Friday, November 7, 2008

விலை வீழச்சியை காரணங்காட்டி தொழிலாளர்களின் சம்பளவுயர்வை மழுங்கடிக்க சதி

உலக சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சி, உற்பத்தி குறைக்கப்படவேண்டும் என காரணம் கூறப்படுவது தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை மழுங்கடிக்கும் சதியெனவும், தொழிலாளர்களின் கோரிக்கைகளையும், போராட்ட நடவடிக்கைகளையும் பலமிழக்க செய்யும் நடவடிக்கையென மலையக தொழிலாளர் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். எனவே வாழ்க்கை செலவுப்புள்ளிக்கேற்ப சம்பள உயர்வு தான் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்

தேயிலையின் விலை வீழ்ச்சியால் தொழிலாளர்கள் பெரும் பாதிப்பு

தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்து வருவதனைத் தொடர்ந்து இரத்தினபுரி மாவட்டங்களில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களே வேலை வழங்கப்படுகின்றன. தோட்டக் கம்பனிகளோ விலை வீழ்ச்சியால் உற்பத்திகள் அனைத்தும் தேங்கியிருப்பதாகவும், சம்பள அதிகரிப்போ, மேலதிக வேலையோ வழங்க முடியாதுள்ளதாக காரணம் தெரிவிக்கின்றனர்.

இரு இலைகள் கொண்ட இளந் தளிர் கொழுந்து மட்டுமே கொள்வனவு செய்யப்படுகின்றன. இவ்வாறான கொழுந்து வழங்கப்பட்டாலும் அதனையும் முழுமையாக கொள்வனவு செய்ய தேயிலை தொழிற்சாலைகள் உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 37 கம்பனிகளும் 100க்கு மேற்பட்ட சிறு தேயிலை மற்றும் தனியார் தோட்டங்களும் காணப்படுகின்றன. இவற்றில் 25,000 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கடமை புரிகின்றனர். இத் தோட்டங்களை நம்பி வாழும் தொழிலாளர்களுக்கு வேலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

No comments: