Sunday, May 5, 2013
இ.தொ.கா.வுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நுவரெலியா மாநகரசபையில் தோல்வி
தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுத்த தொழிற்சங்கமான இ.தொ.கா.விற்கு நன்றி தெரிவித்து நுவரெலியா மாநகரசபையின் மாதாந்த கூட்டத்தில் ஆளும் ஐக்கிய முன்னணி சார்பில் நுவரெலியா மாநகர சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் எம் சந்திரன் சமர்பித்த தீர்மானம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
இந்த தீர்மானத்தை எதிர்த்து மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஆர்.ராஜராம், எதிர்கட்சியான ஐ.தே.க.வை சேர்ந்த உறுப்பினர்களான எல்.நேருஜி, கே. சந்திரசேகரன். சந்தன லால் கருணாரட்ன, ஐக்கிய இலங்கை ஜனநாயக முன்னணி உறுப்பினர் ஆர்.கேதீஸ் ஆகியோர் வாக்களித்தனர். அத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பு போதாதென்று தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றியதோடு இத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென வாக்கெடுப்பிற்கு விட வேண்டும் என எதிர்க்கட்சியினர் கேட்டுக்கொண்டனர்.
கூட்டத்தை தலைமை தாங்கிய மாநகர முதல்வர் டி.ஜி.மஹிந்தகுமார இத் தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு விட்டார். தீர்மானத்திற்கு எதிராக 5 வாக்குகளும், ஆதரவாக 1 வாக்கும், 4 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் நடுநிலை வகித்தனர்.
இந்த வாக்கெடுப்பின் போது மாநகர முதல்வர் டி.ஜி.மஹிந்தகுமார, பிரதி முதல்வர் திஸ்ஸ செனவிரட்ன, மாநகரசபை உறுப்பினர் குமாரதேசபிரிய தீர்மானத்தை வழிமொழிந்த உறுப்பினர் எம்.பஸில் ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Thursday, May 2, 2013
உழைக்கும் வர்க்கத்துக்கு ஏமாற்றம் கொடுத்த கூட்டு ஒப்பந்தம்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் வெறும் 70 ரூபாவால் மாத்திரம் அதிகரிக்கப்பட்டு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை மலையக மக்களின் வாழ்க்கைச் சுமையை தாங்கும் சக்தி குறித்து ஆழமாக சிந்திக்க வைத்துள்ளது.
நாளுக்கு நாள் வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்லும் தற்போதைய நடைமுறையில் இரு வருடங்களுக்கு இந்தச் சிறுதொகையை வழங்குவதற்கு ஒப்பந்தமாகியுள்ளது.
நாளாந்த தேயிலை விலைபங்கீட்டுக் கொடுப்பனவு 30 ரூபாவாகவும் வரவுக் கொடுப்பனவு 140 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மொத்தமாக 620 ரூபா சம்பளம் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெறுவதாக கூறப்படுகின்ற போதிலும் சில நியமங்களின் அடிப்படையிலேயே அவை வழங்கப்படுகின்றன.
மலையக மக்களின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பம் முதலே போராட்டமாகத்தான் இருந்துவருகிறது. மலைகளில் கொழுந்துக்கூடையும் மண்வெட்டியும் சுமக்கும் இவர்கள் மனதில் அதற்கும் மேலான சுமைகளைத் தாங்கியவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களின் வாழ்க்கை ஜீவனத்தையும் நாளாந்த நடைமுறையினையும் ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையிலன்றி அவர்களுக்குள் ஒருவராக இருந்து பார்த்தால் பிரதிபலன் நிச்சயம் கண்ணீராகத்தான் இருக்க முடியும்.
ஏனென்றால் அந்தளவுக்கு வலிகள் நிறைந்த வாழ்க்கை அவர்களுடையது.
"தங்க இடமும் தங்கக் காசும் இலவசமாம், தேயிலைக்கடியில் மாசியும் தேங்காயும் கிடைக்குமாம்.." என நம்பிவந்து ஏமாற்றப்பட்டவர்கள் என நாட்டார் பாடல்களில் கேலிக்கையாகக் கூறுவதுண்டு.
அப்படியென்றால் இவர்களின் ஆரம்பமே ஏமாற்றம் என்பது தெளிவாகிறது. இதன் தொடக்கமோ தெரியவில்லை அவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக யாரோ ஒருவரால் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
வறுமை என்னும் தீயின் அணல் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்க அரசியல் இலாபம் தேடும் சில தொழிற்சங்கங்களும் அரசியல்தலைவர்களும் மாற்றுப்புறத்தில் குளிர்காய்ந்துகொண்டிருக்கிறார்கள்.
எந்தவொரு தொழிற்சங்கமாயினும் சரி அரசியல் கட்சியாயினும் சரி மக்களின் நன்மைகருதி ஆரம்பிக்கப்பட்டதென்றால், அது இறுதிவரை நிறைவேற்றப்பட வேண்டும். தாமே ஒட்டுமொத்த மலையக மக்களின் பிரதிநிதிகள், சேவைக்கு முன்னுதாரணமானவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் தமது வாழ்நாள் காலத்தில் பேச்சில்போன்று செயலிலும் தீரத்தை காட்டுவார்களாயின் வரலாற்றில் அவர்களுடைய பெயர் நிச்சயமாக எழுதப்படும்.
ஆனால் அதற்கு மாறான சம்பவங்களே இங்கு நடைபெற்று வருகின்றன.
அப்பாவி தமிழர்களின் வாழ்க்கையை திறந்த மேடையாக்கிக்கொள்ள முனையும் பலர் அதில் நாடகமாடி வெளித்தோற்றத்தில் சிறந்தவர்கள் என காட்ட முற்படுகிறார்கள்.
மலையகத்தில் இயங்கும் தொழிற்சங்கங்களுக்கு அவற்றுக்கென்று தனிக்கொள்கை, தனிச்செயற்பாடு, தனிநோக்கங்கள் உண்டு. அந்த நோக்கங்களை அவை எந்தளவுக்கு அடைந்துள்ளன என்பதை சுயமதிப்பீடு செய்தல் அவசியமாகும்.
குறிப்பாக மலையக தொழிலாளர்களின் சம்பள விவகாரத்துக்கு பிற்போக்குடைய கொள்கைகள் பின்பற்றப்பட்டமைக்கான காரணத்தை பொறுப்புக்கூறவேண்டிய அனைத்து தொழிற்சங்கங்களும் பதிலளிக்க முன்வரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
பாதைசெப்பனிடுவதும்,கூரைத் தகடுகள் கொடுப்பதும் மட்டுமே மலையக அபிவிருத்தியும் மக்களுக்கான சேவையும் என்ற பிரதான எண்ணத்தினை அரசியல்தலைவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை தீர்த்துவைப்பதன் மூலம் மலையகத்தில் பலகாலமாக இருந்துவரும் நிரந்தரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.
மலையகத்தில் கல்வியில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. சிறுபராயத்தில் குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு கிடைக்காததனால் அவர்களின் கல்வி வளர்ச்சியும் குன்றுகிறது. தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படுமானால் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாமல்லவா?
அதேபோன்று 'சிறுவர் தொழிலாளர்கள்" என்ற கொடுமை மலையகமெங்கும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு பெற்றோர் விழிப்புணர்ச்சி கொள்ளாதது முக்கியமான காரணம் எனினும் வறுமையே தூண்டுகோலாக அமைகிறது. இங்கு சம்பள அதிகரிப்பின் தேவை உள்ளதை நம் தலைவர்கள் உணர்வார்களா?
மலையக தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கைச்சாத்திடப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
எனினும் ஐந்து வருடங்கள் கடந்த பின்னரும் அடிப்படைச் சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்படவில்லை.
தொழிலாளர்களின் சம்பளத்தை 105 ரூபாவாக அதிகரித்துள்ளோம் என கூட்டு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் மார்தட்டிக்கொள்கின்ற போதிலும் அதில் 75 வீத வரவுக் கொடுப்பனவு குறித்த உடன்படிக்கை குறித்து கரிசனை கொள்ளவில்லை என்றே கூறமுடியும்.
அத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்திடம் தாம் முன்வைக்கும் சம்பளக் கோரிக்கை எதுவென்பதை இறுதி வரை மக்களுக்கு தெளிவுபடுத்தாததையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
தொழிலாளர்களின் வரவுக் கொடுப்பனவை விட அடிப்படைச் சம்பளத் தொகையை அதிகரிக்கும் நோக்கம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் இறுதி வரை கருத்து தெரிவிக்கவில்லை.
கூட்டு ஒப்பந்த விதிமுறைகளுக்கு அப்பால் பல்வேறு தோட்டங்களில் அளவுக்கு அதிகமான வேலை நேரம் நிர்வாகத்தினரால் வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஆயினும் இது குறித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.
அதேபோன்று வெளிப்படைத் தன்மையில்லாமல் பேச்சுவார்த்தைகள் தொடர்பான விடயங்கள் இரகசியமாகப் பேணப்பட்டதையும் இங்கு மறுக்க முடியாது.
நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியிலும் அந்நிய செலாவணி இலாபமீட்டலிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்குவதன் மூலமே அவர்களின் எதிர்கால இருப்பினை தக்க வைத்துக்கொள்ள முடியும்.
வேதனையோடு தொடரும் மக்களின் வாழ்க்கையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்தலைவர்கள் வரலாற்றுக்கு கட்டாயம் பதில்சொல்லியாக வேண்டும். அல்லது கறைபடிந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு கறுப்புப் புள்ளியாக அவர்களின் பெயர் என்றும் அவமானத்தை குறித்துக்காட்டிக்கொண்டிருக்கும்.
அரசியல், தொழிற்சங்க பேதங்கள் தேவையில்லை, யார் பெரியவர் என்ற நிலையும் அவசியமில்லை, மக்களுக்காக ஒன்றிணைந்தால் நிச்சயமாக சாதிக்க முடியும். அது எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வாக அமைவதுடன் ஆரோக்கியமான, காத்திரமான எதிர்காலத்துக்கு நல்ல அடித்தளமாகவும் அமையும்.
மக்களால் மக்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட தலைவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும். வலிமை மிக்க மனித உணர்வுகளை சுயலாபத்துக்காக கிள்ளிக் கொலைசெய்யாது அரசியலின் உண்மையான சேவையை வழங்க முன்வருதலே காலத்தின் தேவையாகும்.
-இராமானுஜம் நிர்ஷன்
Monday, January 21, 2013
நுவரெலியாவில் தமிழரின் சனத்தொகை 11 வீதத்தால் உயர்வு: சிங்களவரின் சனத்தொகையில் வீழ்ச்சி
நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மக்களின் சனத்தொகை 11 வீதத்தால் உயர்வடைந்துள்ளதோடு சிங்கள இனத்தவரின் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இலங்கை குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தினால், 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின் மூலம் மேற்படி தகவல் தெரியவந்துள்ளது.
2007ம் ஆண்டில் சிங்கள் மக்களின் சனத்தொகை 46.2 வீதமாகவும், தமிழ் மக்களின் சனத்தொகை 46.6 ஆகக் காணப்பட்டது.
ஆனால் தற்போது சிங்கள் மக்களின் சனத்தொகை 39.59 வீதமாக காணப்படுவதாகவும், தமிழ் மக்களின் சனத்தொகை 57.69 காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சிங்கள மக்கள் சனத்தொகையில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும்,
காணிப் பிரச்சினை, தொழில் பிரச்சினை, அரசியல் கலாசார ரீதியில் உதாசீனமான நிலைமை போன்ற காரணிகளினாலே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி- வீரகேசரி இணையம்
தேயிலை ஏற்றுமதி நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பு
ITPF என்ற பெயரில் சர்வதேச தேயிலை உற்பத்தி நாடுகளின் அமைப்பொன்று இன்று திங்கட்கிழமை இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளது. கறுப்புத் தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் இலங்கை, இந்தியா, கென்யா ஆகிய முன்னணி நாடுகளும் இந்தோனேஷியா, மலாவி மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளும் இந்த சர்வதேச அமைப்பில் பங்கெடுத்துள்ளன.
சீனாவும் இரானும் அதன் தூதுவர்களை இன்றைய தொடக்கவிழாவுக்கு அனுப்பிவைத்திருந்ததாக இந்த சர்வதேச சங்கத்தை உருவாக்குவதில் முன்னின்ற இலங்கைத் தேயிலைச் சபையின் வர்த்தக ஊக்குவிப்புத்துறை இயக்குநர் ஹசித்த டி அல்விஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
1933 முதல் இப்படியான அமைப்பொன்றை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் 1979 இல் இறுதியாக உருவாக்கப்பட்ட ஐடிபிஏ என்ற அமைப்பு 5 ஆண்டுகளில் தோல்வியடைந்ததாகவும் அவர் கூறினார்.
பின்னர் 2006-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட முயற்சியே 2013-ம் ஆண்டில் செயல்வடிவம் அடைந்திருப்பதாகவும் ஹசித்த டி அல்விஸ் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் தேயிலையின் விலையை நிர்ணயிப்பது, தேயிலை நுகர்வு நாடுகளுடன் தரக்கட்டுப்பாடுகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பது மற்றும் உற்பத்திச் செலவைக் குறைப்பது போன்ற நோக்கங்களுக்காகவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
தேயிலைத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம்
இதேவேளை, இலங்கையில் தேயிலைத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை மிகமோசமாக இருப்பதாக எழுப்பப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் பற்றி வினவியபோது, அந்தக் குற்றச்சாட்டை ஏற்கமுடியாது என்று இலங்கைத் தேயிலைச் சபையின் வர்த்தக ஊக்குவிப்புத்துறை இயக்குநர் ஹசித்த டி அல்விஸ் கூறினார்.
தேயிலைத் தொழிலாளர்களின் அடிப்படை மருத்துவ, சுகாதார, போக்குவரத்து, வீட்டு வசதிகள் மற்றும் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட வசதிகள் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது முன்னேறிய நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் இலங்கை தேயிலை சபையின் கருத்துக்கள் தவறானது என்று மூத்த தொழிற்சங்கத் தலைவரும் செங்கொடிச் சங்கத்தின் பொதுச்செயலாளருமான ஓ.ஏ.ராமையா பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார். நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து பணவீக்கமும் அதிகரித்துவருகின்ற சூழ்நிலையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பளத்தொகை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானது என்று அவர் விபரித்தார்.
இந்தியாவைப் போல தோட்டத் தொழிலாளர்களுக்கு மானியவிலையில் அடிப்படை உணவுப் பொருட்கள் இலங்கையில் வழங்கப்படுவது இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல இலங்கையில் இன்று உருவாகியுள்ள தேயிலை ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் மூலம் சாதாரண தொழிலாளர்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
சர்வதேச வர்த்தகர்களுக்கும், உள்நாட்டு இடைத்தரகர்களுக்கும் விற்பனையாளர்களுக்குமே அதன்மூலம் வருமானம் ஈட்டமுடியும் என்றும் அவர்களும் கூடுதல் வருமானம் ஈட்டும்போது அரசாங்கத்துக்கு செலுத்தும் வரியும் அதிகரிக்கும் என்றும் அதனால் தொழிலாளர்களின் நலன்களுக்கு ஏதும் நன்மை ஏற்படாது என்றும் ஓ.ஏ.ராமையா சுட்டிக்காட்டினார்.
நன்றி- பி.பி.சி தமிழ்
Thursday, January 17, 2013
தேயிலை ஏல விற்பனையில் அதியுயர் பெறுமதி பதிவு
கொழும்பில் நடைபெறும் தேயிலை ஏல விற்பனையின் போது, கரோலினா எஸ்டேட்டை சேர்ந்த Pகு1 தரத்திலான தேயிலைக்கு வரலாற்றில் அதியுயர் விற்பனை பெறுமதி பெறப்பட்டுள்ளது. வட்டவளை பெருந்தோட்ட கம்பனியின் மூலம் பராமரிக்கப்படும் கரோலினா எஸ்டேட்டை சேர்ந்த தேயிலை, கடந்த வாரங்களில் இடம்பெற்ற ஏல விற்பனைகளின் போதும் தொடர்ச்சியாக உயர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தது.
முன்னர் சாதனை பெறுமதியாக பதிவாகியிருந்த 500ரூபா எனும் பெறுமதியை கடந்து, 510ரூபா எனும் பெறுமதிக்கு ஒருகிலோ தேயிலை விற்பனையாகியிருந்ததாக கம்பனி அறிவித்துள்ளது. இந்த கொள்வனவை ரீஜின்சி டீஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளதுடன், இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் தேயிலை ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி- தமிழ் மிரர்
பெருந்தோட்ட துறையின் வர்த்தக கட்டமைப்பில் மாற்றம் அவசியம்: சுஜீவ கொடகே
பெருந்தோட்ட கம்பனிகளின் மூலம் நிர்வகிக்கப்படும் இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் துறைகளில் ஒன்றான தேயிலை உற்பத்தி துறையில் பின்தொடரப்படும் வர்த்தக கட்டமைப்பில் (டீரளiநௌள ஆழனநட) மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளதாக பல முன்னணி வர்த்தக ஆலோசகர்கள் தமது கருத்துக்களை முன்வைத்த வண்ணமுள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதத்துடன் தற்போது அமுலிலுள்ள பெருந்தோட்ட கம்பனி நிர்வாகங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகவுள்ள நிலையில், தற்போது பெருந்தோட்ட கம்பனிகள் எதிர்கொண்டுள்ள சவால்கள் நிறைந்த சூழ்நிலையில் மற்றுமொரு சம்பள அதிகரிப்பு என்பதை தம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஓர் இக்கட்டான சூழ்நிலையில் தாம் காணப்படுவதாக பெருந்தோட்ட கம்பனி நிர்வாகங்கள் அறிவித்தவண்ணமுள்ளன.
இந்நிலையில் இந்த பெருந்தோட்டத்துறையின் நீண்டகால செயற்பாட்டுக்காகவும், பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் இந்த துறையில் தமது ஜீவனோபாயத்தை கொண்டு நடத்தும் மக்களின் நலனுக்காகவும் தற்போது அமுலிலுள்ள பெருந்தோட்ட வர்;த்தக முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய ஓர்; அவசியம் எழுந்துள்ளது.
எந்த தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், ஊழியர்களுக்கு அதிகளவு வருமானத்தை உறுதி செய்யும் அதேவேளை, கம்பனிகளின் வருமானத்தை உயர்த்தி அவற்றின் உறுதியான செயற்பாட்டை கொண்டு நடத்தும் வகையில் அமைந்த ஒரு வர்த்தக கட்டமைப்பின் தேவை எழுந்துள்ளது. இது போன்றதொரு புதிய கட்டமைப்பு கஹவத்தை பிளான்டேஷன் கம்பனியை சேர்ந்த எந்தான பெருந்தோட்ட பகுதியில் பின்பற்றப்படுகிறது.
இந்த பெருந்தோட்டத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், அப்பகுதிக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்கான வாய்ப்பு எமக்கு கடந்த வாரம் கிட்டியது. இந்த விஜயத்தின் போது, எந்தான பெருந்தோட்ட பகுதியில் கைக்கொள்ளப்படும் புதுவகையான வர்த்தக கட்டமைப்பு குறித்து அறிந்துகொள்ள முடிந்தது.
எந்தான பெருந்தோட்டம் குறித்து தோட்ட அதிகாரி சுஜீவ கொடகே எமக்கு கருத்து தெரிவிக்கையில், 'எந்தான என்பது கீழ்மட்ட தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் ஒரு பெருந்தோட்டமாகும். எமது பெருந்தோட்டம் சுமார் 400 ஹெக்டயர் பரப்பில் தேயிலை பயிர்ச்செய்கையை கொண்டுள்ளது. எமது பெருந்தோட்டத்தில் காணப்படும் பெரும் சவாலாக ஊழியர்கள் பற்றாக்குறை அமைந்துள்ளது. எமது மொத்த தேயிலை பரப்பில் பணியாற்ற சுமார் 1000 தொழிலாளர்கள் வரை தேவை. ஆயினும் எமது தோட்டத்தில் மொத்தமாக 500 தொழிலாளர்கள் வரையிலேயே காணப்படுகின்றனர். இதன் காரணமாக நாம் எமது தேயிலை பயிரிடக்கூடிய பெருமளவான நிலங்களை கைவிட வேண்டிய ஒரு நிலையை எதிர்நோக்கியிருந்தோம்.
'இந்த நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு எமக்கு ஒரு புதிய சிந்தனை உதித்தது. தோட்டத்தில் தொழிலாளர்கள் பணியாற்றும் நேரம்போக, எஞ்சிய காலப்பகுதியில் அவர்களை கொண்டு, கைவிடப்படவேண்டிய அபாய நிலையை எதிர்நோக்கியிருந்த காணிகளை சுத்தம் செய்து, அவற்றில் தேயிலை செய்கையை மேற்கொள்ள தீர்மானித்தோம். இதற்கு ஊழியர்களும் தமது ஒத்துழைப்பை வழங்க முன்வந்திருந்தனர். எனவே இந்த நடவடிக்கை 2000ஆம் ஆண்டு முதல் மிகவும் சிறிய அளவில் ஆரம்பமானது. காலப்போக்கில் 2002ஆம் ஆண்டளவில் இந்த திட்டத்துக்கு முறையாக பெர்; வழங்கி, ஊழியர்களுக்கும் அனுகூலம் கிடைக்கக்கூடிய விதத்தில் ஒரு சட்ட ரீதியான உடன்படிக்கையை மேற்கொள்ள தீர்மானித்தோம்'.
'நான்கு பக்கங்களில் நிபந்தனைகள் உள்ளடங்கிய உடன்படிக்கை தயார்ப்படுத்தப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட ஊழிர்;களுடன் சுமார் 6 மாத காலப்பகுதிக்கு அமுலில் இருக்கும் வகையில் (புதுப்பிக்கக்கூடியது) உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது”.
'இந்த திட்டத்துக்கு நாம் 'ஒப்பந்த அடிப்படையிலான கொழுந்து பறித்தல்” என பெயரையும் வழங்கினோம். இந்த திட்டத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் ஊழியர் ஒருவருக்கு சுமார் 1000 செடிகளை கொண்ட தேயிலை காணியை பராமரித்து, கொழுந்து பறிப்பதற்கான அனுமதி வழங்கப்படும். இது 6 மாத காலப்பகுதிக்கு செல்லுபடியாகும். திங்கள் முதல் வெள்ளி வரையிலான நாட்களில் தோட்டத்தில் நியம சம்பள முறைக்கமைய தொழில்புரியும் இந்த ஊழியர்கள், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் தமக்காக ஒதுக்கப்பட்ட காணிகளில் தேயிலை பயிர்ச்செய்கையை மேற்கொண்டு தேயிலை கொழுந்து பறித்து, சந்தை விலையில் எந்தான பெருந்தோட்ட கம்பனிக்கு விற்பனை செய்வர். கம்பனியும் சந்தை விலையில் தேயிலை கொழுந்தை ஊழியர்களிடமிருந்து கொள்வனவு செய்கிறது. ஆயினும் இந்த முழுப்பெறுமதியையும் ஊழியர்களுக்கு செலுத்தாமல், சுமார் 64 வீதமான பெறுமதியை மட்டுமே செலுத்துகிறது. இதர 36 வீத பெறுமதிக்கு கிருமிநாசினிகள், ஆலோசனைகளை வழங்குதல் போன்றவற்றுக்கான செலவீனமாக கம்பனி பெற்றுக்கொள்கிறது. இது குறித்த சகல விடயங்களும் எளிய தமிழ் மொழியில் நிபந்தனை குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன'.
'இவ்வாறு தமக்கென ஒதுக்கப்பட்ட காணியில் பணியாற்றி மாதமொன்றுக்கு சுமார் 900 ௲ 1000 கிலோ தேயிலை கொழுந்து வரையில் ஊழியர்கள் பறிக்கின்றனர். இதன் காரணமாக மாதமொன்றுக்கு தமது சாதாரண சம்பளத்தை விட மேலதிகமாக 8000 ௲ 12000 ரூபா வரை மேலதிக சம்பளமாக பெற்றுக்கொள்கின்றனர்'.
'ஊழியர்களுக்கென ஒப்படைக்கப்பட்ட காணிகளில் வேறு நபர்களையும் வேலைக்கமர்த்தும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அச்சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான ஊதியத்தையும் குறிப்பிட்ட ஊழியரே செலுத்த வேண்டியிருக்கும். தமது ஜீவனோபாயத்தை கொண்டு நடத்த இது ஒரு சிறந்த முறையாக அவர்கள் தெரிந்துள்ளனர். எமது மொத்த தேயிலை காணியின் 58 வீதமான பகுதி அதாவது, சுமார் 238 ஹெக்டெயர் இந்த திட்டத்துக்கு அமைய தோட்ட ஊழியர்கள் மத்தியில் பகிர்ந்தளித்துள்ளோம். இதில் சிறந்த அறுவடையை வழங்கும் காணி, சாதாரண அறுவடையை வழங்கும் காணி, குறைந்த அறுவடையை வழங்கும் காணி என அனைத்து விதமான காணிகளும் உள்ளடங்குகின்றன. சுழற்சி முறையில் இவை பகிரப்படுவதால் எந்தவொரு ஊழியரும் பாதகமான சூழ்நிலையை எதிர்நோக்குவதில்லை. அவர்களுக்கு தெரியும், இது அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதி, தாம் அதிகம் பணியாற்றினால், அதிகளவு ஊதியத்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதில் தெளிவாக உள்ளனர்'.
'இந்த நிலை காரணமாக எமது தோட்டத்தின் உற்பத்தி செலவு 22 வீதத்தால் குறைந்துள்ளது. அத்துடன் உற்பத்தி திறனும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தோட்டமும் கடந்த ஆண்டு சிறந்த நிதி பெறுபேறுகளை வெளிக்காட்டியிருந்தது. இந்த துறையின் தொடர்ந்த செயற்பாட்டுக்கு இது போன்றதொரு கட்டமைப்பின் தேவை நிலவுகிறது' என குறிப்பிட்டார்.
இவ்வாறு தோட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் தமது காணிகளை பணியாற்றும் இரு ஊழியர்களான எம்.பொன்னுசாமி மற்றும் எஸ்.விஜயகுமார் ஆகியோருடன் கருத்துக்களை கேட்ட போது, 'இந்த திட்டத்தின் மூலம் நாம் மாதாந்தம் மேலதிக ஒரு வருமானத்தை திரட்டிக்கொள்ள முடிகிறது. எமக்கு விடுமுறை கிடைக்கும் காலப்பகுதியில் பணியாற்ற மேலதிக வருமானத்தை தேடிக்கொள்ள நாம் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. தோட்டத்திலே வேலை செய்யும் வசதியுள்ளதால், எமக்கு போக்குவரத்து செலவும் இல்லை. இந்த திட்டத்தை நாம் வரவேற்கிறோம்' என்றனர்.
ஆயினும் இதுபோன்றதொரு திட்டம் எதிர்வரும் மார்ச் மாதத்தின் கூட்டு உடன்படிக்கையின் பின்னர், முற்று முழுதாக அமுல்படுத்தப்படுமாயின் அதை எவ்வாறு நீங்கள் பார்க்கிறீர்கள் என இருவரிடமும் கேட்டபோது, 'அது குறித்த தீர்மானத்தை எமது தொழிற்சங்கங்களே மேற்கொள்ள வேண்டும். இந்த திட்டத்தில் எமக்கு அதிகளவு வருமானம் பெற்றுக்கொள்ள முடிந்தாலும், ஊழியர் சேமலாப நிதி கொடுப்பனவு, மரணச்சடங்கு கொடுப்பனவு, மகப்பேற்று கொடுப்பனவு போன்ற இதர கொடுப்பனவுகள் எமக்கு கிடைக்குமா என்பது குறித்த ஒரு நிலை காணப்படுகிறது' என்றனர்.
இதே கேள்வியை நாம் தோட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, 'இந்த நிலை வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், முழு தேயிலை பரப்பையும் இவ்வாறு பகிர்ந்தளிப்பதன் மூலம் ஒரு சில சிக்கல்கள் காணப்படுகின்றன. கொழுந்துகள் கொள்ளையிடப்படல், காணிகளின் தரம் பேணப்படல் போன்ற சிக்கல்கள் நிலவுகின்றன. முறையாக திட்டமிடப்பட்டு, படிப்படியாக இந்த திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்' என்றனர்.
தாழ்நில தேயிலை நில பகுதிகளில் பெரும் சவாலாக ஊழியர் பற்றாக்குறை காணப்படுகிறது. எனவே இதுபோன்றதொரு வர்த்தக கட்டமைப்பு தாழ்நில பகுதிகளுக்கு பொருந்திய போதிலும், உயர் நில தேயிலை நில பகுதிகளான நுவரெலியா, ஹற்றன், மஸ்கெலியா போன்ற பகுதிகளில் முற்றிலும் மாறுபட்ட நிலையே காணப்படுகிறது. எனவே அந்த பகுதிகளுக்கு பொறுத்தமான ஒரு புதிய மாற்று வர்த்தக கட்டமைப்பின் தேவை எழுந்துள்ளது.
உரிய அதிகாரிகள், இது குறித்து கவனம் செலுத்தி, தேயிலை பெருந்தோட்டத்துறைக்கும், இத்துறைசார்ந்தவர்களுக்கும் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது எம் அவர்.
-ச.சேகர்.
நன்றி- தமிழ்மிரர்
Thursday, January 10, 2013
நான்கு மாவட்டங்களுக்கு 24 மணிநேர அனர்த்த அபாய எச்சரிக்கை!
நிலவும் சீரற்ற காலநிலையால் நான்கு மாவட்டங்களில் உள்ள சில பிரதேசங்களுக்கு 24 மணிநேர அனர்த்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா, மாத்தளை, கண்டி மற்றும் பதுளை ஆகிய நான்கு மாவட்டங்களில் சில பகுதிகளுக்கே இவ்வாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை, கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர் பகுதிகளுக்கும் கண்டியில் மெதும்பர, பாதஹேவாகெட்ட, கங்கவடகொறள ஆகிய பகுதிகளுக்கும் 24 மணிநேர அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளையில் மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவு தவிர்ந்த ஏனைய அனைத்து செயலகப் பிரிவுகளுக்கும் 24 மணிநேர அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தளையில் இரத்தோட்டை, உக்குவெல, மாத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 24 மணிநேர அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)

