Wednesday, June 29, 2016

கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கவும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக தோட்டக்கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அவர்களுக்கான சம்பளப்பிரச்சினைக்கு தீர்வினை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 

அவர் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களோடு இம்மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தை நடாத்தி தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பிரச்சினைக்கு தீர்வினை ஏற்படுத்தி தர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தைக்கான திகதி இதுவரை எமக்கு அறிவிக்கப்படவில்லை என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன். 

தொழிலாளர்களது சம்பள உயர்வு தொடர்பாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நேரடியாக தோட்டக் கம்பனிகளுடனும் தொழில் அமைச்சு ஊடாகவும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டபோதும் தோட்டக் கம்பனிகள் என்றுமில்லாதவாறு பிடிவாதமாக இருந்து வருகின்றனது என்பது தாங்கள் அறிந்ததே.

தொழிலாளகளுக்கான சம்பள உயர்வு வழங்கப்படாமையினால் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர் என்பதை நாம் உங்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை. இப்பிரச்சினை இழுத்தடிக்கப்பட்டு வருவதால் தொழிலாளர்கள் அதிருப்தியும், விரக்தியும் அடைந்த நிலையில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். 

இராமநாதன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் பிரதிகள் தொழில் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனிவிரத்ன, முதலாளிமார் சம்மேளனம் செயலாளர் நாயகம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

No comments: