Tuesday, May 26, 2009

அரச பெருந்தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை

அரசாங்கத்திற்குச் சொந்தமான பெருந்தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. இத் தோட்டங்களை முறையாக அபிவிருத்தி செய்வதற்கும் தொழிலாளர்களின் உரிமைகளை உரிய முறையில் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனின் பொதுச் செயலாளர் எஸ்.இராமநாதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொள் வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், கடந்த மார்ச் மாதம் கூட்டு ஒப்பந்தம் காலாவதி யானதால் சம்பள உயர்வு சம்பந்தமாக எட்டப்படும் முடிவு கடந்த ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்தே அமுலுக்கு வருவதாகவிருக்க வேண்டும் என்பதையும் முதலாளிமார் சம்மேளனத்திடம் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
அரசாங்கத்துக்குச் சொந்தமான தோட்டங்கள் ஆரம்ப காலங்களில் மிகவும் நல்ல முறையில் இயங்கிவந்த போதும் தற்போது முறையாகப் பராமரிக்கப் படாமல் சீரழிந்த நிலையில் அவை தற்போது காடுகளாகியுள்ளன. இத் தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவர்களிடமிருந்து மாதாமாதம் அறவிடப் படும் சேமலாப நிதியைக் கூட நிர்வாகங்கள் மத்திய வங்கிக்கு அனுப்புவதில்லை. சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்காலப் பணம் போன்றவற்றை தொழிலாளர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு தொழிற் சங்கங்கள் தொடர்ந்தும் தொழிற்காரியாலயங்களின் மூலம் நீதிமன்றங்களையே நாடவேண்டியுள்ளது.
இதன் காரணமாகத் தொழிலாளர்கள் தங்களின் கொடுப்பனவுகளை காலக்கிரமத்தில் பெற்றுக் கொள்வதில் வீண் தாமததிற்கும் அசௌகரியங் களுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தும் நீடிக்கப்படக்கூடாது. இத் தோட்டங்களை முறையாக அபிவிருத்தி செய்து பாதுகா ப்பதற்கும் தொழிலாளர்களின் உரிமைகளைப் உரிய முறையில் பெற்றுக் கொடுப்பதற் கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்தோட்டங்களை அரச நிறுவனங்களால் முறையாக நடத்த முடியாதென்றால், இவற்றை முறையாக நடத்தக்கூடிய சிறந்த தனியார் கம்பனிகளை இனங்கண்டு இத்தோட்ட நிர்வாகங்களை அவர்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்வது உசிதமானதாகும்.
ஏட்டிக்குப் போட்டியான அறிக்கைகள் தொழிலாளர்களுக்கு நன்மையும் இல்லை

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கு மிடையில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியான நிலையில் இந்த ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு அழுத்தங்களும் போராட்டங்களும் இடம்பெற்ற போதும் முடிவில் அவை புஸ்வானமாகிவிட்டன. ஆனால், ஏட்டிக்குப் போட்டியாக தொழிற்சங்கங்கள் அறிக்கைகளை விடுவதால் தொழிலாளர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்காதது வருத்தத்துக்குரியது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பிரதித் தலைவர் பி.பி.கந்தையா தோட்ட கமிட்டி தலைவர்கள் மத்தியில் பேசும் போது குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆரம்ப கர்த்தாவாக விளங்கிய அமரர் எஸ்.நடேசன் சங்கத்தின் தலைவராக விளங்கிய காலத்திலேயே கூட்டு ஒப்பந்தம் தொடர்பான வேலைகள் ஆரம்பமாகின. இரண்டு பக்கங்களைக் கொண்ட இந்த ஒப்பந்தத்தில் நன்மையையும் தீமையையும் கொண்டது.எனினும், அடிமைச்சாசனம்,தீங்கிழைக்கும் மரணசாசனம் என்றெல்லாம் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத சங்கங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மாற்றீடான சரியான முடிவினை அவை முன்வைக்காதது விசனத்துக்குரியது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவுயர்வு உள்ளிட்ட 18 அம்சக் கோரிக்கைகள் கூட்டு ஒப்பந்தத்தில் அடங்கியுள்ளன. மேலும் வாழ்க்கைச் செலவுப்புள்ளி உயர்வுக் கொடுப்பனவு தோட்டத்தொழிலாளருக்கு வழங்குவது அவசியம் என்பதைக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ள தொழிற்சங்கங்களுடன் தொடருகின்றன.இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களினது விலையும் அதிகரித்துள்ளன. தற்போது கிடைக்கும் ஊதியம் எந்த வகையிலும் போதுமானதல்ல.எனவேதான் வாழ்க்கைச் செலவுப் புள்ளியோடு நியாயமான சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்பதை எமது சங்கம் வலியுறுத்துகின்றது என்றார்.

Monday, May 25, 2009

நுவரெலிய மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவுஅச்சத்தில் பல குடும்பங்கள் இடம்பெயர்வு

நுவரெலியா மாவட்டத்தின் வௌ;வேறு பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவுகள் ஏற்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்குள் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில், புசல்லாவ, டெல்டாபுர, கெமுனுபுர மகா வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டடமொன்று மண்சரிவு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது.
இதனால் இக்கட்டடத்திற்கு மேற்புறமாக அமைந்திருக்கும் மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு மரக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேநேரம், நுவரெலியா, யுனிக்விவ் கிராம சேவகர் பிரிவில் அமைந்திருக்கும் உல்லாச விடுதியொன்றின் சமையலறைப் பகுதி நேற்று திடீரென மண்சரிவுக்கு உள்ளானது. இருப்பினும் உயிரிழப்புக்களோ, காயங்களோ ஏற்படவில்லை. கொத்மலையின் சில பிரதேசங்களிலும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நுவரெலியா - கண்டி வீதியிலுள்ள டொப்பஸ் என்ற இடத்திலுள்ள தேயிலைத் தோட்டமொன்று நேற்று சுமார் முப்பது மீட்டர் தூரத்திற்குத் திடீரென மண்சரிவுக்கு உள்ளானது. எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. மலையகப் பிரதேசங்களில் தொடராக மழை பெய்து வருவதால் தான் இவ்வாறு அடிக்கடி மண்சரிவுகள் ஏற்படுகின்றன. அதனால் மலையகப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மழைக் காலங்களில் விழிப்பாக இருப்பது அவசியம் என்றார்.
அரசினால் பொறுப்பேற்கப்பட்ட தோட்ட வைத்தியசாலைகளில் கடமை நேரங்கள் மாற்றம்

பதுளை மாவட்டத்தில் அரசு பொறுப்பேற்றுள்ள 12 பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் கடமை நேரங்களும் தொழிலாளர் நன்மை கருதி அவர்களுக்கேற்ப மாற்றப்படுவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாக பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ், பதுளை மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் வைத்தியசாலைகளுக்கு மருந்து வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டார். அரசு பொறுப்பேற்ற வைத்தியசாலைகள் நவீன மயப்படுத்துப்படுவதுடன் மேலும் ஐந்து பெருந் தோட்ட வைத்தியசாலைகளையும் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்
பேச்சுவார்த்தையின் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் - சென்னன்

கூட்டு ஒப்பந்தந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்கள் ஒப்பந்தம் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் தொடர்பான விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணித் தலைவர் ரி.வி. சென்னன் பதுளை காரியாலயத்தில் தமது தொழிற்சங்க முக்கியஸ்தர்களுடன் பேசும் போது தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கென செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தமானது தொழிலாளர் சமூகத்திற்கு நன்மைகள் கிடைப்பனவாக அமைய வேண்டும். இந்த ஒப்பந்தமானது தொழிலாளர்களை பாதித்துள்ள போதிலும் ஒப்பந்தத் துடன் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டிருக்கின்றன. இவை இரகசியமாகவே நடை பெற்றுள்ளன. பேச்சுவார்த்தை தொடர்பான விடயங்கள் பூரணமாகவே மறைக்கப்பட்டுள்ளன. இச் செயற் பாடுகள் எமக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியி ருக்கின்றது. பேச்சுவார்த்தையில் முன் வைக்கப்பட்ட விடயங்கள் எடுக்கப்பட்ட முடிவுகள் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும் என்றார். தொழிலாளர்களின் சம்பளத்தில் பகுதி பகுதியாக உயர்வினை ஏற்படுத்தாமல் 300 ரூபா என்ற அடிப்படையிலாயினும் அடிப்படைச் சம்பள உயர்வு ஏற்படுத்தப்படல் வேண்டும். அச்சம்பளத்துடன் வாழ்க்கைச் செலவுப்புள்ளிக்கமைய பகுதி பகுதியாக சம்பள உயர்வு இடம்பெறல் வேண்டும்.
ஊவா மாகாணசபை 28 இல் கலைக்கப்படலாம்?

ஊவா மாகாணசபை எதிர்வரும் 28ஆம் திகதி கலைக்கப்படலாமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச் சபையின் ஆயுட்காலம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவுள்ள போதிலும் அதற்கு முன்பு மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தலை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கமையவே எதிர்வரும் 28 ஆம் திகதி இச்சபை கலைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இம் மாகாணசபையுடன் தென் மாகாணசபையும் கலைக்கப்படவுள்ளது.
மஸ்கெலியா சாமிமலை வீதியில் மண்சரிவு அபாயம்

மஸ்கெலியா நகரில் சாமிமலை வீதியில் மேற்குப் புறமாக வீட்டு மனைகள் அமைப்பதற்காக பாரிய மண் திட்டுகள் டோசர்கள் மூலம் வெட்டப்பட்டதால் அப்பகுதியில் பாரிய மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக அப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் சிலவற்றில் பாரியளவில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. அம்பேகமுவ பிரதேச சபை முதல்வர் இவற்றை நேரில் பார்வையிட்டதையடுத்து அங்குள்ள மக்களை வேறு இடங்களில் தங்குமாறு பணித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.