Wednesday, October 28, 2015

மலையக தமிழ் மக்கள் சிங்களவர்களாக மாற வேண்டும்!

மலையக தமிழ் மக்கள் தொடர்ந்தும் மலையகப் பகுதிகளில் வாழ வேண்டுமாயின் சிங்களவர்களாக மாற வேண்டுமென சிங்ஹலே மாஜன பெரமுன என்ற அமைப்பு கோரியுள்ளது.

இலங்கையில் இதுவரையில் இல்லாத ஒர் அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு என்ற பெயரில் அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் ஆட்சியாளர்களினால் விரட்டியடிக்கப்பட்ட மலையக சிங்கள மக்களின் கிராமங்கள் இந்த புதிய அமைச்சின் ஊடாக சிங்கள மக்களுக்கு இல்லாமல் போய்விடும். மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் அரச மற்றும் தனியார் தோட்டங்களுக்காக சிங்கள மக்களின் பாராம்பரிய காணிகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. அங்கு பாரம்பரியமாக கிராமங்களில் வாழ்ந்து வந்த சிங்கள மக்களை கூட்டாக கொலை செய்தும், விரட்டியடித்துமே, பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.

சிங்கள கிராமங்களில் பிரிட்டன் ஆட்சியாளர்கள் செய்த அழிவுகள் குறித்து 1817ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதி இங்கிலாந்து அரசாங்கத்திற்கு, அப்போதைய ஆளுனர் ரொபர்ட் பிரவுன்ரீக் அனுப்பி வைத்த இரகசிய ஆணவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் 1848ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி டொரிங்டன் ஆளுனரினால் இங்கிலாந்து அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்த இரகசிய ஆவணத்தில் சிங்களவர்கள் மற்றும் சிங்கள கிராமங்களுக்கு செய்த அழிவுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

மலையக புதிய கிராமங்கள் அமைச்சு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். சிங்களவர்களின் மலையகப் பாரம்பரிய கிராமங்கள் சிங்களவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். சிங்கள இனத்தை ஒடுக்க ஆங்கிலேயரினால் அழைத்து வரப்பட்ட தமிழர்கள் தொடர்ந்தும் அந்தப் பகுதிகளில் வாழ விரும்பினால், அவர்கள் சிங்களவர்களாக மாற வேண்டும் என சிங்ஹரே மாஜன பெரமுன அமைப்பு விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்த மாநாயக்கர்களிடம் இந்த கோரிக்கை எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் தலைவராக பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திலன்த விதானகே கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பில் பல பௌத்த பிக்குகளும் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர்.

No comments: