Thursday, November 19, 2009

தேர்தல்களில் அரசுக்கு ஆதரவு - எஸ்.அருள்சாமி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும், நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும் தொழிலாளர் விடுதலை முன்னணி அரசுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அக் கட்சியில் பொதுச் செயலாளர் எஸ் அருள்சாமி தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் தொழிலாளர் விடுதலை முன்னணியின் உயர் மட்ட அரசியல் குழு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவை கொழும்பில் 16 ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடியபோது
  • தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு தோட்டத் தொழிலாளர்கள் மானிய விலையில் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தற்போது தோட்டப்பகுதிகளில் மந்தகதியில் முன்னெடுக்கப்படுகின்ற தனி வீட்டுத் திட்டத்தினைத் துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பெருந்தோட்டப்பகுதி இளைஞர், யுவதிகள் வாழ்கின்ற பிரதேசங்களில் உரிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். போன்ற விடயங்கள் பேச்சுவார்த்தையின் போது மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிட்டார்
கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக 40,000 கையெழுத்துக்கள்

மலையகத்தின் பிரதான தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக இதுவரை 40,000 தொழிலாளர்கள் கையொப்பம் இட்டுள்ளதாகவும், ஒப்பந்தத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஐக்கிய மக்கள் முன்னணி தலைவர் எஸ் சதாசிவம் ஐக்கிய மக்கள் முன்னணியினருடன் இணைந்து கொண்ட பின் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் முதற்கட்டமாக கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்ல நடவடிக்கைகள் எடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர் தொழிலாளர்களிடமிருந்து கையொப்பம் பெறும் பணி தொடரும் என்றார்.
மத்திய மாகாண பாடசாலைகள் 23 ஆம் திகதி முதல் மூடப்படும்

மத்திய மாகாணத்தில் ஏ (எச் 1 என் 1) இன்புளுவென்சா காய்ச்சலுக்கான அச்சுறுத்தல் நிலவுவதையடுத்து இம் மாதம் எதிர்வரும் 23 ஆம் திகதியிலிருந்து மறு அறிவித்தல் வரை மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடி விட அரசு தீர்மானித்துள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகளுடன் 19-11-2009 அன்று நடத்திய விசேட கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

Saturday, October 31, 2009

மவுசாகலை லெமன்மோரா தோட்ட அவல நிலை: சாதக முடிவு கிடைக்காவிட்டால் நிர்வாகத்தை தொழிலாளர்களே ஏற்பார்களாம்!

மஸ்கெலியா, மவுசாகலை லெமன்மோரா தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வேலை எதுவுமின்றி பெரிதும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தனியார் ஒருவருக்குச் சொந்தமான இத்தோட்டத்தில் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக தொழிலாளர்கள் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
மவுசாகலை கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட லெமன்மோரா தோட்டம் 188 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. அமலசூரியகே என்பவருக்குச் சொந்தமான இத்தோட்டத்தில் 30 பெண் தொழிலாளர்களும் 21 ஆண் தொழிலாளர்களுமாக வேலை செய்து வருகின்றனர்.
சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டும் தேயிலை செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலப்பரப்புக்குள் இருக்கும் தேயிலைச் செடிகளுக்கு மேல் புற்களும், செடி கொடிகளும் வளர்ந்து காணப்படுகிறது.
28 குடும்பங்களைச் சேர்ந்த 150 இற்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வரும் இத்தோட்டத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. தோட்ட நிர்வாகம் சீர்குழைந்துள்ள நிலையில் அந்த மக்களுக்கு எந்தவிதமான சலுகைகளையும் செய்து கொடுப்பதில்லை என தொழிலாளர்கள் கூறினர்.
தொண்டு நிறுவனங்கள் அத்தோட்டத் தொழிலாளர்களின் குடிநீர், சுகாதார, மற்றும் சில அடிப்படைத் தேவைகளுக்கு உதவி வருகின்றன. லயன் குடியிருப்புகளின் கூரைத் தகடுகள் பாவனைக்கு உதவாத நிலையில் இருந்தன. தொண்டு நிறுவனங்கள் அவ்றறுக்குப் புதிய கூரைத்தகடுகளை மாற்றிக் கொடுத்துள்ளன.
இத் தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமது அடிப்படைச் சம்பளமாக 185 ரூபா வழங்கப்படுகிறது. இதில் ஊழியர் சேமலாப நிதி, தொழிற்சங்க சந்தா மற்றும் ஏனைய கழிவுகள் போக மிகுதி பணத்திலேயே அவர்களின் அன்றாட வாழக்கையை சமாளிக்கின்றனர்.
மாதமொன்றுக்கு 10 தொடக்கம் 15 நாட்கள் மட்டுமே அவர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. தேயிலை கொழுந்து இல்லாத நாட்களில் வேலையில்லாமல் இருக்கும் இத்தொழிலாளர்கள் காடாகியிருக்கும் தரிசு நிலப்பகுதியை தோட்ட நிர்வாகம் வீட்டுத் தோட்டங்களை செய்வதற்கு வழங்க சம்மதித்தால் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கம் என்கின்றனர். ஒருவருக்கு மாதத்தில் ஆகக்கூடிய சம்பளமாக ஆயிரம் ரூபா தொடக்கம் 1500 ரூபா பெறும் தொழிலாளர்கள் இன்றைய பொருளாதார சூழ்நிலையை சமாளிக்க முடியாதுள்ளனர்.
சுமார் 51 தொழிலாளர்கள் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க உறுப்பினர்களாக இருப்பதாக தோட்டத் தலைவர் எம். சுப்பிரமணியம் தெரிவித்தார். சுமார் 10 வருடங்களுக்கு மேலாக அங்கத்தவர்களாக இருக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ஒரு தீர்வு கிடைக்கவில்லை. தொழிற்சங்கத் தலைவர்கள், பெருந்தோட்டத் துறை அமைச்சர் உட்பட பலரிடம் பேசியும் பலனில்லை.
இது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது. கடிதப்பரிமாறல்கள் இடம்பெற்றதே தவிர வேறு தீர்க்கமான முடிவு எதுவும் கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 10, 15 நாட்களாக வேலை வாய்ப்பின்றி பட்டினியில் கிடக்கின்றனர். இவ்விடயம் குறித்து அவர்கள் ஒரு தீர்க்கமான முடிவு கிடைக்கும்வரை வேலைக்கு செல்வதில்லை என முடிவெடுத்துள்ளனர். இந்நிலைமை தொடருமானால் தமது பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கும் என அஞ்சுகின்றனர். அதேவேளை போக்குவரத்து, மருத்துவ வசதிகள் இல்லாமை இத்தோட்டத்தின் பாரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள தொழிலாளர்கள் ஒன்றிணைந்து உண்ணாவிரத போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
தொடர்ந்து தோட்ட நிர்வாகமும் தொழிற் சங்கங்களும் இதற்கு தீர்க்கமான முடிவினைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தாங்கள் தோட்ட நிர்வாகத்தினை தாமே நடாத்த தயாராக இருப்பதாகக் கூறுகின்றனர்.
க. விக்னேஸ்வரன்
மஸ்கெலியா.
தினகரன் வாரமஞ்சரி

Friday, October 30, 2009

தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் ஆட்சி அதிகாரம் இ.தொ.கா. வசம்

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் தலைவர் உதயகுமார் உட்பட அவருடன் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் ஆட்சி அதிகாரம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வசமாகியுள்ளது.
தலவாக்கலை – லிந்துலை நகரசபைத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் மீன் சின்னத்தில் போட்டியிட்டு இந்த நகரசபையின் தலைவராக உதயகுமார் தெரிவுசெய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து இந்த நகர சபை கடந்த மூன்று வருடகாலமாக இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தலைவர் இவ்வருட ஆரம்பத்தில் மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்பட்டு வந்தார். இவ்வாறானதொரு நிலையில் தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தலைவர் உட்பட அவரின் உறுப்பினர்கள் தற்போது இலங்கைத்தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து கொண்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த இணைவு தொடர்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடக செய்தியில் தலவாக்கலை – லிந்துலை நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய வகையில் வேலைத் திட்டங்கள் முன்வைக்கப்படாததால் இந்த நகர சபைக்குட்பட்ட குடியிருப்பாளர் மற்றும் ஏனையோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த நகர சபையை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் ஒத்துழைப்பு இன்றியமையாதது.
இதை உணர்ந்து கொண்ட தலவாக்கலை – லிந்துலை நகரசபைத் தலைவர் உட்பட அவருடன் சேர்ந்த நகர சபையின் உறுப்பினர்கள் நேற்று 26 ஆம் திகதி இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் உத்தியோகப்பூர்வமாக இணைந்து கொண்டனர்.
இது தொடர்பான நிகழ்வில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட இ.தொ.கா. முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். தலவாக்கலை – லிந்துலை நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளின் உடனடி அபிவிருத்தித் திட்டங்களுக்காக இ.தொ.கா. பொதுச்செயலாளரும் இளைஞர் வலுவூட்டல், சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தனது அமைச்சின் நிதியிலிருந்து 3 கோடி ரூபாவை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.
இ.தொகாவிலிருந்து முன்னர் வெளியேறிய சிலரும் பிற அரசியல் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சிலரும் வெகுவிரைவில் இ.தொ.காவுடன் இணைந்து கொள்ளவுள்ளனர்

Monday, October 26, 2009

நியமனம் பெற்ற மலையகப் பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க கோரிக்கை

கடந்த 2007 ஆம் ஆண்டு மலையகப் பாடசாலைகளுக்கு ஆசிரியர் நியமனம் பெற்ற 3000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சியின்றி தற்பொழுது பாடசாலைகளில் கடமையாற்றி வருகின்றனர். நியமனம் பெற்ற 3179 ஆசிரியர்களுள் ஒரு சிறு தொகுதியினர் மட்டும் ஆசிரியர் கலாசாலைகளுக்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் மேலும் 3000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சியின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு வார இறுதி நாட்களில் பயிற்சி வழங்க கல்வி அமைச்சு விண்ணப்பம் கோரிய போதும் சுமார் மூன்று மாதங்கள் கடந்தும் இன்னமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமை குறித்து ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அதேவேளை பயிற்சியற்ற ஆசிரியர்கள் மூலம் முறையான கற்றல் கற்பித்தல் செயலொழுங்கினை மேற்கொள்ள முடியாதிருப்பதாக அதிபர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்வாசிரியர்களுக்கு துரிதமாக பயிற்சி வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிபர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

Sunday, October 25, 2009

படிக்கும் வயதில் பங்களாக்களில் வேலையா?
பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு அவசியம்

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதலும் அதனால் ஏற்படும் சிறுவர்களுக்கு எதிரான வன் முறைகளும்,கொலை தற்கொலைகளும் இவ்வாண்டிலும் குறைவடைந்ததாகத் தெரியவில்லை.
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான சட்டங்கள் இறுக்கமாக்கப்பட்டு, அதற்கான தனிப் பொலிஸ் பிரிவு ஊக்கமுடன் செயற்பட ஆரம்பித்த பின்னரும் இன்னமும் மேற்கூறிய அவலங்கள் தொடர்வதை கட்டுப்படுத்த முடியவில்லை.
இத்தோல்விக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து பார்க்கும் போது நடைமுறையில் உள்ள செயற்பாடுகள் ஆணிவேரை விடுத்து பக்க வேரை சாய்க்கும நடவடிக்கையாக அமைந்திருப்பதை உணர முடிகிறது. சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களையும் அதற்கு துணை போகும் சில காவல் துறையினரையும் சிறுவர்களை வேலைக்கு அழைத்து வரும் இடைத் தரகர்களையும் நாம் இன்னமும் குறைகூறிக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் தமது பிள்ளைகளை பலி ஆடுகள் போல வேலைக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர்களை மறந்து விடுகிறோம்.
தொடருகின்ற அவலங்கள் அனைத்திற்கும் எமது சமூக ஏற்றத் தாழ்வுகள் ஒருபுறமிருக்க மலையக பெற்றோரின் செயற்பாடே முக்கிய காரணமாகின்றது.பெற்றவர்கள் தமது பிள்ளைகளை வேலைக்கு அனுப்பாதிருந்தால் இவ்வாறான அவலங்கள் ஏற்பட வாய்ப்பில்லையே! பிள்ளைகளை பறிகொடுத்தபின்னர் அழுது குளறுவதில் என்ன பயன்? முன்னைய படிப்பினைகளை இவர்கள் ஏன் சிந்தித்துப் பார்ப்பதில்லை?
குடும்ப வருமானம் பற்றாக்குறை என்பதற்காக சிறுபிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் இவர்களின் பாசம், அன்பு என்பன கேள்விக்குறியாகின்றன. கல்வி அறிவு இல்லாத நிலையும், மதுவுக்கு அடிமையாகியுள்ள பழக்கமும்,தரகர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்குகின்றமையுமே இதற்குக் காரணம்.
இன்று பூதாகரமாகியுள்ள இப்பிரச்சினையை வேரோடு சாய்த்திட வேண்டுமானால், பெற்றோருக்கான அறிவூட்டலே முக்கியமானதும் முதன்மையானதும் ஆகும். சிறுவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களின் செயற்பாடானது சிறுவர் துஷ்பிரயோகம் என்பதையும், தண்டனைக்குரிய குற்றம் என்பதையும் பெற்றோருக்கு எடுத்துரைக்க வேண்டியதும் இன்றைய மலையக படித்த வாலிபர்களினதும் மலையக பாடசாலை ஆசிரியர்களினதும் தலையாய கடமையாகும். மேலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றி ஆசிரியர்கள் தெரிந்து வைத்திருப்பதுடன் அது தொடர்பான அறிவூட்டலை மாணவர்களுக்கும் ஊட்ட வேண்டும்.
பெற்றோர்கள் பொறுப்பானவர்களாக இருக்கும் பட்சத்தில் சிறுவர்களுக்கு இவ்வாறான அவலங்கள் ஏற்பட வழியில்லை. பிள்ளைப்பராயம் என்பது கல்விக்குரிய பராயமே அன்றி வேலை பார்க்கும் பருவமல்ல என்பதை பெற்றோர்களுக்கு உணர்த்த வேண்டும். கல்வியின் மூலமே மலையகம் மேன்மை அடையும், விழிப்புறும், கல்லாதார் கண்ணில்லாதவர்கள், எவராலும் ஏமாற்றப்படக் கூடியவர்கள் என்பதை உணர்த்த வேண்டும். கல்வியின் மூலம் எதிர்கால வேலைவாய்ப்பும்,சுபிட்சமும் கிட்டுவதுடன் ஒருவன் முழுமையான மனிதனாகின்றான் என்பதையும் உணர்த்த வேண்டும்.
மலையக மக்களை கல்வியறிவற்றவர்களாக இருந்தால்தான் அவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என முதலாளி வர்க்கம் நினைக்கிறது. மலையக சிறுவர்கள் அதிகமாகப் படிப்பதை அவர்கள் விரும்புவதில்லை. இன்றுள்ள அரசியல் விழிப்புணர்வானது இதை உடைத்தெறிந்து வருகிறது.
வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படும் பிள்ளைகள் அங்கு அனுபவிக்கும் கஷ்டங்கள், அவர்களுக்கு எதிராக புரியப்படும் வன்முறைகள் என்பவற்றையும், பாலியல் ரீதியாக ஏற்படக் கூடிய இன்னல்களையும் பெற்றோர்கள் உணர வேண்டும். பிள்ளைகளை கற்கும் வயதில் வேலைக்கு அனுப்புவதன் மூலம், நிகழ்காலத்தை மட்டுமன்றி எதிர்காலத்தையும் இழந்து விடுகிறோம்.
சந்திரகாந்தா முருகானந்தன்...-
தினகரன் வார மஞ்சரி