Sunday, November 9, 2008

அமைச்சரவை அங்கீகாரத்தை எதிர்பார்த்துள்ள தோட்டச் சேவையாளர்கள்

இலங்கையின் பெருந் தோட்டங்களில் பணியாற்றிவரும் தோட்ட சேவையாளர்கள் தங்களின் பல வருட சேவையின் பின் அவர்களுக்கென்று காணி இல்லை. ஓய்வு பெற்றபின் வீடின்றி உறவினர்கள் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் இருக்கும் நிலை தொடர்பா இவர்கள் அங்கம் வகிக்கும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாத் அமரசிங்க தெரிவிக்கையில் 485 பேருந்தோட்டங்களில் பணிபுரியும் தோட்ட சேவையாளர்கள் சுமார் 15,000 இற்கு மேற்பட்டவர்களாவர். இவர்களில் 95 வீதமானவர்கள் இத் தொழிற்சங்கத்தில் அங்கம் வகிக்கிறார்கள். அரசு பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை என நிர்வகித்து வந்த இத் தோட்டங்கள் நிர்வாக சீர்கேடு, நட்டம் என்பவற்றால் 1992ம் ஆண்டு தனியார் கம்பனிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அரசு தோட்டங்களை நிர்வகிக்கும் போது 1965ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில், சம்பள ஒப்பந்தம் உட்பட மாற்றங்களை செய்தது போலவே 1993ம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் கோரிக்கைளை ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ள முடிந்தது என்றார்.

தற்போது 20 தனியார் கம்பனிகள் 425 தோட்டங்களையும், அரசு பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையும் குருநாகல் பிளான்டேசன், ஆகியன 60 தோட்டங்களையும் நிர்வகிக்கின்றன. மொத்தமாக-485 தோட்டங்கள்.
இவர்களுக்கான காணிப்பிரச்சினை பல வருடகாலமாக இழுபறியில் உள்ளது. அமைச்சரவையின் அனுமதியை எதிர்பார்த்துள்ளோம். என்றார்
இளைஞர் யுவதிகள் உலகிற்கேற்ற வகையில் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் -எஸ்.ஆறுமுகன் தொண்டமான்

மலையக இளைஞர் யுவதிகள் உலகிற்கேற்ற வகையில் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் அவர்களின் நலன் கருதி அவர்களுக்குரிய தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் வகையில் உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டலையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் சமூக,பொருளாதார அபிவிருத்தியமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இலங்கை - இந்திய சமுதாயப் பேரவை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்திப் பொறுப்பு என்பனவற்றோடு இணைந்து இளைஞர் வலுவூட்டல் சமூக,பொருளாதார அபிவிருத்தியமைச்சு ஆரம்பித்துள்ள இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான அறிவூட்டல் செயலமர்வை அட்டனில் ஆரம்பித்து வைத்துப்பேசியபோது தெரிவித்தார். இந்த நிகழ்வில் பிரதியமைச்சர்களான முத்து சிவலிங்கம் எஸ்.ஜெகதீஸ்வரன் உட்பட பெருந்தோட்டப்பகுதிகளைச்சேர்ந்த 300க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கான வழிகாட்டல் ஆலோசனைகளை இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த வளவாளர்கள் வழங்கினர்.
சோல்பரி திட்டத்தின் அநீதி பற்றி முதற்படி

இலங்கையில் எல்லா இந்திய அபிப்பிராயங்களையும் தழுவி ஓர் உருவாய் திகழும் காங்கிரஸ் மகாசபை சோல்பரி சிபாரிசுகளை நவம்பர் மாதம் 14ம் திகதி 1945-ல் காரிய கமிட்டியில் பரிசீலனை செய்ததில் கண்ட முடிவு டொனமூர் திட்டத்தில் வழங்கப்பட்ட உரிமைகள்.
மன்னர் பிரான் 1943-ம் வருட உள்நாட்டு ஆட்சிப் பிரகடணம். இவைகளெல்லாம் சோல்பரி திட்டத்தில் அலட்சியம் செய்யப்பட்டிருக்கின்றன. இலங்கையின் சுதந்திரமே நமது இலட்சியம். ஆட்சி அதிகாரம் நாட்டு மக்கள் கைக்கு மாற்ற வேண்டுமென்பதே நம் நோக்கம். எனினும் சம அந்தஸ்தும் நியாயமாய் எமக்கு அரசியலில் கிடைக்க வேண்டிய ஸ்தானமும் தேசிய பிளவை ஏற்படுத்துவதோடு இந்தியரை பயங்கரமான அடிமைத்தனத்தில் ஆழ்த்துகின்றது.
சிறுபான்மையோருக்கு நியாயம் வழங்குவதே கமிஷனர்களின் முதன்மையான நோக்கமாயிருந்தும் மந்திரிமார் நகல் திட்டத்தை தழுவித் தயாரித்தபடியால் சோல்பரி கமிஷன் சிறுபான்மையாயோர் உரிமைகளை பலிகொடுத்திருக்கின்றன. திட்டவட்டமான இந்தியர் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்த நாடெங்கும் 1945ம் ஆண்டு அக்டோபர் 21 முதல் 28ம் திகதி வரையிலும் சோல்பரி திட்ட அநீதிக்கு எதிரான கூட்டங்கள் நடத்தப்பட்டன.
சிபாரிசுகளை வன்மையாக கண்டித்து சர்க்காருக்கு தந்திகள் அனுப்பப்பட்டன. சர்க்கார் மனமாற்றம் செய்து கொள்ளத் துணியவில்லை. பாட்டாளிகள் உள்ளத்தில் ஒரு கலவரம் பீதி பற்றிக் கொண்டது. அஸீஸ் முதல்வராக திரு. வைத்திலிங்கம் தூது கோஷ்டி தாய்நாடு சென்றது. இந்திய தேசிய தலைவர்களிடம் அஸீஸ் கூறியதாவது.

கடல் கடந்த இந்தியர்கள் பாரத தேசத்தின் பிரஜைகளாக இருக்க முடியாது. இலங்கையில் வாழும் இந்தியர்கள் இலங்கை பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும். இலங்கைத் தீவின் வளர்ச்சிக்காக தொழிலாளர் சமூகம் இரத்தம் சிந்தியது அல்லாமல் அவர்கள் எலும்புகள் கடந்த நூற்றாண்டுகளாய் தேசத்திற்கு உரமாயிருக்கின்றன.

கைத் தொழில்கள், பாலங்கள், வீதிகள், ரயில் பாதைகள் மற்றும் கட்டிடங்கள் இவைகளுக்கெல்லாம் இந்தியர் உழைப்பே காரணமாகும் என்றார்.
அதேநேரம் தொழில் ஆணையாளருக்கு கீழ்வரும் தந்தி செய்தி அனுப்பப்பட்டது. சோல்பரி சிபாரிசுகள் இந்தய தொழிலாளர்களுக்கு இழைத்திருக்கும் அநீதியை எதிர்க்க டிக்கோயா, டிம்புல பகுதியிலுள்ள 400 தோட்டங்களில் வதியும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமே தக்க ஆயுதமாகக் கருதுகிறோம்.

ஐந்து வருடங்கள் இலங்கையில் வசித்தவர்களுக்கு பிரஜாவுரிமை ஓட்டுரிமை வேண்டும். இதனால் 400 தோட்டங்களிலுள்ள தலைவர்களும் அட்டன், கொட்டக்கலை, தலவாக்கலை, பூண்டுலோயா காங்கிரஸ் நிர்வாகஸ்தர்களைக் கொண்ட தூது கோஷ்டி 28-10-1945-ல் துவங்க நோட்டீஸ் கொடுக்க உத்தேசித்திருக்கிறது. கவர்ணருக்குத் தெரியப்படுத்தவும் . ஆதாரம் முதற்படி 1950.

குறிப்பு:- இந்தியர், பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டம் வரும் முன்பே சோல்பரி திட்டத்தில் இந்திய வம்சாவளியினர் ஒடுக்கப்பட்டனர் என இந்தத் தகவல் தருகிறது.
நன்றி- சத்தியம்

Saturday, November 8, 2008

தேயிலை செடிக்கு அக்கறைகாட்டும் அரசாங்கத்தால் தொழிலாளர் புறக்கணிப்பு – டி.அய்யாத்துரை

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட 2009ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றுப்பட்டுள்ளதாக தொழிலாளர் விடுதலை முன்னணியின் தலைவர் டி. அய்யாத்துரை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில் அரச ஊழியர்கள், விவசாயிகள், உட்பட ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிவாரணமளித்த அரசாங்கம் இந் நாட்டுக்கு இலங்கையின் தேசிய வருமானத்தில் 65 சத வீதத்தை வருமானமாக பெற்றுக் கொடுக்கும் ஆறு லட்சம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தை தொடர்ந்தும் புறக்கணித்து வருகிறது. தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு பன்மடங்காக அதிகரித்துள்ள வேளையில் தோட்டக் கம்பனிகள் கூட்டொப்பந்தம் மூலமாக வகுத்துள்ள சம்பளத் திட்டம் தொழிலாளர்களை வறுமையில் வீழ்த்தியிருப்பது நாடறிந்த விடயம். இதைப் பற்றி அரசாங்கத்திற்கு பல முறை எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அரசாங்கம் தேயிலை செடிக்கு காட்டுகின்ற அக்கறை கூட தோட்டத் தொழிலாளர்களுக்கு காட்டுவதில்லை. இந்த வரவு செலவுத் திட்டம் சிறுபான்மை மக்களையும் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களையும் ஏமாற்றும் நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்

இந்நாடு அனைவருக்குமே சொந்தமானது –பூஜித ஜயசுந்தர

சிங்களவர்களுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் இந்நாடு சொந்தமானதாகும். அவர்க ளும் இந்நாட்டின் பிரஜைகளே. நாம் அவர்களை மொழியாலோ, சாதி, சமய இன, நிற ரீதியாகவோ ஒதுக்க்கீடு செய்யமுடியாது. நாட்டின் சுதந்திரம் பெறுவதற்கு சிங்கள, தமிழ் முஸ்லீம் தலைவர்கள் ஒன்றிணைந்து பாடுபட்டார்கள். என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இதனை இன்றைய இளைஞர்கள் அறியமாட்டார்கள். என மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அட்டன் பிரின்சஸ் மண்டபத்தில் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார்.

Friday, November 7, 2008


தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புக்கள் சொந்தமா?

அரசியல் தொழிற்சங்கத் தலைவர்களால் உண்மைக்குப் புறம்பாக வெளியிடப்படும் வார்த்தைகளை நம்பி தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தால் தங்களுக்கு வழங்கப்படும் ஏழு பேர்ச்சர்ஸ் நிலத்தில் நிர்மாணித்து வழங்கப்பட்ட வீடுகளை விருப்பப்படி விற்கவோ, வேறு பாணியில் கட்டிடத்தை மாற்றி அமைக்கவோ நினைத்து அப்படிச் செய்யும் போது நிர்வாகத்தினால் அதைக் கட்டுப்படுத்துவதோடு தவறும் பட்சத்தில் குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை அநேக தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்றனர். தொழில் நீதிமன்றங்களிலும் நீதவான் நீதிமன்றங்களிலும் இதை சென்று பார்வையிடலாம்.
வீட்டை இன்னொருவருக்கு விற்றதாகவோ மாற்றியதாகவோ நிர்வாகம் கருதி அவர்களுக்கு வேலை நிறுத்தம் செய்தால் விபரமறியாத தொழிலாளர்கள் தொழில் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்து வருடக் கணக்கில் வழக்காடப்பட்டு இறுதியில் காணியும் வீடும் தனக்கு சொந்தம் என்பதை நிரூபிக்கத்தவறி, வழக்கில் தோல்வி அடைந்து தொழிலை இழப்பதோடு வீட்டையும் நிலத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வரும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நீதிமன்ற கட்டளையை மீறும் பட்சத்தில் எதுவித அறிவித்தலுமின்றி இரக்கமற்ற முறையில் வீட்டில் உள்ளவர்களை வெளியில் அனுப்புவதுடன் உடைமைகளுடன் வீசப்பட்டு நிர்வாகத்திடம் வீடு கையளிக்கப்படுகிறது. வீடும் அதைச் சுற்றியிருக்கும் நிலமும் தொழிலாளருக்கு சொந்தம் என்பவர்கள் அதற்கான உறுதிப்பத்திரத்தை பெற்றுக் கொடுக்கவில்லை.

பொகவந்தலாவை, டிக்கோயா, வட்டகொட, மடக்கொம்பரை போன்ற தோட்டப் பகுதிகளில் வேலை செய்யாதவர்கள் வீடுகளில் இருக்க முடியாது என்று நிர்வாகத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதை யாவரும் அறிவோம். மடக்கொம்பரையில் முன்னாள் (பா.உ) சி.வீ வேலுப்பிள்ளையின் வீடு கூட பிஸ்கால் மூலம் கைப்பற்றப்பட்டது. டிக்கோயா பகுதியில் ஒரு தொழிற்சங்க பிரதிநிதிக்கும் இதுவே நடந்தது. மடக்கொம்பரை மேல் பிரிவுக்கு சொந்தமான சிறு நிலத்தை வாங்கி வீடு கட்டிய தொழிலாளிக்கு எதிராக பொலிஸ் மூலம் நிர்வாகம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

பல தோட்டங்களில் நிர்வாகங்கள் லயன்களையும், சேவையாளர்களின் வீடுகளையும் வங்களில் அடைவு வைத்து பணம் பெற்றுள்ளதை வருடாந்த அறிக்கைகளில் கம்பனிகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. தொழிலாளர்களால் லட்சக்கணக்கில் சேகரித்துக் கட்டப்பட்டுள்ள ஆலயங்கள் கூட நிர்வாகத்துக்கே சொந்தமானதாகும். இந்த நிலையில்தான் தொழிலாளர்கள் பல்லாண்டு காலம் உழைத்து இறுதி காலத்தில் பெறப்படும் ஊழியர் சேமலாப நிதியை கொண்டு தாங்கள் இருக்கும் வீடுகளை நல்ல முறையில் திருத்தியமைக்கின்றனர். ஆனால் எந்தவொரு தொழிலாளியும் இந்த வீடுகளை சொந்தம் கொண்டாடவோ சட்டப்படி அடைவு வைக்கவோ முடியாது. காரணம் காணி, வீடுகளுக்கு உறுதிப்பத்திரம் தேவை.

இதேபோல் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் தொழிலாளர்கள் கடன் பெற்று 10 ஆண்டுகளுக்கும் 15 ஆண்டுகளுக்குமான பெற்ற கடனை திருப்பிச் செலுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இப்படி பெற்ற கடனை வட்டியுடன் உடனடியாக திருப்பிக் கிடைக்காது என்றும் உறுதிப் பத்திரத்தை வாங்கிக் கொடுக்க அமைச்சராக அப்போதிருந்த பெ. சந்திரசேகரன் அவர்களிடம் சவால் விடுத்திருந்தார் ஓ.ஏ. இராமையா என்பது நினைவு கூரத்தக்கது. 1996ம் ஆண்டு முதல் அமுலுக்கு வந்த இவ்வாறான முறை பணத்தை கடனுடன் திருப்பிய செலுத்திய தொழிலாளர்கள் எவருக்கும் உறுதிப்பத்திரம் கொடுக்கப்படவில்லை. மாறாக இன்னும் வீட்டுக்கு வாடகையைப் போல் ஒக்ஸ்போர்ட் போன்ற தோட்டங்களில் மாதாந்தம் 390 ரூபாய் அறவிடப்பட்டு வருகிறது. இன்னும் எவ்வளவு காலத்துக்கு அறவிடப்படும் என்பது தெரியவில்லை.

தேசிய வீடமைப்பு அதிகார சபை உதவியுடன் கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்கு அருகாமையில் விஸ்தரித்துக் கொள்வதற்கு தோட்ட நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்றே ஆக வேண்டும். அப்படி அனுமதி பெறாவிடில் நிர்வாகம் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உண்டு.
ஆகவே இந்த உரிமைகளை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாகாண சபை தேர்தல்கள் வரப் போகின்றன. தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்காக எவ்வளவு பணம் நிர்வாகங்களால் அறவிடப்பட்டு அதிகார சபைக்கு செலுத்தப்பட்டன. என்ற விபரங்களை கூட பல தோட்டங்களில் அறிவிப்பதில்லை. எனவே இந்த முக்கிய விடயத்திலாவது தொழிற்சங்கங்கள் செய்யப் போவதை தாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்

சிதம்பரம் ஜோதி-
நிர்வாகச் செயலாளர்

ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ்

தொடரும்…..
விலை வீழச்சியை காரணங்காட்டி தொழிலாளர்களின் சம்பளவுயர்வை மழுங்கடிக்க சதி

உலக சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சி, உற்பத்தி குறைக்கப்படவேண்டும் என காரணம் கூறப்படுவது தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை மழுங்கடிக்கும் சதியெனவும், தொழிலாளர்களின் கோரிக்கைகளையும், போராட்ட நடவடிக்கைகளையும் பலமிழக்க செய்யும் நடவடிக்கையென மலையக தொழிலாளர் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். எனவே வாழ்க்கை செலவுப்புள்ளிக்கேற்ப சம்பள உயர்வு தான் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்

தேயிலையின் விலை வீழ்ச்சியால் தொழிலாளர்கள் பெரும் பாதிப்பு

தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்து வருவதனைத் தொடர்ந்து இரத்தினபுரி மாவட்டங்களில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களே வேலை வழங்கப்படுகின்றன. தோட்டக் கம்பனிகளோ விலை வீழ்ச்சியால் உற்பத்திகள் அனைத்தும் தேங்கியிருப்பதாகவும், சம்பள அதிகரிப்போ, மேலதிக வேலையோ வழங்க முடியாதுள்ளதாக காரணம் தெரிவிக்கின்றனர்.

இரு இலைகள் கொண்ட இளந் தளிர் கொழுந்து மட்டுமே கொள்வனவு செய்யப்படுகின்றன. இவ்வாறான கொழுந்து வழங்கப்பட்டாலும் அதனையும் முழுமையாக கொள்வனவு செய்ய தேயிலை தொழிற்சாலைகள் உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 37 கம்பனிகளும் 100க்கு மேற்பட்ட சிறு தேயிலை மற்றும் தனியார் தோட்டங்களும் காணப்படுகின்றன. இவற்றில் 25,000 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கடமை புரிகின்றனர். இத் தோட்டங்களை நம்பி வாழும் தொழிலாளர்களுக்கு வேலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

Monday, November 3, 2008

தொழிலாளிக்கு கொலை அச்சுறுத்தல்

இரத்தினபுரி காவத்தை ஹவுப்பே, யாயின்ன தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலரை அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சிலர் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து வருவதனால் அவர்கள் அத்தோட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 23-10-2008 ம் திகதி, இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரை பெரும்பான்மையினர் சிலர் தாக்கியுள்ளனர். இதனால், காயமடைந்த தொழிலாளி அவர்களிடமிருந்து தப்பி வீடு வந்துள்ளார். அன்று மாலை இவரைத் தேடி வந்த பெரும்பான்மையினத்தவர்கள் சிலர் இவருடன் கைகலப்பிலீடுபட்ட போது தொழிலாளி அவர்களைத் தாக்கியதில் அவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதால் தமிழ்த் தொழிலாளி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விடுதலையான இத்தொழிலாளியையும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் பெரும்பான்மையினர் தொடர்ந்தும் அச்சுறுத்தி வருகின்றனர். இதனால் தோட்டத் தொழிலாளியின் இரு பிள்ளைகளும் தோட்டத்தை விட்டு வெளியேறி விட்டனர். வீட்டில் தனியாக உள்ள அவர்களது தாயைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர்.