Monday, October 19, 2009

மலையகத்தில் பெருகிவரும் டிஷ் அன்டனா கலாசாரம்

இன்றைய இளைஞர்கள் கையில்தான் நாளைய சமூகம் தங்கியுள்ளது. இவர்களின் கல்வி நடவடிக்கைகள், நடையுடை பாவனை, கலை கலாசார, பண்பாட்டு, விழுமியங்கள் எவ்வாறாகக் காணப்படுகின்றதோ, அதனைப் பின்பற்றியே சிறுவர் சமூகமும் வளரும். எனவே இளைஞர்கள் என்போர் சமூகத்தினதும் காலத்தினதும் கண்ணாடிகள் இளைஞர்கள் செய்கின்ற ஒவ்வொரு விடயமும் நடவடிக்கையும் சமூகத்திலும், நாட்டிலும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இன்றைய பெருந்தோட்ட இளைஞர்களை எடுத்துக் கொண்டால் சிலர் தன்னுடைய சொந்த வேலையைக் கூட செய்து கொள்ள முடியாத சோம்பேறிகளாக இருக்கின்றார்கள். இதுவரையும் தாய், சகோதரிகள் அவர்களுடைய உடைகளைக் கழுவிக் கொடுப்பது தொடக்கம் அன்றாட வேலைகளை செய்வது வரை பிறரில் தங்கி வாழ்பவர்களாக இருக்கிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் சிலர் ஒரு வேலைக்கும் செல்லாமல் இருப்பதுதான் வேதனையான விடயம். இன்றும் கூட எல்லா விடயங்களுக்கும் தாய் தந்தையரை நம்பி வாழும் இளைஞர் கலாசாரம் தோட்டப் பகுதியில் இருக்கின்றது. இவ்விளைஞர்கள் சுயமாக எந்த வேலையையும் தேடுவது குறைவு. அல்லது சுய தொழில் வாய்ப்புக்களில் ஈடுபடுவதும் குறைவு.
அப்படியே பிற நகரங்களுக்கு வேலைக்குச் சென்றாலும் அங்கு தொடர்ந்து ஒரு இடத்தில் வேலை செய்யாமல் வந்து விடுகின்றனர். சிலர் கையடக்க தொலைபேசிகள் வாங்கவும், உடைகள் வாங்கவும் வேலைக்குச் செல்கின்றார்கள். சப்பாத்து ஒன்று வாங்குவதற்கு கூட வேலைக்குச் சென்று அதை வாங்கியவுடன் திரும்பியவர்களும் உண்டு. இவர்களின் நோக்கம் மேற்கூறிய பொருள்களில் ஏதாவது ஒன்றை வாங்கியவுடன் அவர்களின் நோக்கம் நிறை வேறிவிட்ட ஒரு மாயையில் வீட்டுக்கு வந்து விடுகின்றார்கள்.
இன்றைய இளைஞர்களுக்கு வேலை கஷ்டமாக இருக்கக் கூடாது. சம்பளமும் கைநிறையக் கிடைக்க வேண்டும். உடனேயே பதவி உயர்வு கிடைக்க வேண்டும். குறுகிய காலத்திலேயே பெரிய ஆளாக (பணக்காரனாக) வர வேண்டும் என்ற சிந்தனை இவர்களிடத்தில் மிக அதிகமாக உள்ளது. இவர்களின் சிந்தனையில் தவறு இல்லை. அதனை அடைய பல முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதை உணர வேண்டும்.
குறிப்பாக கல்வியில் பின் தங்கியவர்கள் க.பொ.த. (சா.த) க.பொ.த. (உ.த) பரீட்சையில் சித்தியடையாதவர்கள், தொண்டமான் தொழிற் பயிற்சி கல்லூரி, நுவரெலியா தொழிநுட்பக் கல்லூரி, சர்வோதயம், அரசசார்பற்ற நிறுவனங்கள், போன்றவற்றில் இணைந்து சுய தொழிலைக் கற்றுக் கொள்ளும் மனப்பாங்கும் இல்லை.
வயரிங் வேலை, மேசன், கணனி ஹோட்டல் முகாமைத்துவம், தையல், சமையற்கலை, மணப்பெண் அலங்காரம், வெல்டிங், பிளம்பர், அச்சுத் தொழில், தச்சுத் தொழில், புகைப்படப் பிடிப்புப் பயிற்சி போன்ற எத்தனையோ விதமான சுயதொழில் வாய்ப்புகள் உள்ளன.
அத்துடன் தான் வாழுகின்ற தோட்டத்திலேயே மரக்கறிச் செய்கை, வீட்டுத் தோட்டம், கையடக்கத் தொலைபேசி, முச்சக்கரவண்டி திருத்தவேலை, சாரதிப் பயிற்சி, சிறு வியாபாரம் கோழி வளர்ப்பு, ஆடுவளர்ப்பு, மாடுவளர்ப்பு, காளான் வளர்ப்பு, பூச்செய்கை, மூலிகைத் தாவரங்களை வளர்த்தல் போன்ற பல்வேறு வேலைகளை சுயமாக செய்யலாம். ஆனால் இவர்கள் இதனை விரும்புவது மிகவும் குறைவு. காரணம் இத்தகைய சுய தொழில்கள் பற்றிய போதுமான வழி காட்டல் ஆலோசனைகள் கிடைக்காமை ஆகும்.
இன்றைய இளைஞர்கள் பொழுது போக்காக தொலைக்காட்சி பார்த்தல், வி.சி.டி பார்த்தல், கையடக்கத் தொலை பேசியை அளவுக்கு மிஞ்சிய பாவனையும் துஷ்பிரயோகமும், இன்று ஒவ்வொரு தோட்டத்திலும் உள்ள கேபிள் தொலைக்காட்சியும் டிஷ் அன்டனாக் களும் இவர்களைப் படாதபாடு படுத்துகின்றன. இந்த சினிமா கலாசாரத்தினால் மலையகம் இன்று சிறிது சிறிதாக சீரழிந்து கொண்டிருப்பது பலருக்கு தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சில குடும்பங்களில் உள்ள இளைஞர்கள் 15000 ரூபாவை செலவு செய்து டிஷ் அன்டனாவை வாங்கி போட்டுவிட்டு, வருடம் முடிவில் இருந்து மாதம் மாதம் 340 ரூபாவை செலுத்தி வருகின்றார்கள். இதனால் தோட்டத்தில் தற்போது படித்துக் கொண்டிருக்கின்ற பிள்ளைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். சில நாடகங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல் சிலர் தங்களுடைய சொந்த வாழ்க்கையிலும் நடந்து கொள்ள முயற்சிப்பது முட்டாள்தனமான விடயம் ஆகும்.
இன்றைய இளைஞர்கள் அதிகமானோர் மது பாவனையில் ஈடுபடுவது மிகவும் வருந்தத்தக்க விடயம். இன்றைய இளைஞர்கள் 98வீதமானவர்கள் மலையகத்தில் மதுவினைப் பாவிக்கின்றார்கள், இதில் பாடசாலை செல்லும் மாணவர்களும் விதிவிலக்கல்ல. அத்துடன் புகைத்தல், (பீடி, சிகரட்) பான்பராக் போடுதல், ஹென்சி பாவித்தல், குலி போன்ற தடை செய்யப்பட்ட எல்லா விடயங்களையும் இவர்கள் சிறு வயது முதலே பழகிக் கொள்கின்றார்கள். இதற்குக் காரணம் பெற்றோர்களின் கண்காணிப்புக் குறைவே ஆகும்.
எனவே பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கூடிய அக்கறைகாட்ட வேண்டும்.
குறிப்பாக தங்களுடைய பிள்ளைகளின் (மகன்,மகள்) உடைகள், முடிவெட்டு, ஊர் சுற்றுதல், தகாத செயற்பாடுகள், கெட்ட நண்பர்களின் சகவாசம், பெற்றோர்களுக்கு அடங்காமை, தான் தோன்றித்தனமாக இருத்தல் போன்ற பல்வேறு விடயங்களையும், பெற்றோர் கள், முதலில் கவனித்து அவர்களை வழிநடத்த வேண்டும்.
படிக்கின்ற காலத்திலேயே காதல் வசப்படுவதும் இன்று சர்வசாதாரணமாகி விட்டது. குறிப்பாக (க.பொ.த. சா.த) (க.பொ.த. உ.த) மாணவர்கள் சிலர் காதலில் முழுமையாக ஈடுபட்டு, படிக்கின்ற வயதில் ஊர் சுற்றித்திரிந்து இறுதியில் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றார்கள். (சில மாணவர்களை பெற்றோர்கள் கண்டிக்கும் போது விசம் அருந்துவது மலையகத்தில் அதிகமாக உள்ளது) சினிமாவில் வருவது போல் இவர்கள் நடக்கப் பார்க்கின்றார்கள்.
இதனால் வாழ்க்கையில் ஏமாறுவது சினிமாக்காரர்கள் இல்லை நாங்கள் தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சில மாணவர்கள் பொது இடங்களில், மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில், பூங்காக்கள், ஏன் வாடி வீடுகளில் கூட சில மாணவிகள் இருந்து பொலிசாரால் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் உண்டு. பாடசாலைச் சீருடை என்பது வாழ்க்கையில் ஒரு முறைதான் அணிய முடியும். இச் சீருடைக்கு ஒரு புனிதத்தன்மை உள்ளது. அந்த உடையை கறைபடிந்ததாக உருவாக்க எந்த ஒரு பாடசாலை மாணவனும் முயற்சிக்கக் கூடாது.
பாதிக்கப்பட்ட மாணவர்களை விட அந்தப் பாடசாலைக்கே அவப் பெயர் ஏற்படும் என்பதை உணர வேண்டும். சில மாணவிகள்ஃ மாணவர்கள் மேலதிக வகுப்புக்களுக்குச் செல்கின்றோம் என பெற்றோரிடம் கூறி விட்டு காதல் லீலைகளில் ஈடுபடுவது மலையகப் பிரதேசத்தில் அதிகமாக உள்ளது. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு உழைத்து பிள்ளையின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என நினைத்து பிள்ளைகளைப் படிக்க வைத்தால் சில பிள்ளைகள் பெற்றோருடய நிலையை உணராமல் வாழ்க்கையை சீரழிப்பது வேதனையான விடயமாகும்.
இளைஞர்கள் இளமையிலேயே ஒரு தொழிலைத் தேட வேண்டும். சம்பாதிக்க வேண்டும். உயர் கல்வி கற்க வேண்டும். தன் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும். வாழ்க்கையைத் திட்டமிட்டு வாழ வேண்டும். சக நண்பர்களைப் பார்த்து திருந்த வேண்டும். ஏனைய சமூகத்தில் உள்ளவர்களைப் பார்த்து பல விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையை காதலுக்குக் கேளிக்கைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தக் கூடாது.
எனவே இனிவரும் காலங்களிலாவது மலையக இளைஞர்கள் சுய தொழில் வாய்ப்புகளை நாட வேண்டும். சுயமாக ஒரு தொழிலை தனது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றாற் போல் தேட வேண்டும். 18வயதுக்கு மேல் பிறரை எதிர்பார்த்து வாழக் கூடாது. கெட்ட நண்பர்கள், தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட வேண்டும். உழைத்தால் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும். இனிமேலும் பிறருக்கு சுமையாக எவரும் வாழ முயற்சிக்கக் கூடாது.
வீண் கர்வம், வரட்டு கௌரவம், பிறரை குறை சொல்லும் பழக்கம், தேவையற்ற விமர்சனங்கள், பெறாமை, வஞ்சகம், சூது போன்றவற்றை விட்டு விட்டு முடியுமானவரை வெளி உலகிற்கு வருவதற்கு முயற்சிக்க வேண்டும்.
கொட்டகலை இரா. சிவமணம்
நன்றி- தினகரன் வாரமஞ்சரி

Wednesday, October 14, 2009

சம்பள உயர்வுக்குப் பின்னரும் 390 ரூபா சம்பளம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு 405 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட போதிலும் பதுளை மாவட்டங்களில் பெரும்பாலான தோட்டப்பகுதிகளில் 390 ரூபாவையே சம்பளமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழிலாளர்கள் 75 வீதம் வேலைக்கு சென்றிருந்த போதிலும் நாளாந்த படியாக 30 ரூபா வழங்கப்படவில்லை.
மேலும் அநேகமான தோட்டங்களில் ஒத்துழையாமை போராட்டம் நடைபெற்றபோது வேலை செய்த தொழிலாளர்களுக்கு இரண்டு நாள் வேலை செய்தால் ஒரு நாள் சம்பளம் என்ற வீதத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலதிகமாக கொழுந்து பறிப்புக்கு 30 ரூபா வழங்கப்படும் என கூட்டொப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட போதிலும் அவ்வாறு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
பதுளை மாவட்டத்தில் வரட்சியினால் தோட்ட நிர்வாகம் கோரும் 18 கிலோ கொழுந்து பறிக்க முடியாதுள்ளது. அத் தொழிலாளர்கள் எட்டு மணிநேரம் வேலை செய்த போதும் அரை நாள் சம்பளமே வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காலி, மாத்தறையில் தொழிலாளர்கள் வாக்களிக்க முடியாத நிலை

தென் மாகாண சபைத் தேர்தலில் காலி, மாத்தறை தோட்டப் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு வாக்களிக்க வாக்களார் அட்டைகள் இருந்தும் அவர்கள் தங்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குரிய தேசிய அடையாள அட்டையோ, வேறு ஆவணங்களோ சமர்ப்பிக்காததால் வாக்களிக்க முடியாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீண்டும் சம்பள உயர்வு போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்தை தீபாவளி பண்டிகைக்குப் பின்னர் மீண்டும் முன்னெடுப்பதற்கு மலையக தொழிற்சங்கங்கள் தயாராவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தேசிய தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஆரம்பிக்கவுள்ளதாக இ.தொ.ஐ.மு தொழிற்சங்க தலைவர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் கடந்த செப்டம்பர் மாதம் முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் செய்துகொள்ளப்படட கூட்டு ஒப்பந்தத்தில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகிறது என்றார். ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழிய நம்பிக்கை நிதி ஆகியவற்றை வழங்குமாறு தொழில்கொள்வோருக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள போதிலும், ஒப்புக் கொள்ளப்பட்ட 405 ரூபா சம்பளமே வழங்கப்படுவதில்லை எனத்; தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இந்த விடயங்கள் குறித்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மலையக மக்கள் முன்னணியும் இந்தப் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றார்

Tuesday, October 13, 2009

மலையக மக்களின் உயர்வு பற்றி தந்தையிடம் பேசுவேன் -கனிமொழி

மலையகப் பெருந்தோட்ட வாழ் மக்களின் வாழ்வாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் மேம்படுத்த மத்திய மாநில அரசுகளின் உதவிகளைப் பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொள்வதாக இந்திய நாடாளுமன்ற குழுத்தலைவர் தி.மு.க முன்னாள் அமைச்சர் ரி. ஆர். பாலு உறுதியளித்துள்ளார்.
மலையகப் பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே இவ்வாறு தெரிவித்தார். மேற்படி மலையகம் வாழ் தமிழ் மக்களின் நிலைமைகளைத் தமது தந்தையார் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும், அம் மக்களின் நிலைமைகளை எடுத்துக்கூறி அவர்களின் உயர்வுக்கு வழிவகுப்பதாகவும் முதல்வரின் புதல்வியும் எம்.பி யுமான கவிஞர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் ‘லயன்’ வரிசைக்குடியிருப்பு வாழ்க்கை முறையை நேரில் சென்று பார்வையிட்ட இந்திய நாடாளுமன்ற குழுவினர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டுமென்றும், அதற்கு ஒத்துழைப்பதாகவும் கூறினர்.
அதேநேரம் மலையகத்தில் உயர் கல்விக் கலாசாலைகளை உருவாக்குவதற்கு உதவுவதாகவும் கல்வித்துறையை மேம்படுத்த தேவையான உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
அட்டனில் முக்கிய இடங்களுக்கு இந்திய எம்.பிக்கள் விஜயம்

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய எம்.பிக்கள் குழுவினர் நேற்று திங்கட்கிழமை நோர்வூட் நகரில் அமைந்துள்ள தொண்டமான் விளையாட்டரங்கைப் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இ. தொ. கா. பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் செய்திருந்தார்.
முன்னாள் அமைச்சரும், இந்திய நாடாளுமன்ற குழுவுக்குத் தலைமை தாங்கியவருமான டி. ஆர். பாலு தலைமையில், கனிமொழி எம்.பி, தொல். திருமாவளவன் எம்.பி. ஆகியோரும் ஹெலிகொப்டர் மூலம் நோர்வூட் தொண்டமான் விளையாட்டு அரங்குக்கு வந்து சேர்ந்தனர்.
அங்கிருந்து வாகனப் பேரணியில் அட்டன் மாநகர் மணிக்கூண்டுச் சந்தி வழியாக சௌமியமூர்த்தி தொண்டமான் தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் செய்தனர்.
கைத்தொழில் பயிற்சி அரங்குகளை அவர்கள் பார்வையிட்டனர். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், பிரதி அமைச்சர் எஸ். ஜெகதீஸ்வரன், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் மற்றும் இ. தொ. கா. பிரதித் தலைவர்களும், கலந்துகொண்டனர்.
10 பேர் கொண்ட இந்திய நாடாளுமன்ற குழுவினர் கொட்டகாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் தொழிலாளர் பேட்டையைப் பார்வையிட்டு பின்னர் நுவரெலியா நகர் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இக் குழுவினரைச் சந்திப்பதற்கு நகர வர்த்தகர்கள் உட்பட பொதுமக்கள் பெருந்திரளாக அட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி கல்லூரிக்கு வந்திருந்தனர். நுவரெலியா, அட்டன், பொலிசார் பாதுகாப்பு வழங்கினர். பலத்த பாதுகாப்புடன் இந்திய நாடாளுமன்ற குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தீபாவளி முற்பணமாக 7500 ரூபா- சங்கங்கள் முன் வருமா?

தோட்டத் தொழிலாளர்கள் 290 ரூபா நாட் சம்பளம் பெறும்போது தீபாவளி முற்பணமாக 4500 ரூபாவை தோட்ட நிருவாகம் வழங்கி வந்தது. புதிய கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டதை பின் நாட்சம்பளம் 405 ரூபா உயர்த்தப்பட்டதையிட்டு தொழிற்சங்கங்களை பாராட்டுவதோடு இம்முறை தீபாவளி முற்பணத்தை குறைந்தது 7500 ரூபா பெற்றுத் தர தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் தீபாவளிப் பண்டிகையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வேளையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு தமது தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய போதியளவு வருமானமில்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். பெருந்தோட்டங்களை பொறுத்தவரை தீபாவளி பண்டிகை மிக விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும். பெரும்பாலான தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகை முற்பணத்தை நம்பித்தான் திட்டம் வகுக்கின்றனர். இவை ஒன்று மட்டும்தான் தொழிலாளர்களுக்கு வட்டி இல்லாமல் 10 மாத தவணை முறையில் கழித்துக் கொள்ளும் விதத்தில் வழங்கப்படுகிறது. எனவே கடந்த காலங்களில் வழங்கப்பட்ட 4500 ரூபா முற்பணத்தை அதிகரித்து 7500 ரூபா வழங்கதோட்ட நிருவாகம் முன்வர வேண்டும்.
தோட்டங்களில் மழை, வெயில் என்று பாராமல் தொழிலாளர்கள் தோட்டங்களுக்கு அதிக லாபத்தைப்பெற்றுக் கொடுக்கின்றனர். இதனை உணர்ந்து தோட்ட நிருவாகம் அவர்களின் முற்பணத்தை அதிகரிக்க முன்வர வேண்டும். புதிய கூட்டு ஒப்பந்தத்தின்படி தொழிலாளர்களுக்கு 405 ரூபா நாட் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நாளைக்கு 115 ரூபா சம்பளம் உயர்ந்துள்ளது. இதற்கு அமைய நிலுவை சம்பளம் ஏப்ரல் மாதத்திலிருந்து வழங்கப்பட வேண்டும். இந்த நிலுவையில் 50 வீதத்தை எதிர்வரும் தீபாவளி பணிடிக்கைக்கு முன் கொடுக்க வேண்டும். 25 வீதத்தை நத்தார் பண்டிக்கைக்கு முன்னமும், எஞ்சியுள்ள 25 வீதத்தை அடுத்தாண்டு ஜனவரியில் அதாவது பொங்கல் தினத்துக்கு முன்னர் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
தொழிலாளி ஒருவர் 25 நாட்கள் ஒழுங்காக வேலை செய்திருந்தால் ஒரு நாளைக்கு 115 ரூபா அடிப்படையில் 25x115 =2875 ரூபா ஆகும். (ஒரு மாதம்) (நாட்கள்) - சம்பளம். ஐந்த மாதம் 5X2875= ரூபா 14375 ரூபா நிலுவை சம்பளம் கிடைக்கும், இதில் உதாரணமாக மொத்தம் ஐம்பது வீதம் 7187.50 ஆகும். தீபாவளி பண்டிகைக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும். மேற்கூறிய தீபாவளி முற்பணமும், அதிகரித்த புதிய சம்பளத்தின் நிலுவை சம்பளமும் இரண்டும் ஒழுங்காகக் கிடைத்தால், (2009) இம்முறை தோட்டங்களில் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்தை காண முடியும். இல்லாது போனால் தீபாவளி களை காட்டாமல் அமைதியாகிவிடும் என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டி. வசந்தகுமார்