­வு­க­ளையும் அதி­க­ரித்துக் கொடுப்­ப­தற்கும் ஒவ்­வொரு தேர்­தல்­களின் போதும் சம்­பள அதி­க­ரிப்பு வாக்­கு­றுதி வழங்கி அதனை நிறை­வேற்­று­வ­தற்கும் முற்­ப­டு­கின்ற அர­சாங்கம் நாட்­டுக்கு வரு­மா­னத்தை ஈட்டிக் கொடுப்­ப­தற்கும் அவர்­க­ளுக்­கான நிலை­யான சம்­பளத் தொகை ஒன்றை நிர்­ண­யித்துக் கொடுப்­ப­தற்கும் தயக்கம் காட்­டு­வது ஏமாற்­றுத்­த­ன­மாகும்.
 
மேற்­கூ­றப்­பட்­ட­வாறு கூட்டு ஒப்­பந்தம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திக­தி­யுடன் காலா­வ­தி­யா­கி­யுள்­ளது. ஒக்­டோபர் மாதம் இன்­றைய திகதி வரை­யான காலப்­ப­கு­தி­யுடன் ஒப்­பி­டு­கையில் சுமார் ஏழு மாதங்கள் பூர்த்­தி­யா­கி­யுள்­ளன. ஏழு மாதங்கள் பூர்த்­தி­யான நிலை­யிலும் ஒரு தரப்­பி­ன­ரது சம்­பளக் கோரிக்­கையை அல்­லது அதன் உரி­மையை தட்டி கழித்து வரு­வது திட்­ட­மி­டப்­பட்ட செயற்­பா­டா­க­வுள்­ளது.
 
அல்­லா­விட்டால் தோட்டத் தொழி­லா­ளர்கள் கேட்பார், பார்ப்பார் எவ­ரு­மில்­லா­த­வர்கள் தானே என்ற நினைப்­பையும் உரு­வாக்கி விட்­டி­ருக்­கி­றது. ஏழு மாதங்­க­ளாக இவ்­வாறு ஒரு சமூகம் ஏமாற்­றப்­பட்டு அல்­லது யாரோ ஒரு தரப்­பி­னரின் தேவைக்­காக பழி­வாங்­கப்­பட்டு வரு­வது ஏற்­கத்­த­காத செயற்­பா­டுகள். மார்ச் மாதம் கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யா­னதன் பின்னர் அடுத்த பேச்­சு­வார்த்தை தொடர்பில் ஆலோ­சிக்­கப்­ப­டு­கையில் 1000 ரூபா சம்­பளம் பெற்றுக் கொடுக்கப் போவ­தாக இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் கூறி­யது. கோரிக்கை 1000 ஆக இருக்க அந்த தொகையில் திருத்­தங்­களை ஏனைய தொழிற்­சங்­கங்கள் மேற்­கொண்­டன.
 
பல சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களும் இடம்­பெற்­றன. கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழிற்­சங்­கங்­களின் பிர­தி­நி­தி­களும் கம்­ப­னி­களின் பிர­தா­னி­களும் இவ்­வாறு பல சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்ட போதிலும் அதில் எந்­த­வொரு முடி­வுக்கும் வர­வில்லை. அனைத்து பேச்­சுக்­களும் தோல்­வி­யி­லேயே முடிந்­துள்ள நிலையில் ஆறா­வது பேச்­சு­வார்த்­தையும் தோல்வி கண்­டுள்­ளது.
 
தேயிலை உற்­பத்­தி­யி­னூ­டான நாட்­டுக்­கான வரு­மான நிலை மூன்­றா­வது இடத்தில் இருக்­கின்ற போதிலும் பெருந்­தோட்ட உற்­பத்­தியில் தனியார் தேயிலை உற்­பத்­தியே அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வதில் பெருந்­தோட்­டத்­துறை தொடர்பில் அக்­கறை செலுத்­தப்­ப­டாத நிலை காணப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.
 
பெருந்­தோட்­டங்­களைப் பொறுப்­பேற்ற கம்­ப­னி­களைப் பொறுத்­த­வ­ரையில் அவை தேயிலைத் தோட்­டங்­களைப் பரா­ம­ரிப்­ப­திலோ உற்­பத்­தி­களை அதி­க­ரிப்­ப­தற்­கான வழி­மு­றை­களைக் கையாள்­வ­திலோ அக்­கறை செலுத்­து­வ­தில்லை. மாறாக செல­வே­யில்­லாது தேயி­லையை உற்­பத்தி செய்ய வேண்டும் என்று கம்­ப­னிகள் நினைத்துச் செயற்­பட்­ட­தா­லேயே பெருந்­தோட்­டத்­துறை தேயிலை உற்­பத்­தியில் வீழ்ச்­சி காணப்­பட்டு வரு­வ­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.
 
தேயிலை உற்­பத்தி அத­னூ­டான வரு­மானம் இலாபம் என அனைத்து விட­யங்­க­ளையும் கம்­ப­னிக்­கா­ரர்கள் மட்­டு­மல்­லாது அர­சியல் தலை­மை­களும் அறிந்தே வைத்­துள்­ளனர். ஆனாலும் பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­களை வைத்து அர­சியல் செய்து கொண்­டி­ருக்கும் ஜாம்­ப­வான்கள் மக்­களைப் பற்றி சிந்­திக்கத் தவ­று­கின்­றனர் என்­ப­தை­விட அவர்கள் மக்­களை ஏமாற்றிப் பிழைக்­கின்­றனர் என்­பதே உண்மை.
 
பொதுத் தேர்­தலின் பிர­சார காலங்­க­ளின்­போது மலை­ய­கத்தின் அனைத்து அர­சியல் தலை­மை­களும் தேயிலை உற்­பத்­தி­யா­ளர்­களின் சம்­பள அதி­க­ரிப்பு தொடர்பில் தமக்கே அதிக கரி­சனை இருப்­ப­தாகத் தெரி­வித்து பீத்திக் கொண்­டனர்.
 
தேர்தல் முடிந்து வெற்றி தோல்வி கண்­டதன் பின்னர் சம்­பள அதி­க­ரிப்பைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கான உயர்ந்த தொனி பனி­யாக கறைந்து போய்­விட்­டது. மலை­யகத் தலை­மைகள் மட்­டு­மல்­லாது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரும் அழ­கான கதை கூறினர். அவை காதுக்கு இனி­மை­யாகிப் போ­யி­ருந்­தன. எனினும் தேயிலைத் தொழி­லா­ளர்­க­ளு­ட­னான பெருந்­தோட்ட சமூகம் கிள்­ளுக்­கீரை என்றும் கறி­வேப்­பிலை என்றும் ஏமா­று­வ­தற்கே கட­வுளால் படைக்­கப்­பட்­ட­வர்கள் என்றும் அவர்­களும் சொல்­லாமல் சொல்லி விட்­டனர்.
தேர்தல் மேடை­களில் முழக்­க­மிட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் தேர்தல் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்­துள்ள நிலை­யி­லேனும் வாக்­கு­று­தி­ய­ளித்­த­படி எத­னையும் மேற்­கொள்­ளாது, தமது வெற்­றிக்குப் பங்­க­ளித்த மக்கள் தொடர்பில் மௌனி­க­ளாக இருந்து வரு­கின்­றனர்.
 
ஏழு மாத கால­மாக சம்­பளப் பிரச்­சினை ஒன்று தீர்­வில்­லாது இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­வது ஜனா­தி­ப­திக்கோ பிர­த­ம­ருக்கோ தெரி­யாத அறிந்­தி­ராத விட­ய­மாக இருக்­கப்­போ­வ­தில்லை. அப்­படி அவர்கள் அறி­யா­தி­ருப்­ப­தற்கு சிறு­பிள்­ளை­களும் அல்லர். எல்­லாமே அறிந்­தி­ருந்து இது வரையில் ஒரு வார்த்­தை­யேனும் கூறா­தி­ருப்­ப­தா­னது மலை­யக அர­சி­யல்­வா­தி­க­ளுடன் இணைந்து கொண்ட அவர்­களும் ஏமாற்­றுக்­கா­ரர்கள் என்­ப­தையே நிரூ­பிக்­கின்­றனர்.
 
இப்­படி எல்லா தரப்­பி­ன­ருமே ஏமாற்றிக் கொண்டும் கிள்ளுக் கீரை­யா­கவும் பயன்­ப­டுத்தி வரு­வ­தா­லேயே உங்­க­ளுக்­குக்­கெல்லாம் மன­ச்சாட்­சியே இல்­லையா என்று மக்கள் அங்­க­லாய்க்­கின்­றனர். மலை­யகத் தொழி­லாளர் வர்க்­கத்­தி­னரைப் பொறுத்­த­வ­ரையில் அவர்­களே இந்­நாட்டில் மிகக் குறை­வான வரு­வாயைக் கொண்­டி­ருப்­ப­வர்­க­ளா­கவும் மிகக் குறை­வான வரு­வாயில் தமது வாழ்­வா­தா­ரத்தைக் கொண்டு நடத்­து­ப­வர்­க­ளா­கவும் இருக்­கின்­றனர். இது ஜனா­தி­ப­திக்கும் புரியும் பிர­த­ம­ருக்கும் புரியும். மலை­யக அமைச்­சர்­க­ளுக்கும் புரியும். எம்.பி.க்களுக்கும் புரியும். ஆனாலும் வெறு­மனே பத்­தி­ரி­கை­களில் அறிக்­கை­களை விடுத்து சம்­பள அதி­க­ரிப்­புக்கு நட­வ­டிக்கை எடுப்போம் என்று கூறி­வ­ரு­வது மன­ச்சாட்­சியே இல்­லாத துரோ­கத்­த­ன­மான கூற்­றாகும்.
இங்கு ஒரு உண்­மையை உள்­ள­படி கூறு­வ­தனால் மலை­யக அர­சி­யல்­வா­திகள் அனை­வ­ருமே மலை­யக மக்­களை வைத்து அநா­க­ரிக அர­சியல் செய்து வரு­கின்­றனர். இவர்­க­ளிடம் மக்கள் தொடர்­பி­லான அக்­கறை கிடை­யாது.
 
பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வா­கி­விட வேண்டும். பதவி நிலை­களை அடைந்து விட­வேண்டும் என்­பது மட்­டுமே இவர்­க­ளது நோக்கம். வாய்­கி­ழிய வாக்­கு­று­திகள் கொடுக்கும் அர­சி­யல்­வா­திகள் அனை­வ­ருமே ஏமாற்­றுக்­கா­ரர்கள் என்­பதை இன்று மக்கள் புரிந்து கொண்­டுள்­ளனர்.
 
பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வா­கி­விட்ட அனை­வ­ருமே இன்னும் ஐந்து வரு­டங்­க­ளுக்கு அனைத்து சிறப்­பு­ரி­மை­க­ளையும் அனு­ப­வித்தே தீருவர். இதற்­கா­கவே கடந்த இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் பாடு­பட்­டனர்.
 
மலையக மக்களைப் பொறுத்த வரையில் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவார்களேயானால் அது மலையக அரசியலுக்கு ஆரோக்கியமானதாக இருக்காது என்பதை புரிந்து கொண்டு செயற்பட்டால் அது நலமாக அமையும்.
 
எனவே மலையகத் தலைமைகளை நம்பியிருக்கும் மக்களின் நம்பிக்கையை வீணடிக்கும் வகையிலான செயற்பாடுகள் கைவிடப்பட வேண்டும். தேயிலை உற்பத்தியாளர்களின் உரிமையான சம்பளத்தையும் அதன் அதிகரிப்பினையும் பெற்றுக் கொடுப்பதற்கு மலையகத் தலைமைகள் கட்சி பேதங்களை மறத்தல் வேண்டும் என்பது பிரதானமானதாகும்.
 
அதுமாத்திரமின்றி அனைத்து தரப்பினருமே உண்மையாகவே தமது மக்களின் மீது இரக்கம் கொண்டவர்களாக இருந்தால், மனச்சாட்சியே இல்லாத கம்பனிக்காரர்களிடம் இருந்து சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்தின் தலையீட்டை வலியுறுத்த வேண்டும்.
பெருந்தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கம்பனிகள் சாக்குப்போக்குக் கதைகளைக் கூறுமானால், அத்தகைய கம்பனிகளிடம் இருந்து பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்ற அழுத்தங்களை மலையகத் தலைமைகள் பிரயோகிப்பது சிறப்பாக அமையலாம்.
 
இல்லையேல் கம்பனிகளுக்கு நிவாரணங்களை வழங்கியேனும் தேயிலை உற்பத்தியாளர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கும் அவர்களது துன்பங்களையும் துயரங்களையும் போக்குவதற்கும் உதவிபுரிய வேண்டும்.மலையகத் தலைமைகளும் சரி மத்திய அரசின் பிரதானிகளான ஜனாதிபதியாகவிருந்தாலும் சரி பிரதமராக இருந்தாலும் சரி அதேபோன்று தொழிலாளர்களின் உதிரத்தை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்கும் கம்பனிக்காரர்களானாலும் சரி எல்லாதரப்பினருமே மனச்சாட்சியுடன் நடந்துகொள்ளுங்கள். அவர்களது சாபத்துக்கு ஆளாவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

 ஜே.ஜீ.ஸ்டீபன்

தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறுவதில் உண்மை இருக்கிறதா

கம்­ப­னி­களின் அடக்­கு­முறை கூட்டு ஒப்­பந்த விட­யத்­திலும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. தோட்­டங்கள் நட்­டத்தில் இயங்­கு­வ­தாக காரணம் காட்டி தொழி­லாளர் சம்­பள உயர்வு விட­யத்தில் கம்­ப­னிகள் இழுத்­த­டிப்பு நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு வரு­கின்­றன. தோட்டங்கள் நட்டத்தில் இயங்குகின்றன என்பதில் எந்­த­ள­வுக்கு உண்­மை­யுள்­ளது எனத்தெரியவில்லை என்று மலை­யக மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரி­வித்தார்.
இவ்­வி­டயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்
 
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்­கு­ரிய சம்­பள உயர்வு வழங்­கப்­பட வேண்­டு­மென்று பிர­தமர் தனது கரி­ச­னையை வெளிப்­ப­டுத்தி இருக்­கின்றார். இந்­நி­லையில் இவ்­வி­டயம் தொடர்பில் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியும் அர­சாங்­கத்­துக்கும் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துக்கும் அழுத்தம் கொடுத்து வரு­கின்­றது
 
கம்­ப­னி­களின் அடக்­கு­முறை கூட்டு ஒப்­பந்த விட­யத்­திலும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. தோட்­டங்கள் நட்­டத்தில் இயங்­கு­வ­தாக காரணம் காட்டி தொழி­லாளர் சம்­பள உயர்வு விட­யத்தில் கம்­ப­னிகள் இழுத்­த­டிப்பு நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு வரு­கின்­றன. இதில் எந்­த­ள­வுக்கு உண்­மை­யுள்­ளது என்­பது தொடர்பில் சிந்­திக்க வேண்­டிய நிலை காணப்­ப­டு­கின்­றது. தேயிலை என்­பது விவ­சா­யத்­துடன் தொடர்­பு­டைய ஒன்­றாகும். விவ­சா­யத்தில் விளைச்சல் என்­பது இயற்­கை­யா­னது. இலா­பமும் நட்­டமும் மாறி மாறி வரும். தொடர்ந்து இலாபம் கிடைக்கும் என்று எதிர்­பார்க்க முடி­யாது. விவ­சாயப் பொருட்­க­ளுக்கு விலைத்­த­ளம்­பல்கள் இருப்­பதும் இயற்­கை­யாகும். இதனை புரிந்தும் புரி­யா­த­வாறு செயற்­படும் கம்­ப­னி­யினர் நட்டம் ஏற்­பட்டு விட்­ட­தாக கூக்­குரல் இடு­கின்­றனர். கம்­ப­னி­யி­னரின் அடக்கு முறையே இதில் வெளிப்­ப­டு­வதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. கம்­ப­னி­யினர் சாட்­டு­களை கூறி சம்­பள உயர்வு விட­யத்தை மழுங்­க­டிக்கச் செய்­வது எவ்­வி­தத்­திலும் நியா­ய­மில்லை.
 
இதே­வேளை தமது அமைச்சு விட­யங்கள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கொன்று அண்­மையில் எமது மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலைவர் வி.இரா­தா­கி­ருஷ்ணன் பிர­த­மரை சந்­தித்­துள்ளார். இதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு நியா­ய­மான சம்­பள உயர்வு வழங்­கப்­பட வேண்டும் என்ற தனது கரி­ச­னையை வெளி­ப்ப­டுத்தி இருக்­கின்றார். தொழி­லா­ளர்­களின் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு பரி­கா­ர­மாக உட­ன­டி­யாக சம்­பள உயர்­வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.
 
கம்­ப­னி­யி­னரின் கெடு­பி­டி­களை விரைவில்முடி­வுக்கு கொண்டு வந்து தொழிலாளர்க ளுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க சகல தரப்பினரும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அத்துடன் புதிய கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் நிலுவைத் தொகையும் தொழிலாளர்களுக்கு உரிய வாறு வழங்கப்பட வேண்டும் என்றார்.

வெலிமடையில் 80 குடும்பங்கள் மண்சரிவு அபாயத்தில்..!

ஊவா மாகாணம் வெலிமடை பிரதேசத்திற்குட்பட்ட கிழச்சி தோட்டத்தில் 80 குடும்பங்களை சேர்ந்த மக்களை கடந்த 18 ஆம் திகதி மண்சரிவு அபாயம் காரணமாக பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்

 ஆனால் இவர்கள் தங்குவதற்கான இடத்தினை அதிகாரிகள் ஏற்படுத்தி கொடுக்கவில்லையென இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
இத்தோட்டத்தில் அமைந்துள்ள குடியிருப்புகள் அனைத்தும் மண்மேடுகள் மற்றும் கற்பாறைகள் சரிந்து விழ கூடிய இடங்களில் அமைக்கபட்டுள்ளதால் சரிவு ஏற்பட கூடிய அபாயம் அதிகமாகவே உள்ளது.

இதேவேளை சில வீடுகள் மண்மேட்டில் நிர்மாணிக்கபட்டுள்ளதால் எப்போது சரிந்து விழும் என்ற அச்சத்தில் இப்பகுதி மக்கள் உள்ளனர்.
 
மேலும் பாதிக்கப்பட்ட மக்களை தோட்டத்தில் உள்ள பொது கட்டிடத்தில் தங்குமாறு அறிவித்தபோதிலும் இக்கட்டிடத்தில் தங்குவதற்கான எவ்வித வசதிகளும் இல்லை.
 
இதனால் இத்தோட்ட மக்கள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இது தொடர்பாக இப்பிரதேச அரசியல் வாதிகளிடம் அறிவித்தபோதிலும் இதுவரை எவரும் இத்தோட்டத்திற்கு வரவில்லையென தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். 

அத்தோடு தங்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என இம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். எனவே எங்களை பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.