Thursday, May 21, 2009

தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை

கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள தோட்டப்புறங்களில் வாழும் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் இரகசியமாக இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத் தோட்டங்களை வசிப்பிடமாகக் கொண்டு வெளி இடங்களில் கடமையாற்றி வரும் தொழிலாளர்களையே வெளியேற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு தோட்ட நிர்வாகங்களும் உடந்தையாக உள்ளன. இதனால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். தோட்டங்களில் நிரந்தரமாக வசிப்பவர்களின் தொழிலாளர் குடும்பங்களில் இருந்து ஒருவராவது அத் தோட்டத்தில் கடமையாற்ற வேண்டுமென்று தோட்ட நிர்வாகங்கள் அண்மைக்காலமாக வலியுறுத்தி வந்தாலும் தற்போதைய வேலை குறைப்பு நடவடிக்கையால் தொழிலாளர்கள் வெளியிடங்களுக்கு சென்று வேலை செய்கின்றனர். இவ்வாறு வேலை செய்வது குறித்து தோட்ட நிர்வாகமும், தோட்ட கம்பனிகளும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் தோட்டத்தில் கிடைக்கும் ஊதியம் தங்களுக்கு போதாதென்றும் குடும்ப சீவியத்தை கொண்டு நடாத்த முடியாதென்று சுட்டிக்காட்டுகின்றனர். இதேவேளை அவிசாவளை பம்பேகம் தோட்டத்தைச் சேர்ந்த டிகோவப்பிரிவில் வெளியிடங்களில் வேலை செய்தவர்களின் குடியிருப்புக் கூரைகளை தோட்ட நிர்வாகம் பலவந்தமாக அகற்றிய சம்பவம் இடம் பெற்றுள்ளது. பின்னர் தொழிற்சங்க பிரதிநிதிகளும் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை யடுத்து பின்னர் அவை மறுபடி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான தோட்டப் பகுதிகள் பெரும்பான்மை சிங்கள மக்களை சூழ்ந்துள்ள பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: