Thursday, September 10, 2009

சம்பள உயர்வு - நுவரெலியா மாவட்டத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா கிளண்டில் தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஊர்வலமாக வந்து தேயிலைத் தொழிற்சாலை முன்றலில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் - சம்பள விடயத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும் போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

லிந்துலை பிரதேசத்தில் மெரேயா, ஊவாக்கலை, தங்ககெலை, கேம்பிரி, என்போல்ட், எல்ஜின், திஸ்பனை ஆகிய தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக வந்து லிந்துலை – டயகம பிரதான வீதி, திஸ்பனை சந்தியில் ஒன்று கூடி சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவை வெம்பா தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 500 தொழிலாளர்கள் எவ்வித தொழிற்சங்க பேதமுமின்றி மெதுவாக பணிசெய்யும் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

ஒத்துழையாமைப் போராட்டம் குறித்து தமக்குத் தொழிற்சங்கங்கள் உரிய விளக்கம் வழங்காத காரணத்தினால் தாமாகவே சிந்தித்து மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபட்டதாக வெம்பாத் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

No comments: